gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

5-8.ஆத்மஞானம்!

Written by

ஆத்மஞானம்!                                                                                                          

ஒரு விதிக்குட்பட்டு அண்டசராசரமே இயங்குகின்றது என்ற ஞானம் வேண்டும். பேரண்டத்தின் இயக்கத்தை மாற்றமுடியும் என நினைப்பது அஞ்ஞானம். ஒரு பேராற்றலின் நியதிப்படி எல்லாம் நடக்கின்றது. யாரும் அதில் குறுக்கிட முடியாது. ஆசை அடங்கிய மனதிலிருந்துதான் ஒளி பிறக்கின்றது. ஞானம் தெரிகின்றது. ஆசையில்லை எனில் பாவச் செயல்களில்லை.
உடலைவிட்டு ஆன்மா சென்றபின் என்ன ஞானம் வேண்டியிருக்கின்றது! ஒருவன் உயிரோடு இருப்பதே ஞானம் பெறத்தகுதியாகும்! ஞானம் பெற நல்லவனாக இரு! நன்மை செய்! மனிதநேயம் கொண்டிரு! அனைவரிடமும் அன்பாயிரு! அன்பான, மிருதுவான, இனிய, ஆறுதல் தரக்கூடிய எளிய பேச்சுக்கள் பேசு!
கர்வம் கொள்ளாதே! கடுமையான, கோபமான இழிந்த சொற்களைப் பேசாதே! எல்லா உயிர்களிடமும் கருணை உள்ளவனாயிரு! கருணை ஒரு தெய்வீக உயர் குணம். அந்த நற்குணத்தை உயிர்களுக்குத் தொண்டு செய்வதன் மூலம் கொண்டிரு! உண்மையைத்தவிர வேரொன்றிலும் ஆசை வைக்கக்கூடாது. உண்மைக்காகவே உண்மையை விரும்பவேண்டும்.
இவையெல்லாம் ஒருவன் ஞானம்- அத்வைத ஞானம் - ஆத்ம ஞானம் அடைவதற்கு போதுமான படிகள். எல்லா தீர்க்கதரிசிகளும் இதைத்தான் சொல்லி இருக்கின்றார்கள் அவர்தம் பாணியில். மற்றவரின் கருத்துக்கள், ஆலோசனைகள், நம் கையில் கட்டும் கடியாரம்போல மற்றவரின் கடியாரத்துடனும், கருத்துக்களுடனும் ஒத்துப்போக வேண்டும் என்று அவசியமில்லை. நம் கையில் உள்ள கடியாரம் காட்டும் காலம் சரியானது என நாம் நினைப்பதுபோல், நம் கடியாரத்துடன் ஒத்துப்போகும் கடியாரம்போல், நம்மோடு ஒன்றிய கருத்துக்கள், ஒத்துப்போகும் மனிதர்களை கண்டு கொள்! வாழ்வு சுவராஸ்யமாகும்.
ஞானத்திற்குரிய லட்சணங்கள் எட்டாகும். 1.சொல்வதை, கேட்பதை, பார்ப்பதை உடனே கிரகிப்பது, 2. அதை உடனே புத்தியில் நிலை நிறுத்துவது, 3.அதை என்றும் மறவாமல் இருப்பது, 4.கிரகித்ததை பிறருக்கு எடுத்துரைத்தல், 5.அதை புதிய யுக்திகளுடன் சிறப்புடன் கூறுவது, 6.அடுத்தவரின் யுக்திகளை மறுப்பது, 7.ஒருவரின் பேச்சின் பின்னனியில் உள்ள உண்மைகளை புரிவது, 8.அதன் உண்மை நோக்கத்தை உணர்வது என்பனவாகும்.
