ஓம்நமசிவய!
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும்- உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.
####
நாரதர்!
நாரதர் என்றால் என்ன! முன் ஜென்ம விருப்பம்!
வேத வித்துக்களிடம் பணி புரிந்த வேலைக்காரின் மகனாகப் பிறந்து அவர்களுக்கு பணிவிடை செய்து வந்ததால் பிரம்ம வித்தையை உபதேசம் பெற்று எதையும் அர்ப்பணமாக செய்து வர பக்தியும் ஞானமும் வளர்ந்தது. தாயார் இறந்துவிட வடக்கே புறப்பட்டுச் சென்று ஓர் நதியில் நீராடி நீரை அருந்தி உபதேச மந்திரத்தை ஜபித்து கிருஷ்ணனை தியானிக்க உள்ளத்தில் தோன்றி மறைந்து விட்டார். பின்னர் இப்பிறவியில் என்னைக் காணும் தகுதி உனக்கில்லை என் அசரீரி எழுந்தது. உள்ளத்தை இருத்தி பற்றின்றி இருக்க பஞ்சபூத சரீரம் விழ புண்ணிய சரீரம் கிடைத்தது.
சத்ய யுகத்தில் சாரஸ்வதன் என்பவன் அவந்தி நகரில் வாழ்ந்திருந்தான். ஒருநாள் அமைதியாக அமர்ந்திருந்தவனுக்கு வாழ்க்கை நிலையில்லாதது, பயனற்றது எனதோன்றியது. எதனால் இந்த எண்ணம் வந்தது என அவனுக்குத் தெரியவில்லை. தனது செல்வங்கள் எல்லாவற்றையும் தனது புத்திரர்களிடம் அளித்துவிட்டு ஸ்ரீமன்நாராயணனை நோக்கி தியானம் செய்ய ஆரம்பித்தான். தன் முன் தோன்றிய பகவானிடம் என்னை தங்களுக்குள் இனைத்துக் கொள்ளுங்கள் என வேண்டினான். சாரஸ்வதா சிறந்த பக்திமானான நீ இன்னும் பல ஆண்டுகள் வாழவேண்டியுள்ளது. உனது முன்னோருக்கு நீ தர்ப்பணமாக அளித்த உணவும் நீரும் எனக்கு மகிழ்வைத் தந்தன. அதனால் உனக்கு நாரதன் என்ற பெயரை அளிக்கின்றேன். (நாரதர்-நீர் அளித்தவர்) சிறிது காலத்தில் சாரஸ்வதன் இயற்கையெய்தி பிரம்ம லோகத்தில் இருந்தான். பின்னர் பிரம்மாவின் புத்திரனாக தோன்றி பகவான் அளித்த பெயரால் நாரதன் என அழைக்கப்படலானான்.
மனிதர்கள் எதனால் நரர்கள் எனப்பட்டனர்! ஐம்பூதங்களும் ஒரு மனித உடலில் பரவியிருந்தாலும் நீரின் அளவே அதிகமாகும். பிராண ஆதாரம் நீராகும். அதனால்தான் மனிதர்கள் நரர்கள் எனப்பட்டனர். அந்த நீரில் உறைபவனான விஷ்ணுவை நாராயணன் என்றனர்
நாரதர் பெற்ற சாபங்கள்!
பிரம்மாவின் மூச்சுக்காற்றில் கலந்து மாரீசி போன்ற ஒன்பது முனிவர்களுடன் மானச புத்திரனாக தோன்றினார் நாரதர், பிரம்மன் நாரதரை அழைத்து மற்றவர்களைப் போலவே நீயும் எனக்கு படைப்புத் தொழிலில் உதவி செய்ய வேண்டும் எனக் கேட்க, தந்தையே என் மனம் மோட்ஷத்தை அடைய விரும்புகின்றது. பிரம்மச்சாரிய விரதத்தை கடைபிடிக்கும் வழிமுறைகளை எனக்கு தாங்கள் போதிக்க வேண்டும் என்றார். கோபம் கொண்ட பிரம்மன் நாரதா நீ மேற்கொள்ள என்னும் பிரம்ச்சரிய விரதம் அழிந்து குடும்பஸ்தனாக இருந்து பல சிக்கல்களுக்கு ஆளாக வேண்டும், கந்தர்வ குலத்தில் பிறந்து பல பெண்களை மணந்து அவதிப்பட்டபின் ஒரு முனிவரின் சாபம்பெற்று தாழ்குலத்தில் மானிடனாக பிறந்த பின்னரே உனக்கு சாப விமோசனம் கிட்டும் எனச் சாபம் கொடுத்தார்.
பிரம்மனின் சாபப்படி கந்தர்வர்களில் சிறந்த இசைமேதையான உபன் மகனாக உபவருக்கன் என்ற பெயரில் பிறந்து மகதி என்ற யாழ் கொண்டு பாடும் பேராற்றல் பெற்றிருந்தான். முனிவர்கள் உபவருக்கனை தங்கள் ஆஸ்ரமத்திற்கும் யாக சாலைக்கும் அழைத்து சாமகானம் இசைத்துப் பாடச் சொல்லி ஆனந்தப்பட்டனர்.
