Print this page
திங்கட்கிழமை, 07 May 2018 03:12

மார்கழி மாத விரதங்கள்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

தலைவாரி கடுக்கைமாலைத் தனிமுதல் சடையிற் சூடும்
குழவி வெண்திங்கள் இற்றகோட்டது குறையென்றெண்ணிப்
புழைநெடுங்கரத்தாற் பற்றிப் பொற்புற இனைந்து நோக்கும்
மழைமதக் களிற்றின் செய்ய மலரடி சென்னி வைப்பாம்.

&&&&&

மார்கழி மாத விரதங்கள்!

மார்கழி பௌர்ணமி- மார்கழியில் வைடூர்ய லிங்கம் வழிபாடு சிறப்பு பகல் உபவாசம் இருந்து சிவ பூஜை புரிதல் வேண்டும்.

மார்கழி மாத அஷ்டமி- பவானி-மகாசங்கரை வணங்கினால் யாகபலன்.

மார்கழி சிறப்புகள்- மார்கழி அதிகாலைப்பொழுதான தேவர்களின் சந்தியா கலாத்தில்தான் தான் திருவெம்பாவாய், திருபூம்பாவாய் என சிவனுக்கும் விஷ்ணுவிற்கும் பள்ளி எழுச்சி நடைபெறும். பதஞ்சலி முனிவரும் வியாக்ரபாத முனியும் நடரஜர் நடனம் ஆடும்போது அவரது இடது பாத தரிசனத்தை மார்கழி திருவாதிரைத் திருநாளில் சிதம்பரத்தில் தரிசித்துள்ளனர்.

திருவெம்பாவை நோன்பு. மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்திற்கு ஒன்பது நாட்களுக்கு முன் தொடங்கி கடைப்பிடிக்க வேண்டும். அதிகாலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்து நீராடி தூய ஆடையுடன் கோவிலுக்குச் சென்று சிவ பார்வதியை தரிசித்து ஆலய வழிபாடு செய்ய வேண்டும். அன்று ஒரு வேளை மட்டும் அவித்த உணவு உண்ண வேண்டும். பின்னர் மாணிக்க வாசகரின் திருவெம்பாவை பாடல்களைப் பாட / படிக்க வேண்டும். கன்னிப் பெண்களுக்குச் சிறந்தது. நிவேதனமாக பிட்டு வைப்பதால் இப்பூஜையை பிட்டு பூஜை என்பர். ஒன்பது நாள் முடிந்ததும் திருவாதிரை அன்று வழக்கம்போல் ஒருவேளை உணவு உண்டு விரதமிருக்க வேண்டும். நோன்பிற்கு நைவேத்யமாக திருவாதிரைக் களியும் ஏழுவகைக் காய்கறிகளும் செய்து வழிபட்டு பூஜை செய்து அனைவருக்கும் அளித்து விரதம் இருந்தோர் உண்ணலாம். தொடர்ந்து பத்து நாட்கள் விரதமிருக்க இயலாதவர்கள் திருவாதிரை அன்றாவது விரதமிருந்து பூஜை செய்து வழிபடவும். இதனால் இந்தப் பிறவியிலே புகழ், செல்வம், நீடித்த ஆயுள், நோயின்மை, குடும்ப நலம் போன்றவை பெற்றுச் சிறப்புடன் வாழ்வர்.

வைகுண்ட ஏகாதசி விரதம்! ஆண்டுக்கு 25 ஏகாதசி வந்தாலும் மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசி சிறப்பானது. மாதம் முழுக்க இறை வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்பதால் இம்மாதத்தை பீடுடைய மாதம் என்றனர். அது காலப்போக்கில் பீடை மாதம் என்றானது. அது தவறு.

ஏகாதசி திதி- திதிக்குரிய விநாயகர்- ஹேரம்ப கணபதி. பால் ஆகாரம் சாப்பிடவும்-நிதிபதியான குபேரனை பிரம்மா தோற்றுவித்த நாள். பழம் மட்டும் உண்டு குபேர பூஜை. வைகுண்ட ஏகாதசி விசேடமானது- விஷ்ணுவிற்குரியது.

