gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

1-6.செயல்!

Written by

செயல்!                                                                                                                          

எங்கே! எது! எப்படி! எப்போது! யார், யாருக்குக் கிடைக்க வேண்டுமோ! அங்கே! அது! அப்படி! அவரவருக்கு கிடைக்கும்! அது மட்டுமே கிடைக்கும்! ஆனால் கண்டிப்பாகக் கிடைக்கும்! இது கர்ம செயல் பலன்! வாழ்வும் தாழ்வும் அவரவர் செயலால் கிடைப்பது.
செயலின் விளைவு நன்மையாய் இருக்க நாம் விரும்புகிறோம், நல்ல முடிவாய் நமக்கு பயனுள்ளதாய் மட்டுமே இருக்க ஆசைப்படுகிறோம். செயலின் நேரம், சூழ்நிலை, நாம் செயல்படுத்தும் விதம், செயல்பாட்டிற்கான துணைகள் அமையும் விதம் இதையெல்லாம் பொருத்து செயலின் முடிவுகள் தோன்றும். அது நாம் நினைத்ததற்கு முற்றிலும் வேறாகக்கூட முடியும். நம் நினைவிற்கு சாதகமாக அமையவேண்டும் என நாம் உளமாற நினைத்து செயல்பட்டால் கூட மற்ற காரிய காரணத்தால் மாறும் நிலை ஏற்படும், அது நமது கர்மத்தின் தொடர்பாகக்கூட இருக்கலாம்.
எந்த முடிவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய பக்குவம் நம்மிடையே வேண்டும். அது இருந்தால் முடிவுகளால் பாதிப்புகள் அதிகம் தோன்றாது. பின் விளைவுகள் ஏற்படாது. அப்போதுதான் மாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது எதனால் என்ற ஆராய்ச்சிக்கு நாம் செல்ல முடியும். ஆராய்ந்து மீண்டும் அந்த முடிவை மாற்ற முயற்சிக்கலாம்.
ஒர் முடிவிலிருந்து இன்னொன்று தோன்றும். இதுவேகூட நல்ல முடிவு, நல்ல தோன்றல், நல்ல செயலாக இருக்கலாம். ஆகவே என்ன முடிவு என்பதை பற்றி ஆராயாமல் செயலை செய்யுங்கள். அப்போது தோன்றும் முடிவும் தற்காலிகமானதுதான். ஏனெனில் அதிலிருந்து நாம் மீண்டும் ஓர் முடிவுக்கு வெற்றிக்கு செல்ல விழைகின்றோம்.
காற்று மூங்கிலில் மோதும்போது இசை தோன்றுவதில்லை. அதே மூங்கிலில் துவாரம் ஏற்படுத்தி புல்லாங்குழல் ஆனபிறகு அதனூடே செல்லும் காற்று இனிமையான ஓசையை தருகின்றது. இதுபோல் மனதில் எண்ணங்கள் தோன்றினால் மட்டும் போதாது. நினைத்ததை திட்டம் தீட்டி செயல் வடிவம் கொடுத்தால்தான் அந்த எண்ணம் வெற்றியாக பரிமளிக்கும்.
பாம்பின் பல்லில், தேளின் கொடுக்கில் விஷம் இயற்கையாகவே இருக்கின்றது அதன் பாதுகாப்பிற்காக. அதைப் புரிந்தவர்கள் அதை நெருங்கும்போது கவனமுடன் இருக்கின்றோம். மனிதனிடம் விஷமில்லை. அவன் செயல்களில் பிறரைத் துன்புறுத்தும் விஷயங்கள் இருக்கின்றன.
ஒரு செயல் செய்ய விழையும்போது அந்தச்செயல் மற்ற உயிர்களுக்கு தீங்கு நேராவண்ணம் இருக்க வேண்டும் என்பதைப்பற்றி சிந்தித்து செயலாக்கம் இருக்க வேண்டும் என்பதற்காகவே ஆறாவது அறிவு. அதனால் என்ன பயன்! எவரும் அதை சரியாகப் பயன்படுத்துவது கிடையாது. நம் செயல் எந்த உயிருக்கும் தீமை ஏற்படாமல் இருக்கும்படி எண்ணுவது, திட்டமிடுவது சிறப்பு.
ஓர் வழிப் பயணிக்குத் தாகம் எடுத்தது. அருகில் எங்கும் நீர் இருப்பதாகத் தெரியவில்லை. அவ்வழிவந்த ஒருவரைக்கேட்க அவர் இங்கு தோண்டினால் கிடைக்கும் எனக்கூறினார். உடனே குழிதோண்டினான். நீரில்லை. அருகில் தோண்டினால் அங்கும் இல்லை. பின்அருகில் வேறு இடத்தில் தோண்டினான் அங்குமில்லை. நீர் கானல் நீராகிவிட்டது. சோர்வில் துவண்டு போனான்.
சென்ற பெரியவர் திரும்பிவர நீங்கள் கூறிய இடத்தில் இத்தனை குழிதோண்டியும் நீர் கிடைக்கவில்லை எனக்கோபமாக கூறினான். அவர் சென்னார். அன்பனே! ஒரே குழியில் இன்னும் சிறிது ஆழம் தோண்டியிருந்தால் உனக்கு நீர் கிடைத்திருக்கும். பல குழிகளைத் தோண்டி என்ன பயன். ஒரே குழியில் கவனத்தை நிலைத்திருக்கவிடாமல், இங்கேயா! அங்கேயா! என மனத்தைச் சிதறவிட்டதால் தான் நீர் நிராசையானது என்றார்.
ஓர் பிரச்சனைக்கு யோசித்து தீர்வுகண்டு முடிவு எடுத்தபின் அதிலே கவனம் செலுத்தினால்தான் செயல் வெற்றியைக் காணமுடியும். முன்பே யோசி. யோசித்து முடிவு எடுத்தபின் அதன் மேல் சந்தேகமற்ற நம்பிக்கை வை.
செய்யும் வேலையில் மட்டுமே கவனம் வைத்தால் மனதை ஒருமைப்படுத்த முடியும். எனவே சாப்பிடும்போது சாப்பிடுங்கள், வேலை செய்யும்போது வேலை செய்யுங்கள், பிராத்திக்கும்போது பிரார்த்தனை செய்யுங்கள். ஒரே நேரத்தில் ஒன்றை மட்டும் செய்ய வேண்டும். மன அழுத்தத்திலிருந்து விடுதலை பெறுவீர். அது மகிழ்ச்சியின் ஆணிவேர் ரகசியம்.