பிரம்மசிரேஷ்டிரர் முனி தன் யாகசாலைக்கு உபவருக்கனை அழைக்க சாமகான வேதத்தை யாழிசையுடன் இசைத்துக் கொண்டிருக்கும்போது அங்கிருந்த இளம் பெண் இந்த இசையில் மயங்கியிருக்க அவளைப் பார்த்த உபவருக்கனும் மயங்கியதால் இசையில் தடுமாற்றம் ஏற்பட பிரம்மசிரேஷ்டர் உபவருக்க என இடி குரலில் அழைத்து சாம வேதகானத்தில் பிழையை உண்டாக்கியதால் நீ ஈன குலத்தில் மானிடனாய் பிறப்பாய் என சாபமிட்டார்.
முனியின் சாபத்தைப் பெற்றதால் வருத்தமுற்ற உபவருக்கன் யோகத்தில் ஆழ்ந்து தன் உயிரை விட்டான். கன்யாகுப்ஜ நாட்டில் தருமியன்-கலாவதி என்ற தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். அவர் பிறந்ததும் நாட்டில் சுபிட்சமாக மழை பொழிந்ததால்- நீரை வர்ஷித்ததால் அவனுக்கு நாரதர் எனப் பெயரிட்டனர். தாய் தந்தையர் இறக்க காட்டில் தவம் மேற்கொண்டார். நாராயணர் தோன்றி நாரதா நீ இப்பிறவியில் என்னைக் காணமுடியாது. அடுத்த பிறவியில் உன் எண்ணம் நிறைவேறும் என்றதால் தெளிந்த நாரதர் மீண்டும் யோகத்தில் அமர்ந்து தன் உயிரை விட்டார்.
உடலைக் களைந்து சுய ரூபம் அடைந்து சத்ய லோகமடைந்து தந்தை பிரம்மனை வணங்கி, கையிலையில் சிவனை வணங்கி மோட்சம் பெறும் வழியைக் கேட்டார். பிரமச்சரிய விரதம் கொண்டு மனதையும் ஐம்புலன்களையும் அடக்கி இன்சொல் கூறி அறவழியில் நடந்து இறைவனுக்கு நிவேதனம் செய்த உணவை மட்டும் உண்டு சதா இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டிருக்க வேண்டும் என்றார்.
அதன்படி சதா சர்வ காலம் இறைவனை நினைத்து திருநாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்த நாரதர் பத்திரிகாசிரமம் சென்று நாராயணனை தரிசிக்க அவர் நாரதரை பூலோகத்தில் சிருஞ்சியர் மகள் சுவர்ணகிரீயை மணந்து வாழ அறிவுருத்த அவ்வாறே சுவர்ணகிரீயை மணந்து வாழ்ந்து கொண்டிருந்த நாரதருக்கு அங்குவந்த சனத்குமாரர் தாரக மந்திரத்தை உபதேசித்தார்.
நாராயணனின் தாரக மந்திரத்தை உபதேசம் பெற்றதும் நாரதர் பற்றற்ற நிலையை அடைந்து கானகம் சென்று தவமேற்கொண்டார். மகாவிஷ்ணு காட்சியளிக்க இசையில் வல்லவராக வரம் பெற்றார்.
தன் தாயையும் தந்தையையும் வணங்கி தாயிடம் உள்ளது போன்ற வீணையையும் அதை மீட்டும் ஞானமும் பாடும் திறமையும் பெற்றார். அவரின் இசை நாரத கானம் என்றாயிற்று.
நாரதர் திரிலோக சஞ்சாரி எப்படி ஆனார்!
தான் தோன்றியதிலிருந்தே நாராயணனை தன் சிந்தையில் வைத்து துதித்து வந்தார். தட்சப்பிரஜாபதி தன் குலத்தை விரிவாக்க 1000 மகன்களை மூன்றுமுறைத் தோற்றுவிக்க ஒவ்வொரு முறையும் அவர்களை பக்தி வழியில் ஈடுபடவைத்து முக்தி மார்க்கத்தில் நாரதர் செலுத்திவிட கோபம் கொண்ட தட்சப்பிரஜாபதி, நாரதா நீ இனி ஒரே இடத்தில் தொடர்ந்து ஒரு முகூர்த்த காலத்திற்குமேல் தங்கக் கூடாது. அப்படி தங்கினால் உன் தலை வெடித்து விடும் எனச் சாபம் கொடுத்தார்.