ஒருவனுக்கு ஞானமடைய நிறைய பயிற்சிகள் தேவைப்படுகின்றது. அதற்கு பல காலம் ஆகலாம். ஆனால் பலகாலம் பயிற்சி என்பது அவரின் உள்ளத்தின் கண்களைத்திறக்க கொடுக்கப்படும் பயிற்சிதான். ஏனெனில் விழி இமைகளை திறந்துவிட்டால் பார்ப்பது என்பது ஒரு கணத்தில் நடந்துவிடும். ஞானம் உதிக்கும்போது உருவங்கள் மறையும். பிரபஞ்சத்தின் உருவமற்ற நிலைகள் உணரப்படும்.
இவ்வுலகில், “அடைவதற்கு ஏதுமில்லை என்பதே ஞானம்! இழப்பதற்கு ஏதுமில்லை என்பதே அறிவு!” அறியாமை சிறிதும் கலக்காத அறிவுதான் ஞானம்.
ஒருவர் இறப்பது எப்படி! அந்த நிகழ்வு எப்படி இருக்கும்! அனுபவித்தவர் யாருமில்லை! அவர்தம் அனுபவத்தை உங்களுக்குக்கூற. உடலிலிருந்து உயிர் எப்படி, எப்போது, எங்கிருந்து பிரியும், யாருக்கும் ஒன்றும் தெரியது. அது புரியாத புதிர்.
இறந்தபின் ஏற்படும் அசையாதன்மை கொண்டுதான் நாம் உணர்கிறோம். எல்லாம் கொண்டிருந்த உடல், அது ஏதுமற்ற நிலையில் இருக்கும்போதுதான் அறிகிறோம். எந்தவித பந்தபாசமும், துயர துக்கங்களும் இல்லா நிலை. சும்மா இருத்தலில், கிடத்தலில் ஓர்சுகம் என்று உயிர்போகும் தருணம் எது? யார் அறிவார்!
நடப்பதை முன்கூட்டி சொல்வது மட்டுமல்ல ஞானம். அதனால் பாதிப்புகள் ஏதும் நடக்காமல், விதியின் வலியை குறைத்து முன்னெச்சரிக்கையாக வேதனையை அகற்ற முயலுதலே ஞானம்.
பந்தயத்தில் ஓடுகின்ற அனைவரும் முதலாவதாக வருவதில்லை. வரவும் முடியாது. யாராவது ஒருவர்தான் வரமுடியும். தேடுபவர்கள் அனைவருக்கும் தெரிவதில்லை. அதற்காக தேடாமலும் இருக்க முடியாது. ஆகவேதான் “தேடுங்கள் கிடைக்கும்” என்றார்கள். தேடுபவர்களுக்குத்தான் தேடல் புரியும், தெரியும், கிடைக்கும். ஞானதாகம், வேட்கையில் வெற்றி என்பது சாதனை அருள்.
எதையெல்லாம் விரும்புகின்றீர்களோ அதையெல்லாம் வெறுத்து ஒதுக்குங்கள். எதையெல்லாம் வெறுக்கின்றீர்களோ அதையெல்லாம் விரும்புங்கள். அப்போதுதான் ஞானம் பிறக்கும், உண்மையில் எதை நேசிக்கின்றீர்கள், எதை வெறுக்கின்றீர்கள் என்று.
உன்னோடு இருக்கும் உயிருள்ள, உயிரற்ற எல்லாவற்றையும் உன்னுடையது என்று நீ நினைக்கும் வரை எதையும் விட்டுக்கொடுக்க நீ தயாரில்லை என பொருள். உலகில் உள்ள எதுவும் உங்களது இல்லை என்று உணரும் நிலையை நீங்கள் அடைந்தால், அந்த பக்குவம் வரும்போது, நீங்கள் விட்டுக்கொடுக்க ஏதும் இருக்காது.
மனிதன் சுயநினைவு, மற்றும் சிந்தனைகளையிழந்து, அவனது கர்மபலன்கள் பிரதானமாகி துன்பம், துயரம், நோய், நொடி, அகாலமரணம் போன்ற அனுபவங்களால் ஒரு சாரமும் இல்லா வாழ்க்கையில் உழன்றுகொண்டு இருக்கின்றான். இது அவனின் வாழ்க்கைப் பயனத்தில் வெளிச்சம் அல்லாத அதாவது ஒரு துளியும் சந்தோஷம் இல்லாத இருண்ட வாழ்க்கைப் பகுதியாகும்.
