Print this page
ஞாயிற்றுக்கிழமை, 15 July 2018 11:29

ராம அவதாரம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

மண்ணுல கத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக்
கண்ணுதல் உடையதோர் களிற்றுமா முகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்!

####

ராம அவதாரம்!

ஆகாது எனச் சொல்லும் நவமி திதியை. நல்ல காரியத்திலிருந்து விலக்கிவிடுவர். இதனால் வருந்திய அந்த திதி தேவதையின் வேண்டு கோளுக்கிணங்கி இராமவதாரம் நவமியில் நடந்து ஸ்ரீராமநவமி எனப் புகழ்பெற்றது. இறை நம்பிக்கை கொண்டு வழிபட்டால் ஆகாதது என்றில்லை எதுவும் இப்பூமியில். ராமர் திரேத யுகத்தில் ரகுவம்சத்தில் உத்தராயணத்தில் சித்திரை மாதம் சுக்லபஷ நவமிதிதியில் புனர்பூச நட்சத்திரத்தில் சிம்ம லக்னத்தில் அவதரித்தார். அந்த நாளே ஸ்ரீராமநவமி எனப்படும்.

ஆறுவது சினம் என்றார் ஒளவையார். சினம் சேர்ந்தாரைக் கொல்லும் என்றார் வள்ளுவர். எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும் என்றனர் பெரியோர். கோபம் செல்லுமிடம் செல்லாத இடம் இரண்டிலும் கோபம் கொடியதே! தீமை விளைவிக்கும். சூர்பணகை செயலால் இலக்குமணன் கொண்ட கோபம் செல்லக் கூடிய கோபம். மூக்கிழந்த சூர்பணகையைக் கண்டு இராவணன் கொண்டது செல்லாத இடத்தில் நிகழ்ந்துவிட்டது. அதனால் எத்தனைபேருக்குத் துன்பம்.

இராமன் கோபம் கொண்டிருந்து கைகேயின் ஆனையை மீறி நடந்திருந்தால் இராமயணம் என்ற இதிகாசமும் ஸ்ரீ ராமசந்திர மூர்த்தி என்ற தியாகர் நமக்கு கிடைத்திருக்காது.

பொறுமையின் அவதாரம் ராமர். ஏக பத்னி விரதன். ராமன் உத்தமன் என்பதால் கல்லாக இருந்த அகலிகை ராமர் காலடி பட்டு சாபம் நீங்கி சுய உருவை அடைந்தாள்.

இராவணனை வதைத்துவிட்டு இராமேஸ்வரம் வந்ததும் ராமர் சிவ பூஜை செய்ய தீர்மானித்து அனுமனை காசிக்கு அனுப்பி லிங்கம் கொண்டுவரச் சொல்லிவிட்டு அவர் வருவதற்குள் சீதை செய்த மணல் லிங்கத்தை வைத்து பூஜையை முடிக்க பின் அனுமன் கொண்டு வந்த லிங்கமும் பிரதிஷ்டை செய்து வழிபடப்பட்டது. இந்தச் சம்பவத்தில் உள்பொருள் ஒன்று மறைந்து கிடக்கின்றது.

சிவபூஜைக்கு அருகில் இருந்தே ஒரு லிங்கத்தைக் கொண்டுவரச் சொல்லி இருக்கலாம். அல்லது சீதை செய்ததைப்போல் தானே ஒரு லிங்கத்தை செய்து வழிபட்டிருக்கலாம். பின் ஏன் அனுமனை காசியிலிருந்து லிங்கம் கொண்டுவரச் சொன்னார்? இராமர்!

இராமர் முதலில் வழிபட நினைத்தது காசி விஸ்வநாதரை. ஈசன் இருப்பிடம் கயிலை என்றாலும் அவர் நிரந்தர வாசம் செய்வது வாரணாசி என்கிற காசியில்தான். விஸ்வம் என்றால் உலகம். அதன் தலைவர் விஸ்வநாதர். மானிடப் பிறவியில் உலகத்தின் தலைவர் விஸ்வநாதரை வழிபட நினைத்தார்.

அடுத்தது எல்லா சமயத்திலும் அஞ்சனை மைந்தன் அனுமனை அருகில் வைத்துக் கொண்ட இராமர் சிவ பூஜையின் போது மட்டும் அவர் தள்ளி யிருக்க நினைத்ததால் காசிக்கு அனுப்பினார். அதற்கு ஓர் காரணம் உண்டு. நம் எல்லோருக்கும் தெரியும் உற்சவர் உலாவரும்போது மூலவரின் சக்திகள் உற்சவரில் அடங்கும். கோவில்களில் உற்சவர் உலாவின் போது மூலவரை திரை போட்டு வைப்பார்கள் தெய்வ சன்னியத்தியம் விலகி இருக்கும்போது மூலவரை வழிபடக் கூடாது என்பதால்.