தன் தாயின் (சரஸ்வதி) தந்தையின் (பிரம்மா) ஆலோசனைப்படி நாரதர் மாதையூர் சென்று சிவனை வழிபட்டு தவமிருந்தார். சிவனிடம் தான் நினைத்தவுடன் எந்த உலகிற்கும் செல்லும் ஆற்றலையும் புகழையும் வேண்டிப் பெற்றார். தான்பெற்ற சாபப்படி நாரதர் ஒரே இடத்தில் இல்லாமல் எல்லா உலகங்களுக்கும் பயணித்தவாறே இருக்கின்றார். பகவானின் பரம பக்தனாக எந்நேரமும் நாராயணன் நாமம் உச்சரிக்கும் திரிலோக சஞ்சாரியாக பேறு பெற்றான்.
நாரதரின் ஆசை!
நாரதி, தமிழ் வருடங்களின் பிறப்பு! நாரம்- என்றால் தீர்த்தம் அல்லது மனிதமனம். நாரம் எனும் தீர்த்தத்தினை இருப்பிடமாகக் கொண்டுள்ளதால் நாராயணன். மனிதர்களின் மனத்தைப் புரிந்து கொள்கின்ற தன்மை இருப்பதனால் நாரதர். இந்த இருவர் சமபந்தப்பட்ட நிகழ்வே தமிழ் வருடங்கள்.
நாரதர் கட்டை பிரமச்சாரி. கங்கைக் கரையில் மக்கள் குடும்ப சகிதமாக செல்வதைக் கண்ட நாரதருக்கு ஒர் ஆசை தோன்றியது. குடும்பம் என ஒன்றில்லாததால் இல்லற சுகம் என்பதை தான் அறியமுடியவில்லை என நினைத்தார். அப்போது கங்கையில் ஓர் பெரிய மீன் தன் குஞ்சுகளுடன் நீந்தி செல்வது அவருக்கு மிகவும் மகிழ்வைக் கொடுக்க தானும் அதுபோல் குடும்பமாக சென்று அந்த சுகத்தினை அனுபவிக்க ஆசை கொண்டார். தன் நாவில் எப்போதும் உச்சரிக்கும் நாராயனின் அவதாரமான ஸ்ரீகிருஷ்ணரைச் சந்தித்தபோது தன் ஆசையைக் கூறினார். மேலும் தாங்கள் ஆயிரக்கணக்கான மனைவிகளுடன் எப்படி குடும்பம் நடத்துகின்றீர்கள் என அறிய ஆசைப் படுவதாகச் சொல்ல கிருஷ்ணர் தனது மனைவிகள் வசிக்கும் இடங்களுக்குச் சென்று நேரில் அறிந்து வரும்படி கூறினார். எல்லா வீட்டிலும் கிருஷ்ணர் தன் மனைவி மக்களுடன் ஆனந்தமாக இருப்பதைக் கண்டு தானும் அப்படி இருக்க விரும்பிய எண்ணங்களுடன் கங்கையில் மூழ்கி நீராடினார்.
நீராடி எழுந்தபோது கிருஷ்ணரின் அருளால் பெண்ணாக மாறியிருந்தார். நாரதர் நாரதி ஆனார். கரையேறிய நாரதியை கங்கைக் கரையில் இருந்த ஓர் சந்நியாசி கையைப் பிடித்து அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டார். நாரதியின் மணவாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருந்தது. முதல் குழந்தைக்கு பிரபவ எனப் பெயரிட்டனர். ஆண்டுக்கு ஓர் குழந்தை என பிறக்க நாரதியின் உடல் நலம் குன்றியது. இப்படியே நாரதிக்கு அறுபது குழந்தைகள் பிறந்தன. அறுபதாவது குழந்தைக்கு அக்க்ஷய எனப் பெயரிட்டனர். அந்தக் குழந்தைகளுக்கு உணவு, மருந்து அளிக்க முடியா நிலை ஏற்பட்டது. இனியும் தாங்க முடியாது என்ற நிலையில் கிருஷ்ணரை மனதாரத் துதித்தாள்.
அப்போது இதுவரை அவள் கணவராக இருந்துவந்த முனிவர் மறைந்து ஸ்ரீகிருஷ்ணர் தோன்றினார். நாரதியிடம் குடும்ப வாழ்க்கையின் சுகம் போதுமா! என வினவினார்! மணவாழ்க்கை மலர்ப் படுக்கை என நினைத்து ஏமாந்து விட்டேன் .இதிலிருந்து என்னை மீட்க உதவி செய்யுங்கள் என வேண்டினாள். அறுபது வருடங்களாக மாயையில் ஆழ்ந்திருந்த நாரதி விழிப்பு ஏற்பட்டு நாரதாராக மாறினார்.
தன் தாயும் தந்தையும் நிலை மாறியதால் கலக்கமடைந்த அறுபது குழந்தைகளும் தங்களின் நிலை என்ன வென்று வேண்ட நாரதர் ஸ்ரீகிருஷ்ணனைப் பார்க்க, அவர் அறுபது பிள்ளகளையும் அறுபது ஆண்டுகளாக இருந்து ஒவ்வொருவரும் ஓர் ஆண்டு இப்பூவுலகை சுகத்துடன் ஆண்டு வர ஆசிகூறினார். அதன்படி முதல் குழந்தை பிரபவ –ல் தொடங்கி அறுபதாவது குழந்தை அக்க்ஷய –ல் முடியும் ஆண்டுகளாக மாற்றம் பெற்று பூவுலகில் ஆட்சி செய்து வருகின்றனர்.
