ஓம்நமசிவய!
வஞ்சகத்தில் ஒன்றானைத் துதிக்கை மிகத் திரண்டானை வணங்கார் உள்ளே
அஞ்சரண மூன்றானை மறை சொலுநால் வாயனை அத்தன் ஆகித்
துஞ்சவுணார்க் கஞ்சானைச் சென்னியனை யாறானைத் துகளெழானைச்
செஞ்சொல்மறைக் கெட்டானைப் பரங்கிரி வாழ்கற்பகத்தைச் சிந்தை செய்வோம்.
#####
சின்னமஸ்தா!
தன்னை பிறருக்குத் தரும் தியாக வடிவானவள். தன் சிரத்தினை துண்டித்து ஏந்தி நிற்பவள், காலரூபத்தில் எந்த நியதிக்கும் அடங்காமல் அந்தக் கணத்திலே வெளி உருவை அழித்த உள் அனுபவத்தைத் தரும் வித்யுத் என்கிற மின் சக்தி. அகங்காரம் எனும் இருள் அகல வேண்டும் என்பதை உணர்த்தும் கோடி சூர்ய பிரகாசத்துடன் கூடிய வடிவம்.
அபயமளித்து காக்கும் அன்னை ஆவாள். ரதியும் மன்மதனும் ஒன்றி இனைந்திருக்க அவர்கள் மேல் நின்று ஆடும் நிலையில், தலைமுடி விரிந்து, திறந்த வாயுடன், பருத்த தனங்கள் நிமிர்ந்திருக்க மார்பில் கபாலங்கள், நீலோத்பவ மாலையுடன் கருநாகத்தை பூநூலாக அணிந்து வலக்கையில் கோடாரியும் இடக்கையில் துண்டிக்கப்பட்ட தன் தலையை ஏந்தியவாறு துண்டிக்கப்பட்ட தன் தலைப் பகுதியில் பீரிட்டு வரும் ரத்தத்தை கையில் வைத்திருக்கும் தலையே ஆர்வத்துடன் குடிக்கும் நிலையில் தன் இருபுறமும் தன் தோழிகளான வர்ணனி, வாகினி இருவரும் தன் துண்டித்த தலையிலிருந்து வரும் ரத்தத்தை ருசி பார்ப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தவளாக காட்சியளிக்கும். பயங்கர வடிவம்.
விஷ்ணுவின் பரசுராமாவதாரத்திற்கு உகந்த அரிய சக்தியை அபரிதமாக வழங்கியவள் சின்னமஸ்தா. இவள் கிழக்கு திசையில் தோன்றியவள்.
கண்டம் என்றால் துண்டிக்கப்பட்டது என்றும் சின்னம், என்றால் சேதிக்கப்பட்டது அல்லது அரியப்பட்டது எனப் பொருள். நமது கண்ட ஸ்தானத்தில் வாயு சக்ரம் உள்ளது. வாயுவின் அம்சமான மனம் கண்ட ஸ்தானத்தில் இருந்து பரிபூர்ணமான இரண்டற்ற பரம்பொருளை கண்டமாக்கி பின்பு சின்னமாகவும் பின்னமாகவும் காட்டி இறையின் மாயா சக்தியினால் உலகை உண்டு பண்ணி காத்து அழித்து லீலை புரியும்.
இந்த மனத்தைக் கண்டித்து ஏகாக்கிரக சித்தத்தில் செலுத்தும்படி செய்வதே யோகம். ஒருவழிப்பட்ட மனத்தை ஒரு வழிப்படுத்த என்ன வழி என்பதற்கு கண்டமே குறிப்பால் உணர்த்துவதாகும். கண்டத்தை துண்டித்தால் மனத்தின் ஸ்வரூபம் தெரியும். அதாவது கழுத்தை அறுத்தால் மனத்தின் மௌனத்தை அறியலாம் என்றால் உயிர் உடலை விட்டுப் போய்விடுமே! கழுத்தை அறுத்தாலும் பிராணன் கூட்டை விட்டுப் போகாமல் இருப்பதற்கே யோகம் அதுவே ஹடயோகம் எனப்படும். தலையையும் உடலையும் தனித்தனியே செயல்படுத்துவதை யோகி அறிய வேண்டும் என்பதை உணர்த்தவே தலையையும் உடலையும் வெவ்வேறாக்கி சின்ன மஸ்தாவாக அருள் புரிகின்றான் இறைவன்.