இராமேஸ்வரத்தில் உற்சவ வடிவமாக அவரது அம்சமான அனுமன் இருக்கும்போது எப்படி மூல விஸ்வநாதர் உருவத்தை வணங்க முடியும். மூல உரு இருக்க வேண்டியது காசியில். அனுமன் காசியில் சிவ அம்சமாக இருந்தால் தான் விஸ்வநாதரை உற்சவராக இங்கு பிரதிஷ்டை செய்த லிங்கத்தில் ஆரோகணம் செய்து வழிபடலாம் என்பதாலேயே அனுமனைக் காசிக்கு அனுப்பினார். அவர் வருவதற்குள் பூஜை முடித்தார்.

அனுமன் லிங்கம் கொண்டு வந்ததும் அவர் கையாலேயே பிரதிஷ்டை செய்ய வைத்தார். சிவனின் அம்சமான அனுமன் ஸ்தாபித்த சிவலிங்கம். அதனால்தான் முதல் பூஜை அனுமன் லிங்கத்திற்கு பிறகு இரண்டாவதாக தான் பிரதிஸ்டை செய்த லிங்கத்திற்கு நடக்க வேண்டும் என்றார்.

இதேபோன்றே பாபநாசம்- 108 சிவாலயத்திலும் இராமர் பூஜை செய்ய நினைத்தபோதும் இவ்வாறே செய்தார் என்பதை நினைவு கொள்ளுங்கள்.

சிவ அம்சமாக வடிவெடுத்த மாருதி காசிக்கு போய்விட்டு இராமேஸ்வரம் வந்து லிங்கம் பிரதிஸ்டை செய்து வழிபட்டிருக்கும்போது மானிடர்களான நாமும் அதைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே காசிக்குப் போகிறவர்கள் இராமேஸ்வரத்திற்கும் போகவேண்டும் எனச் சொல்லப்பட்டது.

மகாலட்சுமிதான் சீதையாக அவதாரம் கொண்டவள் என்பது அனைவரும் அறிந்ததே! சிவபக்தனாக இராவணன் இருந்தாலும் மகாவிஷ்ணுவின் மார்பில் உறையும் பாற்கடல் வாசியான மகாலட்சுமியை ஓர் அரக்கன் தூக்கிச் செல்ல முடியுமா! முடியும்! ஏனெனில் சீதை ஓர் மாயை. இராவணன் துறவி வேடமெடுத்து பர்ணசாலை வாயில் நிற்கும்போது அவன் எண்ணங்களை உணர்ந்த சீதை அக்னி தேவனை பிரார்த்திக்கின்றாள். சீதை அக்னிக்குள் ஒளிந்துகொள்ள அக்னிதேவன் அந்த இடத்தில் ஒரு மாயா சீதையை தோற்றுவிக்க அந்தச் சீதையையே இராவணன் தூக்கிச் செல்கின்றான். இந்த மாயா சீதையின் காராணமாகவே ராம-ராவண யுத்தம் நடைபெற்று இராவண சம்ஹாரம் நடைபெறுகிறது.

இராவணன் சீதையைக் கடத்திக் கொண்டு அசோக வனத்தில் வைத்திருந்தபோது எத்தனை முயற்சித்தும் சீதை அவனைத் திரும்பி பார்க்கவில்லை. மற்றவர்கள் ஆலோசனைப் படி தன் உருவத்தை இராமனாக மாற்றினான். அந்த உருவத்துடன் அசோக வனம் சென்று சீதைமுன் நிற்க நினைத்தவன் அங்கு போகமல் தன்னுடைய அந்தப்புரம் சென்று மண்டோதரி முன் நின்றான். யாரோ திடீரென்று தன் முன் வந்து நிற்கின்றார்களே என வெகுண்டு மண்டோதரி எழுந்திருக்க வந்திருப்பது இராவணன்தான், இராமர் உருவத்தில் வந்துள்ளேன் என உணர்த்தினான்.

