பிரச்சனைகள்!
வாழ்க்கை இனியது. கரும்பின் சுவையைவிட தித்திப்பானது. தடைகள் பலவரலாம். இந்த இனிய ரசனைமிகுந்த வாழ்வை பலர் சுகமற்றதாக கருதுகின்றனர். மகிழ்வை தொலைத்து விடுகின்றனர். பொறுப்புடன் ஒரு ஆன்மா இருப்பது வேறு. கவலையுடன் இருப்பது வேறு. கவலைப்படாமல் பொறுப்புடன் இருத்தல் நன்மை பயக்கும்.
துன்பங்கள் அனைவருக்கும் பொதுவானது. அளவில் மாறுபட்டிருக்கும். ஏற்றுக் கொள்ளும் விதத்தில் மாறுபட்டிருக்கும். துன்பங்களையும், துயரங்களையும் விட்டொழியப் பழகவேண்டும். பிரச்சனைகளின் அடிப்படையில் ஏற்படும் துயரங்களை பிரச்சனைகளைக் கொண்டே தீர்த்துக் கொள்ளுங்கள். உங்களால் முடியவில்லை என்றால் உங்களுக்கு உதவுபவரின் உதவியை நாடுங்கள்.
அப்போதும் முடியவில்லை எனில் பிரச்சனையை விட்டுத்தள்ளுங்கள். அதை பெரிது படுத்தி அதையே நினைத்துக் கொண்டிருக்காதீர்கள். நடப்பது நடக்கட்டும் என விட்டு விடுங்கள். பிரச்சனை சிறியதாகத் தோன்றும். நடந்து முடிந்தபின்னும் அதன் தாக்கத்தை பெரிது படுத்தாதீர்கள். ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்றார் வள்ளுவர்.
உபாதைகள், பிரச்சனைகளிலிருந்து விலகி இருக்கப் பழகிக்கொள்ளுங்கள். உங்களால் தீர்க்க முடியாதது, உங்கள் நண்பர்களால் உதவி செய்யமுடியாத பிரச்சனைகளை நீங்கள் மனதில் போட்டுக் குளப்பி மன உலைச்சலால் துயரம் அடைவதைத் தவிர வேறு என்ன பயன்! எனவே அதை விட்டு விட்டால், ஒதுக்கி தள்ளி விட்டால் அது சிறிய பிரச்சனையாகிவிடும். மனதிற்கு சிறிதளவாவது நிம்மதி கிடைக்கும்.
கழிந்து போனவற்றிற்காக அழுது கொண்டு, நிகழ்காலத்தின் வாய்ப்புகளை கோட்டை விடுகின்றனர் பலர். நிகழ்காலத்தில் கண்ணீர்விட்டால், எதிர்காலத்தில் ஏற்படும் விளைவுகளும் துயரமானவையாகத்தான் இருக்கும். கசப்பான கடந்தகால நினைவுகளை ஒதுக்கி நிகழ்காலத்தை ஏற்று, அதன் செயலாற்றலைப் பெற்று சந்தோஷத்துடன் வாழ முயல்க! இதுதான் நேர் சிந்தனை.
நாம் இதுகாறும் செலவழித்தது நம்மிடம் இருந்தது ! நாம் கொடுத்ததுதான் நம்மிடம் இருப்பது! நாம் விட்டுச் சென்றது நாம் இழந்தது ! சிலருக்கு வறுமையே பிரச்சனை. சிலருக்கு வளமையே பிரச்சனை.
ஓர் வாத்ய கருவியிலிருந்து ஒலிக்கும் இசைக்கும், பல வாத்யங்களை ஒன்று சேர்ந்து பெறும் இசைக்கும் வேறுபாடு உண்டு. ஒரே தாளத்தில் பல வாத்தியங்கள் இசைக்கும் பொழுது இனிமைதனை நாம் உணருகின்றோம். அதைப்போலவே மனிதகுலத்தில் நாம் ஓர் அங்கம். நம்மால் தனியே செயல்பட முடிந்தாலும் நம்மை சூழ்ந்த உற்றார் உறவினர் நண்பர்களோடு சேர்ந்து செயல்பட்டால் அந்த வாழ்க்கை மிகவும் சுவராஸ்யமான சந்தோஷமுடையதாக இருக்கும்.
நம் செயல்களுக்கு பிரச்சனைகளுக்கு தீர்வுகான நாம் நம்மைவிட வயதானவர்களை, மூத்தவர்களை, பெரியவர்களை நாடுகிறோம். அவர்கள் சொல்வதன் பொருள் விளங்கா விட்டாலும் அவர்கள் திரும்ப திரும்ப சொல்வதால் அதில் ஏற்படும் நன்மைகள் நமக்கு முன்பே தெரியாது. செயல் நடந்து முடிந்தபின்னோ அல்லது அதற்குபின் பலநாட்கள் கழித்துதான் அதன் பலன் தெரியவரும்.