காளி-சண்டியைவிட மிகவும் வேகமாகவும் அதிக சக்தியுடனும் ஆக்ஞா சக்ரத்தில் பிரவேசிப்பதால் பிரசண்ட தேவி எனப்படுகின்றாள். காலத்தின் உதவியின்றி இமைக்கும் நேரத்தில் சரீரம் முழுவதும் வியாபித்து அதிக வேகமாக காரியங்களை செய்து முடிப்பதால் மின்னல். இவளை மின்சாரத்துடன் ஒப்பிடுவதுண்டு. ஆக்ஞா சக்ரத்தின் இரு இதழ்கள் இச்சா, ஞானம் ஆகிய சக்தி ரூபங்களாக சின்ன மஸ்தாதேவி இருப்பவள்.
சுழுமுனையின் அந்தர் வாகினி சரஸ்வதி. அந்த சுழுமுனையில் செல்லும் அதி பீகா சக்தி சின்ன மஸ்தா/ பிரசண்ட சண்டி/ வஜ்ர விரோசினி/ இந்திராணி. இந்திரனுடைய வஜ்ராயுதம் மூலம் அவரின் மனதில் எழும் ஆன்மீகத்திற்கு எதிரான எண்ணங்களையும் செயல்களையும் அழிக்கின்றாள் என்பதால் வஜ்ரவைரோசினி. மேலும் இவைகள் புலன்கள் மூலம் எழுதப்படுவதால் புலன்களை அடிமைப் படுத்தும் பால் உணர்வுகளை அழிப்பவள்- இந்திரிய ஜயம் என்பதைக் குறிக்கவே மன்மதன் ரதிமேல் நிற்பதான அமைப்பு.
மனித தலை புத்தியை காட்டும். புத்தி சக்திக்கு அப்பாற்பட்ட பரம்பொருள். புத்தி சக்தியை தாண்டி நிற்பதற்கு அடையாளமே தலையைத் துண்டித்த கோலம். சின்ன மஸ்தா தன் தலையை தானே கொய்து வாத நாடியால் பிராணனை-குருதியை உட்கொண்டு, பித்த நாடி-அழகான சந்திர ஒளிபோல் பிரகாசிக்கும் அமுதத்தை தரித்துச் செல்லும் இடைநாடியை நாகதத்துவத்தை விளக்கும் ஒர் யோகினி-வர்ணனி உண்ண, சிலேஷ்ட நாடி-சிவப்பு நிறத்துடன் சூரியனைப் போல் விளங்கும் பிங்களநாடியை பூத தத்துவத்தை உணர்த்தும் யோகினி-டாகினி உண்ண சுழுமுனை நாடியான சின்னமஸ்தா ரதி மன்மதன் மேல் நிற்கும் அமைப்பானது இந்திரியங்களை ஜெயித்து சரீரத்திலிருந்து பிரம்ம, ருத்ர, விஷ்ணு கிராந்திகளை(கிரகவட்டங்கள்) தன் கையில் இருக்கும் ஆயுதத்தால் அறுத்து பிரமாண்டத்தினுள் இருக்கும் சக்தியை நம் சரீரத்தின் பிரமாண்டத்தில் சேர்ப்பது என்ற தத்துவமாகும்.
சின்னமஸ்தா மூல மந்திரம் கொண்டு வேள்வி செய்தால் விவாகத்தடை நீங்கி, சந்தான பாக்கியம் கிட்டும். கவித்வம், தனபாக்கியம் அடைவான்
#####