நீங்கள் அவசரமாக ஓரிடம் சென்று கொண்டிருக்கையில் பார்வையற்ற வழியில் ஒருவர் பாதை கடக்க உதவி கேட்கிறார்! அல்லது ஒருவர் அவர் செல்லுமிடம் பற்றிய வழிதெரியாமல் தடுமாறுகின்றார்! அவருக்கு உதவுவதா அல்லது வழியில் கிடக்கும் குப்பையை அகற்ற முயலுவதா! இரண்டுமே நல்லச் செயல்கள்தான். எதைச் செய்வது. எது நல்லது! எது சரியில்லாதது! எதையும் அணுகும் முறையில் ஆன்மாக்கள் வித்தியாசப்படுவதால்தான் வாழ்க்கையின் நிகழ்வுகள் மாறுபடுகின்றன்.
ஒரு விஷயத்தை இரண்டு ஆத்மாக்கள் ஒரேமாதிரி பார்ப்பதுமில்லை, செயல் படுவதுமில்லை. அதுபோன்றே இரண்டு ஆத்மாக்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வை ஒரேமாதிரி பார்க்காமல் அந்தந்த ஆன்மாக்களைச் சார்ந்து பார்கின்றோம்.
எந்தச் செயல் செய்வதன் மூலம் நீங்கள் யார் என்பதை வெளிப்படுத்திக் கொள்ளமுடியும். அதற்கு உங்கள் உள்ளே உள்ள நீங்கள் என்னவாக இருக்கின்றீகள், என்ற எண்ணங்கள்தான் உங்கள் செயல்களைத் தீர்மானிக்கும். உங்கள் உள்நிலை மனம் உறுதியான எண்ணங்களைக் கொண்டால் அதன்பின் உங்கள் செயல் எல்லாம் சரியானதாகவே இருக்கும். நாம் செய்தது நம் முன்னோர்கள் செய்தது என ஏழு தலைமுறைக்கு தொடரும் செயல்.
பொழுது வீணே கழிய இடம் கொடுக்கலாகாது. எண்ணங்கள் முடிவாகி செயலுக்கு வரும்போது, அந்த செயலை ஊக்கத்துடனும், மகிழ்வுடனும் அந்த எண்ணங்கள் தோன்றிய போதே பிழைகளின்றி செய்து முடிக்க பழகவேண்டும்.
கர்மம்: ஒருவரது கர்மம் தனது ஏழாவது வாரிசுக்கு செல்லும்போது தான் முற்றிலும் தீர்க்கப்படுகின்றது. ஒரு மனிதனின் கர்மத்தினை 84 பகுதிகளாய் பகுந்திருக்கின்றனர் முன்னோர்கள். ஒரு கரு உருவாக அதில் அதனின் தந்தையின் 28 கூறுகளும், மீதி 56 கூறுகளில், பாட்டனாரின் 21 கூறுகளும், முப்பாட்டனாரின் 15 கூறுகளும், 4ம்வழி தந்தையின் 10 கூறுகளும், 5ம் வழி தந்தையின் 6 கூறுகளும், 6ம் வழி தந்தையின் 3 கூறுகளும், 7ம் வழி தந்தையின் 1 கூறும் இருப்பதாக கொள்கின்றனர்.
இந்த கூறுகளே ஓர் ஆன்மாவின் உடலுக்கும், அமைகின்றது. அவர்களின் செயல்கள், எண்ணங்கள், குணங்கள், நடவடிக்கைகளின் சாயல்கள் சில, பல அதற்குள்ளே இருக்கின்றது. எனவேதான் நாம் இவர், இன்னார் சாயல், இன்னார் குணம், இன்னார் செயல் கொண்டிருக்கின்றது எனக் குறிப்பிட்டு சொல்கின்றோம்.
நம் முன்னோர்களின் நடை, பாவணைகள், செயல்கள், நம் உடம்பில் உள்ளத்தில் தோன்றி நம்மை அவ்வாறே இயங்க வைக்கும்போது, அவர்கள் செய்த கர்மவினைகள் நம்மை ஏன் தொடராது என்பதை நாம் புரிந்து கொள்ளல் வேண்டும். நம்மை மீறிய செயல்கள் நடக்கும் போது, கர்மவினை! என் விதி! என நம்மில் பலர் புலம்புவதை காண்கின்றோம்.
முன்னோர்களிடமிருந்து அவர்களின் மகன், மகனின் மகன் என வழி வழியாய் பழக்கங்கள் நம் தாய் தந்தைவழி நம்மிடம் வருகின்றது. நாம் அந்த பழக்க வழக்கங்களூக்கு அப்படியே வெறுமனே அடிமையாவதை விடுத்து, அது ஏன், எப்படி, எதற்காக நடந்தது என யோசித்து பின் அச்செயலைச் செய்தோமானால் அந்த பழக்க வழக்கங்களும் நம்மிடையே மாறுபட ஆரம்பிக்கும். சிந்தனையின்று அப்படியே தொடர்வதால் செயல்முறை ஓர் எல்லைக் கோட்டை வகுத்து மூளையின் பகுதியில் பதிந்துவிடும். அது ஸ்டீரியோ எனச்சொல்கிறோமே அதைப்போன்று ஓர்முனைப் பட்டதாகவே இருக்கும். சிந்தித்தால் அதைவிட சிறப்பாக விரைவாக செயலிருக்கும்.
உங்கள் குழந்தை வளரும் சூழ்நிலையைப் பொறுத்து பழக்கங்கள் தொடர்ந்து எதிர்காலம் அதைச் சுற்றியே இருக்கும். உப்பு சப்பு இல்லா சாரமில்லா வாழ்க்கை எனும் ஓடத்தில் பயணம் போலாகிவிடும். வேறு சூழலுக்கு சென்றால் அவர்களால் வெற்றி கொள்ளவே முடியாது. பாதி வெற்றி என்பது வெற்றியே அல்ல. அவர்கள் நட்பு, வாழ்க்கை, உலகம் எல்லாம் ஓர் குட்டையில்தான் குழம்பும். அதிலிருந்து மீள மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும்.
