உன்னை நீ எண்ணிப்பார்!
ஒரு மனிதனுக்கு தன் வீடும் சுற்றமும் அசிங்கமாகத் தெரியவே வீட்டைவிட்டு வெளியேறி பக்கத்து ஊருக்குச் சென்றான். அங்கும் குப்பையும் கூளமுமாக அசிங்கமாக இருப்பதாக அவன் மனம் நினைக்க காட்டுக்குச் சென்றான். செல்லும் வழியில் விலங்குகளின் கழிவுகளை மிதிக்க வேண்டியதாயிற்று. போதாக் குறைக்கு மரங்களின் அடியில் செல்லும்போது பறவைகளின் எச்சங்கள் அவன் மீது விழ காடும் மோசமாக இருப்பதாக நினைத்தான். ஆற்றில் இறங்கி நீரில் தன் ஆடைகளை சுத்தம் செய்ய நினைத்தபோது தொடர்ச்சியாக மனித சடலம், விலங்கின் சடலம் வரவே மிகவும் சங்கடப்பட்டான். சிறிய மீன்களைப் பெரிய மீன்கள் பிடித்து திண்பதைக் கண்டான். அருவருப்படைந்தான்.
உலகம் எங்கும் அசிங்கம் நிறைந்துள்ளது என உலக வாழ்க்கையை வெறுத்து தீ மூட்டி அதில் இறங்க தயாரானான். அவ்வழி வந்த ஞானி ஒருவர் அவனைத் தடுத்து நீ ஏன் இறக்க விரும்புகின்றாய் என்று கேட்டு விபரம் அறிந்தார். சரி நீ இப்போது தீயில் கருகி உன் உடலிலிருந்து துர்நாற்றம் வீசும். அப்போது அதுவும் இவ்வுலகில் பரவும் என்பதை எண்ணிப் பார்த்தாயா என்றார். தன்னை தன் உடலைப் பற்றிய உலக ஞானம் அவனுக்கு அப்போதுதான் வந்தது!.