60 ஆண்டுகளின் பலன்கள்- புராணங்கள் கூறுவது
பிரபவ- உற்பத்தி
விபவ- செல்வம்
சுக்கில- வெளுப்பு,
பிரமோதூத- பிரபையுடன் கூடிய தூது
பிரஜோத்பத்தி- ஜனப்பெருக்கம்
ஆங்கீரஸ- வளமான செல்வ பெருக்கம்
ஸ்ரீமுக- லக்ஷ்மிகடாட்சம்
பவ- இறையருள் பொங்கிப் பெருகும்
யுவ- இளமை
தாது- வறட்சி நீங்கி வளம் பெரும்
ஈஸ்வர இறையருள் பரிபாலிக்கும், அமைதி நிலவும்,
வெகுதான்ய- விளைச்சல் அமோகம்
பிரமாதி- சில தவறுகள் நேரும்
விக்ரம- வீரமும், விளைச்சலும் அதிகரிக்கும்
விஷு- எல்லாப் பொருள்களும் பெருகும்
சித்ரபானு- மகிச்சிதரும் சம்பவங்கள் நிகழும்
சுபானு- இன்பமும் சுகமும் நிறைந்திருக்கும்
தாரண- மழை அதிகமாக இருக்கும்
பார்த்திப- உணவுப் பொருள் அதிகம் கிடைக்கும்
விய- அதிக செலவாகும்
சர்வஜித்- எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி
சர்வதாரி- மழை அதிகம்
விரோதி- மழை அதிகம் இருக்காது
விக்ருதி- கஷ்டங்கள் அதிகம்
கர- வெற்றியில் வீரம் வெளிப்படும்
நந்தன- அனைவரும் மகிழ்ச்சியுடன் இருப்பர்
விஜய- விசேஷ வெற்றி
ஜய- வெற்றி
மன்மத- நோய்களினால் துன்பம்
துர்முகி- கலகங்கள் நேரும்
ஹேவிளம்பி- பணக் கஷ்டம்
விளம்பி- துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகும்
விகாரி- மாற்றங்கள் ஏற்படும்
சார்வாரி- எல்லா வளங்களும் பெருகும்
பிலவ- அனைத்தும் இழுபறி
சுபகிருது- சுபங்கள் நடைபெறும்
சோபகிருது- மங்களங்கள் பெருகும்
குரோகி- குரோதம் வளரும்
விஸ் வாவஸு- தெய்வ அருள் பெருகும்
பராபவ- தோல்வியை எதிர் கொள்ள வேண்டும்
பிலவங்க- துயரங்களைச் சமாளித்தல்
கீலக- தீர்க்கமாக இருத்தல்
சௌமிய- அமைதியாக இருக்கும்
சாதாரண- இன்ப துன்பம் சமம்
விரோதி கிருது- விரோதத்தை வரவழைக்கும்
பரிதாபி- பரிதாபத்தைக் கொடுக்கும்
பிரமாதீச- அஞ்ஞானம் அகன்று ஒளி கிடைக்கும்
ஆனந்த- ஆனந்தம் பெருகும்
ராக்ஷஸ- கொடூரம்
நள- சமையல், சமயத் தொடர்பான மேன்மைகள்
பிங்கள- வளப்பமிக்க விளைச்சல்கள்
காளயுக்தி- அதீத புத்திசாலித்தனமிக்க கண்டுபிடிப்புகள்
சித்தார்த்தி- சாதனைகள்
ரௌத்ரி- கோபதாப எரிச்சல் அதிகம்
துர்மதி- குறைவான மழை, கெட்ட எண்ணம் மிகுதியாக இருக்கும்
துந்துபி- மகிழ்ச்சி நிலவும்
ருத்ரோத்காரி- பூரண மழை பெய்வதுடன் கோபமான சம்பவங்கள் நிகழும்
ரக்தாக்ஷி- சிவந்தகண்கள் கோபப்படுவதும் பயக்கண்ணீர் விடுவது நடக்கும்
குரோதனா- கோபம், குரோதம் வெறுப்பும் அதிகரிக்கும்
அக்ஷய- பணப்பஞ்சம். கெடுதல் இல்லா சுபிட்சம் நிலவும்.
நாரதர் பெற்ற சாபம்! வீணை மண்ணுலகத்திற்கு வந்தது!