தேவையில்லா பழக்க வழக்கங்களை கைவிடல் வேண்டும். சிந்தனை வேண்டும். மனதில் மாற்றம் வேண்டும். உடல் ஒத்துழைக்க வேண்டும். இந்த போராட்டத்தில் அவர்கள் தோற்றால் மீண்டும் அதே பழக்கத்திற்குள் மூழ்கி விடுவர். அதன் பிறகு பெரிய மாறுதல் அரிது.
சுயசிந்தனைகள் வளரும் விதமாக அவர்களை செயல்பட விடுங்கள். மனதில் இருக்கமின்றி இருக்கட்டும். வாழும் உலகை உற்றுப்பார்த்து, வளமுடன் சிந்தித்து அதன் பரிமாணங்களைப் புரிந்து செயல்படட்டும். அந்த அனுபவத்தின் வாயிலாக சிந்தித்த செயல்பாடுகளின் ஆழம் சிறப்பாகும். இதை உடல், மனம் உணர்ந்தால் ஓர் சந்தோஷம் பிறக்கும். அது பரவசநிலையைக் கொடுத்து மீண்டும் மீண்டும் உலக நடப்புகளை கவனிக்க புத்துணர்ச்சியையும் ஊக்கத்தையும் கொடுத்து வாழ்வில் வளம் சேர்க்கும்.
எல்ல கெட்டபழக்க வழக்கங்களும் நிறைந்த ஒருவன் எந்தவித நோய்களும் கஷ்டமும் இல்லாமல் இறந்துவிட்டான். அவன் செய்த கொடுஞ் செயல்களுக்கு எப்படி கர்மபலனின் பாதிப்பு இன்றி இறந்தான் என அனைவருக்கும் சந்தேகம் வந்தது. தேவமுனி நாரதருக்கும் இந்த சந்தேகம் வந்தது. அருளார், அவனின் மனைவி மக்கள் நல்லவர்கள். பாவ புண்ணியத்திற்கு அஞ்சுபவர்கள். அவனுக்கு இப்பிறவில் கஷ்டங்களைக் கொடுத்திருந்தால், அதனால் அவர்கள்தான் துயரமடைவார்கள் என்பதால் அவனுக்கு துயரங்கள் இப்பிறவியில் இல்லை என்றார். நற்காரியங்கள் செய்யும் நல்லவர்களை கர்மபலன் பாதிக்காது. அவர்களை சார்ந்தவர்களுக்கும் அந்த பாதிப்பின் தாக்கம் குறைந்து காணப்படும். அவன் செய்த கர்மத்தின் பலன்கள் அவனை அடுத்த பிறவியில் வந்துசேரும் என்றார்.
எனவே நம் முன்னோர்கள் செய்த கர்மங்களிலிருந்து நாம் விடுபட, நம் வருங்கால சந்ததியினர் விடுபட, நம்செயல் நன்மை பயப்பதாக இருக்க வேண்டும். கர்மம் தீர புண்ணிய நதிகளில் நீராடினால் மட்டும் போதாது. நம் குணநலன்களும் செயல்களும் பிறருக்கு இனிமை தருவதாகவும், துக்கம், துயரம் தராதனவையாகவும் இருக்க வேண்டும்.
அப்போதுதான் தொடரும் கர்மத்தின் ஆதிக்க வேகத்தை, நம் ஆன்மாவோடு முடித்துக் கொள்ள அல்லது முடிந்த அளவு குறைத்துக் கொள்ளமுடியும். நம் சந்ததியினரை அதிகம் பாதிக்காமல் இருக்க நாம் இதை செய்ய வேண்டும். மனம் ஒருநிலைப்படுத்துதல், வழிபாடுகள் கர்மத்தின் ஆதிக்கங்களை நம்மால் முடிந்தளவு குறைத்துக் கொள்ள வழிவகுக்கும்.
தனிமனிதன், குடும்பம், குலம், நாடு, இனம், பூமி என எல்லாவகையிலும் ஏற்பட்ட கர்மாவை நம் செயலால் நல்ல/கெட்ட கர்மாகவாக மாற்ற இயலும். சொல், எண்ணம், செயல் அதனால் வாழ்வில் கர்மா, அதை உடல் உணரும் திறன், இந்த சக்திகளால் பாதிப்பு இவைகளிலிருந்து வாழ்வின் கட்டத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை உனக்கு உண்டு. அதன் அடிப்படையில்தான் வாழ்க்கை. நல்ல செயல்கள், நல்ல கர்மா, நல்ல காரியங்கள் வாழ்வில் சந்தோஷம்! தீயசெயல்கள், கெட்ட கர்மா, கஷ்டங்கள் வாழ்வில்!
கர்மபலன்கள் எல்லோருக்கும் எல்லா பிறவிக்கும் உண்டு. ஒரு மரம் பூ பூத்து, காய்த்து, கனியாகுமுன்பே அந்த தன்மைகள் மரத்தில், செடியில் ஒளிந்திருப்பது போலவே, மனிதன் பிறக்கும்போதே அவன் அனுபவிப்பதற்கு, முன்பு செய்த முற்பிறப்பு வினைகள் மறைந்து கிடக்கின்றன. அதை வாழ்நாளில் அனுபவித்தே ஆகவேண்டும் என்பது நியதி.
கர்ம பலன்களின் இன்னுமொரு பெயர் விதி. வலிமையானது விதி என்பதற்கு நிறைய சான்றுகள் உண்டு. அபிமன்யுவின் மகனான பரீஷித் பாண்டவர்களுக்குப்பின் அரியணையில் ஏறியவன். நல்லவன். மனிதநேயம் மிக்கவன். காட்டில் வேட்டையாடும் போது ஓர் மானைத் துரத்திச் சென்றான். அங்கே முனி ஒருவர் தவமிருந்தார். அவரைப் பார்த்து தான் துரத்திய மான் இப்பக்கம் வந்ததா என் வினவினான்.
அவர் மௌனமாக இருக்கவே எரிச்சலடைந்தவன் அருகில் இறந்து கிடந்த பாம்பை தூக்கி அவர்மேல் வீசிவிட்டு சென்றான். அது அவன் கர்மபலன். அந்த ரிஷியின் மகன் தன் தந்தையை அவமதித்தவன் பாம்பரசனால் தீண்டப்பட்டு 7இரவுக்குள் இறப்பான் எனச் சாபம் தந்தான்.
