ஓம்நமசிவய!
வெள்ளம்போல் துன்பம் வியனுலகில் சூழ்ந்திருக்க
கள்ளம் கபடம் கவர்ந்திழுக்க- உள்ளம்
தளர்ந்திருக்கும் எங்கள் தயக்கத்தை நீக்க
வளரொளி விநாயகனே வா!
####
விஷ்வக்க்ஷேனர்!
விஷ்ணு சகஸ்ரநாமத்தில் 2வது ஸ்லோகம்-சொல்வது கஜநாதன், “ஜயத்சேநன், ஹரிவக்ரர், காலப்ரக்ருதி போன்ற படைத்தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பரிஜனங்கள் எவருடைய ஆணைக்கு கீழ்படிந்து நடக்கின்றார்களோ அப்படிப்பட்ட விஸ்வக்ஷேனரை சகலவிதமான விக்னங்களும்-தடைகள் விலகுவதன் பொருட்டு வணங்குகின்றேன்.”
ஸஹஸ்ர நாமத்தைச் சொல்லும்போது விஷ்ணுவின் சேனைத் தலைவரான விஷ்வக்ஷேனரை பற்றிய இந்த ஸ்லோகத்தைச் சொல்லியே தொடங்குவது வழக்கம். சேனைத் தலைவர் என்பது தழிலில் சேனைமுதலி, சேனைநாதன் என்பர். மரியாதை நிமித்தமாக சேனைமுதலியார் என்பதுமுண்டு. சைவர்கள் எந்த செயலையும் தொடங்கும் முன்பாக விநாயகரை வணங்கித் தொடங்குவதுபோல் வைஷ்ணவர்கள் விஸ்வக்ஷேனரை வணங்கியே முயற்சிகளைத் தொடங்குவர்.
விஸ்வக்ஷேனரின் முக்ய வேலை திருக்கோவில்களைப் பராமரித்து கோவிலுக்கு வந்து போவோரை கண்காணித்து கோவிலை தூய்மையாக வைத்துக் கொள்வதாகும். பொதுவாக இவரை வணங்கிய பின்னரே பெருமாளை தரிசிக்க வேண்டும். பிரமோற்சவத்தின் முதல் நாள் சேனை முதலியார் உற்சவம் என்று இவரை ஆராதித்த பின்னரே தொடங்குவர். விஸ்வக்ஷேனர் ஐப்பசி மாதம் பூராட நட்சத்திரத்தில் அவதரித்தார். வைஷ்ணவ சித்தாந்தத்தின்படி முதல்குரு ஸ்ரீமந்நாராயணன், அடுத்தது தாயார். தாயார் பெருமாளிடமிருந்து உபதேசம் பெற்று விஸ்வக்ஷேனருக்கு உபதேசிக்கிறார்.. அதனால் ஆச்சாரியர்கள் வரிசையில் மூன்றாவதாகப் போற்றப்படுகின்றார்.
#####