தன்னைப்பற்றிய உண்மைகளை மனித வாழ்வின் பயணத்தின் முடிவுகளை புரிந்தும் புரியாமலும், அறிந்தும் அறிந்து கொள்ள முயலாதவனாகி வாழ்கின்றான். இந்த அறியாமை எனும் இருள் அகற்றி வாழ்வில் மீண்டும் அல்லது மீதமிருக்கும் பகுதியை அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கையாக வாழ முயற்சிக்கவேண்டும். மனித பிறப்பின் நோக்கங்களை சந்தோஷங்களை அடைய வேண்டும்.
அமைதிக்கு அடிப்படை மனதை ஓர் நிலைப்படுத்துதலே. அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு மனதை அலை பாயவிடாமல் நிலைப்படுத்தப் பழகிக் கொள்ளவேண்டும். அப்போதுதான் உருவமில்லா மனம் உருவத்தின் உள்ளே உள்ள ஆன்மா ஞானம் பெற உதவும்.
இருள் நீங்கி வெளிச்சம் நிறைந்த ஞானம் பெற்ற ஆன்மா- ஆத்மஞானம் அடைய முன்னேறி இறுதியில் அந்த ஆத்மார்த்தமான ஞானம், ஒளிமயமான மகிழ்வுடன்கூடிய அற்புத ஆனந்த சந்தோஷத்தை அடைகின்றது. அதுதான் எல்லை. அதற்குமேல் வேறு என்ன வேண்டும், இந்த பூ உடலின் ஆன்மாவிற்கு! ஒன்றுமில்லை!
சுதந்திரமான உணர்வு நிலைகளுடன், மரணபயமின்றி, எல்லாம் நிறைந்திருக்கின்ற இச்சைகளே இல்லாத சீரான செழிப்புமிகுந்த வளமையுடன் கூடிய வாழ்க்கையில் சந்தோஷம்தவிர வேறு என்ன வேண்டியிருக்கின்றது. தன்னிடமுள்ள அசுர குணங்களை தன் ஞான அறிவால் பஸ்பம் செய்து, அன்பையும், அஹிம்சையையும், அமைதியையும் கொண்டு பிறருக்கு வழிகாட்டியாக விளங்கும்போது அந்த பூத உடலின் ஆன்மா சிறப்படைகின்றது. பூத உடலை நீக்கும்போது அதன் முழுபயனும் அந்த ஆன்மாவிற்கு கிடைக்கின்றது.
ஞானமில்லா மனதையே அசுர பழக்கவழக்கங்கள் ஆக்ரமிக்கின்றன. இந்த தேகசுகங்களை. தேகதர்மத்தை கடந்து வெற்றிபெற முயலுங்கள். எப்படியும் இந்த தேகம் பூமிக்குப் போய்விடும். அப்போது உடலிலிருந்த ஆத்மா நல்வழிக்குச் செல்ல இப்போதிருந்தே உங்கள் உணர்வுகளை விழிப்படையச்செய்து உரிய பாதையை கண்டுகொள்ளுங்கள்.
தனிமை என்ற ஓர் நிலையில்தான் ஓர் ஆன்மா மௌனம் என்ற நிலையை அடையும். அப்போதுதான் மனம் சிறிது சிறிதாக வாழ்வு குறித்த ஞானத்தை அடைய வழிகிடைக்கும். காற்றுக்கு செடி, கொடி, மரங்கள் அசைந்து அதன் பலவீனத்தை காட்டுகிறது, மலை அசையாது உறுதியை காட்டும்.
அதிகம் பேசுபவன் அவனது பலவீனத்தை எல்லோருக்கும் தெரியப்படுத்துகிறான். மௌனியாக இருப்பவன் அவனின் உறுதியை பலத்தைக் காண்பிக்கிறான். பேசாமல் இருப்பது பெரும் திறமையாக இருந்தாலும், தேவைக்கு சுருங்கச் சொல்லி தெளிவுபடுத்தி பெருமையடைகிறான். ஞானிகள் கூறும் சிறு விஷயங்கள்கூட வாழ்வின் ஆதாரமாகிவிடும்.
