Print this page
புதன்கிழமை, 11 December 2019 07:43

அன்புடமை!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

அறிவின் வரம்பை அகன்றாய் குறிகுணங் கடந்த
குன்றே எட்டு வான் குணத்தெந்தாய் கட்டறு
களிற்று முகத்தோய் மலரில் மணமாய்
வளர்ந்தாய் அலர் கதிர் ஒளியின் அமர்வோய் போற்றி!

#####

அன்புடமை!

270 அன்பாகிய சக்தியும் அறிவான சிவமும் ஒன்றல்ல இரண்டு என்பர் அறியாதவர். அன்பின் முதிர்ச்சியால் சிவமாகிய அறிவு விளங்கும் என்பதை உயர்ந்தவர் தாழ்ந்தவர் ஆகிய எவரும் உணர்வதில்லை. அன்புதான் சிவத்தை விளங்கச் செய்வது. என்பதை அறிந்த பின்பும் அன்பே வடிவாய் சிவமாம் தன்மையை அடைந்திருந்தார்.

271. பொன்னின் ஒளியைக் கடந்த புலித்தோலை உடுத்தியவன். மின்னல் போன்று ஒளிக்கும் பிறைசந்திரனை பொருந்தியிருந்து வெண்மையான திருநீற்றை அணிந்து விளங்கும் அப்பெருமானிடம் பின்னிக் கிடந்தது என் பேரன்பு.

272 எழும்பையே விறகாகக் கொண்டு உடலின் தசையை அறுத்து பொன்போன்ற அக்னியிலிட்டு தீய்த்தாலும் அன்புடன் உருகி மனம் நெகிழ்பவரன்றி என்னைப்போல் இறைவனை அடைய முடியாது.

273. ஆர்வமுடன் அன்பு கொண்டவர் இறைவனைக் காண்பர். அன்பால் மன நெகிழ்வு ஏற்பட்டு ஈசன் திருவடிகளை தலையில் சூடுவர், அப்படியின்றி சம்சாரத்தின் சுமையைத் தாங்கி வருந்துவர் பிறவிக் கடலில் விழுந்து துன்புறுவர். அன்பில்லாத உயிர்கள் துன்பமான காட்டில் செல்லும் வழியறியாது வருந்துவர்.

274. அன்பு கொண்டு மனதை உருக்கி இறைவனை வழிபடுவீர். முதன்மையான அன்பினால் உள்ளம் உருக இறைவனை நாடுங்கள். அவ்வாறு நாடிய எனக்கு நந்தியம் பெருமான் என்னிடமுள்ள பாசத்தை போக்கி கருணைக் காட்டியதுவே அவன் அருள் காட்டும் விதமாகும்.

275. தானே தனியாய் நின்ற காலத்து சுயம்பு என்று நினைத்து வழிபட்டால் வானத்தில் ஒருகாலம் தக்க துணையாய் வழிபடுவோருக்கு இருப்பான். தேன்போல் இன்பம் தரும் மொழியை உடைய சக்தியை ஒரு பக்கத்தில் கொண்ட பொன் ஒளியில் விளங்கும் சிவன் தானே ஒரு நிற ஒளியைப் பெற்று என் அகத்தில் நின்றானே!.

276. உலகைப் படைத்து இன்பங்களை எல்லாம் அமைத்த உயிர்களுக்கு தலைவனான இறைவனிடம் அன்பு செலுத்துவதை எல்லா உயிர்களும் அறியாமல் இருக்கின்றன. உறுதியைத் தந்து இந்த அகண்ட உலகின் வாழ்வில் அன்பு கொண்டிருப்பதைத் தந்தபெருமான் அகண்ட உலகமாயும் விளங்குபவன்.

277. மனதில் பொருந்தி யிருக்கும்போது ஒளிரும் செம்பொன் போன்ற சோதியின் வடிவானவன் இறைவன். அவனை நினைத்தும் மனதில் வைத்தும் தலைவன் என்று போற்றியும் வணங்குங்கள். அன்புடன் யார் வேண்டினாலும் தேவர்களுக்குத் தலைவனான பெருமான் அன்பு ஒளியில் சிவ ஒளியைப் பெருகும்படி செய்வான்.

278. உயிர்கள் செய்த வினைக்கு ஈடாக பிறத்தலையும் இறத்தலையும் அமைத்தவன் இறைவன். அந்த முறையை அறிந்தும் உயிர்கள் உலக போகத்தில் விருப்பங் கொண்டுள்ளனர். என் தந்தையே எம்பிரானே என்று விரும்பி பெருமையுடைய சிவபெருமானை வணங்க வில்லையே!.

279. அறிவு கொண்டவர் அன்பில் இருப்பான். தன்னில் நிற்பது போன்றே மற்றவரிடம் நிற்பவன். அன்பே உடலாய் உள்ளவன், உலகத் தோற்றத்திற்கு முன்னும் பின்னும் அழியாது நிற்பவன். முனிவர்களுக்கு தலைவன். அன்பு கொண்டு எவர் ஒருவர் நிலையாய் பொருந்தினாலும் அவன் துணையாகி அவர் உய்யும்படி செய்வான்.

திருச்சிற்றம்பலம்

#####

Read 1693 times Last modified on செவ்வாய்க்கிழமை, 03 October 2023 11:49
Login to post comments