ஓம்நமசிவய!
நாரணன் முன் பணிந்தேத்த நின்று எல்லை நடாவிய அத்
தோரணவும் திரு நாரையூர் மன்னு சிவன்மகனே,
காரணனே, எம் கணபதியே, நற் கரிவதனா,
ஆரண நுண்பொருளே, என்பவர்க்கில்லை அல்லல்களே!
$$$$$
கோவிந்த பகவத் பாதர்!
நல்ல நித்திரையில் இருந்த மகாவிஷ்ணு தனக்குள் மெல்ல புன்னகைத்து ஆழ்ந்து சுவாசித்தார். இந்த சுவாசத்தால் பெருமாளின் எடை கூடவே பூபோன்று கணக்கும் பெருமாளின் எடை அதிகரித்ததால் அதை தாங்க இயலாமல் தவித்தான் ஆதிசேஷன். விஷ்ணு மீண்டும் புன்னகைத்தார். புஷ்பக் குவியல் போல் அவர் எடை ஆனது. இந்த மாயத்திற்கு காரணம் என்னவென்று ஆதிசேஷன் கேட்க, பெருமாள் சொன்னார், கையிலே சில பழங்களை எடுத்துக் கொண்டு நீண்ட தூரம் நடந்தால் அந்த பழங்களே மிகுந்த கனம் உள்ளதாக தெரியும். அந்த பழங்களை உண்டு விட்டால் அதன் பளு தெரியாது. கையில் இருந்த பழம் வயிற்றுக்குள் போய்விட்டது. ஆதனால் அதன் எடை தெரியாமல் போய் விடும். அதுபோல் என் உள்ளத்தில் வைத்து தினமும் ருசிக்கும் ஒரு பழத்தை நான் இன்று சற்று நேரம் வெளியே வைத்துப் பார்த்தேன் அந்த பாரம் உன்னை துயரத்தில் ஆழ்த்திவிட்டது என்றார். ஒன்றும் புரியவில்லை என்று ஆதிசேஷன் சொல்ல விஷ்ணு சிதம்பரம் நடராஜரைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.
சந்தோஷத்தை தாங்க முடியவில்லை
ஆதிசேஷா, நான் எப்போதும் என்னுள் வைத்து அனுபவித்து வரும் ஈசனை, நடராஜப் பெருமானை தனியாகப் பிரித்து பார்த்து ரசித்தேன். அந்த சந்தோஷத்தைதான் உன்னால் தாங்க முடியவில்லை என்றார். அப்போது ஆதிசேஷன் உள்ளத்தில் எழுந்த ஆசையை அறிந்த பெருமாள் நீ சிதம்பரம் சென்று தவமிருந்து அவரை தரிசிப்பாய் என்றார். அவர் விரும்பினால்தான் நீ அவரைப் பார்க்க முடியும். உனக்கு அந்த ஆசை வந்திருக்கின்றது என்றால் அவர் உன்னை அழைக்கின்றார் என்று பொருள். அங்கு உனக்கு எதோ வேலை கொடுக்கப் போகின்றார் என நினைக்கின்றேன் என்று பூடகமாகச் சிரித்தார்.விஷ்ணுவை நமஸ்கரித்து கயிலை சென்று தவம் புரிய காட்சி கொடுத்த சிவன் ஆதிசேஷா பூலோகத்தில் உள்ள வியாக்ரபுரத்தில் வியாக்ரபாதன் என்பவன் என்னை பூஜிக்க வசதியாக இருக்க தனக்கு புலிக்கால் புலிக் கை வேண்டும் என விரும்பி வரம் பெற்றவன் என்னுடைய ஆனந்த தாண்டவத்தைக் காண திருமூலநாதரை பூஜித்து வருகின்றான். நீயும் அங்கு செல்வாயாக தை மாதத்தில் குரு வாரத்தில் பூச நட்சத்திரமும் பூரணையும் சேர்ந்த நாளில் உங்கள் இருவருக்கும் ஆனந்த தாண்டம் ஆடிக் காண்பிப்பேன் என அருளினார்.
