Print this page
சனிக்கிழமை, 27 July 2019 09:26

சிவ சமகம் / ருத்ர சமகம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

தேவர் தொழுங் கருணைச் செல்வனே சிறந்தொளிரும்
மங்கள சொரூபனே ஓவறு சித்திகளனைத்தும்
உதவுவோய் ஒலிகெழுகிண்கிணி பாத சாலநூபுரங்கள்
மேவியொளிர் சரணே மததாரை விரவியதிண் கபோலனே
நினதருளால் பாவமொடு பலபிணியும் பம்பு வறுமைகளும்
பலவான இடர்களையும் பாற்றுக இன்புறவே!

#*#*#*#*#

சிவ சமகம் / ருத்ர சமகம்!

ஸ்ரீருத்ர பாராயணம் சமக பாராயணத்துடன் சேர்ந்தால்தான் அது முழுமையான பலனை அளிக்கும் ஸ்ரீருத்ர ஜபத்திற்கு ஐந்து வடிவம் உள்ளது. ஸ்ரீருத்ரத்தையும் சமகத்தையும் பாராயணம் செய்வது சாதாரணரூபம். முதலில் ருத்ரத்தை 11 முறை ஜபித்து பின் சமகத்தின் முதல் அனுவாகத்தையும், இரண்டாவது முறை ருத்ரத்தை 11 முறை ஜபித்து பின் சமகத்தின் இரண்டாவது அனுவாகத்தையும், அப்படியே பதினோரு முறை ருத்ரத்தை ஜபித்துப் பதினொன்றாவது அனுவாகத்தையும் பாராயணம் செய்தால் அது 'ருத்ரைகாதசினீ'' என்று அழைக்கப்பெறும். பதினொரு லகுருத்ரம் ஒரு மகாருத்ரம். பதினொரு மகாருத்ரம் ஒரு அதி ருத்ரம்

ஸ்ரீருத்ரத்தின் முதல் அனுவாகத்தில் ஈசுவருனுடைய கட்டளையை மீறுபவர்களை அவர் தண்டிப்பதால் அவரின் கோபக்கனைகளை குறைத்து, அமைதி பொழிபவராக வேண்டுமென்றும், சமகத்தில், நாம்வாழத் தேவையான, பலதரப்பட்ட பொருட்களும், சந்ததிகளும், செல்வங்களும், பலதரப்பட்ட உலோகங்களும், பொன்னும், கல்வியும், ஞானமும், குறைவில்லா வாழ்வும், இனிமையான தூக்கமும் மற்றும் வாழ்விற்கு தேவையானவையும் ஸ்ரீருத்ரனிடம் கோரி வேண்டப்படுகின்றது

சிவனை ஆராதிப்பதால் மட்டுமே அவர் மனம் குளிரவைக்க முடியும்.. "வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல்" – என்ற சொற்றொடருக்கிணங்க மருத்துவர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது அவர் மீது நாம் கோபம் கொள்வதில்லையோ, அது போன்று துன்பம் வரும்போதும், இன்பம் வரும்போதும், ஈசுவரனிடத்தில் மனத்தை செலுத்தினால், அவர் நம்மிடத்தில் ஈடில்லா அன்பைப் பொழிவார். பற்று இல்லாத (எந்த ஆசையுமேயில்லாத) ஈசுவரனின் கால்களை இறுக்கமாகப் பிடித்து நம் துன்பங்களை அவனிடம் அர்ப்பணித்துவிட்டு அவன் மேல் உள்ள பற்றை (கால்களைப்) பிடித்துக் கொண்டோமேயானால், நமக்கு பேரின்பம் கிட்டும் என்கிறார். வள்ளுவர்.

அண்ட சராசரங்களிலெல்லாம் வியாபித்து இருக்கும் சிவன், திருநீரை பூசிக்கொண்டும், பிறைச்சந்திரனை தலையில் சூடியும், புலித்தோலை இடையில் உடுத்தியும், கண்மணிமாலையை (ருத்திராக்ஷத்தை) அணிந்தும், மயானத்தில் தியானத்தில் அமர்ந்தும், தனக்கென்று எதுவும் வேண்டாதவராய் ஆயிரம் கதிரவனைப்போல் ஒளிர்கின்ற உன்னத கருணாமூர்த்தியை வேண்டுபவர்களை 'வாழ்க்கை' என்ற துன்பக் கடலிலிருந்து கரையேற்றுவார்.