இதையறிந்த பரீஷித் ஒற்றைத் தூணின்மேல் மாளிகை எழுப்பி 7நாட்கள் தங்க முடிவு செய்தான். மூலிகை வைத்தியர்கள், காவலர்கள் சூழ 6நாள் கழிந்தது. மன்னன் பசியாற பழங்கள் வந்தன. அவைகளை மந்திரிகளுக்கும் கூட இருந்தோருக்கும் பகிர்ந்து அளித்து ஒரு பழத்தை எடுத்து உண்ண ஆரம்பித்தான். புழு வடிவில் உள்ளே இருந்த பாம்பரசன் தீண்ட பரீஷித் இறந்தான். எப்படி பாதுகாப்பாக இருந்தாலும் விதி எந்த வடிவத்திலும் தொடரும் என்பதே இதன் பொருள்.
மனிதன் சுதந்திரமின்றி இருப்பதற்குக் காரணம் அவனின் வினைப்பயன்கள் அவனை அங்குமிங்கும் அழைக்கழிப்பதே! எப்படியிருப்பினும் மனதை ஓர் நிலைப்படுத்தி தியானித்து நல்லகாரியங்களைச் செய்யும்போது அதனால் ஏற்படும் கர்மபலன்கள் நமக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும். எப்போதோ செய்த செயல்களினால் ஏற்பட்ட கர்மபலன்களின் தாக்கத்தை குறைக்கவும் உதவி செய்யும்.
ஒவ்வொரு மனிதனும் அவனுக்குரிய கர்மாக்களை செய்தே தீரவேண்டும். அவனின் முக்திக்கு உபயோகப்படும் வகையில் 48 கர்மாக்கள் ‘அக்னிபுராணத்தில்’ கூறப்பட்டுள்ளன. அவை எல்லாவற்றையும்விட உயிர்களிடத்தில் இரக்கம் காட்டுதல், ஆன்மாக்களின் பிழை பொறுத்தல், எளிமையாக வாழ்தல், பொய்பேசாமை, சுத்தமாகவும் சுறுசுறுப்புடனும் இருத்தல், பிறருக்கு உதவி நன்மை செய்தல், பற்றற்று இருத்தல் ஆகியவைகளை கடைபிடித்தலும் நல்ல கர்மபலன்கள் ஏற்பட வழிவகுக்கும் உத்தமமான கர்மங்களாகும்.
தண்டணை-ஜீவஒளி: வேட்டையாடுவதில் விருப்பம் உள்ள இருவர் வேட்டையாடச் சென்றனர். இவர்கள் வலையில் இரண்டு குட்டி யானைகள் கிடைத்தது. மகிழ்வுற்ற இருவரும் இரண்டு யானைகளையும் கூட்டி வந்தனர். காட்டிலிருந்து நகருக்குவர ஓர் விமானத்தை ஏற்பாடு செய்தனர். விமானி இரண்டு யானைக் குட்டிகளை கொண்டு செல்லமுடியாது. பாரம் அதிகம் ஒன்றை ஏற்றிச் செல்லலாம் என்றான். அவர்கள் சென்றமுறை இரண்டு யானைக்குட்டிகளை ஏற்றிக் கொண்டுச் செல்ல அப்போதிருந்த விமானி ஒத்துக் கொண்டார் என்றனர். மேலும் உங்களுக்கு அதைவிட கூடுதல் பணம் தருகின்றோம் என்றனர். விமானி சம்மதித்தான்
வண்டியில் பாரம் ஏற்றப்பட்டது. சிறிது தடுமாற்றத்துடன் புறப்பட்ட அந்த சிறிய விமானம் சிறிது தூரம் சென்றதும் மிகவும் தடுமாறி கீழே வயல் பகுதியில் விழுந்தது. அப்போது வேட்டைக்காரரில் ஒருவன் கேட்டான், நாம் இப்போது எங்கே விழுந்து இருக்கின்றோம் என்று. அடுத்தவன், போனவாரம் விழுந்தோமே அதற்குப் பக்கத்தில்தான் என்றான். என்ன புத்திசாலித்தனம் இது.
தண்டனை என்பது தவறுக்கு. ஒருமுறை தவறு செய்து அதிக பாரம் ஏற்றி அதனால் கீழே விழுந்தவர்கள் அதை அனுபவமாக வைத்துக் கொண்டு அதற்குத் தகுந்தபடி செயல்பட வேண்டும். அப்படி அனுபவங்களை பாடமாக ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் இப்படி ஒவ்வொரு முறையும் கீழே விழவேண்டியதுதான்.
தவறு செய்தவர்கள் யாராயிருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. தவறுக்கு அளவு கோல் உண்டா! சின்ன தவறா! பெரிய தவறா! என்றொல்லாம் கிடையாது. தவறு என்றால் தவறு. அந்தத் தவறு மற்றவர்களை பாதித்த அளவுவை வைத்து கர்மபலன்களின் அளவீடு  நிர்ணயிக்கப்படுகிறது.
இதைப் பொறுத்தே சிறிய, பெரிய தண்டனைகள். தண்டனைகள் என்பது மீண்டும் அவர்கள் அதேபோன்ற ஒன்றைச் செய்ய முயலும்போது அவர்களின் மன உணர்வை நினைவு படுத்துவதற்காகவும், அவர்கள் செய்த செயல்களின் கர்மங்களை அவர்களே அனுபவிக்கவும், அந்த கர்மங்களின் பலன்கள் அவர்களின் சந்ததிக்கு செல்லாமல் தடுப்பதற்காகவும் தரப்படுகின்றது.
மாண்டவ்யமுனி யோக தியானத்தில் இருந்தார். திருடர்களைத் தேடிக்கொண்டு அவ்வழி வந்த காவலர் தலைவன், முனிவரைப்பார்த்து திருடர்கள் இந்தப்பக்கம் வந்தனரா எனக்கேட்டான். மாண்டவ்யர் ஆழ்ந்த யோகத்தில் இருந்ததால் எதையும் செவியுறவில்லை. திருடர்களைத் தேடிய காவலாளிகள் அருகில் ஓர் ஆசிரமம் இருக்கக்கண்டு அதனுள் சென்று தேடினர். திருடர்கள் கொள்ளையடித்த பொருள்கள் அங்கே இருக்க அதைக் கைப்பற்றினர். ஆசிரமத்தின் பின்னால் ஒளிந்திருந்த திருடர்களையும் கைது செய்தனர்.