ஆத்ரேயர்-பதஞ்சலி
சிதம்பரத்தில் அத்ரி முனிவர் தம்பதியினருக்கு பிறந்த குழந்தையின் உடல் கீழ்ப்பகுதி பாம்பைப் போல் இருந்தது. அத்ரி முனிவரின் குழந்தை என்பதால் ஆத்ரேயர் என்றனர். பதஞ்சலி என்றும் அழைத்தனர். வளர்ந்தார். சிவகங்கையில் நீராடி, சிவனை மனதில் இருத்தி வியாக்ரபாதருடன் சேர்ந்து திருமூலநாதரை பூஜித்த பதஞ்சலியின் பிறப்பிற்கான காரணம் அறிந்த ஈசன் காட்சியளித்து இருவருக்கும் ஆனந்த தாண்டம் ஆடிக் காண்பித்தார்.
ஆடலைக் கண்ட பதஞ்சலி மெய்சிலிர்த்துப் போனார் உடுக்கை ஒலிக்கேற்ப இறைவன் ஆடுவது கண்டு பதஞ்சலியும் மெய் மறந்து ஆடினார். ஆஹா என்ன ஒரு திரு நடனம் என்று ஆனந்தித்து பரவசப் பட்டார். இதை மனதால் பருகியதாலே விஷ்ணுவின் கனம் அதிகரித்தது என நினைத்த பதஞ்சலி தன் எடையும் அதிகரித்ததை உணர்ந்தார். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத உலக இயக்கத்திற்கு காரணமான அந்த அற்புத ஆனந்த திருநடனத்தில் லயித்து இருந்தவரை ‘பதஞ்சலி’ என்ற அன்பு ஓசை அழைக்க சகஜ நிலைக்கு வந்த பதஞ்சலியிடம் ஈசன், மிக முக்கியமான மூன்று காரியங்களை (யோக சூத்திரம், ஆத்ரேய சம்ஹிதை, வியாகரண மகாபாஷ்யம்) பாரத மக்களின் விழிப்புணர்வுக்காக ஆற்ற வேண்டும் என்றார்.
யோக சூத்திரம்- எப்போதும் அலையும் சுபாவமுள்ள மனதைக் கட்டுபடுத்தி மேம்படுத்த உதவுவது,
ஆத்ரேய சம்ஹிதை- உடல் ஆரோக்கியத்திற்கு வழிகாட்டும் உன்னத நூல்
வியாகரண மகாபாஷ்யம்- பிழையற்ற சொற்களைச் சிந்தித்து சொல்ல உதவுவது. எதை எப்படி உச்சரிப்பது என்ற குழப்பத்தை நீக்கி ஒழுங்காக பேசும் வழிமுறைகளைக் கூறும் நூல். எல்லாவற்றிலும் மகத்தான இதை எழுதி எல்லோருக்கும் கற்றுக் கொடு அது உன்னால் மட்டுமே முடியும் என்று ஆசீர்வதித்தார்.
மகாபாஷ்யம்- பதஞ்சலி வியாகரணத்திற்கு மகாபாஷ்யம் எழுதியது நாடெங்கும் பரவ அதைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆவலுடன் ஏராளமானவர்கள் சிதம்பரம் வந்தனர். இதைக் கற்க வந்த சீடர்கள் 1000 பேருக்கும் சொல்லிக் கொடுக்க பல வருடங்கள் ஆகும் என்பதால் பதஞ்சலி ஆதிசேஷன் உருவம் எடுத்து அனைவருக்கும் ஒரே சமயத்தில் உபதேசம் செய்ய முடிவெடுத்தார். தன் சக்தியை தாங்க முடியாமல் சீடர்கள் எரிந்து விடுவார்கள் என்பதால் தனக்கும் தன் சீடர்களுக்குமிடையில் ஒரு திரையை அமைத்து திரைக்கு உட்புறம் அமர்ந்து திரையை விலக்கி பார்க்கக்கூடாது, என் அனுமதியின்றி வெளியில் செல்பவர்கள் பிரம்ம ராட்சஸாக மாறிவிடுவீர்கள் என்ற நிபந்தனையுடன் பாடம் நடத்தினார். ஒரு சீடனுக்கு மட்டும் எப்படியாவது திரையை விலக்கிப் பார்த்துவிட ஆவல். அப்படிச் செய்தபோது அந்தோ அங்கிருந்த அனைவரும் ஆதிசேஷனின் நச்சு காற்று மற்றும் பார்வை பட்டு எரிந்து சாம்பல் குவியலாயினர். நிலைமையைக் கண்டு பதஞ்சலி வருந்த திரை மூடியிருக்கின்றது குருவிற்கு என்ன தெரியும் என்று வெளியில் சென்றுவிட்டு திரும்பி வந்த ஒருவன் மட்டும் 1000 பேரில் தப்பியவன். இறைவன் இட்ட ஆணையை நிறைவேற்றாமல் போய் விடுமோ என்று அஞ்சிய பதஞ்சலிக்கு ஒருவன் தப்பியது ஆறுதலைத் தந்தது.
