புலனின் பூக்கள்!
பணம் இல்லாதவன் அதை அடைய நினைக்கின்றான். அதற்காக தன் செயலை திட்டம் தீட்டுகின்றான், செயல்படுகின்றான். அப்பணத்தை அடைய வரும் துன்பங்களை ஏற்றுக் கொள்கின்றான். பணத்தை அடைந்தபின் அதை அதிகமாக்கும் ஆசையினால், தீய வழிகளைக் கையாண்டு பணத்தை இழந்து அளவிடமுடியாத துன்பத்திற்கு ஆளாகின்றான்.
இதைப் போன்றே, உடல் உணர்வு கொண்ட இளைஞன் தனக்கு பெண்ணின் சுகபோகம் கிடைக்கவில்லை என வருத்தமடைகின்றான். அதனால் அவன் மிகவும் வருத்தத்தில் வேதனைப்படுவதாக நினைக்கின்றான். ஆனால் ஒரு பெண்ணை மணந்தவன் சுகபோகத்தில் திளைத்திருந்தாலும், காலம் செல்லச் செல்ல அந்த சுகபோகத்திற்கு காரணமான மனைவி, மக்கள், குடும்பம் அவனுக்கு துன்பத்தை தருவதாக நினைத்து வருத்தப்படுகின்றான்.
எந்த வகையில் பார்த்தாலும் பணமும், சுகபோகமும் இல்லாத நிலையில் அதை தேட வேண்டிய ஆவல் இருந்தாலும், அவற்றை அடைந்தபின் அவைகளின் தாக்கங்கள் நாளடைவில் ஒர்வகையான சோர்வை உண்டாக்கி மனித ஆத்மா மிகுந்த வருத்தமடைந்து மாற்றுவழிதேடி, அதிலிருந்து விடுபட நினைக்கின்றது.
அப்போது அந்த ஆன்மா ஆலயங்கள், கோவில்கள், மசூதிகள், சர்ச்களுக்கு சென்று அமைதிகாண விழைகின்றது. நாளடைவில் ஈடுபாடு மிக்ககொண்டு விரும்பி நாடுவது ஆன்மீக வழியாகவே இருக்கின்றது. அதற்கு புலன்களின் அடக்கம் தேவை! நம் மனம் பொய்மையை நினைக்கலாம். அதனால் வாய் பொய்பேசலாம். ஆனால் கண்ணால் பார்ப்பதில் எந்தவித மாற்றமும் இருக்காது. உண்மையை நடக்கும் நிகழ்வை மட்டும் பார்க்கும் புலன் கண்ணாகும்.
புலன்கள் கொள்ளும் கட்டுப்பாடே ‘தமா’ என மனுதர்ம சாஸ்திரம் கூறுகின்றது. அதாவது அறியும் திறனால் புலன்களைக் கட்டுப்படுத்தி நல்ல செயல்களை செய்வதாகும். கட்டுப்படுத்துவது என்றால் புலன்களின் அடக்கமான ஆரோக்கிய நல்வழிகளில் செயல்களைக் கொண்டிருக்க வேண்டும். புலன்கள் கட்டுப்பாடின்றிருந்தால் மனம் அலைபாய்ந்து அலைக்கழிக்கும். அவையே ஒருவருக்கு எதிரியாகும். அலைபாயும் மனதை கட்டுப்படுத்திவிட்டால் ஒவ்வொருவரும் நிதானமாக எல்லா காரியங்களையும் செவ்வனே செய்து முடிக்க முடியும். பல ரகசியங்களை கொண்டு ஓர்வெற்றி பெறும்போது கிடைக்கும் மகிழ்ச்சி புலன்களினால் அடையும் மகிழ்வைவிட சந்தோஷத்தைவிட சிறப்பானதாக இருக்கும்.
நமது புலன்கள் எவ்வளவு அனுபவித்தாலும் முழுமையான திருப்தியடைவதில்லை. போதும் என்ற மனம் பொன் செய்யும் மருந்து என்பர்! நமது பகுத்தறிவை உபயோகித்து நம்மை நாமே ஒழுங்குபடுத்தி நம் மனதை கட்டுப்படுத்திக்கொள்ள ஆரம்பிக்கும்போது நம்மிடம் சிறப்பான தனித்தன்மை உருவாகும்.
ஆசைபடுபவன் ஒருவகையில் புலனின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவனாவான். ஆனால் பித்தன், ஞானி, பக்தன் இயக்கப்படுகின்றான் யாரென்று தெரியாமலே! எதனாலோ ஈர்க்கப்படுகின்றான். இரும்புத்துண்டு கனமானதாக இருந்தாலும், மெலிதாக இருந்தாலும், காந்தம் அதை ஈர்க்கும் சக்தி கொண்டது. அப்படித்தான் அருள் எல்லோரையும் ஈர்க்கும் தன்மைகொண்டது.
