ஓம்நமசிவய!
மதி, ஞானம், தவம், தானம், மானம், ஒளி, புகழ், குலம்,
வண்சரீரம், முற்றும் பதிவான தனம், தானியம், கிருகம்,
மனைவி, மைந்தர், பயில் நட்பாதிக் கதியாவும் கலந்து
சர்வாயுதர் காக்க! காமர் பவுத்திரர் முன்னான
விதியாரும் சுற்றமெலாம் மயூரேசர் எஞ்ஞான்றும்
விரும்பிக் காக்க! வென்றி, சீவிதம் கபிலர் காக்க!
அன்னாபிஷேகம்! சோறுகண்ட இடம் சொர்க்கம்!
உயிர்கள் உயிர்களுக்குப் பல தான தருமங்களைச் செய்யச் சொல்லியிருந்தாலும் தானத்தில் சிறந்தது அன்னதானம் என்றே சாஸ்திரங்கள் பகர்கின்றன. ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தார் என இலக்கியங்களும் போற்றும் உயர்ந்த நிலையில் உள்ள அந்த அன்னத்தால் இறைவனுக்கு அபிஷேகம் செய்வது சிறப்பு.
சிவன் பிம்ப ரூபமாக இருக்கிறார். உயிர்கள் அனைத்தும் அவரது பிரதி பிம்ப ரூபம். உயிர்கள் உணவு உண்டு பிரதி பிம்பத்தை திருப்தி செய்கின்றது. பிம்பம் திருப்தியானால் மட்டுமே பிரதி பிம்பத்தால் இயங்க முடியும். எனவே பிம்பத்திற்கு அன்னத்தால் அபிஷேகம் செய்து திருப்தி படுத்த முயல்கின்றோம். ஆடிப்பட்டத்தில் விதைக்கப்பட்ட நெற்பயிர்கள் அறுவடைக்குத் தயாரக இருக்கும் பருவகாலம் ஐப்பசி. அப்போது அந்த புதிய நெல்லைக் குத்தி அந்த அரிசி கொண்டு அன்னாபிஷேகம் செய்வது சிறப்பு என்பதால் அதுவே வழக்கமானது.
மேலும் பஞ்ச பூதங்கள் இறைவனுள் அடக்கம் என்பதால், நீராலும், மண்ணாலும்,, ஆகாயத்தாலும் உருவான அரிசியை, நெருப்பாலும், காற்றாலும் அன்னமாக்கி இறைவனுக்கு அபிஷேகம் செய்விக்கின்றோம். அந்த பஞ்ச பூதங்களால் உருவான அன்னம் அவற்றைப் படைத்த இறைவனுக்கே அர்ப்பணிக்கப்படுகின்றது. பிரபஞ்சத்தில் பஞ்ச பூதங்களால் உருவான அரிசி-அன்னம் எப்படி இறைவனுக்குப் போய்ச் சேருகின்றதோ அப்படியே பிரபஞ்சத்தில் பஞ்சபூதங்களை உள்ளடக்கிய உயிர்களும் ஒருநாள் இறைவனிடம் போய்ச் சேரவேண்டும் என்றால் அரிசி பக்குவப்பட்டு உணவாகி சேருமிடம் சேருவதுபோல் உயிர்களும் பக்குவப்பட்டு சேருமிடம் சேரவேண்டும் என்பதே அன்னபிஷேகத்தின் தத்துவம்.
அபிஷேகம் செய்த பாணலிங்கத்தின்மேல் உள்ள அன்னம் மிகுந்த வீரியம் உடையதால் அதனை நீர்வாழ் உயிரினங்களுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் உணவாக நீர் நிலைகளில் சேர்க்க வேண்டும். ஜூவகாருண்யத்தில் அன்பே சிவம் என்ற உச்ச நிலை இதுவாகும். மற்ற பாகங்களில் உள்ள அன்னத்தை தயிருடன் சேர்த்து பிரசாதமாக வழங்க வேண்டும். செல்வம், ஆரோக்கியம், மக்கட்பேறு ஆகியவற்றை அளிக்கக்கூடிய பிரசாதம் இது.
அன்னாபிஷேகத்தில் சேர்க்கப்படும் ஒவ்வொரு அரிசியும் ஒரு லிங்கமாகக் கருதப்படுவதால் அன்னாபிஷேகத்தை பார்ப்பது என்பது கோடி லிங்க தரிசனத்திற்கு நிகரானதாகும். ’சோறு கண்ட இடம் சொர்க்கம் என்பது பழமொழி. அதாவது சோறு அன்னம் அபிஷேகத்தைக் கண்டவர்கள் சொர்க்கம் செல்வார்கள் என்பதே இதன் பொருள்.
&&&&&