ஓம்நமசிவய!
தலைவாரி கடுக்கைமாலைத் தனிமுதல் சடையிற் சூடும்
குழவி வெண்திங்கள் இற்றகோட்டது குறையென்றெண்ணிப்
புழைநெடுங்கரத்தாற் பற்றிப் பொற்புற இனைந்து நோக்கும்
மழைமதக் களிற்றின் செய்ய மலரடி சென்னி வைப்பாம்.
#####
தியானம்!
ஜபம்! தியானம்! ‘ஓம்’ சிறந்தது!
மனதிற்கு அமைதியையும் ஓய்வையும் தர நமது மகான்களால் உறுவாக்கப்பட்ட பயிற்சி முறையே தியானம்.
தியானம் செய்ய இயலாமல் போகும் உயிர்கள் மனதை ஜபம் செய்வதில் ஈடுபடுத்தவும். ஜபம் செய்யும்போது விருப்பமான இறையின் நாமத்தை சொல்லவும். அப்படி நாபஜபம் செய்து கொண்டே இஷ்ட தெய்வத்தை தியானம் செய்யுங்கள். தொடர்ந்து நாம ஜபம் செய்து கொண்டிருந்தாலே அந்த உயிருக்கு இறைவனின் காட்சி கிடைக்கும். மேலும் நாமஜபம் மனதை ஒருமுகப்படுத்த வல்லது. அப்படி ஒரு முகப்படுத்தி நாமஜபம் செய்வதால் அந்த இறையின் கருணைக் கிட்டும். எனவே தியானம் கைவரவில்லை என்று மனம் தளராமல் காலத்தை வீணாக்காமல் மனதின் ஆழத்திலிருந்து நாபஜபம் செய்து கொண்டிருத்தலே உயிர்க்குச் சிறப்பு.
வாழ்க்கைச் சிக்கல்களைச் சந்திக்கும்போது அதைத் தீர்க்க சுலபமான வழி இறைநாமத்தை மௌனமாக ஜபித்தலே. ஒரு நாளைக்கு தொடர்ந்து மௌனமாக இருபத்தைந்தாயிரம் வரை நாமஜபம் செய்து வந்தால் மனதை கண்டிப்பாக ஓர் நிலையில் நிறுத்த முடியும். திருநாம ஜபங்களைச் செய்து கொண்டிருந்தால் மனதில் உள்ள உலகப் பற்றுகள் அறுந்து ஆன்மீக உண்மைகளை அறிந்து கொள்ள முடியும்.
தொடர் நாம ஜபம் அந்த உயிரின் உடம்பிற்குள் குமிழிகள் போல் ஆண்மீக உணர்வுகள் கிளம்புவதை அந்த உயிர் உணரமுடியும். கடுமையான முயற்சியாக சோம்பேறித்தனத்தை கைவிட்டு குறிப்பிட்ட நேரங்களில் நாமஜபம் செய்து தியானத்தில் ஈடுபட பயிற்சிக்க வேண்டும். மனம் வேறு ஓரிடத்தில் இருக்க எத்தனை ஆயிரம் நாமஜபம் செய்தும் பயனில்லை. ஜபம் செய்யும்போது மனமும் அதில் லயிக்க வேண்டும்.
ஒரு விளக்கின் சுடற் எரியும்போது அதுவாக அசைவதில்லை. சூழ்ந்துள்ள காற்றுதான் சுடரை அசையச் செய்கின்றது. அதுபோல மனம் நீர், காற்று, ஆகாயம் என்பதற்கு உட்பட்டதாக இருந்தாலும் அதுவாக அசைவதில்லை. அலை பாய்வதுமில்லை. அந்த மனதில் தோன்றும் ஆசைகளால்தான் மனம் அலைக்கழிக்கப் படுகின்றது. உயிர்களிடத்து உள்ள ஆசைகளும் பாவனைகளுமே மனதை அலைக்கழித்து அமைதியற்றதாக்குகின்றது.