நாம் சாப்பிடும் மருந்து நம் உடம்பின் பாதிக்கப்பட்ட இடத்திற்கு சென்று சேர்கின்றது. நம் உணவின் சக்திகள் உடலின் எல்லா பாகங்களுக்கும் செல்கின்றது. ஆனால் மனம் நம் உடலில் இருந்தாலும் அதன் தேவை ஆற்றல் தேவைப்படும் போதுதான் அந்த இடத்தில் உதவும். மனம் என பொதுவாகச் சொன்னாலும் உணவுவகைகள் வித்தியாசப்படுதல் போல் வேறு வேறு மனங்களின் ஆற்றல் தன்மைகளும் மாறுபடும்.
சூரிய ஒளியை குவிஒளிக் கண்ணாடி மூலம் குவியச்செய்தால் அங்கு வெப்பச்சக்தி தீப்பற்றும் அளவிற்கு தோன்றும். அதேபோல் நமது எண்ணங்களையும் புலன்களையும் கட்டுப்படுத்தி ஒன்று சேர்த்தால் மனதில் சக்திகள் குவியும். அது அளவில்லா சக்தியாகும். நீங்கள் எல்லா நிகழ்வுகளையும் நிகழ்த்துவீர்கள். உங்களால் சாதனையாளாராக முடியும்.
புலன்கள் விரும்புகின்றன என்பதற்காக நியாமற்ற முறையில் செயல்படுவது சரியன்று. ஐம்புலன்களுக்கும் கட்டுப்பாடு வேண்டும். மனம் எனும் குதிரை, புலன்கள் நோக்கில் சொல்லாமல், புலன்களை அடக்கி ஆளத் தெரிந்திருக்க வேண்டும்.
தன் ஐம்புலன்களையும் அடக்கும் ஒருவனால் எதையும் சாதிக்க முடியும் என மக்களுக்கு உணர்த்தவே கிருஷ்ணர் கூர்ம அவதாரம் எடுத்ததாக புராணம் பகர்கின்றது. கூர்மம்- ஆமை தன் தலை, தன் கைகள், கால்கள் என ஐந்தையும் ஓட்டுக்குள் அடக்கி அமைதி காக்கும் தன்மையுடையது. அதன் இயக்கம் நியாமானது. உறுதியானது.
உயர்வு வரும்போது ஒடுங்குவதும் அதாவது மமதை கொள்ளாமல் இருப்பதும், தாழ்வு வரும்போது மனம் தளராமல் இருப்பதும் புலனடக்கதால்தான் முடியும். அதுவே மன நிம்மதிக்கான வழி. அது நம்மைச் சார்ந்துள்ளோருக்கும் சாராதிருப்போருக்கும் நன்மை தரும்.
நந்தவனத்தில் ஓர் ஆண்டி, அவன் நாலாறு மாதமாய் குயவனைவேண்டி, கொண்டு வந்தான் ஒரு தோண்டி, அதைக் கூத்தாடி கூத்தாடிப் போட்டு உடைத்தாண்டீ என்பதை நம்மில் பலர் கேட்டிருப்பீர். மேலோட்டமாக இதன் அர்த்தம் புரிந்தாலும் உள் அர்த்தம் என்னவென்றால், நமது ஆன்மா ஜீவன் பிரம்மதேவன் என்ற குயவனிடம் 10மாதங்கள் வேண்டி உடம்பு என்ற கலசத்தை ஆன்மாவிற்காக பெற்று அதை முறைகேடாகப் புலனடக்கமின்றி பயன்படுத்தி அழித்துக் கொள்வதைப் பற்றிக் கூறுகின்றது.
உடம்பின் அருமையை தெரிந்து கொள்ள வேண்டும். அது இறைவன் உறையும் கோவில். அவர்தம் உடலுக்கு நன்மை செய்யாதவர்கள் எவ்வாறு அடுத்தவர் நலன் தேட விழைவார்கள் என்பது சிரமானது. ஆசையில் கட்டுண்டவனுக்கு ஆனந்தம் இல்லை என்பதை அனுபவத்தில்தான் உணரமுடியும். புலனடக்கம் இல்லாதவன் அலைக்கழிகப்படுவான். இன்பம் மின்னல் போல் தோன்றி மறையும். கடைசியில் இன்னல்கள் என்ற துன்பத்தை மட்டுமே தருமாதலால் ஆன்மாவின் உடலுக்கு புலனடக்கம் தேவை. புலனடக்கம் கொள்ள பற்றற்றவராக இருத்தல் அவசியம்.
ஜார்ஜ் ஆர்வெல் என்பவர், ஒரு குளவி தேனை சுவைத்து பருகிக் கொண்டிருக்கும் போது அதன் ஒரு புற இறக்கைகளை வெட்டினாராம். அப்போதும் அது தன் இழப்பை அறியாமல் தேன் அருந்துவதிலேயே கவனமாக, விழிப்புணர்வு இன்றி இருந்துள்ளது. தேன் குடித்ததும் அதனால் பறக்க முடியாத போதுதான் அது தன் இறக்கைகளுக்கு பங்கம் வந்திருப்பதை உணர்ந்துள்ளது. குளவி போன்றே புலனடக்கமின்றி போகங்களில் மூழ்கி, பல ஆண்டுகள் ஆனாலும் தங்கள் இழப்பை காலதாமதமாகத்தான் புரிந்து கொள்கின்றனர்-குருஸ்ரீ பகோரா.