காவல்கார தலைவனுக்கு ஒரு சிறிய சந்தேகம். அந்த முனிவர்தான் இந்த கூட்டத்தின் தலைவன் என நம்பி அவரையும் கைது செய்தான். மன்னரிடம் தகவல் அளித்தன். மன்னர் உடனே முனிவரை கழுவில் ஏற்றச் சொன்னன். மாண்டவ்யர் கழுவில் ஏற்றப்பட்டாலும் தன் யோகத்தால் உயிருடன் தன் தியானத்தை தொடர்ந்தார்.
மற்ற முனிவர்கள் இதை அறிந்து மன்னனுக்குத் தெரிவித்தனர். மன்னன் தவறை உணர்ந்து மாண்டவ்யரை விடுதலை செய்து மன்னிப்புக் கோரினார். முனிவர் மன்னரை அனுப்பிவிட்டு தான் செய்யாத குற்றத்திற்கு ஏன் இந்த தண்டனை என தர்மதேவதையைக் கேட்டார்.
தர்மதேவதை நீங்கள் குழந்தையாயிருந்தபோது பட்சிகளையும், வண்டுகளையும் இம்சை செய்ததின் கர்மபலன் இது என்று கூறினாள்.
அப்படித் தண்டணைகளிலிருந்து எதோ ஒரு காரணத்தால் தப்பியவனின் சந்ததி அந்த பலன்களை சந்தித்து பாதிப்புகளை அனுபவிக்கின்றது. ஒருவரின் தவறுக்கு மற்றொருவர் என்னவென்று அறியாமலே எப்படிப் பொறுப்பாகலாம் என நீங்கள் நினைக்கலாம். நீங்கள் உங்கள் தாய்-தந்தையிரின் உயிர்கூறுகளிலும் அவர்கள் அவர்களின் தாய்-தந்தையரின் உயிர் அனுக்களிலுமிருந்தும் வழி வழியாய் பிறப்புகள் இருக்கும்போது அவர்கள் செய்த நன்மை/ தீமைகள் ஏன் தொடரக்கூடாது. கண்டிப்பாய் தொடரும்.
நன்மைகள் தொடர்ந்தால் சந்தோஷப்படும் நாம் தீமைகளுக்கு காரணம் புரியாத நிலையில் ‘யார் செய்த பாவம்’ என வருந்துகிறோம். முன்னோர்கள் செய்த பாவத்திற்கு தண்டனைகளை அவர்களே அடைய முடியா நிலையில் அது வழிவழியாய் தொடர்கிறது.
எனவே தவறு செய்யும்போது தெரியாவிட்டாலும், பின்னர் அது புரிந்தால் அதை நினைத்து வருந்தினாலே குற்றத்தின் பாவங்கள் விலக வழித்தெரியும். அதற்கான தண்டனையை அவர்கள் ஏதோ ஒரு வடிவில் அடைந்துவிடுகின்றனர். மனதில் ஆன்மீகத்தின் உதவியோடு செய்த தவறுகளுக்கு பிராயசித்தம் தேடி சந்ததி நன்றாக இருக்க விரும்பி வேண்டி பிரார்த்தனை செய்கின்றனர். செய்த பாவச் செயலின் கடினம் பொறுத்து பாவங்களுக்கு தீர்வை அவர்கள் அனுபவித்த பின்னும் சந்ததிக்கு தொடரலாம்.
இந்த தொடர்ச்சியிலிருந்து இறைக்கும் விதிவிலக்கு இல்லை. உயிர்களுக்கு எத்தனையோ கொடுமைகள் செய்த மானிட, அசுர பிறவிகளை இறைசக்திகள் அழித்தாக நாம் புராணங்கள் வாயிலாக அறிகிறோம்.
மற்ற உயிர்களுக்கு துன்பம் கொடுத்து, செய்த பாவங்கள் அளவில்லாது போகும்போது எதற்கும் ஓர் எல்லையுண்டு என்ற பொது நியதிப்படி, கொடியவர்களுக்கு ஒரு படிப்பினை தண்டணை கொடுத்து அவர்களிடமிருந்து மற்றவர்களை காக்க ஓர் உயர் சக்தி என்ற முறையில் அந்த மானிட, அசுர பிறவிகளை அழித்த நிலையில், உயர் சக்தியாயிருந்தாலும், பொது நன்மைக்காக செய்திருந்தாலும், அழிவு இயற்கையாக நிகழாமல் நடைபெற்றதாலும் அவர்கள் செய்த செயலுக்கான தோஷங்கள் உண்டு.
அதுதான் பிரம்மஹத்தி தோஷம். அது இறையாக இருந்தாலும் அந்த தோஷத்தின் பாதிப்பு உண்டு என கூறுகிறது சாஸ்திரங்கள்.
அதிலிருந்து விடுபட அவர்கள் மனதை ஒருமைப்படுத்திய நிலையில் பொதுநன்மைக்காக தீமைசெய்த தங்கள் செயலின் பாதிப்பிலிருந்து விடுவித்து, தங்களை காப்பாற்ற அருள்புரிய வேண்டும் என இறையிடம் வேண்டுதல் பிரார்த்தணை செய்கின்றனர். இராமாவதாரத்தில் இராவணனை வதம் செய்து திரும்பும் வழியில் தோஷங்கள் தங்களை தொடர்வது கண்டு இராமர், சீதை, லட்சுமணன் ஆகியோர் சிவபூஜை செய்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
எனவே செய்யும் தீச்செயலுக்கு எந்த காரணத்தினால் எந்த சூழ்நிலையில் செய்திருந்தாலும் அதன் பாதகபலன்கள் உங்களையோ, உங்கள் வம்சத்தையோ கண்டிப்பாய் வந்து சேரும். ஆன்மாக்களே இதைப் புரிந்து செயல்படுங்கள். ஒரு செயல்காரியம் செய்யுமுன் அதனால் யார் யாருக்கு என்ன துன்பம், பாதிப்பு என யோசனை சிறிதளவு செய்து, செய்யப்போகும் செயல் சரிதானா என ஒருமுறைக்கு சிலமுறை சிந்தித்து தெளிவடைந்தால் செயலின் தாக்கம், பலன் உங்களுக்குப் புரிந்துவிடும். அதன் பலன் உங்களின் சொந்தங்களுக்கு என நினைத்தால் செயலின் வேகம் குறையும். செயல் இல்லாமல்கூடப் போகலாம்.
