ஓம்நமசிவய!
தடையிலாது என் செயல் முடிப்பாய் போற்றி!
எம்மை தஞ்சமாய் ஏற்பாய் போற்றி!
எம்பால் அன்பே இனிதருள் போற்றி!
ஏழை எமக்கு அருள் ஈவாய் போற்றி!
எய்ப்பினில் வைப்பாய் இருப்பாய் போற்றி!
விழையும் நலங்கள் தருவாய் போற்றி!
இலகுளேசுவர மூர்த்தி!
அண்டவிரிவு தத்துவம்
திரிசரேணு எட்டு கொண்டது இலீகை
இலீகை எட்டு கொண்டது யூகை
யூகை எட்டு கொண்டது யவை
யவை எட்டு கொண்டது மாநாங்குலம்
மாநாங்குலம் இருபத்திநான்கு கொண்டது முழம்
முழம் நான்கு கொண்டது வில்
வில் இரண்டு கொண்டது தண்டம்
தண்டம் இரண்டாயிரம் கொண்டது குரோசம்
குரோசம் இரண்டு கொண்டது கெவியூதி
கெவியூதி இரண்டு கொண்டது யோசனை
யோசனை நூறு கோடி கொண்டது பிருதிவி .தத்துவத்திலுள்ள ஓர் விரிவு. உயரமும் அதே அளவு.
இந்த பிரிதிவி தத்துவத்தில் 1000 கோடி அண்டங்கள் உண்டு. இதைக் கடந்த அப்பு தத்துவம் பன்மடங்கு விரிவும் உயர்ச்சியும் ஏற்றமும் உடையது. அப்பு தத்துவத்தைப் பற்ற தேயு முதல் பிரகிருதி வரை அண்டங்கள் பதின்மடங்கு விரிவும் உயர்ச்சியும் மிகுந்திருக்கும்.
பிரகிருதியைப் பற்ற இராகம் நூறுபாகம் விரிவும் உயர்ச்சியும் ஏற்றமும் கொண்டிருக்கும்.
இராகத்தைப் பற்ற வித்யா தத்துவம் நூறு மடங்கு விரிவும் உயர்ச்சியும் கொண்டிருக்கும்.
வித்யாதத்துவ வித்தையைப் பற்ற நியதி தத்துவம் நூறு மடங்கு விரிவும் உயர்ச்சியும் ஏற்றமும் கொண்டிருக்கும்.
நியதி தத்துவத்தைப் பற்ற காலத் தத்துவம் நூறு மடங்கு விரிவும் உயர்ச்சியும் கொண்டிருக்கும்.
காலத் தத்துவத்தைப் பற்ற கலா தத்துவம் 101 பதினாயிரம் விரிவும் உயர்ச்சியும் பெற்றிருக்கும்
கலா தத்துவத்தைப் பற்ற மாயை தத்துவம் கோடி விரிவும் உயர்ச்சியும் பெற்றிருக்கும்
மாயை தத்துவத்தைப் பற்ற சுத்தவித்தை தத்துவம் கோடியே பதினாயிரம் விரிவும் உயர்ச்சியும் பெற்றிருக்கும்
சுத்தவித்தை தத்துவத்தைப் பற்ற ஈச்சுரம் தத்துவம் இரண்டு இலட்சம் பாகங்கள் விரிவும் உயர்ச்சியும் பெற்றிருக்கும்
ஈச்சுரம் தத்துவத்தைப் பற்ற சாதாக்கியம் தத்துவம் மூன்று இலட்சம் பாகங்கள் விரிவும் உயர்ச்சியும் பெற்றிருக்கும்
நம் கண்ணுக்குத் தெரியாத எண்ணெற்ற அண்டங்கள் நம்மைச் சுற்றி இருக்கின்றன. இந்த அண்ட விரிவில் பிருதிவி தத்துவமாகிய நிவர்த்திக் கலையின் ஒரு தட்டில் தேங்காய் பரப்பியதுபோல் ஆயிரங்கோடி அண்டங்கள் இருக்கும்.
இந்த 108 புவனங்களுள் முதல் இரண்டு புவனங்கள் பிரம்மாண்டத்தின் மேல் இருக்கும். அடுத்த 10 புவனங்கள் புவியின்மேல் உயர இருக்கும். அடுத்த 10 புவனங்கள் புவியின் கீழ் இருக்கும். அடுத்த 10 புவனங்கள் புவியின் ஈசானத்தின்மேல் இருக்கும். அடுத்த 10 புவனங்கள் புவியின் வடக்கிலும், அடுத்த 10 புவனங்கள் புவியின் வாயு மூலையிலும் அடுத்த 10 புவனங்கள் புவியின் மேற்கிலும், அடுத்த 10 புவனங்கள் புவியின் நிருதி திக்கிலும், அடுத்த 10 புவனங்கள் புவியின் தெற்கிலும், அடுத்த 10 புவனங்கள் புவியின் அக்னி திக்கிலும், அடுத்த 10 புவனங்கள் புவியின் கிழக்கிலும் இருக்கும் இந்த பத்து திசைகளிலும் உள்ள நூறு புவனத்தில் நூறு உருத்திரர்களும், அவர்கள் புவனத்திற்கு மேல் காலாக்கினி உருத்திரர் புவனங்கள் ஆறும். அவற்றின்மேல் இரண்டுமாக நிவர்த்திக் கலையில் நூற்றெட்டு புவனங்கள் உண்டு.
இதன்மேல் பிரதிஷ்டா கலையில் பிரகிருதியினும் குணதத்துவத்தினும் இருக்கும் எட்டு புவனங்களுக்கும், புத்தி தத்துவத்திலிருக்கும் எட்டு புவனங்களுக்கும், அகங்கார தத்துவத்தில் இருக்கும் எட்டுப் புவனங்களுக்கும், மனதத்துவத்திலிருக்கும் புவனத்திற்கும், ஞானேந்திரியத்திலிருக்கும் புவனத்திற்கும் கன்மேந்திரியத்திலிருக்கும் புவனத்திற்கும், பூததன்மாத்திரையிலிருக்கும் எட்டு புவனங்களுக்கும் ஆகாய தத்துவத்திலிருக்கும் எட்டு புவனங்களுக்கும், வாயு தத்துவத்திலிருக்கும் எட்டு புவனங்களுக்கும், தேஜஸ் தத்துவத்திலிருக்கும் எட்டு புவனங்களுக்கும், இடையில் அப்பு தத்துவத்தில் பாரபூத டிண்டி முண்டி ஆஷாட புஷ்கர நைமிச பிரபாச அமரேசுவர புவனங்களின் மத்தகத்தில் இலகுளேசுவர புவனம் ஒளிமயமுற்றதாய் பிரகாசித்துக் கொண்டிருக்கும்.
இத்தகைய பெருமைமிகு சிவன் ஒவ்வொரு புவனத்திற்கும் ஒவ்வொரு மூர்த்தியாய் எழுந்தருளி அங்குள்ள உயிரினங்களுக்கு தக்கபடி திருவருள் புரிகின்றார். புவனங்கள் தோறும் எழுந்தருளும் வடிவம் இலகுளேசுவர மூர்த்தம்..
#####