கௌடர்-பிரம்ம ராட்சஸன்
அவன் சுமாரன மாணவன். மேற்கு வங்கம்-அன்றைய கௌட தேசத்திலிருந்து வந்ததால் அவனைக் கௌடர் என அழைத்தார். கௌடர் மந்த புத்தியுள்ளவரானதால் வாயால் போதிப்பதவிட முழுமையான அனுக்கிரஹமாக அவனுள் அத்தனையும் இறக்க நினைத்தவர் இறைவனை வேண்டி மனதை ஒருமைப் படுத்தி அவன் தலைமேல் கைவைத்து ஆசீர்வதித்தார். மின்னல் வேகத்தில் பதஞ்சலிக்குத் தெரிந்த அத்தனை ஞானமும் கௌடருக்குள் இறங்கின. அதே விநாடி கௌடர் பேயாக- பிரம்ம ராட்சஸாக மாற பதஞ்சலியின் காலில் விழுந்து மன்னிக்க வேண்டியது.
ஆச்சாரிய பக்தியில்லாமல் என் கட்டளையை மறந்து நீ வெளியில் சென்றதால் என் சாபம் பலித்து விட்டது. இதை உடன் நிவர்த்தி செய்ய முடியாது. உனக்கு நான் கற்றுக் கொடுத்த வித்தைகளை, எல்லாம் தெரிந்த ஒரு அறிஞனுக்கு நீ கற்றுக் கொடுத்தால் பேய் உருமாறி சுய உருவம் அடைவாய் என்றார்.
அந்த பேய் பறந்து சென்று நர்மதைக் கரையோரம் ஒரு மரத்தில் வசித்தது. பிரம்ம ராட்சஸனாக இருந்தாலும் பூர்வஞான வாசனையால் ஒரு புத்திசாலித்தனமான கேள்விகேட்டு அதற்கு பதில் சொல்லாதவர்களை கொன்று சாப்பிட்டு வந்தது. ஒருநாள் அந்த வழியில் ஓர் அழகான அந்தணச் சிறுவன் சந்திர சர்மா வந்தான். அவனிடம் பிரம்ம ராட்சஸன் கேள்வி கேட்க சரியான பதிலை அந்தச் சிறுவன் பகர்ந்தான்.
சந்திர சர்மா
கௌடருக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்தாலும் பிரம்ம ராசஸனாக மாறிய அவரின் கேள்விக்கு எப்போது யார் சரியான பதிலைச் சொல்வது. அவர் எப்போது யாருக்குப் போதிப்பது என்ற கவலையில் பதஞ்சலி முனிவரே மறு பிறப்பெடுத்து சந்திர சர்மாவாக வந்துள்ளார்.
பிரம்ம ராட்சஸன் சிறுவனே உன்பெயர் என்ன என்று விசாரனை செய்ய, வேதியர் குலத்தில் உதித்த என் பெயர் சந்திர சர்மா, நான் பதஞ்சலி முனிவர் எழுதிய வியாகரண மகாபாஷ்யம் கற்க சிதம்பரம் செல்ல விருக்கின்றேன் என்பதைக் கேட்ட பிரம்ம ராட்சஸன். தானே அதைக் கற்றுத் தருவதாகச் சொல்லி. தன் இருப்பிடமான ஆலமரத்திற்கு வரச்சொல்லி சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தது.