தேவேந்திரன் அகத்தியரை வரவேற்று உபசரித்தான். வரவேற்பு நிகழ்ச்சியில் ஊர்வசியின் ஆடலுக்கு நாரதர் வீணையை மீட்டினார். இந்திரன் மகன் சயந்தன் ஊர்வசியின் ஆடல் கண்டு காதல் கொள்ள அதை அறிந்த ஊர்வசியும் அவன்மேல் காதல் கொள்ள ஊர்வசியின் ஆடலில் பிழை ஏற்பட்டது. தாள சுருதிக்கு ஏற்ப ஊர்வசி ஆடாமல் காதலினால் தவறாக ஆடுவதைக் கண்ட நாரதர் ஊர்வசியின் ஆடலுக்கு ஏற்ப இசையை காதல் கானமாக இசைத்தார். இசையில் வல்லவரான அகத்தியர் இதை உணர்ந்து கோபம் கொண்டு சயந்தனை மூங்கிலாகும்படியும், ஊர்வசியை பூவுலகில் மானிட பிறவி எடுத்து வாழவும் சபித்தார். ஊர்வசி சாபம் பெற நாரதரும் இன்பரசம் பொங்க பிழைபட வாசித்து தன்னை அவமதித்தார் என்பதால் ‘வீனை மண்மிசை தங்குக’ என்று சாபமிட வீணை மண்ணுலகிற்கு வந்தது.
குரங்கு முகம்! நரதர்பெற்ற சாபம்!
பர்வத ரிஷியும் நாரதரும் நண்பர்கள். இருவரும் உலகை சுற்றிப் பார்த்து வரும்போது உணவு, மங்கை, பொருள் ஆதியவற்றின்மீது அவ்வப்போது ஏற்படும் உணர்வுகளை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று இருவரும் ஒப்பந்தம் செய்துகொண்டனர். சஞ்சயம் என்ற நாட்டின் அர்சன் அவர்களை வரவேற்று அன்புடன் உபசரித்தான். அவர் மகள் தமயந்தியை அவர்களுக்கு பணிவிடை செய்ய நியமித்தான். இரு முனிவர்களின் குறிப்பறிந்து அவர்கள் கேட்காமலே அவர்களுக்கு பணிவிடை செய்து வந்தாள். நாளடைவில் அவள் நாரதருக்கு செய்யும் பணிவிடைகளில் அதிக அக்கறை தெரிந்தது. இதுபற்றி நாரதரிடம் கேட்க அவர் நாங்கள் இருவரும் காதலிக்கின்றோம் என ஒப்புக்கொண்டார். நம் ஒப்பந்தப்படி நீர் ஏன் என்னிடம் இது பற்றி சொல்லவில்லை என பர்வத ரிஷி கோபங்கொண்டு நாரதரை குரங்கு முகமாக மாற சாபமிட்டார். நண்பர் என்று பாராமல் அவர் சாபம் இட்டதும் நாரதரும் உமக்கு சுவர்க்க வாசமில்லாமல் மிருத்ய லோகத்தில் வாசம் உண்டாகட்டும் என எதிர் சாபமிட்டார்.
பர்வத ரிஷி வருத்தத்துடன் வனப்பக்கம் சென்று விட்டார். நாரதரின் இசை கேட்டு மகிழ்ந்தபடி வந்த தமயந்தி அவர் முகம் குரங்கு முகமாக மாறியிருப்பது கண்டு வருத்த முற்றாலும் அவருக்குச் செய்யும் பணிவிடைகளில் எந்த வித மாற்றமும் இல்லாமல் அன்புடன் செய்து வந்தாள்.
தன் மகளுக்கு திருமணப் பருவம் வந்துவிட்டதால் அவளுக்கு நல்ல அரச குமரனை தேர்ந்தெடுத்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் தமயந்தி தன் தோழியின் மூலமாக தந்தைக்கு தூதுவிட்டாள். தந்தை வருந்தி தன் மனைவிடம் சொல்லி மகளை அரசகுமரனை மணந்து கொள்ள தூது அனுப்பினார். தாய் எவ்வளவோ சொல்லியும் மகள் கேட்காமல் உறுதியாக குரங்கு முகம் கொண்ட நாரதர்மேல் அன்பு கொண்டிருக்க அவர்களுக்கு திருமணம் செய்வித்தார் மன்னன். நாரதர் அங்கேயே இருந்து வழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார். ஒருநாள் அவர் நண்பன் பர்வத ரிஷி அங்கு வந்து நண்பன் குரங்கு முகத்துடன் வாழ்க்கை நடத்துவது கண்டு வருத்தப்பட்டு தன் சாபத்தை விலக்கிக்கொள்ள நாரதரும் அவர்மேல் தான் இட்ட சாபத்தை விலகிக்கொண்டார்.
நாரதர் கலகம்!