ஏகாதசி-மார்கழி-வளர்பிறை-வைகுண்டஏகாதசி பலன்- ஜாங்காசுரன் என்ற முரன் பெண்களுக்கும் முனிவர்களுக்கும் துன்பம் இழைத்து வந்தான். அவனது துன்பங்கள் தொடரவே மாகாவிஷ்னுவிடம் முறையிட அவருக்கும் அசுரன் முரனுக்கும் 1000 ஆண்டுகள் வரை போர் நீடித்தது. ஒருநாள் களைப்படைந்தது போல் நடித்த திருமால் அருகில் இருந்த பத்ரிகாசிரமத்தில் ஓய்வெடுப்பது போல் பாசாங்கு செய்தார். அவர் உறங்குவதாக நினைத்த முரன் வாளால் வெட்டவர விஷ்ணுவின் உடலிலிருந்த சக்தி வெளிப்பட்டு தன் பார்வையாலேயே அசுரனை எரித்தது. அது தனுர்மாத சுக்லபட்ச ஏகாதசியில் நீ என்னுள்ளிருந்து அவதரித்ததால் இந்த திதி உனக்குரியதாகும். உன்பெயர் இனி ஏகாதசி என்பதாகும். தூக்கமின்றி விழிப்புடன் பெருமாளைக் காத்ததுபோல் கண்விழித்து பெருமாள் நாமத்தை ஏகாதசியன்று உச்சரித்து விரதம் இருப்போர்க்கு வைகுண்ட முழுபலன்.

சொர்க்கவாசல்- திரேத யுகம் முடிந்து கலியுகம் பிறந்ததும் வைகுண்டத்தின் வயில் காப்போர்களான ஜெயனும் விஜயனும் வைகுண்ட வாயிலை மூடி கலியுகம் பிறந்துவிட்ட்தால் பொய் புரட்டு வஞ்சம் ஆகியன நிறைந்து உயிர்கள் ஏதும் வைகுண்டத்திற்கு வராது என்பதால் கதவை மூடிவிட்டோம் என்றனர். கலியுகத்தில் நம்மாழ்வார் போன்ற ஞானிகளும் அவரைப் பின்பற்றி பக்தர்களும் வருவார்கள் அவர்களுக்குகாக கதவை திறந்து வையுங்கள் என்றார் விஷ்ணு. வைகுண்ட ஏகாதசியன்று உங்களது அர்ச்சாவதார மேனியுடன் சொர்க்கவாசல் புகுந்து வருபவர்களுக்கு வைகுண்டத்தின் கதவுகள் திறந்தே இருக்கும். இதற்கு நீங்கள் அருள் புரிய வேண்டும் என ஜெய, விஜயர்கள் வேண்ட அவர்கள் விருப்பபடி வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறப்பதால் ஏகாதசி விரதமிருந்து சொர்க்கவாசல் வழி சொல்வோர் வைகுண்ட பாக்கியம் பெறுவர்.