சந்திரசர்மா! நான் எத்தனை நாள் பாடம் சொல்லித்தருகிறேனோ அத்தனை நாள் நீயும் என்னுடன் மரத்தை விட்டு கீழிறங்காமல் பாடம் கேட்க வேண்டும் என்ற கண்டிப்புடன் பாடம் ஆரம்பிக்கப்பட்டது. திடீரென்று பாடம் ஆரம்பிக்கப் பட்டதால் எப்படி குறிப்பெடுப்பது என்று குழம்பிய சந்திரசர்மா ஆலமரத்து இலைகளைப் பறித்து தன் தொடையை நகத்தால் கீரி வரும் ரத்தத்தில் தொட்டு எழுதினான். இடை விடாமல் பிரம்ம ராட்சஸன் சொல்லிக் கொண்டிருக்க ஆலமரத்தின் இலைகளைப் பறித்து தன் ரத்தத்தில் தொட்டு தொட்டு எழுதினான்.
சீக்கிரம் பாடங்களைக் கற்றுக் கொடுத்து விட்டால் தான் சுயரூபம் அடைந்து விடலாம் என்பது பிரம்ராட்சஸனின் எண்ணம். சீக்கிரம் எழுதி முடித்தால் பாரத மக்களுக்காக இறைவன் கொடுத்த பணியை செய்து முடித்து விட்டோம் என்ற எண்ணம் சந்திர சர்மாவாகிய பதஞ்சலிக்கு. ஒரு வழியாய் பாடங்கள் முடிந்தன. கௌடரின் சாபம் விலக பிரம்ம ராட்சஸ உருவம் விலக பிரம்ம ஞானத்தைத் பாரதத்திற்குத்தர கௌடர் இமயமலை நோக்கி சென்றார். அங்கே பிறவியிலே ஞானியாகிய சுகர் முனிவரைச் சந்தித்து வேத உபதேசம் பெற்று இறைவனின் பாதங்களே முக்திக்கு வழி என்று செயல்பட்டதால் கௌடபாதர் என்றழைக்கப்பட்டார்.
ஆலமரத்தின் இலைகள் அனைத்தும் தீர்ந்து போயிருந்தன. அந்த இலைகளை எல்லாம் ஒன்று சேர்த்து தன் இடையில் உடுத்தியிருந்த ஆடையால் சேர்த்து கட்டி விட்டு களைப்பு மிகுதியால் சந்திரசர்மா அயர்ந்து அந்த மரத்தடியிலேயே தூங்கி விட்டான். அப்போது பசியுடன் அப்பக்கம் வந்த ஆடு புல் பூண்டு எதும் கிடைக்காமல் தன் உணவிற்காக தேடி சந்திரசர்மாவின் மூட்டையிலிருந்த இலைகளை திண்ண ஆரம்பித்தது. சந்திரசர்மா உயிரைக் கொடுத்து ரத்தத்தில் எழுதிய இலைகளின் அருமை தெரியா ஆடு அந்த மூட்டையிலிருந்த ஆலமர இலைகளைப் பாதிக்குமேல் தின்று விட்டது.
திடுக்கிட்டு விழிப்படைந்தான் சந்திரசர்மா. நடந்ததை அறிந்தான். அழுது புரண்டான். ஆட்டை துரத்திவிட்டு மீதி இருந்த்தைக் காப்பாற்றினான். இன்று வரை மகாபாஷ்யத்தில் காணாமல் போனபகுதி ‘ஆடு தின்ற உரை’- ’அஜபட்சித பாஷ்யம்’ என்று அழைக்கப்படுகின்றது.
எஞ்சிய பாஷ்ய உரையுடன் உஜ்ஜயினிக்கு சென்றவன் அயர்வினால் ஒரு வீட்டுத் திண்ணையில் படுத்து விட்டான். உணவின்றி மயக்க நிலையில் கிடந்த அவனை அந்த வீட்டு வியாபாரின் மகள் பார்த்து அவனை மயக்கத்திலிருந்து மீட்டு அவன்பால் காதல் கொண்டாள். சந்திரசர்மா அந்தக் காதலை மறுக்க ராஜசபையில் புகார் அளிக்கப்பட்ட்து. அவனது தோற்றத்தைக் கண்ட அரசன் தன் மகளுக்கு அவளை மணமுடிக்க எண்ணினான். மந்திரியிடம் ஆலோசனை கேட்க அவர் தன் மகளுக்கு பொருத்தமானவன் என நினைத்தார். இந்த மூன்று பெண்கள் போதாது என்று அரசவையில் இருந்த மற்றொறு பெண்ணும் அவன் மேல் ஆசைப்பட அந்தக் கால வேதியர் குல வழக்கப்படி ஒரே முகூர்த்தத்தில் நான்கு பேரையும் மணம் புரிந்தான் சந்திரசர்மா.