தேவலோகம் சென்ற நாரதரை வறவேற்று உபசரித்த தேவேந்திரன் அவரிடம் ஓர் பாரிஜாத் மலரை அளித்தான். அம்மலருடன் கிருஷ்ணரைக் காணவந்தவர் கிருஷ்ணனிடம் கொடுக்க அதை அவர் அருகில் இருந்த ருக்மணியிடம் கொடுத்தார். பின் சத்யபாமவைப் பார்க்கச் சென்ற நாரதர் அவரிடம் தான் பாரிஜாதமலரை கிருஷ்ணரிடம் கொடுத்தது அவர் அதை ருக்மணியிடம் கொடுத்தது எல்லாம் சொல்லிச் சென்றுவிட்டார். பிறகு அங்கு வந்த கிருஷ்ணன் சத்யபாமாவின் முகம் வாடியிருக்க காரணம் கேட்டு ஒரு பாரிஜாத மலருக்கா இத்தனை சோகம் என நாரதரை அழைத்து தான் சொன்னதாகக் கேட்டு தேவேந்திரனிடம் ஒரு பாரிஜாத மரத்தை வாங்கி வரச் சொன்னார். போன கையில் திரும்பி வந்த நாரதர் தேவேந்திரன் அந்த மரத்தை பூவுலகிற்கு தரமுடியாது எனச் சொன்னதை சொல்ல கிருஷ்ணருக்கும் தேவேந்திரனுக்கும் போர் நடந்தது. காசிப முனிவர் வந்து இருவரையும் சமாதானம் செய்து பாரிஜாதமரத்தை இந்திரன் துவாரகைக்கு அனுப்பி வைத்தான். சத்யபாமா நந்தவனத்தில் நட்ட மரம் பூத்து குலுங்கி ருக்மணி வீட்டில் விழுந்தது கண்டு பாமா கோபம் கொள்ள கிருஷ்ணர் பாமாவுடன் ருக்மணி வீட்டை அடைய பாரிஜாத மாலையை கிருஷ்ணர் கழுத்தில் போட்டு வரவேற்றாள் ருக்மணி. எல்லா மலர்களையும் மாலையாக தொடுத்து விட்டாயே உனக்கு மலர்கள் இல்லையா என்று கேட்டதற்கு என்னையே தங்களுக்கு தந்துவிட்ட பின் எனக்கு எதற்கு மலர்கள் என்றாள் ருக்மணி. ருக்மணியின் அன்பு கண்டு பாமா வெட்கினாள்.
பாமா ஒரு சமயம் கிருஷ்ணனின் அன்பு நிலைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என நாரதரிடம் கேட்டாள். துலாபாரத்தில் கிருஷ்ணனை இருத்தி எடைக்கு எடை தங்கம் தானம் செய்தால் நல்லது நடக்கும் என்றார் நாரதர். அதன்படி ஏற்பாடுகள் நடந்தது. பாமா கிருஷ்ணனை வரவழைத்து துலாபாரத்தின் ஒரு தட்டில் அமரவைத்து மற்ற தட்டில் தன்னிடமுள்ள பொன் பொருள்களை வைக்க ஆரம்பித்தாள். எடைக்குமேல் பொன் தன்னிடம் வைத்திருப்பதாக கர்வம் இருந்தது. அவள் நினைத்ததுபோல் அவ்வளவு சீக்கிரமாக எடையை சரி செய்ய முடியவில்லை. எல்லாவற்றையும் வைத்தும் தராசு சரியாக வில்லை. தானம் பெற வந்தவர்கள் எல்லோரும் வேடிக்கை பார்த்தனர். என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை. பாமாவிடம் ருக்மணியை அழைத்து ஏதாவது செய்ய முடியுமா எனப் பார்க்கச் சொன்னார்கள். என்னால் முடியாததை அவள் எப்படி சரி செய்வாள் என நினைத்தவளுக்கு அனைவரின் பேச்சை தட்ட முடியாமல் ருக்மணியை அழைத்து வந்தாள். ருக்மணி தட்டிலுள்ள பொன் பொருட்களை எல்லாம் எடுக்கச் சொன்னாள். பின் கிருஷ்ணரை நினைத்து வழிபட்டு துளசி தளம்- இலை ஒன்றை வைத்தாள், என்ன ஆச்சரியம் தட்டு சமனாகியது. சத்ய பாமா தன் கர்வம் அழிய ருக்மணியைப் பார்த்தாள்.
இறைமேல் நம்பிக்கை!
நாரதர் பூமியை சுற்றி வரும்போது தற்செயலாக மூவர் அவரைப் பார்த்து விட்டனர். அவர்களில் செல்வந்தர், புலவர் இருவரும் நாரதரிடம் நீங்கள் வைகுந்த வாசனிடம் எங்களுக்கு வைகுந்த வாசம் கிடைக்குமா! எனக் கேட்டு வாருங்கள் என்றனர். மூன்றாவது நபர் ஓர் ஏழைத் தொழிலாளி. அவர் நாரதரிடம் ஒன்றும் கேட்கவில்லை.
உலகைச் சுற்றி விட்டு வைகுந்தம் சென்று விஷ்ணுமுன் நின்றார். நாரதர் பேச ஆரம்பிக்குமுன், நீ பூலோகம் சென்று அந்த மூன்று பேரிடமும் நான் ஊசியின் காதில் யாணையை நுழைத்துக் கொண்டிருப்பதாக கூறு. அவர் நுழைத்து முடித்த பின்னர் உங்கள் கேள்விக்கான பதிலைச் கேட்டுச் சொல்கின்றேன் எனச் சொல் உனக்கே எல்லாம் புரியும் என்றார்.