அம்பாரீஷன் என்ற மன்னன் ஏகாதசியன்று இரவெல்லாம் கண்விழித்து பகலில் ஹரி நாமத்தை உச்சரித்து ஏகாதசி விரதம் இருந்து வந்தான். இந்த பக்தியைக் கண்ட திருமால் தன் சுதர்சன சக்கரத்தை அவனது மாளிகையில் வைத்தார். ஒரு ஆண்டில் வரும் 25 ஏகாதசியிலும் அம்பாரீஷன் விரதமிருக்க உறுதி பூண்டு அப்படியே தொடர்ந்து இருந்து கடைசி ஏகாதசியான மோட்ச ஏகாதசிக்கும் வழக்கம்போல் விரதமிருந்து மறுநாள் அனைவருக்கும் போஜனம் செய்து தானங்கள் வழங்கி விட்டு சாப்பிடும்போது அங்கே துர்வாசர் வந்தார். அவரை வணங்கி நீங்கள் போஜனம் செய்து எங்களுக்கும் பிரசாதம் வழங்க வேண்டும் என வேண்ட, ஸ்நானம் செய்துவிட்டு வருகின்றேன் என்று சென்ற துர்வாசர் வெகுநேரமாக வராததால் ஏகாதசி நேரம் முடிவுரும் தருவாயில் என்ன செய்வது என்று தவித்து அருகிலிருந்த சான்றோர்களின் அறிவுரைப்படி ‘ஒரு உத்தாணி தீர்த்தம் எடுத்து ஒரு துளசிதளமிட்டு ஆசமனம் செய்து’ அதனை பகவானின் அருட்பிரசாதமாக உட்கொள்ளச் சொன்னபடி அம்பாரீஷன் செய்ய முயலும்போது துர்வாசர் அங்கு வந்து என்னோடு சேர்ந்து உணவருந்துவதாகக் கூறிவிட்டு இப்போது பாரணை செய்கின்றாய். என்று கோபித்து தன் ஜாடாமுடியிலிருந்து ஒரு பூதத்தை வரவழைத்து அம்பாரீஷன் மேல் ஏவினார். அங்கிருந்த சக்கரத்தாழ்வார் இதை உணர்ந்து துரிதமாக செயல்பட்டு பூதத்தை அழித்துவிட்டு துர்வாசரை நோக்கி வர, பயந்த துர்வாசர் விஷ்ணுவிடம் தஞ்சம் புக, அவர் அம்பாரீஷன்தான் உங்களை மன்னிக்க வேண்டும் அவனிடமே செல்லுங்கள் என்றார். துர்வாசர் அம்பாரீஷனிடம் வந்து மன்னிப்புகோர அவர் பெருமாளை வணங்கி சுதர்சனத்தை திரும்ப பெற்றார். இந்த நிகழ்வே ஏகாதசி விரதத்தின் மகிமைக்கு சான்று.

ருக்மாங்கதன் என்ற அரசன் தன் நாட்டு மக்கள் இக, பர வாழ்வு இரண்டிலும் நிம்மதிகாண வேண்டும் என்று ஆவல்கொண்டு அதற்கு வழி வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பது என்று முடிவுகொண்டு தன் நாட்டு மக்கள் மாதா மாதம் ஏகாதசி விரதமும், வைகுண்ட ஏகாதசி விரதமும் கண்டிப்பாய் அனுஷ்டிக்க வேண்டும் என்று சட்டம்போட்டான். அதனால் மக்கள் அனைவரும் விரதமிருந்ததால் பூமியில் மக்கள் அனைவரும் வைகுண்டம் சென்றனர். முன் ஜன்ம கர்ம வினைகளை கணக்கில் எடுத்துக் கொண்டு அவரவர் தலை யெழுத்தை எழுதுகின்றேன். ஆனால் இங்கு அனைவரும் விரதமிருந்து அந்த வினைகளைக் களைந்து விடுகின்றனர். ஒருவர்கூட நரகத்திற்கு செல்லவில்லையாததால் பூமியின் சமநிலை இவ்வாறு பாதிப்பது நல்லதல்ல என்று பிரம்மன் விஷ்ணுவிடம் வேண்டினார். விஷ்ணு ருக்மாங்கதனிடம் உன் எண்ணம் நன்மையானதுதான். ஆனால் யாருக்கு சொர்க்கம் செல்ல வேண்டும் என்றிருக்கின்றதோ அவர்கள் மட்டும் விரதங்களை அனுஷ்டிக்குமாறு நீ சட்டத்தை மாற்று என்றார். மக்கள் அவரவர் விருப்பப்படி விரதமிருந்து சொர்க்கம் சென்றதால் பூமியில் சமநிலை ஏற்பட்டது.

இவ்வளவு சக்தி வாய்ந்த ஏகாதசி விரதங்கள் கடைபிடிப்போருக்கு வெற்றி, செல்வம், ஆரோக்கியம், நிம்மதி கிடைத்து பாவ வினைகள் அழிந்து வைகுண்டப் பதவி கிட்டும்.


&&&&&

Read 4300 times Last modified on செவ்வாய்க்கிழமை, 18 December 2018 10:05
Login to post comments