வேறொருவரால் பாதிக்கப்பட்ட நீங்கள் அவருக்கு எதிர்மறையாக செயல்பட நினைத்து, பின் அதன் கர்மபலன்களை நினைத்து விட்டுவிட்டால், உங்களுக்கும் உங்கள் வம்சத்திற்கும் நல்லது. உங்களை பாதிப்புக்கு உள்ளாக்கியவருக்குரிய தண்டணை சரியான காலத்தில் கொடுக்கப்பட்டுவிடும். நீங்கள் நிச்சயம் அப்போது உணர்வீர்கள். அதைத்தான் நாம், செய்த பாவங்களுக்கு இப்போது அனுபவிக்கிறான் என்று பலர் கூறுவதை கேட்டிருக்கின்றோம்.
ஆன்மாவிற்குரியவர்களே நீங்கள் எத்தனை எத்தனை சேர்த்து வைத்தாலும், சம்பாதித்திருந்தாலும் நீங்கள் அனுபவிப்பது தவிர மற்றவை என்னாகிறது. சற்று யோசியுங்கள். நல்வழியில் சேமிக்கப்படும் பொருள் நல்வழி செலவாகி நன்மைபயக்கும் நல்ல கர்மாக்களாகிறது. அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. பொருள் அதிகம் இருந்தால் நியாயம், தர்மம் கெட்டு விடுகின்றது. பணத்தின் ஆதிக்கம் உங்களிடையே தோன்றி அதனால் எதையும் செய்துவிடலாம் எனநினைத்து அவ்வழியில் பயணிக்கின்றீகள்.
உங்களின் அளவிற்கு அதிகமான பொருள் குவிப்பு, அந்த வேர்வை உழைப்பின் வெற்றியறியாமல் உங்கள் சந்ததியருக்கு சென்று, அவர்களுக்கு பலதவறான பாதைகளை காட்டி அவர்களை பாவங்களை செய்யத்தூண்டும். சேர்த்த பொருள்கள் மூன்றாவது தலைமுறையில் மாற்றங்கள் நிகழும் என ஆன்றோர்கள் கணக்கிட்டுள்ளார்கள்.
எவ்வளவு பொருள்கள் குவிந்திருந்தாலும் மூன்று/ நான்காவது தலைமுறையில் அவைகள் பிளவு கண்டு மாற்ற நியதிகளுக்கு உட்படுகின்றது. அந்த தலைமுறையினர் என்ன செய்வார்கள் என்பது உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. பின் ஏன் எல்லோருக்கும் சேர்ந்து பாவபலன்களை சேர்த்து வைக்க ஆசைப்படுகின்றீர்கள். நீங்கள் உங்கள் குடும்பம் என நிறைவு கொண்டு வாழுங்கள்.
மன்னர்கள், அரசர்கள், சிற்றசர்கள், திவாண்கள், நிலச்சுவான்தார்கள், பெரும் தனவந்தர்கள், முதலாளிகள், பணக்காரர்கள் எல்லாம் எங்கே போயினர். அவர்களின் வம்சாவளியினர் தற்போது எங்கே எப்படி சிதறி இருக்கின்றார்கள் போன இடம் எதுவும் தெரியாது. இப்படித் தெரியாதிருக்கும் ஓர் நிலைக்கு அவர்கள் செயலுக்கு நீங்கள் ஏன் பாவங்களை கொண்டு சேர்க்கின்றீர்கள். போதும் என்கிற மனமே பொன்  விளையும் மனம். நல்ல நினைவுகளை தோற்றிவித்து நல்ல செயல்களை செய்விக்க உதவும். தீய எண்ணங்கள் தோன்றாததால் தீய செயல்களில்லை.
உங்கள் குடும்பத்திற்கு, வம்சத்திற்கு, எந்த தீவினை கர்மபலன்களில்லை என்பது உங்கள் மனதில் ஓர் ஒளியைத் தோற்றுவிக்கும். அந்த ஜீவ ஒளியை நீங்கள் உணரலாம். உங்களின் நிறை குறைகளைக் கண்டு உங்களிடையே மாற்றங்கள் நிகழ்ந்து ஒரு சிறந்த மனிதராக மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக மாறுவீர். இந்த மாற்றம் நடந்தது நன்றாகவே நடந்தது, நடக்க இருப்பதும் நன்றாகவே நடக்கும் என்பதை உங்களுக்கு புரியவைக்கும்.
அந்த ஜீவஒளி உங்களிடையே ஓர் பிரகாசத்தை ஏற்படுத்தும். அதைக் கண்டு ரசியுங்கள். அதனுடன் ஒன்றி இன்பமடையுங்கள். வாழ்வின் வெற்றி ரகசியத்தை கண்ட நினைவு உங்களை வாழ்வின் வெற்றிப் பாதையில் வீரநடைபோட்டு செம்மையாக வழிநடத்தும்.
சாஸ்திரங்கள் என்ன சொல்கிறது என்றால் ஜீவஒளி காண நீ துன்புற்றாலும் அடுத்தவன் இன்பமுற வேண்டும் என நினைக்கும் உத்தமனாயிருக்க வேண்டும் என்பதில்லை! அதற்காக நீ இன்பமுற அடுத்தவன் துன்புற்றாலும் பரவாயில்லை என நினைக்கும் அதமனாயிருக்காதே! பின் எவ்வாறு இருக்கவேண்டும்!  நீ இன்புறுதல் போன்றே ஒவ்வொருவரும் இன்பமுற வேண்டும் என நினைக்கும் மத்திமன் போல் இருக்கவேண்டும். இதுவே மனிதநேயபண்பு.