மரணம் என்ற நிகழ்வை ஏற்றுக் கொள்பவர்களால்தான் இருக்கும் வாழ்வை முழுமையாக ரசிக்கமுடியும். எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற ஞானநிலை புரிந்திருந்தால் அந்த ஆன்மா அதன் ஒவ்வொரு சுவாசத்தையும் அதன் மதிப்பையும் உணர்ந்து அனுபவிக்கமுடியும். உண்ணும் உணவையும், அருந்தும் நீரையும், அதை சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும் அதனால் ரசிக்க முடியும்.
இந்த நிமிடத்தில் நடந்தது, கிடைத்தது, அடைந்தது  எதுவும் நிலையானது இல்லை என்று புரிந்தால்தான் கிடைத்ததை அனுபவித்த ரசனையின் ஆழம் புரியும். நீங்கள் வாழும் வீடு, சுற்றியிருக்கும் சுற்றம், நடக்கும் பாதை, தழுவும் காற்று, மேல்படும் வெயில், மழை, பார்த்து ரசிக்கும் சூரிய, சந்திர இயற்கையெல்லாம் இந்த ஆத்மாவின் உடலுக்கு தற்காலிகமானதுதான். அதுபுரிந்தால்தான் அந்த உணர்வு வாழ்வு பயணத்தில் சந்தோஷத்தைக் கண்ட ஆனந்தத்தை ஏற்படுத்தும்.
கரும்பிலிருந்து பெறவேண்டிய நண்மைகள் அனைத்தும் பெற்றுவிட்டால் அதன்பின் கரும்பு சக்கை எனப்படும். அது எரிந்தால் உரியவனுக்கு நஷ்டம் ஏதுமில்லை. அதைப்போன்றே இந்த ஆத்மாவின் உடம்பின் மூலம் பெறவேண்டியதை, ஞானத்தை ஓர் ஆத்மா பெற்றுவிட்டால் அல்லது உணர்ந்துவிட்டால் இந்த உடம்பு என்ன ஆனால் என்ன!
அதற்கு மரண பயமிருக்காது. தன்னை உணர்ந்து கொண்டவன் மரணத்திலிருந்து விடுதலை பெறுகிறான். அவன் இறந்தான் என்றால் அவனின் உடம்பு அசைவற்றுவிட்டது. ஆன்மா இறக்கவில்லை என்பதாகும்.
ஞானம் பெறாதவர்கள்தான் பயப்படுகின்றார்கள். அஞ்சி துடித் துடிக்கின்றனர். மரணம் என்பது முற்றுப்புள்ளியல்ல. ஆன்மா அடுத்து வேறு ஓர் உடலைத் தேடுகின்றது. பலபிறவிகளின் தொடர்ச்சி இப்பிறவி. புதிய சூழலில் தொடர்ச்சி தொடரத்தான் போகிறது. மரணம் துக்கமில்லை. அதில் துயரமில்லை, அது ஒரு புதிய வாசல், வழியோடு காத்திருக்கின்றது, இதில் வருத்தப்பட, துக்கப்பட என்ன இருக்கின்றது.
மரணம் ஓர் உருமாற்றம். உடலின் உயிர்- ஆன்மா வேறு உடலைத் தேடும் நிகழ்வு. ஒரு மார்பிலிருந்து பாலூட்டுதலை தாய் நிறுத்தியதும் அழும் குழந்தைக்கு அடுத்த மார்பைக் காட்டுகின்றபோது அதன் அழுகை நின்றுவிடுகின்றது. இதைப்போன்றதே மரணம். அதன் துயரம். இங்கு ஒர் சிறு இடைவெளியில் எல்லாம் மறந்த நிலையில் மீண்டும் பிறப்பு. அங்கு ஆனந்தத்தை ஏற்படுத்துகின்றது. ஆனால் பிறப்பு எங்கு என்பதுதான் யாருக்கும் தெரிவதில்லை.
