மனிதனாக மாறுவாய்!
கடன் பெற்றவர் வீட்டிற்குச் சென்று எப்படியாவது கடனை வசூலிப்பதில் கெட்டிக்காரர். வீடு தேடிவந்து வசூலித்ததால் தன் செருப்பு தேய்ந்துவிட்டது எனக் கூறி அதற்கும் காசு வாங்கும் கந்து வட்டிக்காரர் அவர். சாலையில் அவர் செல்வதை பார்த்தால் கடன் பெற்றவர்கள் பயந்து ஒளிந்து கொள்வர். விளையாடும் சிறுவர்கள் கூட வட்டிக்காரர் வருகின்றார் என்று தங்கள் விளையாட்டை நிறுத்திவிட்டு ஓரமாக நிற்பார்கள்.
கெட்டியான வட்டிக்காரர் கடனை வசூலிக்க ஒரு வறியவர் வீட்டை அடைந்து கதவைத் தட்டினார். திறக்கவில்லை. எனவே மீண்டும் கதவை கோபத்துடன் தட்டினார். இவரிடம் கடன் பெற்றவரின் மனைவி வந்து கதவைத் திறந்தாள். இறை வழிபாடு செய்து கொண்டிருந்ததால் உடன் கதவைத் திறக்கவில்லை என்று மன்னிப்பு கோரினாள். அதை கவனியாமல் எங்கே உன் கணவன் என்றார். உடல் நலமில்லா தன் தாயைப் பார்த்துவர சென்றுள்ளார் என்றாள். வட்டிப்பணம் கொடுத்துள்ளாரா! என்று அதை எடுத்துவரச் சொல்லி அதிகார தோரணையில் சொன்னார். வீட்டில் இருந்த பணத்தை தாயின் மருத்துவ செலவிற்கு எடுத்துச் சென்றுள்ளார் நாளை உங்களை வந்து பார்ப்பதகாச் சென்னார் என்றாள்,
கோபமடைந்தவர் உன் வீட்டிற்கு பணம் வாங்க வந்த என் செருப்பு தேய்ந்ததற்கான கூலியை கொடு என்றார். அவர் வாங்கி வைத்துவிட்டுப்போன காய் கறிகளைத் தவிர வீட்டில் ஒன்றுமில்லை, வேண்டுமென்றால் அதை எடுத்துப் போங்கள் என்று சொன்னவளிடம் பச்சைக் காய்கறிகளை வைத்து பிரமச்சாரி நான் என்ன செய்வது அவற்றைச் சமைத்துக் கொடு என்றார். அடுப்பைப் பற்ற வைக்க விறகும் சமைப்பதற்கு மற்றப் பொருட்களும் ஏதுமில்லை. நீங்கள் அவற்றை வாங்கி தந்தீர்களானால் நான் சமைத்து தருவேன் என்றாள். சரி வாங்கித் தருகின்றேன் அந்த செலவை வட்டியுடன் தரவேண்டும் என்பதற்கான உறுதிமொழியைப் பெற்று கடைக்குச் சென்று வாங்கி வந்து அப்பெண்ணிடம் கொடுக்க அவள் சமைக்க ஆரம்பித்தாள். கந்துவட்டிக்காரர் இன்று மதிய உணவிற்கு கடைக்குச் செல்ல வேண்டியதில்லை. குறைந்த செலவில் வீட்டுச் சாப்பாடு கிடைத்து விட்டது என எண்ணங்களை வழிநடத்திக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வீட்டின்முன் தள்ளாடியபடி வந்த முதிய யாசகர் உணவுப்பிச்சை வேண்டினார். காதில் பிச்சை கேட்ட குரல் ஒலித்ததும் வீட்டுப் பெண்மணி வெளியில் வந்து சிறிது நேரம் கழித்து வா! சமையல் ஆகிக்கொண்டிருக்கின்றது என்றாள். இதைக் கேட்ட வட்டிக்காரர் யாருடைய பணத்தை யாருக்கு பிச்சை போடுவது என்று அப்பெண்ணை நோக்கி சப்தமிட்டுவிட்டு பிச்சைக் காரனை நோக்கி, இப்படி பிச்சை எடுப்பவருக்கெல்லாம் வாரி வழங்கினால் நானும் உன்போல் பிச்சைக்காரன் ஆகவேண்டியதுதான் என்று கூறி அவனை அங்கிருந்து போகச் சொல்லி விரட்டினார். மகராசி கொடுக்க நினைத்தாலும் உன்னை போன்றவர்கள் அதை கெடுப்பதற்கே இருக்கின்றீகள் என்று சொல்லி விட்டு என்னைப் போன்றவர்களுக்கு பிச்சை இடுவதால் நீ ஒன்றும் பிச்சைக்காரன் ஆகமாட்டாய். மனிதனாக மாறுவாய் என சொல்லிச் சென்றான்.
அது போன்ற வார்த்தைகளை இதுகாறும் கேட்டிராத வட்டிக்காரர் உறைந்து போனார். வீட்டுப் பெண்மணி சமைத்த உணவை கொண்டுவந்து வட்டிக்காரரிடம் கொடுக்க, அதை வாங்காமல் கண்ணில் நீர்மல்க தன் இருப்பிடம் நோக்கிச் சென்றார். வழியில் தன்னைப் பார்த்து பயந்தவர்களையும் ஒளிந்தவர்களையும் பார்த்து ஒளியவேண்டிய மனிதன் நான்தான் எனத் தனக்குள் சொல்லிக்கொண்டார். அன்று முதன் முதலாக கோவிலுக்குச் சென்றார். அங்கு நடந்து கொண்டிருந்த ஞானியின் சத்சங்கத்தைக் கேட்டார். தெளிவடைந்தார். அவரின் நிலைப்பாடுகள் அன்றிலிருந்து மாறத் தொடங்கின.
தன்னிடமிருப்பதைக் கொண்டு தான தர்மங்கள் செய்தார். மன நிறைவு அடைந்தார். ஞானியின் சொற்பொழிவுகளை மீண்டும் மீண்டும் கேட்டார். தான தர்மங்கள் செய்வதால் தான் ஒருபோதும் பிச்சைக்காரன் ஆகமாட்டோம் என நம்பினார். மனதில் ஏழ்மையின்றி செல்வந்தனாக மனித நேயத்துடன் மனிதனாக வலம் வந்தார்.-குருஸ்ரீ
$$$$$$