இதை அந்த மூவரிடமும் சொன்னார். புலவரும், செல்வந்தரும் இதைக் கேட்டுச் சிரித்தனர். ஊசியின் காதில் யானை நுழைக்கவே முடியாத காரியத்தை விஷ்ணு செய்கின்றாராம் என கிண்டலடித்து மீண்டும் சிரித்தனர். ஆனால் ஏழைத் தொழிலாளி, ஆண்டவன் எவ்வளவு வல்லமை கொண்டவர். அவர் நினைத்தால் எதையும் செய்வார். சின்னஞ்சிறு விதைக்குள்ளே பெரிய மரத்தை ஒளித்து வைத்திருக்கும் அவரால் எதுவும் முடியும், எனப் பரவசப்பட்டான்.
நாரதர் அந்த தொழிலாளியைப் பார்த்து, அன்பனே, இறைவனால் எதையும் செய்ய முடியும் என நம்புவர்க்கே அவர் துணை கிட்டும் எனக்கூறி மறைந்தார்.
கர்வம் கொண்ட நாரதர்!
1.இறை நம்பிக்கை உணர்வே ஆன்மீக ஆதாரம்!
நாராயணன் திருநாமத்தை சர்வ காலமும் சொல்லிக் கொண்டிருப்பது தான் ஒருவன் தான் என்ற நினைவு கொண்டதனால் கர்வம் கொண்ட நாரதர் அதை பெருமாளிடம் பெருமையாகச் சொன்னார். விஷ்ணு புன்னகைத்தார். நாரதா எவ்வளவு பெருமை உன்னிடம் இருக்கின்றது. நீ ஒருவனால் மட்டுமே அதைச் செய்யமுடியும் என்று சொல்லி அவரிடம் எண்ணெய் நிறைந்த கிண்ணம் ஒன்றைத் தந்து, “நாரதா இது புனிதமான எண்ணெய். ஒரு சொட்டு கூட கீழே சிந்தாமல் சுமந்தபடி உலகை மூன்றுமுறை வலம் வரவேண்டும். இப்போதே புறப்படு என்றார்.”
இது என்ன பிரமாதம் என கிண்ணத்தை கையில் ஏந்திக்கொண்டு ஓர் அடியெடுத்து வைக்க எண்ணெய் அசைந்தது. எங்கே கீழே சிந்தி விடுமோ என்ற பயம் பிடிக்க நாரதரின் கவனம் பார்வை முழுவதும் எண்ணெய் கிண்ணத்தின் மீதிருக்க அடிமேல் அடியெடுத்து வைத்து ஜாக்கிரதையாக ஒருமுறை வலம் வந்தார். அப்போது பரந்தாமனைப் பார்த்து இந்த எண்ணெய்யை சிந்தாமல் எடுத்துக் கொண்டு வருவது என்பது என்னால் முடியாது. வேரு ஒருவரிடம் இப்பொறுப்பை ஒப்படையுங்கள் என்றார்.
திருமால் பூ உலகின் பக்கம் பார்த்து அங்கிருந்த பக்தன் ஒருபெரியவரை அழைக்க வந்தவரிடம் எண்ணெய்யை கீழே சிந்தாமல் உலகைச் 3முறைச் சுற்றிக்கொண்டு வரவேண்டும் என்று கிண்ணத்தை கொடுத்தார். கிண்ணத்தை வாங்கியபோது அப்பெரியவரின் கை நடுங்கியது கண்ட நாரதருக்கு சிரிப்பு வந்தது. அடக்கிக் கொண்டார். சிரஞ்சீவியான தன்னாலேயே முடியாதபோது உடல் நலம் குன்றிய வயதான பெரியவர் எப்படி இதைச் செய்யமுடியும். இன்று பெருமாளுக்கு ஏதோ குழப்பம் போலிருக்கின்றது என நினைத்தார்.