இருப்பினும், உலக வாழ்வில் 'பொருள்' இல்லாமல் வாழ்வதென்பது இயலாது, அதனால், எல்லா செல்வங்களையும் கொடுக்க வேண்டி ஈசனிடம் வழிபடுவதே சமகப் பாட்டு. திருடர் முதலியவர்களுடைய உடம்பில்கூட இரண்டு வடிவில் உயிர் உருவமாகவும், ஈசுவர உருவமாகவும் இருக்கும் அம்பிகா நாதனை மனதார வழிபட்டு வேண்டிய பொருட்களைப் பெற்று, நற்கதி அடைய அனைத்து உயிர்களுக்கும் இந்த சமகம் உதவட்டும்.

ஸ்ரீருத்திரனின் போர்கருவிகளும், கோபமும் தன்னை துன்புறுத்த வேண்டாம் என்று முதலில் வேண்டி பின், வாழ்வியல் இன்பத்திற்குத் தேவையான செல்வங்களை வேண்டுவதே சமகம். அதன் பொருட்டு, உலோகங்களையும், அடக்கி ஆளும் திறனையும், நீண்ட ஆயுளையும், வீடு, நிலம், மரம், செடி, புலன்கள், கையாளும் திறன், இன்பம், குதுகூலம், எதிரிகளினால் ஏற்படும் தொல்லைகளை களைந்தெடுக்கும் திறன், இன்ன பிற வாழவியல் இன்பங்கள் ஆகியவற்றை வேண்டிப் பெறுவதே சமகப் பாட்டின் கருத்தாகும்..

தூய்மையான வெண்மை நிறமுடையவரும், முக்கண்ணரும், ஐந்து முகமுடையவரும், கங்கையின் இறுமாப்பை அடக்கி சிரசில் தாங்கியவரும், பத்துக் கைகளுடையவரும், எல்லா ஆபரணங்களாலும் அலங்கரிக்கப் பெற்றவரும்; சந்திரனைச் சிரசில் அடையாளமாகக் கொண்டவரும், நாகப்பாம்பைப் பூணூலாய்த் தரித்தவரும், 'உருவம்' - 'உருவமில்லாமை' என்ற இருநிலைகளைக் கொண்டவரும், புலித்தோலைப் போர்த்தியவரும், உமாதேவியயைப் பாதி உடலாகக் கொண்டவரும் இந்த சமகத்தை படிப்போரையும் பாடுவோரையும் எம்மையும், என்னைச் சுற்றியுள்ள எல்லா உயிர்களையும் மற்றும் உலகத்திலுள்ள அத்தனை உயிரினங்களையும் அன்பு கொண்டு கர்மவினைத் தாக்கங்களிலிருந்து காக்க வேண்டுகிறேன்.

எல்லாம் வல்ல இறைவனும், உமையை இடப்பாகம் தாங்கியவனும், தனக்கென்று எதுவும் வைத்துக்கொள்ளாதவனுமாகிய சிவபெருமானின் அருட்பெரும் கருணையுடன் தமிழ் பேசும் ஆன்மீக அன்பர்கள் புரிந்து கொள்ளக்கூடிய முறையில் சமகம் தமிழில் கொடுக்கப்பட்டுள்ளது. சமகம் என்றால் சமாதானம் எனப் பொருள். கர்ம வினைகளல் ஏற்பட்ட பிறப்பின் வாழ்கைதனை சமாதானமாக இறைஞ்சி கேட்டு ஈசுவரக் கருணையினால் நல்வாழ்வாக சீர்படுத்திக் கொள்ள உதவுவதே சமகப் பாடல். அனைத்து 'இக''பர' இன்பத்தை அளிக்கும் சமகப்பாட்டின் கருத்து தொகுப்பில் ஏதாவது தவறு இருப்பின் அது அடியேனுடையது. அதைக் குறிப்பிட்டுச் சொன்னால் திருத்தப்பட்டு அது எல்லோருக்கும் பயனாய் அமையும் உங்கள் செயல் சிறப்பானதாகும். அடியார்க்கு அடியேன் குருஸ்ரீ பகோரா.