எந்த நிலையிலும் மனம் கலங்காமல் மகிழ்ச்சியாக வாழும் ஞானமே உண்மையான ஞானம். மனித மனம் ஞானம் என்ற பக்குவத்தை அடையவேண்டும். நீர் நிரம்பிய குடத்தை கிணற்றுள்ளிருந்து இறைக்கும்போது கணம் தெரிவதில்லை. தண்ணீர் மட்டத்திற்குமேல் வந்தபின் அதன் கணம் நம்மால் உணரப்படுகின்றது. இதுபோன்றே நமது துக்கங்களை ஞானம் என்ற கிணற்றில் அமுக்கிவிட்டால், நமது துக்கம் நீரினுள் இருக்கும் குடத்தைப்போல் கணம் தெரியாமல் பரமலேசாகிவிடும்.
பொதுவாக எல்லோரும் என்றாவது ஓர்நாள் ஓர் விலாசத்தை தேடி அலைந்தவராகத்தான் இருப்பர். அவர்களுக்கு தாங்கள் எங்கிருந்து வந்திருக்கின்றோம், எங்கு இருக்கின்றோம், எங்கு செல்ல வேண்டும் என்பது அனைத்தும் தெரிந்தும் போகுமிடத்திற்கு வழிதெரியாமல் தவிப்பர். ஒரே உண்மை என்னெவெனில் எல்லாம் தெரிந்த அவருக்கு எதோ ஓரு காரணத்தினால் அவர் செல்லும் வழிதான் எது என்று புரியவில்லை.
எந்த வழியில் சென்றால் ஒரு பிரயோஜனமும் இல்லையோ, அந்த வழியில் தெரிந்தே செல்வது கூடாது என்பதுதான் ஞானம். ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் சுய அறிவு ஒளிர்ந்து பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது. கண் புலனால் பார்ப்பதை ஆத்மாவிற்கு ஏற்றதா என ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை. அதைக் கவனம் என்ற ஞானமின்றி விட்டு விடுகின்றனர். காண்பது அறிவூட்டும், அந்த அறிவு நமது அனுபவம் மூலமாக, ஆத்மாவின் உணர்வுகளை, செயல்களாக மாற்றிக் கொண்டிருக்கின்றது. அறிவால் ஞானத்தை பெறலாம்.
இறையைத்தேடி அலையும், அடைய நினைக்கும் ஆன்மாக்கள் வழியை தொலைத்து விட்டுத்தான் விழித்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் வழியேதும் தவறி விடவில்லை. அவர்கள் வழிகாட்டப்பட வேண்டியவர்கள்! தண்ணீரில் பார்த்து தன்னை தெரிந்து கொள்பவன் தான் என்ற எண்ணமுடையவன். அவனால் விரைவில் ஞானம் அடைய முடியாது. தண்ணீரில் பார்த்தால் அதனுள்ளே ஜீவராசிகளைப் காண்பவனே ஞானம் விரைவில் அடைவான்.
அருள் பெற பக்தனாக இருப்பது சிறப்பு. அந்த பக்தியே அகங்காரமாகித் தன்னைத் தவிர வேறு சிறந்த பக்தர் இல்லை என நினைப்பது ஆணவத்தின் அறிகுறி. எல்லோரையும் போற்றுவதும், நம்மைவிடச் சிறந்த பண்புகள் அவர்களிடம் இருக்கும் என பணிவு கொள்வதுதான் ஞானத்தின் ஓர்நிலை.