இதற்கு ஒர் புராணச்சான்று. “இலங்கை மன்னன் இராவணனுக்கு, எல்லா நவக்கிரகங்களும் உலக மக்களை ஆட்டிப்படைக்கின்றன, அவர்களை ஏன் நாம் அடக்கி வைக்கக்கூடாது என்ற எண்ணத்தால், சிறந்த சிவபக்தனும் வீரனுமான அவன் எல்ல நவக்கிரகங்களையும் அடக்கி தன் சிம்மாசனத்தின் படிக்கற்களாக மாற்றினான்.
இதைக்கேள்விப்பட்ட நாரதமுனிவர் இலங்கை வேந்தனிடம் சென்று, ஏன் இவ்வாறு செய்தாய்! இது உன் வீரத்திற்கு அழகா! நவக்கிரக நாயகர்களை குப்புறப்போட்டு அவர்மீது அரியணை ஏறலாமா! அவர்களைத் திருப்பிப்போட்டு அவர்கள் மார்பில் கால்வைத்து ஏறுதல்தான் உன் வீரத்திற்கு அழகு என வஞ்சப் புகழ்ச்சியாக சொன்னார்.
இந்த யோசனை இராவணனை மிகவும் கவரவே, அவ்வாறு செய்ய ஆரம்பிக்கும்போது, முதல் படியில் சனியிருந்ததால் அவர் நெஞ்சில் கால்வைத்தும் அவரின் வக்ரபார்வையில் இராவணனன் சிக்கினான். அன்று பிடித்த சனி அவன் இறப்புவரை நீடித்தது. விளைவுகள் என்னென்ன என்பதை அனைவரும் அறிவோம். ஓர் ஞானி, முனி சொன்ன சொல் எவ்வளவு விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. நல்லவர்களுக்கு நன்மைகளும், தீயவர்களுக்கு துயரமும் அளித்த அந்த நிகழ்வுகளை இராமயணம் தெளிவு படுத்துகின்றது.
பிரச்சனைகளை நேருக்கு நேர் பொறுமையுடன் கவனிக்கவேண்டும். அப்போதுதான் அதிலிருந்து மீளவழி தெரியும். மனதின் பிரச்சனைகளை தீர்த்து வெளியேற்ற வேண்டும். இல்லையேல் அதன் தாக்கம் பலரை சிந்திக்கும் திறனற்றவர்களாக்கிவிடும்.
துன்பம் என நினைப்பவன் அதிலே உழன்று வாழ்வை வீனாக்குகிறான். நம் பிரச்சனைகளை விட்டு வெளியே வந்து பார்க்கவேண்டும். பழக்கத்தில் இது சரியாக வரும். பிரச்சனைகளுக்கு அடிமையாகாதீர். உங்கள் ஆளுகைக்கு உட்படுத்துங்கள். எல்லா வழி முறைகளையும் தீவிரமாக நிதானமாக யோசனை செய்யுங்கள். பெரியவர்களிடம் ஆலோசனை கேளுங்கள். நிதானமாக செயல் படுங்கள். பிரச்சனைகளை வென்று மகிழ்வை காணுங்கள். ஆனந்தம் அடையுங்கள்.
ஓர் புதிய இடத்தில் உறங்க முடியாமல் தவிக்கின்றீர்கள். எதோ ஒரு சத்தத்தைகேட்டு விழித்து மீண்டும் தூங்கமுடியாமல் இருப்பது ஏன்! இது புதிய இடம், இந்த சப்தம் ஏன் என்பது போன்ற தேவையில்லா எதிர்மறை எண்ணங்களில் சிக்கிக் கொள்கின்றீர்கள். எந்த இடமாயிருந்தால் என்ன! என்ன சப்தமாக இருந்தால் என்ன!
நீங்கள் தூங்க வேண்டும் என நினைவு கொள்ளுங்கள். அந்த இடத்தையும், சப்தத்தையும் பற்றிய உங்கள் முதல் எண்ணங்களை விலக்கிவிடுங்கள். அந்த இடத்தையும் புதிய சப்தங்களையும் நீங்கள் ரசித்தால் மனது ஏற்றுக்கொள்ளும். பிரச்சனைகளிலிருந்து வெளியே வாருங்கள். உள்ளே செல்லாதீர்கள். நிம்மதி கிடைக்கும் அமைதியுடன் தூங்குவீர்கள். ஆனந்தம் காண்பீர்.
கலங்கிய குளத்து நீர் அடங்கி தெளிவாக சிறிது நேரம் கொள்ளும். அதுபோலவே மனதில் பிரச்சனைகளைச் சந்திக்கும்போது அவைகள் அமைதியாகும் தருணம் வரை பொறுமை காத்தல் வேண்டும்-குருஸ்ரீ பகோரா.