நீ துன்புற்றபோது யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று சிலர் நினைப்பதுபோல நினையாமல், உண்மையாகவே நீ இன்புற்ற இன்பங்களை அனைவரும் அடையவேண்டும் எனக் கலப்படமில்லா தூயச் சிந்தனையோடு நீ நினைக்கும் போது  உன்னுள் ஓர் மகிழ்ச்சி, ஒளி உணர்வு தோன்றி உடலில் பரவும். அது ஆனந்தமயமானது.
செயல் கர்மம்: இப்படி செயல் தொடரும்போது அது கர்மத்தின் கையில், முயற்சி மட்டும் நம்முடையது. இதுதான் கீதா உபதேசமாக அர்சுனனுக்கு கிருஷ்ணரால் சொல்லப்பட்டுள்ளது.
என் எதிரே இருப்பவர்கள் என் உறவினர்கள், நண்பர்கள், சொந்தக்காரர்கள், இவர்களிடம் சண்டையிட்டு இரத்தம் கண்டு வெற்றி கொண்டு என்ன செய்யப் போகிறேன். இவர்களை எல்லாம் இழந்தபின் அடையும் வெற்றியில் என்ன சந்தோஷம், சுவராஸ்யம் இருக்கப் போகிறது என என்மனம் மயங்குதே! என்ற அர்ச்சுனனுக்கு இது உன் கர்மத்தின் விளைவு. இன்று இதை நீ செய்கிறாய். இதனால் ஏற்படும் முடிவுகளுக்கு, நன்மை தீமைகளுக்கு நீமட்டும் பொறுப்பாக மாட்டாய்! இந்தபிறவியில் உன் செயலுக்கு உறுதியாக்கப்பட்ட கர்மவினை.     
இதற்காக மனம் கலங்காதே! மேலும் இந்த உயிர்களும், இந்த கர்மங்களும், செயல்களும், முடிவுகளும் எங்கிருந்து வந்தனவோ, அங்கேயே, அப்படியே செல்கின்றது, அது மீண்டும் மீண்டும் வேறுவடிவத்தில் கர்மபயன் தீரும்வரை தொடரும். ஆகவே நீ தயங்காதே! கர்மத்தின் பாதையில் நீ ஒரு சிறு செயலை செய்து அதற்கு துணை போகின்றாய்! அது தவிர்க்க முடியாதது.
எனவே முடிவு என்னெவென்று உனக்குத் தெரிந்திருந்தாலும், உனக்கு என ஓர் செயல் இடப்பட்டுள்ளது, அதை நிறைவேற்றுவது உன் கடமை. எனவே மன உறுதியோடு உனக்கு இடப்பட்டுள்ள செயலை சரிவர, வெற்றிகரமாக செயல்பட சிந்தனையுடன் தீவிரமாக முயற்சித்து செயல்படு. செயலை மட்டும் செய். முடிவைப் பற்றி கவலைப்படாதே! எனக்கூறியது, என்றும் எல்லோருக்கும் பொதுவாகச் சொல்லியதுதான். அனைவரும் அவரவர் கடமையை சரிவர செய்வதற்குத்தான்.
செயல் குழப்பம்: இதை நண்பர்கள், உறவினர்கள், அறிந்தவர்கள் செயல்பாடு என்றால் குறை சொல்லி குழப்புவது அல்ல நமது வேலை. உற்சாகப் படுத்தி ஊக்கப் படுத்துவதுதான் சிறப்பு. அவரவர் செயல் அவரவர் கர்ம வினைக்கு ஏற்ப மாறும். அவர்தம் செயல்களை நாம் தடுத்து அதில் குளறுபடிகள் செய்து, அவர் செயல்பாடுகளில் கவனம் சிதைந்து அதிக துன்பமான முடிவுகள் ஏற்பட்டு, அதிலிருந்து வேறு திட்டங்கள், செயல்கள், முடிவுகள் என அல்லல் படுத்தவேண்டாம்.
ஓர் செயலை எவ்வாறு செயல்படுத்துவது என்று கவலை பட்டால் அதனால் உண்டாவது வீண்பயம். மேலும் அதனால் ஏற்படுவது பலவீனம். அந்த பலவீனம் நமது மனதில் குழப்பமான எண்ணங்களையும் புதுப் புது சந்தேகங்களையும் கிளப்பிவிடும். அது நிச்சயம் தோல்வியில்தான் முடியும். இதற்குப்பின் நாம் குழப்பத்திலிருந்து தெளிவடைந்து சகஜ நிலைக்கு வந்து மனம் அமைதி கொண்ட பிறகுதான் நம்மால் மீண்டும் சிறப்பாக சிந்தித்து நல்ல செயல் பாட்டுக்கான வழிமுறைகளை காணமுடியும். அதற்கு முன் ஓர் தோல்வி தேவையா?
வெற்றியிலிருந்து மாறுபட்டதால் எல்லாம் தோல்வியாகி விடாது. சிறு, சிறு மாற்றங்களும் நாம் நினைத்த செயல் வெற்றிக்கு அருகில் சென்றிருக்கும், அதை கண்டு பிடித்து நமது வெற்றியை முழுமையாக்கிக் கொள்ளவேண்டும். ஓர் செயலை செய்யும்போது அதனால் ஏற்படும் நிகழ்வுகளால் ஒருவன் கஷ்டப்படலாம். ஆனால் அந்த செயலை செய்ய ஆரம்பித்தபின் அதனால் அவமானம் என்று ஒருபோதும் நினைவு கொள்ளக்கூடாது. செயலில் தாக்கங்கள், குழப்பம் ஏற்பட்டு வெற்றி பாதிக்கும்.
எந்தசெயலையும் தள்ளிப்போடக்கூடாது. ஏனெனில் அது மனதில் ஓர் இடத்தில் இருந்து கொண்டே மன அழுத்தத்தை அதிகரித்துக் கொண்டிருக்கும். ஒரு கோடு வரைவதாக இருந்தாலும் அடுத்த புள்ளி நேராகவா, வளைவாகவா எனதீர்மானித்து மூளை தன் செயலைச் செய்தால்தான் நம்மால் அந்த கோடு நேர் கோடாகவோ, வளை கோடாகவோ போடமுடியும்.
