உண்மை நேரில் வந்தால்!
தன் தொழில் நிமித்தம் வெளியூர் சென்றிருந்தவன் திரும்பி வந்தபோது திருடர்களால் வீடு கொள்ளையடிக்கப்பட்டு எரிக்கப்படிருந்தது. வீட்டில் எரிந்த நிலையில் பிணங்களே தென்பட்டது. அருகில் கிடந்த ஒரு சிறுவனின் பிரேதத்தை தன் மகன் பிரேதம் என நினைத்து அதைக் கட்டியழுது அதை எரியூட்டி அந்த சாம்பலை எடுத்து ஓர் பையில் பத்திரமாக எடுத்து வைத்துக் கொண்டார். எரிந்த வீட்டை செம்மைப் படுத்தி வழ்ந்திருந்தார். அந்த சாம்பல் பையைப் பார்த்து பார்த்து தன் மகனை நினைவு கூர்ந்து அடிக்கடி வேதனை அடைந்திருந்தார்.
ஒருநாள் தன் மகனின் நினைவில் கரைந்து அந்த சாம்பல் பையைப் பார்த்து கண்ணீர் சிந்திக்கொண்டிருந்த நேரம் கதவு தட்டப்பட்டது. கண்ணீரைத் துடைத்துக் கொண்டு யார் என்றார். அப்பா நான்தான் உங்கள் மகன் வந்திருக்கின்றேன் என்ற குரலைக் கேட்டு நம்பவில்லை. கதவைத் திறக்கவும் இல்லை. மீண்டும் கதவு தட்டப்பட்டது. அதே குரல் அப்பா உங்கள் பையன் வந்திருக்கின்ரேன் என்றது. பையன் இறந்து விட்டான் என்ற கலக்கமான மன நிலையில் கேட்ட குரலை அடையாளம் காண முடியாத நிலையில் தன் மகன் இறந்துவிட்டான் என்று நம்பிக்கை கொண்டிருந்ததனாலும் மீண்டும் மீண்டும் கதவு தட்டப்பட்டு குரல் ஒலித்தும் கதவை திறக்கவில்லை. தட்டுவது யார் என்றும் நேரில் பார்க்க முயற்சிக்கவில்லை. இப்படி பலமுறை கதவு தட்டப்பட்டு ஒலித்த குரல் நின்றது. கதவு தட்டப்படுவதும் நின்றது. கதவைத் தட்டிய சிறுவன் போய்விட்டான். மகனும் தந்தையும் சந்திக்கும் சூழல் மீண்டும் ஏற்படவே இல்லை.
இப்படித்தான் உயிர்கள் சில நேரங்களில் பொய்யான ஒன்றை உண்மை என நம்பிக்கொண்டு அதையே தொடர்ந்து பற்றிக் கொண்டு இருக்கின்றது.. உண்மையே நேரில் வந்தாலும் அந்த உயிரால் அதைக் கண்டு கொள்ள இயலாமல் போய்விடுகின்றது. ஓர் ஏணியில் ஏறும்போது பாதியில் நின்று கொண்டு அவ்வளவுதான் உயரம். உச்சிக்கு ஏறிவிட்டோம் என்று தவறாக கணக்குப் போட்டு நம்பிக்கை கொண்டால் உயிர்களால் அடுத்த படிகளைக் கடந்து உச்சிக்கு செல்ல முடியாது. உயிர்களே! தவறான பார்வைகளை அது பற்றிய முடிவான முடிவுகளை மேற்கொள்ளுதல் நலன் பயக்காது! என்பதைப் புரிதல் வேண்டும்!-குருஸ்ரீ
$$$$$$