அப்போது மண்டோதரி நீங்கள் நீங்களாக வராமல் ஏன் மாறுவேடத்தில் வந்துள்ளீர்கள் எனக் கேட்டாள். இராவணன் சொன்னான், நான் உன்னைப் பார்க்க உருமாறி வரவில்லை, சீதையைப் பார்க்க போவதற்காக இப்படி மாறியுள்ளேன் என்றான். அப்படியானால் அங்குதானே போக வேண்டும், இங்கு ஏன் வந்தீர்கள் எனக் கேட்டாள். அது என்ன வென்று தெரியவில்லை. இராமர் உருத்தரித்ததிலிருந்து உன்னைத்தவிர மற்ற ஸ்திரீகளைத் தாயாகப் பார்க்க தோன்றுகிறது. அதனால்தான் சீதையைப் பார்க்கப்போகாமல் இங்கு வந்து விட்டேன் என்றான் இராவணன். ராமாவதாரத்தின் சிறப்பே இது.

பித்துரு பரிகாரத்தலம். ராமர், சீதை பாத தரிசனம் செய்தபின், சிரார்தம் செய்ய ராமர் பொருட்கள் வாங்க செல்ல, அப்போது தசரதன் தான் செல்ல நேரம் ஆனதால் சீதையை சிரார்தம் செய்ய அனுமதி கொடுக்க, சீதை பசு, துளசி, அரசு, பவகலை ஆற்றுமணல், ஐயர் ஆகியோரை சாட்சி வைத்து செய்ய அதை ஏற்றுக்கொண்டு தசரதன் சென்றுவிட, அங்குவந்த ராமர் தந்தை வந்த நிகழ்வை நம்பாதாதபோது, அரசு தவிர மற்றவர்கள் தங்களுக்கு ஆதாயம் ஏதும் இல்லையாதலால் தாங்கள் கண்டதை மறைக்க பாவம் சேர்த்தனர். ஐயர்-தட்சனை எவ்வளவு பெற்றாலும் திருப்தியில்லை. துளசி- அசுத்தமான இடங்களிலும் தோன்றுதல், பசு- முகத்திற்கு மரியாதையில்லை, பவகலை மணல்- ஆற்றின்மேல் நீரில்லை. அரசுக்கு கோவிலில் மரியாதை.-கயாசேத்திரம்

பிரமஹத்தி தோஷத்திற்கு பரிஹாரம் செய்து அயோத்தியில் அரசு பொறுப்பேற்றபின் ஓர் சூழலில் சீதை ராமரின் சந்தேகத்தின் பேரில் அக்கினி பிரவேசம் செய்கின்றாள். அக்கினி தான் தோற்றுவித்த மாயா சீதையை பெற்றுக் கொண்டு தம்மிடம் அடைக்கலமாக இருந்த சீதாவை திருப்பி அனுப்புகின்றான். இதனால் உண்மையான சீதைக்கும் இராவணனுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இது பிரம்ம வைவார்த்த புராணம் சொல்வது.

அன்பே சிவம்-இராமாவதாரம்!

எல்லா உயிரையும் மனித நேயத்துடன் நேசி. ஜாதி, மதம், இனம், தேசம், மொழி எல்லாம் கடந்து அன்பு ஒன்றையே பிரதானமாகக் கொண்டால் வாழ்வு வளம் சேர்க்கும். எல்லோரும் போற்றுவர். இதை உணர்த்தும் விதமாக இராமாவதாரத்தில், தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த குகனுடனும், குரங்கு இனத்தில் பிறந்த சுக்ரீவனுடனும், அரக்க குலத்தில் பிறந்த விபீஷணனுடனும் சகோதர உணர்வுடன் பழகியுள்ளார் இராமர். சபரிக்கும், அகலிகைக்கும் தாய்ஸ்தானத்தில் வைத்து போற்றினார். பறவை இனத்தில் பிறந்த ஜடாயுவை தன் பெரியப்பா ஸ்தானத்தில் வைத்து போற்றினார். உயிர்களின்மேல் தூய அன்பு எல்லாவற்றையும் கடந்து நிற்கும்.

விஷ்ணுவின் ராமாவதாரத்திற்கு உகந்த அரிய சக்தியை அபரிதமாக வழங்கியவள் தாரா. எனவேதான் ராமருடைய மந்திரம் ‘தாரகா மந்திரம்’ எனப்பட்டது.

வாலியைக் கொன்ற பிரமஹத்தி பாவம் தீர இராமர் வழிபட்டது –அன்னியூர்-இராமநாத ஈஸ்வரர். இராவணனைக் கொன்ற பாவம் தீர இராமர் வழிபட்டது- பாபநாசம்-108சிவன்.

ஸ்ரீ ராமரை வழிபட்டால் சூரியன் தோஷம் நீங்கும். அயோத்தியிலிருந்து பல ராமர் கோவில்கள் இருக்கின்றன.

#####

Read 20131 times Last modified on வெள்ளிக்கிழமை, 20 July 2018 21:31
Login to post comments