வாழ்க்கையில் செய்ய வேண்டிய செயலை உடனுக்குடன் தீர்மானம் செய்தால்தான் வாழ்க்கை நகரும். அப்படி செய்யாமல் தள்ளிப் போடுவதால் நமக்கு மன அழுத்தம் ஏற்படும். அதைத் தவிர்க்க உடன் செயல்படுவது ஆரோக்கியமான சந்தோஷத்திற்கு அடிப்படை. எந்தச் செயலையும் பலனை முடிவை எதிர்பார்க்காமல் நல்ல குறிக்கோளுடன் செயல்பட்டால் ஏற்படும் பலன், முடிவு சாதகமாக இருக்கும்.
பலனை எதிர்பார்த்து செயல்படும்போது கவனம் சிறிதளவாவது திசை திரும்ப வழியிருப்பதால் நமது குறிக்கோளை நாம் அடைவதில் இடையூறுகள் ஏற்படும். எனவே தீவிர குறிக்கோளுடன், ஒரு வேடன் கவனம் திரும்பாமல் குறிவைப்பதைபோல முனைந்து செயல்பட்டால் பலன் நிச்சயம்.
தவறு செய்பவர்கள் அதை நினைத்து தவிப்பதால், அவர்கள் அதுபோன்ற தவறுகளை இனி செய்யக்கூடாது என முடிவு எடுத்து விரைவில் பக்குவமான நிலைக்கு வந்து விடுகின்றனர். தங்களை நல்லவர் என நினைத்துக் கொண்டிருப்பவர்கள், தாங்கள் தவறு செய்யமாட்டோம் என்ற நினைவில், செய்யும் தவறுகளை கவனியாமல் இருப்பதால் அவர்களால் பக்குவமான நிலைக்கு வரமுடிவதில்லை.
ஒவ்வொரு மனிதனிடமும் எல்லாவகை குணங்களும் செயல்களும் நிறைந்திருக்கும். அவைகளில் உனக்கு பிடித்தவற்றை எடுத்துக்கொள். பாராட்டு. பிடிக்காதவைகளை விட்டுவிடு. அப்போது எல்லோரும் உன்னை நேசிப்பார்கள். அன்புடன் இருப்பார்கள். சந்தோஷம் நிறையும் உன் வாழ்வில்.
தனக்கு என இல்லாமல், தன் குடும்பத்தினருக்கு என இல்லாமல், உற்றார் உறவினரென இல்லாமல் பிறர் நலம் கருதி செய்யும் செயல் எல்லாவற்றிலும் மேலானது. தன்னலமற்றது. கீதையின் சாரமே, “கடமையை ஒழுங்காகச் செய்வதும், எவ்வித பலனையும் எதிர்பாராமல் செய்வதும்” ஆகும்...  
மலர்கள் எல்லாம் அழகுள்ளது, அழகான நிறமுள்ளதாயிருந்தாலும் மணம் உள்ள மலர்தான், மணம் பரப்ப முடியும். தென்றலில் அதன் நறுமணத்தைக் கலக்க முடியும். அதைப்போல்தான் நம் மனமும் மகிழ்ச்சியுடன் இருந்தால் நம்மை சுற்றியிருப்போருக்கு பரவச் செய்து அவர்களையும் மகிழ்ச்சிக் கடலில் நீந்தச்செய்ய முடியும்.
ஓர் தாய் தன் குழந்தைதனை அன்புடன் நேசித்து அதற்கு தேவையானவைகளைப் பிறரைக் கேட்டாவது பக்குவத்துடன் செய்கின்றாள். பிள்ளை பிற்காலத்தில் தனக்கு உதவும் என நினைத்து செயல்படுவதில்லை. அப்படி பலன் கருதி அவள் செயல்பட்டால் சரியாக செயல்படமுடியாது. அவள் தாய் என்ற புனித ஸ்தானத்தை இழந்துவிடுவாள். ஏனெனில் அவளது கவனம் எதிர்கால பலனில் இருக்கும். செயலில் இருக்காது. ஏனோ தானோ என்றிருக்கும்! அது வியாபாரத்தன்மை கொண்டது ஆகிவிடும்.
உன்னைச் சுற்றியுள்ளவர்கள் சந்தோஷமாயிருக்கின்றார்கள் என்றால், அவர்கள் அவர்களைச் சுற்றியுள்ள எல்லாவற்றின் அழகையும், தன்மைகளையும் பார்ப்பதற்கும், நல்ல செயல்கள், செய்வதற்கும் கற்றுக்கொண்டார்கள் என்று அர்த்தம். உன் உள்ளே உள்ள திறமையை நீ உணராமல் உன்னிடம் உள்ள அழகு, நல்ல திறமைகளைபற்றி தெரியாதபோது, உணராத நிலையில் எப்போதும் உன்னால் உனக்கு வெளியே உள்ளவற்றைத்தேடி அறிந்து கொள்ள முடியாது.
தன்னைத்தானே அறியாதவன் சோம்பேறி. தன்னை அறிந்தவன் சும்மாயிருப்பதில்லை. கல்லைப்போல் உணர்வற்று கிடப்பதில்லை. இடையறாது உழைப்பவர் ஆவர். எப்போதும் சூழலை உணர்ந்து புரிந்து செயல்கண்டு சந்தோஷம் அடைவர்.
ஒரு பாத்திரத்தில் பாதியளவு பால் எடுத்து அதில் நீர் கலந்தால் பாலில் நீர் கலக்கும். அதே அளவு நீரில் பால் கலந்தால் நீரில்தான் பால் கலந்ததாகக் கொள்ளவேண்டும். பாலின் தன்மை அறியமுடியாது. அதுபோல தீயவர்கள் சேர்க்கையால் நல்லவன் கெட்டவனாவான். நல்லவன் சேர்க்கையால் கெட்டவன் நல்லவனாவான் என்பதை உணரலாம்.
தீயவர்கள், கயவர்களின் செயல்களை கண்டு ஒதுங்குங்கள். அவர்களைவிட்டு விலகிச் செல்லுங்கள். இல்லையேல் அவர்களோடு சேர்ந்து உங்களையும் எடை போடுவார்கள். “பூவோடு சேர்ந்த நாறும் மணம்பெறுவது இயற்கை.” சேற்றுடன் இருக்கும் கயவர்களுடன் இனையும்போது நீங்கள் சேறாகத்தான் மதிப்பிடப்படுவீர்கள்-குருஸ்ரீ பகோரா.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26879397
All
26879397
Your IP: 52.90.181.205
2024-03-19 09:21

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg

சந்தோஷப்பூக்கள்