மனைவிகள் நால்வருக்கும் குழந்தை பிறந்தது. அவர்கள் வரருசி எனும் வல்லப ரிஷி, விக்ரமாதித்தன், பட்டி, பர்த்ருஹரி ஆவார்கள். பின்னர் குடும்ப வாழ்க்கையிலிருந்து விலகி தன்னிடமிருந்த மகாபாஷ்யத்தை பாரதமெங்கும் பரப்பினார்,
இறுதியில் இமயமலை சென்று தன் முற்பிறவியில் தன்னிடம் சீடராயிருந்த கௌடபாதரிடம் சன்னியாசம் பெற்றார். அன்று முதல் சந்திரசர்மா கோவிந்த பகவத் பாதர் என்று அழைக்கப்பட்டார். பத்ரிகாஸ்ரமத்தில் தங்கி குருமார்களுடன் ஆன்மீகப் பணி ஆற்றி வந்தார்.
ஒருநாள் சுகரின் தந்தையும் குருவுமான வியாசர் அங்கு வந்தார். சுகர், கௌடபாதர், கோவிந்தபகவத் பாதர் ஆகிய மூவரும் அவரைச் சுற்றி அமர்ந்து ஆவலுடன் அவர் சொல்லப் போவதை கேட்க காத்திருந்தனர். கலிமலிந்த பாரதத்தைப் புனிதப்படுத்த மனிதப் பிறவியாக சந்நியாசியாக வந்து அறத்தை நிலை நாட்டி மனித தர்மத்தை உலகுக்கு உணர்த்த வரும் இறைவனுக்கு சன்னியாசம் அளிக்கும் பாக்கியம் உங்களில் ஒருவருக்கு கிடைக்கப் போகின்றது என்றார். அந்த புனித வாய்ப்பு தங்களுக்கே கிடைக்கவேண்டும் என மூவரும் வேண்டிக்கொண்டனர்.
வியாசர் மீண்டும் வாய் திறந்து கோவிந்தபகவத்பாதரே அந்த மாபாக்கியம் உங்களுக்கே. நீங்கள் இங்கிருந்து கிளம்பி நர்மதை நதிக்கரைக்குச் செல்லுங்கள். அங்கே தவம் மேற்கொள்ளுங்கள் இறைவன் உங்களை சந்திப்பார் என்றார். கோவிந்தபகவத்பாதர் வியாசரை வணங்கிச் சென்றார்.
சந்திரசர்மாவுக்கு இளமையில் உபதேசம் செய்த பிரம்மராட்சஸ் சாபம் நீங்கி கௌடபாதராகி சந்திரசர்மா துறவறம் ஏற்றதும் குருவாக உபதேசம் தந்தார். சந்திரசர்மா இளமையில் எந்த குகையில் எந்த ஆலமரத்தின்மீது அமர்ந்து பிரம்மராட்சஸிடம் வியாகரண விளக்கம் கேட்டாரோ அதே மரத்தின் அடியில் அமர்ந்து சிஷ்யனாக வரப்போகும் சிவபெருமானுக்காக காத்திருந்தார் கோவிந்த பகவத்பாதர். அங்கு வந்த சங்கரருக்கு முறைப்படி சன்னியாசி தீட்ஷை அளித்து அத்வைத்த்தை போதித்தார். காசி நகரம் சென்று அங்கே அத்வைத தத்துவத்தை போதிக்க வேண்டும் என சங்கரரை வழிஅனுப்பி வைத்துவிட்டு, இறைவன் தனக்கு இட்ட பணியை செய்துவிட்ட திருப்தியுடன் மீண்டும் பத்ரிகாஸ்ரமத்திற்கு சென்றார் கோவிந்த பகவத்பாதர்.
$$$$$