ஜபம் செய்யும்போது இறை நாமத்தை உயிர்கள் முயன்ற அளவிற்கு பக்தியுடன், நேர்மையுடன், ஆத்ம சமர்ப்பணத்துடன் செய்து வர வேண்டும். மனம் அலைந்து திரிந்தாலும்கூட ஜபம் செய்வதை விடாமல் தொடர்ந்து செய்யவும். மனம் என்ற முரட்டுக் குதிரையை அடக்க தொடர்ந்து ஜபம் செய்தலே உகந்தது. தொடர்ந்து ஜபம் செய்யும்போது ஆனந்தம் அல்லது சோர்வு ஏற்படக்கூடும்.
ஆனந்தம் ஏற்படும்போது அதில் மூழ்கிவிடக்கூடாது. அதிலிருந்து வெளியேறிச் சென்று தொடர்ந்து ஜபம் செய்யவேண்டும். ஆனந்தம் ஆன்மீக சாதனைக்கு இடையூறு விளவிப்பதாகும். சோர்வு என்பது மூளை களைத்து விடுவதாலும் சோம்பலினாலும் ஏற்படலாம். மூளை களைத்து விட்டால் ஜபத்தை நிறுத்தி விடவேண்டும்.. மூளை களைத்திருந்தால் போலிக் காட்சிகள் தோன்றும். அதில் மயங்கினால் பைத்திய நிலையாகிவிடும். சோம்பல் காரணமாக இருந்தால் அதிலிருந்து விடுபட்டு தொடர்ந்து ஜபத்தில் ஈடுபடவேண்டும்.
அஞ்ஞானம் நீங்க அந்த உயிர் பிரமத்தை அனுபூதியில்-பிரமாணங்களைக் கொண்ட அறிவினால் உணரவேண்டும். வேதாந்த தத்துவங்களை ஆன்மீகத்தை உணர உயிர்கள் ‘ஓம்’ என்ற பிரபஞ்ச மந்திரச் சொல்லை உச்சரிப்பது போதுமானது. மனதை ஜபம் செய்து ஒருமுகப்படுத்தியபின் தியானம் தொடரலாம்.
ஜபத்தின்போது 108 / 54 மணிகள் கொண்ட ருத்திராட்ச மாலையை பயன்படுத்தவும். மாலை இணையும் இடத்தில் ஒரு பெரிய மணி கோர்க்கப்பட்டிருக்கும். இதை மேரு என்பர். ஜபத்தின்போது மேருவில் தொடங்கி எண்ணிக்கையை கணக்கில் கொள்ள வேண்டும்.
தியானத்தை தொடர்ந்து பழகுவதன்மூலம் மன இறுக்கம், படபடப்பு, மற்றும் கோபம் போன்றவை விலகி ஞாபகத்திறன், மனதை ஒருமுகப்படுத்தும் தன்மை, மன அமைதி கிட்டும்.
தியானம் செய்யும் இடத்தை ஒரு கோவில் போல் அந்த அறையை சுத்தமாகப் பேணி பாதுகாக்க வேண்டும். அறைக்குள் தியானம் பற்றி தெரியாத / எதிர் மறை எண்ணங்கள் கொண்ட நபர்களை அனுமதிக்கக்கூடாது. குளித்த பின்னர் அறைக்குள் நுழைந்து தியானம் செய்ய வேண்டும். அந்த அறையில் குலதெய்வம், பிடித்த இறைவனின் படம் மற்றும் சிவபெருமானின் படம் இருப்பது நல்லது. சாம்பிராணி தூபம் போடவும். பக்தி புத்தகங்களை வைத்து நேரம் கிடைக்கும்போது படிக்கவும். அந்த அறை அதீத சக்தி நிறைந்த இடமாக மாறி அமைதி தவழும் இடமாக இருக்கும். மனம் சலனமடையும்போது அந்த அறைக்குள் சென்று அமர்ந்தால் மனதிற்கு சாந்தி கிட்டும்.