ஒருவன் ஞானியாக, யோகியாக ஆகிவிட்டன் என்றால் அவனுக்கு துக்கம் என்று எதுவுமில்லை. இது வேண்டும் அது வேண்டும் என்ற நிலையில்லா ஆனந்த நிலை.அது. எது செய்தாலும் தான், நான், எனக்கு என்ற எண்ணங்களில்லா செயல்பாடுகளை அடைந்திருப்பர். எல்லா செயல்களிலும், பரம காருண்ய உணர்ச்சி, மனிதநேயம் தென்படும். எனவே நிம்மதியற்ற மனித வாழ்வில் உழலாமல் ஒரு ஞானியாக, யோகியாக மாற முயற்சியுங்கள். சமுதாயத்தில் துன்பத்தில் உழலும் மக்களுக்கு உதவி புரியுங்கள். உள்ளத்தில் உண்மையை புரிவதற்கு வழிகாட்டியாக செயல்படுங்கள். மனிதநேயம் மிக்கவராக மாறுங்கள்.
சாஸ்திரங்கள் விவேகம், வைராக்யம், சமம், தமம், முமுக்ஷுத்வம் முதலியனவற்றை ஆத்ம ஞானம் கிடைக்க அடிப்படைத் தகுதிகளாகச் சொல்கின்றன. ஞானம் ஓர் இயல்பான நிலை. புலி வேஷமிட்டவன் புலியைப்போல் நடித்துக் காண்பிப்பான். நிஜப்புலி அதன் போக்கில் செல்லும். ஞானியாக நினைப்பவனின் செயல்கள் மாறுபட்டிருக்கும். உண்மையான ஞானி எந்த ஆர்பாட்டமும் இன்றி உணர்வுமயத்துடன் இயங்குபவராக இருப்பர்.
அந்த ஊர் மக்களின் குறைகளை எல்லாம் தீர்த்து வைக்கப் போவதாக கூறிய ஞானியை சந்தித்தார் யோகி, ஞானியிடம் சுவாமி நீங்கள் நிறைய தவம் செய்து சித்திகள் அடைந்ததாகக் கேள்விப்பட்டேன். அதனால் உங்களைப் பார்த்துப் போக வந்தேன் என்றார். ஞானி உற்சாகத்துடன் என்னைப் பற்றி இந்த ஊருக்கே தெரியும் என தற்புகழ்ச்சி கொண்டார்.
சுவாமி, எதிரே வரும் அந்த மாட்டை கொல்ல முடியுமா! என்றதைக் கேட்ட ஞானி தன் கமண்டலத்திலிருந்து சிறிது ஜலத்தை எடுத்து மந்திரம் உச்சாடனம் செய்து அந்த மாட்டின் மீது தெளிக்க அது அப்படியே சுருண்டு வீழ்ந்தது. யோகி, உங்களுக்கு நிறைய சக்தி உள்ளது, இப்போது அந்த இறந்த மாட்டை உயிர்ப்பிக்க முடியுமா! என்றவுடன் மீண்டும் மந்திரம் உச்சரித்து நீர் தெளித்து அந்த மாட்டை உயிர்ப்பித்தார்.
அப்போது யோகி ஞானியைப் பார்த்து கேட்டார், சுவாமி, நீங்கள் ஒரு மாட்டை இறக்க வைத்தீர், பின்னர் அதையே உயிர் பிழைக்க வைத்தீர், அபரிதமான சக்தியைக் கொண்டுள்ள நீங்கள் அடைந்த பலன் என்ன! மாடு, இந்த மக்கள் அடைந்தது என்ன! என்றதை கேட்டவுடன் ஞானிக்கு சாட்டையால் யாரோ அடித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. தற்புகழ்வுக்காக தன் சக்திகளை விரயமாக்கியது விளங்கியது. ஞானி என்பவர் கூட்டம் சேர்ப்பவராக இருத்தல் கூடாது. வழிகாட்டுபவராக இருத்தல் வேண்டும் என மீண்டும் தெளிவு கொண்டார்.
பொதுவாக சத்தியத்தை எப்போதும் நினைத்துப்பேசி, தர்மங்களை ஆதரித்து, பரமத்தை அறியமுயலுதலே மனிதனில் தேவன் எனச்சொல்வதற்கு உரியவன். பரந்து விரிந்து நிற்கும் அருளின் தன்மையை உணர்ந்தவன், ஞானம் தெளிந்தவன், அதில் இறங்கி நீந்தத் தொடங்கினால் ஆனந்தம். என்றும் எப்போதும் ஆனந்தம். ஆனந்தமான சந்தோஷம்.