ஒவ்வொரு மறைப்பாட்டின் முடிவிலும் "ஓம் ஷாந்தி" என்று மூன்றுமுறை பண் பாடப்படுவது - மனிதனை மூன்று ஆபத்திலிருந்து காக்கவே, அவையாவன:-
1. "அதியாத்மா" - எனும் "தன்னால் உருவாக்கப்பட்ட ஆபத்து
2. ” அதிபௌதிகம்" -எனும் இயற்கையால் ஏற்படுத்தப்பட்ட கெடுதல்
3. ”அதிதெய்வீகம்"-எனும் கடவுள்களாலும், தேவதைகளாலும் ஏற்படுத்தப்பட்ட ஆபத்து
இம்மூன்று ஆபத்துகளிலிருந்தும் நாம் காப்பாற்றப்பட்டு, இவைகளில் சிக்காமல் தாண்டிப்போய் 'பரப்ப்ரம்ம" நிலை எனும் முழுமுதற்கடவுளிடம் ஒன்றிவிட வேண்டும் என்ற குறிக்கோளைக் உறுதியாக கொண்டு வேண்டிக்கொள்ள வேண்டும்..

வழிபாடு!

முதல் வேண்டுதலாக 'கர்ம காண்டம்' என்று அழைக்கபெறும் 'சமகப்பாட்டில்' முதலில் இரண்டு கடவுள்களை சேர்த்து வேண்டப்படுகின்றது. தினமும் விதிக்கப்பட்ட செயல்பாட்டு ஆணைகளை செவ்வெனே செய்து முடிக்கவும், அலம்பித் தெளிவு படுத்தவும், வேள்வியில் ஈடுபடும் பொருட்டு, தொடர்ந்து வேள்வித்தீயில் மூங்கில் பட்டை கொண்டு நெய் ஊற்றப்படும் போதும் (வாஸோர்த்தரா) சமகம் ஓதப்படுகிறது. பொதுவாக 'கடவுள்' என்று வேண்டப்படுவதால், அக்னி, விஷ்ணு அல்லது ருத்திரனை வேண்டுவதாக பொருள்கொள்ள வேண்டும்.

சமஸ்கிருதம்::
ஓம் அக்னாவிஷ்ணு சஜோஷஸேமாவர்த்தந்து வாம் கிர: த்யும்னைர்வாஜேபிராகதம் ||

ஓம் அக்னியும் விஷ்ணுவும் ஆகியவர்களே| எங்களிடம் ஒருமித்து அன்பு கனியும் மனமுடையவர்களாக நீங்களிருவரும் இருக்க வேண்டும். உங்களை வணங்கும் எங்கள் வார்த்தைகள் உங்களை மகிழ்விக்கட்டும். நீங்களிருவரும் எல்லாவித பொன், பொருட்களுடனும், உணவுப் பொருள்களுடனும் எங்களுக்கு கொடுத்து வாழ்த்த எழுந்தருள வேண்டும்.

கீழே பதினோரு அனுவாகமாகப் சமகப் பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பராயாணம் செய்து பயன் அடைந்து உயிர்கள் இன்புற ஆசீர்வதிக்கும் அடியார்க்கு அடியேன் குருஸ்ரீ பாகோரா.

1. உடம்பும், உடம்பு சார்ந்தவைகளும்.
2. அழகான உடம்பும், கவர்ந்திழுக்கும் ஆளுமையும்,
3. ஆசை, இச்சை, நிறைவேற வேண்டும்
4. "உணவுப்பொருட்களும் நீர்பண்டங்களும்"  
5 "நிலமும், அதைச்சார்ந்த மதிப்பிடமுடியாத பொருட்களும்" 
6. "இந்திரனும், மறைக் கடவுள்களும்"
7. "ஸோம வேள்வி நடத்த தேவையான பாண்டங்களை வேண்டுதல்
8. "வேள்வியில் ஈடுபடுவதற்கு தேவையான நுணுக்கமான பொருட்கள்” 
9. "வேள்வியின் அர்பணிப்பு மூலம் உயர்ந்த நிலையை அடைதல்”
10. "வீட்டிற்கும், விவசாயத்திற்கும் தேவையாவற்றை வேண்டுதல்”
11. "எல்லாம் வல்ல இறைநிலையை உணர்த்தும் "வாழ்த்தும், வேண்டுதலும்"
11- (அ) "நல்லதையே கேட்டு, செய்து, முடிக்க வேண்டும்"

#####

Read 6766 times Last modified on ஞாயிற்றுக்கிழமை, 01 September 2019 12:09
Login to post comments