#####
தியானம்-1
பத்மாசனம் / வஜ்ர ஆசனத்தில் கண்களை மூடியபடி கைகளில் சின் முத்திரை வைத்து முதுகுதண்டு நிமிர்ந்து நேராக இருக்கும்படி அமர்ந்துகொண்டு நாசிகளின் வழி ஆழமாக ஆனால் நிதானமாக காற்றை இழுத்து வெளியேற்றுங்கள். அப்போது உங்கள் கவனமெல்லாம் மூச்சின்மீது இருக்கட்டும். ஆரம்பத்தில் மூச்சை வெளியே விடும்போது மூச்சை எண்ணுங்கள். சில நாட்கள கழிந்தபின் மூச்சைமட்டும் கவனியுங்கள். இப்போது வேறு எண்ணங்கள் தோன்றினாலும் அனுமதியுங்கள். இந்த பயிற்சி முடிந்தவுடன் கண்களை உடனே திறக்காது சிறிது நேரம் கண்களை மூடியபடி அமர்ந்திருந்து பிறகு மெல்ல மெல்ல கண்களைத் திறந்து பார்க்க வேண்டும்.
#####
தியானம்-2
பத்மாசனம் / வஜ்ர ஆசனத்தில் கண்களை மூடியபடி கைகளில் சின் முத்திரை வைத்து முதுகுதண்டு நிமிர்ந்து நேராக இருக்கும்படி அமர்ந்துகொள்ளுங்கள். சுற்றுப்புற சூழல் ஆமையாக ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். உங்களைச் சுற்றி எதுவும் இல்லை என மனதில் நினைத்துக் கொள்ளவும். அந்த ஏகாந்த இடத்தில் நீங்கள் மட்டும்தான் இருக்கின்றீர்கள் என நினைவு கொள்ளுங்கள். உங்கள் நினைவை இதயத்திற்கு கொண்டு சென்று அது தாமரை வடிவாய் இருப்பதாக நினையுங்கள். உங்களுக்கு பிடித்தமான இறைவன் (சிவன்) அங்கு தியான நிலையில் இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். பின் அவரை நேரில் பார்ப்பது போன்று நினைவு கொண்டு சுமார் ஐந்து நிமிடங்கள் அமர்ந்திருக்கவும். பின்னர் அவரது நாமத்தை (ஓம் நமசிவய நம / ஓம் நாராயாணாய நம) ஜபிக்கவும். இதற்கு சிவபெருமானே / நாராயணனே நான் உன்னை சரணடைகின்றேன் என்னைக் காப்பாயாக என அர்த்தம். தொடர்ந்து 108 முறை நாம ஜபம் செய்யுங்கள். ருத்ர மாலையை வைத்து 108 கணகிடலாம். ருத்ர மாலையை மேலிருந்து கீழ்நோக்கி உருட்ட வேண்டும். ருத்ர மாலையில் இருக்கும் மணி மேரு எனப்படும். அதில் ஆரம்பித்து மீண்டும் மேரு வந்தபோது (108) ஜபத்தை முடித்துக் கொள்ளலாம்.
தியானம் பழகும்போது பல்வேறு எண்ண அலைகள் தோன்றும். அவைகளை வெறுக்க வேண்டாம். அது நல்லது / கெட்டதாயிருந்தாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள். தியானம் தொடர்ந்து பழகப் பழக வந்த எண்ணங்கள் எல்லாம் மெல்ல மெல்ல குறைந்து மனதை விட்டு அகன்று விடும்.
#####
தியானம்-3
கண்களை மூடி அமர்ந்து மூச்சை ஒரு தரம் நன்கு இழுத்து விடவும். மனதை உங்களின் இரு புருவங்களுக்கு மத்தியில் நிலை நிறுத்தி ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உச்சரியுங்கள். மூச்சை உள்ளே இழுக்கும்போதும், வெளியேற்றும்போதும் ஓம் என்று மனதிற்குள் உச்சரியுங்கள். சுமார் 10 / 15 நிமிடங்கள் பயிற்சி செய்யுங்கள்.
இதனால் மனம் ஒருமுகப்படும். நினைவாற்றல் அதிகரிக்கும்.
மேலும் தியானம் செய்ய விரும்பும் அன்பர்கள் குருஸ்ரீயின் naavaapalanigotrust.com இணைய தளத்தில் பிறயோகங்கள்- பிரிவில் தியானயோகம் பார்த்து பயன் பெறுக- அன்புடன் குருஸ்ரீபகோரா.
#####