ஓம்நமசிவய!
பண்ணியம், ஏந்தும் கரந்தனைக்காக்கிப் பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி அரதனக் கலச வியன்கரம் தந்தைதாய்காக்கி
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக் கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்ச் சகாயனை அகந்தழீஇக்களிப்பாம்.
#####
முக்கரணம்!
2485. தான் தங்குவதற்குரிய இடமான பருவுடல் நுண்ணுடல் காரணவுடல் என்ற மூன்றில் பொருந்திய ஆன்மா தனக்கு அந்த உடம்புகள் வேறானவை எனக் கூறும் தன்மையைப்போல சிவன் என்றும் பரம் என்றும் சீவன் என்றும் உள்ள வேறுபாட்டையும் ஒன்று என்று உணர முடியுமோ.
2486. ஒளியை உடைய கண் பார்வையைப் மேலும் ஒளியை பெறும்படி செய்து பிரணவத் தியானத்தால் மூலாதாரக் கனலை எழுப்பி சந்திரக்கலை, சூரியகலை ஒன்றாகுமாறு சுழுமுனையில் சேர்த்துத் தலைக்குமேல் உள்ள சகசிரதள வெளியில் பொருந்தித் தியானம் முதிரச் சிவபதம் பொருந்தும்.
2487. மனம் வாக்கு காயம் என்னும் முன்று கருவிகளின் சோர்வை நீங்கி அங்ஙனம் சோர்வு அடையாமல் எல்லாவற்றையும் ஒரு சேர அறியும் திறத்தைச் சிவபெருமான் தந்தான். உடம்பைப் பற்றிய சதாசத்தியான மனோன்மனி கவிழ்ந்த சகசிரதளத்தில் நின்றுவிட அதன்மேல் விரிந்த சகசிரதளத்தில் உன்மனி கலையில் சமாதி பொருந்தும்.
#####
முச்சூன்ய தொந்தத் தசி!
2488. அது என்ற தத்பதம் நீ என்ற தொம்பதம் அதுவாக ஆகிறாய் என்ற அசிபதம் என்ற மூன்றும் பழைய மூன்று பதங்களும் நின்மல் துரியத்தில் விளங்க அத்தோற்றத்தில் உயிர் பரன் சிவம் நிற்கும். இம்மூன்றில் சொல்லப்படும் பதமே தொந்தத் தசி யாகும்.
2489. தொந்தத்தசி என்னும் மூன்றில் பழைய கன்மமும் மாயையும் ஆணவமும், தொந்தத்தசி மூன்றில் பழைமையான தாமதம் இராசதம் சாத்துவிகம் என்பனவையும் ஆகிய மலமும் குணமும் கெடச் சிவன் தோன்றினால் முழுமதியின் முன்பு இருள் கெட்டு ஒளி உண்டாவதைப் போல் ஆன்மப் பேரொளி அமையும்.
2490. தொந்தத் தசி என்ற வாக்கியப் பொருளை வாசியில் பொருந்த்திக் காண அம்முறையில் யகரம் விளங்கும் படியாகச் செய்து முடிவற்ற நிலையை அவ்வாக்கியத்தில் மேலே?றும் முறையில் சிவன் முன் வைத்துத் தத்துவமசி என உச்சரிப்பாயாக.
2491. சிவத்தை முன்வைத்துத் திங்கள் மண்டலம் விளங்குமாறு செய்து பிரணவமான உபதேசத்தை உண்மையான இதயத் தானமான சகசிரதளத்தில் பொருந்தி நிற்பாயாக. அவ்வாறு நின்றால் உண்மையுணர்ந்து சிவனுக்கு அடிமை என்று ஆன்மா இன்ப மயமாய் விளங்கும்.
2492. மாயையில் தோன்றும் சீவனான தொம்பதமும் மேலான பரையிடத்து விளங்கும் பரமான பசுவும், விரும்பப்படும் சாந்தியில் பொருந்தும் ஆகிறாய் என்ற அசிபதமும் ஆன அந்த வாக்கியம் மேலான தொடராகும். அந்த உரையான நீ அதுவாகிறாய் என்பதில் வாசியான உணர்வு பொருந்தும்.
2493 .தேவதத்தனிடத்து ஆகிய காலம் இடம் முதலியவை விட்டால் அவனே இவன் என்பது போல் உடல் மாயை நீங்கிய நிலையில் நீ அது ஆகிறாய் என்பர். அப்போது உண்மை அறிவான உயிர் பரமாய்ச் சிவனாகும்.
2494. தாமதம் இராசதம் சாத்துவ்கம் என்னும் மூன்று குணங்களும் ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்று மலங்களும் அகர உகர மகர ஆகிய பிரணவத்தால் நீங்கும். சீவன் அகாரமாய்ப் பருவுடல் நுண்ணுடல் காரண உடல்களைக் கடந்து விளங்கும் துரியமும் தொந்தத் தசியால் ஆகும்.
#####