ஓம்நமசிவய!
உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி யுறுதியாகத்
தள்ளரிய அன்பென்னுந் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுக்ட்பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணையென்னும்
வெள்ள மதம்பொழிச் சித்தி வேழத்தை நினைந்து வருவினைகள் தீர்ப்பாம்.
&&&&&
பங்குனி மாத விரதங்கள்!
பங்குனி பௌர்ணமி- பங்குனியில் பளிங்குகல் லிங்கம் வழிபாடு சிறப்பு பகல் உபவாசமிருந்து சிவபூஜை செய்து இரவில் சாமை உணவு உண்ணுதல்.
பங்குனிமாத அஷ்டமி-மாரி-மகாதேவன்-வணங்கினால் இராஜயோக பலன்.
பங்குனி உத்திரம் - எல்லாப் பௌர்ணமிகளுமே சிறப்பு வாய்ந்தவை. தமிழ் மாதங்கள் பன்னிரண்டிலும் ஒவ்வொரு மாதமும் முழுநிலவு நாள் குறிப்பிட்ட நட்சத்திரத்தை ஒட்டியே அமையும். பங்குனியில் வரும் பௌர்ணமி உத்திர நட்சத்திரத்தில் வருவதால் பங்குனி உத்திரம் எனப்படும். அன்று சூரியனது வெப்பம் அதிமாகவும் சந்திரனின் குளிர்ச்சியும் அதிகமாகவும் இருக்கும். சந்திரன் தன் 64 கலைகளையும் பொழிந்து காட்சியளிக்கும் நாள் பங்குனி உத்திரம். ஜோதிடரீதியாக ஆரோக்யகாரகனாகிய சூரியனும், மனோகாரகனான சந்திரனும் சம பலத்துடன் அமைவதால் உடலுக்கும் மனதிற்கும் அன்றைய தினம் வலிமை அளிக்கக்கூடிய நாள.
பங்குனி உத்திரம் விரதம்- அதிகாலை எழுந்து இஷ்ட தெய்வத்தை நினைத்து நீராடி நெற்றியில் இட்டுக்கொண்டு வீட்டில் உள்ள கடவுள்களின் படங்களுக்கு பூமாலை அல்லது மலர்கள் அணிவித்து அந்தந்த தெய்வத்திற்குரிய மந்திரத்தை அல்லது துதியை அல்லது தெய்வத்தின் திருநாமத்தை மனதார உச்சரிக்க வேண்டும். பொதுவாக சிவ-பார்வதி, முருகன்-வள்ளி-தெய்வானை படத்தை வைத்து வழிபடவும். காலையில் பால் பழங்கள் சிறிதளவு உண்டு மதியம் எதுவும் உண்ணாமல் இருத்தல் நலம். உடல் நலம் இல்லாதவர்கள் பாலன்னம் சிரிதளவு உண்ணலாம். தயிர், மோர் சேர்த்தக் கூடாது. பின் கோவிலுக்குச் சென்று உற்சவங்கள் ஆராதனை அபிஷேகங்களில் பங்கேற்க வேண்டும். முடிந்த அளவு தானங்கள் செய்யவும். இரவு கோவில் பிரசாதத்தை உண்ணலாம். மறுநாள் மீண்டும் அதிகாலை எழுந்து நீராடி ஜபித்து இறைவனை வணங்கி வழிபட்டு வழக்கப் படியான உணவை உண்ண வேண்டும். இன்று அனுஷ்டிக்கப்படும் விரதத்தை திருமண விரதம் என்றும் சொல்வர், கோவில்களில் நடைபெறும் தெய்வத் திருவிழாவை தரிசித்து மனதார வேண்டினால் மனம் போல் மணப்பேறு கிட்டும். தம்பதியர்க்கு வாழ்நாள் முழுவதும் ஒற்றுமையுடன் வாழ அருள் கிட்டும். இந்த விரதத்தால் அடுத்த பிறவி தெய்வப்பிறவியாக அமையும். பங்குனி உத்திரம் விரதமிருந்துதான் மகாலட்சுமி மகாவிஷ்ணுவை மணந்தாள். இந்த விரத மகிமையால்தான் பிரம்மன் சரஸ்வதி தன் நாவை விட்டு நீங்காமல் இருக்கச் செய்தது.
அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால் அந்த வாரம் அசைவ உணவு அருந்தக்கூடாது. தொடர்ந்து விரதம் கடைபிடித்து வந்தால் பலன்கள் அதிகம். நல்ல கல்வி, தகுதிற்கேற்ப வேலை, நல்ல வாழ்க்கைத் துணை, நல்ல மக்கட் செல்வம் அனைத்தும் தவறாது தருவது பங்குனி உத்திர விரதம்.
பங்குனி மாத சிறப்புகள். சிறப்புமிக்க நன்னாளான பங்குனி உத்திரத்தன்றுதான் 1.உமை சதாசிவனை வணங்கும் இமாவான் மகளாக ஹேமாவதியாக அவதரித்தார். 2.சிவ சாபத்திற்கு ஆளாகி கடுந்தவம் இருந்த காமாட்சி- மலைமகளை ஈசன் மணந்த நாள், 3. பெண்ணுக்குப் பிறக்காத பெண்களால் வளர்க்கப்படாத சிவ அம்சத்தால் தான் அழிய வேண்டும் என வரம் வாங்கிய மகிஷியை அழிக்க சாஸ்தா அவதாரம் நிகழ்ந்தது. 4. முருகன் தெய்வானையை மணந்தது. 5. மீனாட்சி சுந்தரேசரை மணந்தது, 6. ஆண்டாள் ரங்கமன்னாரை மணந்தது. 7. வெற்றிக்கு வழிகாட்ட முருகனுக்கு உகந்தது. 8. பதஞ்சலி முனிவரும் வியாக்ரபாத முனியும் நடரஜர் நடனம் ஆடும்போது அவரது வலது பாத தரிசனத்தை பங்குனி உத்திரத்தன்று திருவாரூரில் தரிசித்துள்ளனர். 9. மரங்களும் செடிகளும் பூத்துக் குலுங்கும் இந்த மாதத்தில் நடக்கும் விழாக்கள் வசந்த விழா எனப்படும்
வருடத்தின் ஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசை முதல் நவமிவரையிலான திதிகள் அம்பிகைக்கு உரியது. இதன்படி பன்னிரண்டு நவராத்திரிகள் உண்டு. என்றாலும் அவற்றில் முக்கியமானது நான்கு மட்டுமே கொண்டாடப்படுகிறது.
1.ஆனி மாதத்தில் அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ஆஷாட நவராத்திரி.
2 புரட்டாசி மாதத்தில் அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் சாரதா நவராத்திரி.
3. தை மாத்த்தில் அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் சியமளா நவராத்திரி.
4. பங்குனி மாதத்தில் அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் வசந்த நவராத்திரி..
&&&&&