அதை புரிந்துகொள்ள, அந்த ஞானத்தை நம்முள் நிலைநிறுத்த பாவனை அவசியமானது. எங்கும் எல்லாமுமாய் காணப்படுகிறான். எல்லாமுமாய் இருக்கின்றான். உணர்வுகளின் உள்ளே புலன்களினால் காணமுடியா நிலையில் இருக்கின்றான். உயிருடன் சாட்சியாக இருக்கின்றான். இப்படி பாவனை செய்தால் இறைவனை அடையலாம் என்கிறது திவ்யபிரபந்தம். இதை பிரம்ம பாவனை என்பர் வேதாந்திகள்.  
இந்துமதத்தில்  இறைவனை தாய், தந்தையாக பாவித்து, பாவனை செய்து ஞானமடைய வழிகாட்டியுள்ளனர். அபிராமியின் மைந்தனாக தன்னை பாவனை செய்து வழிபடுகிறார் அபிராமிபட்டர். ஞானயோகம் பயின்றுவிட்டால் இன்பம்தரும் மயக்கமும், துன்பம் தரும் துக்க கலக்கங்களும் ஒரு ஆன்மாவை விட்டு விலகிவிடும் என்கிறது பகவத்கீதை.
வேதசாஸ்திரங்களில் தேர்ந்தவரும், தவசீலருமான அந்த குரு தன் சீடர்களிடம், காசியைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லி, தான் காசியில் இறக்க விரும்புவதாகவும் தன் அந்திமக் காலம் நெருங்கிவிட்டது எனவும் கூறினார். உடனே சீடர்கள் அவரை ஒரு பல்லக்கில் தூக்கிக் கொண்டு காசி செல்லும் வழியில், ஓர் ஊரின் பெயரைக் கேட்டவுடன் அவரின் உயிர் பிரிந்தது. அதன் பலனாக மறுபிறவியில் அந்த ஊரில் பறையறைபவனின் மகனாகப் பிறந்தார்.
முன்ஜன்ம பலன்களால் நல்லறிவுடன் குழந்தை வளர்ந்தது வயது 10ஐ அடைந்தது. அந்த ஊர் வழக்கப்படி வீட்டிற்கு ஓருவர் அரண்மனைக்கு பறையறைந்து ஓர் இரவு காவல் காக்கச் செல்ல வேண்டும். அன்று அவர்கள் முறை. அவனின் தந்தை வெளியில் சென்றபோது மழை பெய்து ஆற்றில் வெள்ளம் பெருகவே வீட்டிற்கு வரமுடியவில்லை. தந்தை பணிக்குச் செல்ல வில்லை என்றால் அது, அரண்மணைக் குற்றம் ஆகும் என்பதால் சிறுவன் பணிக்குச் சென்று பறையுடன் சுலோகங்களையும் பாடினான். நடுநிசியில் அதைக்கேட்ட மன்னரின் மனம் மகிழ்வுற்று, அவனுக்கு அரசாங்கவேலை தர ஆனையிட்டார். அச்சிறுவனோ மரணதண்டனை நிறைவேற்றும் பணியைக் கேட்டு, மேற்கொண்டு, தண்டனை பெறும் கைதிகளை இறை படங்களுக்குமுன் நிறுத்தி தெய்வச் சிந்தனைப் பாடல்களைப் பாடும்போது, அவர்கள் மெய்மறந்திருக்கும் வேளையில் தண்டணையை நிறவேற்றி விடுவான்.