கிண்ணத்தை கையில் வாங்கிய பெரியவர் தள்ளாடியபடி அங்குமிங்கும் பார்த்துக் கொண்டு நடக்கத் தொடங்கி ஒன்றல்ல, சொல்லிய வண்னம் மூன்று முறை வலம் வந்து முடித்து துளிக்கூட எண்ணெய் சிந்தாமல் கிண்ணத்தை பெருமாளிடம் கொடுத்தார். அருகில் இருந்து பார்த்த நாரதர் முழித்தார். அப்போது பெருமாள் நாரதா உன்னிடம் ஒரு கேள்வி கேட்க நினைத்தேன் மறந்துவிட்டேன். நீ உலகைச் சுற்றிவரும்போது என்னென்ன பார்த்தாய் என்றார். என்னது! வேடிக்கைப் பார்ப்பதா! எதுவும் செய்யத் தோன்றவில்லை. கவனம் முழுக்க எண்ணெய் கிண்ணத்தில் தான் இருந்தது என்றார். இதே கேள்வியைப் பெரியவரிடம் கேட்க, பெருமாளே உலகில் படைக்கப்பட்ட பல உயிர்கள், நிகழ்ந்த நிகழ்வுகள் அனைத்தையும் பார்த்தேன். நடுவில் சில சமயம் தங்களை நினைத்துக் கொண்டேன். எப்படி ஒர் பொன்னான வாய்ப்பு என்று எண்ணி சந்தோஷம் கொண்டேன் என்றார். அப்படியானல் எண்ணெய் கிண்ணத்தை கவனிக்கவே இல்லையா என்று கேட்க, அதை ஏன் கவனிக்க வேண்டும், பெருமாளால் அதை நான் செய்வேன் என்று என்னிடம் ஒப்படைக்கப் பட்டதை அவர் பார்த்துக் கொள்வார். நான் செய்வேன் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கும்போது அதை கீழே கொட்டிவிடுவேனோ என்று நான் சந்தேகப்பட்டால் அது முட்டாள்தனம்! கொஞ்சமும் சிந்தாமல் கொண்டு வர பெருமாள் உதவி செய்வார் என நம்பினேன். சுலபமாய் சுற்றிவந்தேன் என்றார்.
நாரதரைப் பெருமாள் பார்த்தார். அதன் அர்த்தம் அவருக்குப் புரிந்தது. உங்களுக்கு புரிந்ததா! உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு நீங்கள் செய்து முடிப்பீர்கள் என்ற நம்பிக்கையால் ஏற்பட்டது. உங்களிடம் செய்து முடிப்பேன் என்ற தன்னம்பிக்கை இருந்தால் நீங்கள் எந்தச் செயலிலும் வெற்றி பெறுவீர்கள். இறைவனிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். செயலாற்றுங்கள். நடப்பது நடந்தே தீரும். இறை நம்பிக்கைதான் ஆன்மீக ஆதாரம். வாழ்வின் துடுப்பு!
2. பெண்ணாசை இல்லை!
வைகுந்தத்தில் உரையாடலின்போது தான் பெண்ணாசை இல்லாதவர் என நாரதர் கர்வத்துடன் கூற அதைப் பரிசோதிக்க எண்ணிய திருமாள் நாரதர் சொல்லும் வழியில் ஓர் பசுஞ் சோலையையும் அதில் ஒரு பெண் படுத்திருக்கவும் செய்தார். அப்பெண்ணைக் கண்ட நாரதர் மையல் மேலிட அவளை திருமணம் செய்து கொள்ள விருப்புவதாக கூறினார். அப்பெண் நான் நாராயணன் போல் உள்ள ஒருவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்றாள். நாரதர் எப்போதும் நாராயணன் திருநாமத்தை உச்சரிக்கும் தனக்கு அந்த நாரயணன்போல் உரு கொள்வதில் சிக்கலில்லை நான் திரும்பி வரும் வரையில் நீ இங்கேயே இரு எனக் கூறி வைகுந்தம் சென்றார். திருமாலிடம் பூவுலகில் நடந்த விசயத்தை மாற்றி ஒரு பெண்ணைக் கண்டதாகவும் அவள் சபதப்படி தங்களது சங்கு சக்கரத்தைத் தந்தால் நான் அவளிடம் காண்பித்து திரும்பிவந்து விடுவேன் என்றார். திருமால் சங்கு சக்கரத்தைக் கொடுக்க அதை எடுத்துக் கொண்டு பூவுலகம் சென்றவர் அங்கு அந்த பெண்ணைக் காணாமல் சேர்ந்துபோனார். அப்போதுதான் இது திருமால் செய்த நாடகம் என்பது புரிந்து அவர் கர்வம் அழிந்து வைகுந்தம் திரும்பினார். அவரைப் பார்த்த திருமால் எதை விரும்பி என்னிடம் மறைத்து பொய் கூரினாயோ அந்தச் செயலுக்காக பேடியாக மாற சாபமிட்டார். நாரதர் வகுளாரண்ய சேத்திரமாகிய இங்கு வந்து வழிபட்டு சாபம் நீங்க அருள் பெற்றார். நாரதர் பெண்ணாசை கொண்டதால் பேடியாகி விஷ்னு சாபம் தீரவழிபட்ட தலம். நாரதர் தவமிருகும்போது மகிழமரத்தின் பழங்கள் மேல் விழ மகிழம் காய்க்காமல் இருக்க வும், குளத்தில் நீராடும்போது தாமரை மலர்கள் இடைஞ்சலாக இருக்க இங்கு தாமரை பூக்காமல் இருக்கவும் சாபமிட்டார் நாரதர். பூக்காத பொய்கை-பூத்தாலும் காய்க்காத மகிழ மரம். குடும்ப அமைக்கு ஒற்றுமைக்கு வழிபாடு. வகுளம்-மகிழமரம்-ஆரண்யம்-காடு-வகுளாரண்யம். .- கடலங்குடி
#####