தெய்வச் சிந்தனையில் இருக்கும்போது உயிர் நீத்தவரெல்லாம் சொர்க்கம் சென்றனர். இதனால் நரகத்தின் வேலைப்பளு குறைந்தது. எமன் மும்மூர்த்திகளிடம் முறையிட, அவர்கள் சிறுவனிடம் அவன் செயலுக்குக் காரணம் கேட்க அவன், தன் முற்பிறவியில் இறக்கும்போது இறை சிந்தனையின்றி ஓர் ஊரின் பெயரைக்கேட்டபடி இறந்ததால் அந்த ஊரில் பிறக்க நேர்ந்தது. அதுபோன்ற நிலை இவர்களுக்கு வேண்டாம்,
இறக்கும் தருவாயில் இறை நாமங்களைக்கேட்டு நற்கதியடையட்டுமே என்பதால்தான் இப்படிச்செய்தேன் என்றான். மும்மூர்த்திகள் அவனுக்கு மேட்சம் அளித்தனர். வாழ்வில் ஞானம் ஏற்படவில்லை என்றாலும் இறக்கும்போதாவது ஒருவன் இறையை நினைத்தால் அதன் பலன் அந்த ஆத்மாவிற்கு கிடைக்கும்.
நாம் அனைவரும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை பார்த்திருப்போம். எப்படி சாய்த்தாலும் அது நிமிர்ந்துவிடும். அதன் அமைப்பு அப்படி. அதுசரி. அதில் நாம் தெரிந்து கொள்ள ஓர் உண்மை மறைந்து இருக்கின்றது. உலகம் எவ்வளவு உருண்டாலும், அதை யார் எப்படிக் கவிழ்த்தாலும், எவர் உதவியும் இன்றி நிமிர்ந்து தன் நிலைக்கு திரும்பிவிடும் உண்மையது. நிலையானது, நிலையில்லாதது, நடுநிலையானது என மூன்று நிலைகளிலிருந்தாலும் முடிவில் ஓர் சமநிலைக்கு வரவேண்டும்.
அதைப்போன்றே யார் எப்படிக் கவிழ்த்தாலும், துன்ப துயரங்களை அளித்தாலும், எப்படிப்பட்ட பாதிப்புகள் இருந்தாலும், அதிலிருந்து விடுபட்டு, ஆன்மாவின் மனமும், எண்ணங்களும் சமநிலைக்கு வரவேண்டும். மனதினை ஓர் நிலைப்படுத்தவேண்டும் என்ற தத்துவம் அதில் உள்ளது.
எரியும் தீக்குச்சிமேல் பெரிய மரக்கட்டையை வைத்தால் தீ பற்றாது. அனைந்துவிடும். ஆனால் ஒருகாடே பற்றி எரியும்போது அதில் வாழை மரம் கூட எரிந்துவிடும். அப்படித்தான் ஒருவரிடம் ஆன்மீக ஞானம் மலரும்போது உணவில் இருந்து எல்லா விஷயங்களிலும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். விதிமுறைகள், குரு, அனுஷ்டானம் ஆகியவைகளை மதித்து கடைபிடிக்க வேண்டும். இல்லையெனில் தீக்குச்சிமேல் மரக்கட்டை விழுந்ததுபோலாகிவிடும். ஆன்மீகதாகம் மலர்ந்து இறை ஒளி பிழம்பாக ஒளிரும்போது எல்லாம் மறைந்துவிடும். பாரம்பர்ய பழக்க வழக்கங்களைக் கடைபிடிக்க வேண்டியிருக்காது. ஞானம் இறையை காண்பதற்கு மட்டும், அதற்குப்பின் அருளாளனின் பொறுப்பு உனக்கு என்ன வேண்டும் என்பது.

ஒருவர் அவரின் செய்கையால் அவரே தனக்குத்தானே ஏற்படுத்திக் கொள்ளும் நிலைதான் விதி எனப்படும். இதை அறியும் ஞானமே ஞானத்திலெல்லாம் உயர்ந்த ஞானம்! இந்த ஞானத்தை பெற்றபின் ஒருவர் இனிமேலும் அடைய வேண்டிய ஞானம் வேறு இல்லை என்பது திண்ணம். எனவே உங்கள் செயல்கள் செயல்பாடாக மாறுமுன் சிந்தியுங்கள்-குருஸ்ரீ பகோரா.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26880860
All
26880860
Your IP: 54.226.222.183
2024-03-19 16:52

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg

சந்தோஷப்பூக்கள்