ஓம்நமசிவய!
பெருச்சாளியூரும் பிரானே நரிச்செயலார் பால்
நண்ணாய் செந்தாமரைத்தாள் தேவா நந்தா
மணியே நாயக இருள்சேர் இருவினை எறிவாய்
கரிமுகத்தெந்தாய் காப்போய் போற்றி! போற்றி!
#*#*#*#*#
நிழல்!
எது பிறந்ததோ அந்த வேளையில்தான் நானும் பிறந்தேன். நித்திய தத்துவம் ஒன்றின் விளக்கமாக ஆண்டவன் என்னை அதனுடன் படைத்தனன். நான் பிறந்தது அதற்குத் தெரியாது. எப்போதாவது என்னை காண வேண்டி வரும் .அப்போது அது என்னைக் கண்டு ஆச்சரியப்படலாம். சில சமயம் அதன் பார்வைக்கு நான் தென் படமாடேன். அதனால் என்மீது அதற்கு நம்பிக்கையில்லாமல் போகலாம். ஆனால் நான் அதனுள்தான் ஒளிந்தும் ஒளியாமலும் இருந்து வருகின்றேன்.
அது பிறந்ததிலிருந்து தனக்கு வாழ்க்கை கிடைத்து விட்டது என மகிழ்ந்து கொண்டிருப்பதை நான் அறிவேன். உண்மை என்ன வென்றால் சாவை நோக்கிச் செல்லும் பயணம் தான் வாழ்க்கை என்பதை அது புரிந்து கொள்ளவில்லை. பிறப்பு என்பது சாவில் நுழைவு வாயில். எனவே காலத்தின் கையில் வாழ்க்கை. எனவே காலச்சக்கரத்தின் மணித்துளிகளை இனியனவாக்கிக் கொள்ள முயற்சிசெய் என்ற தத்துவத்தை அது தெரிந்ததாகத் தெரியவில்லை. எப்படியிருப்பினும் நான் அதன் நண்பன். அதன் துணைவன். அது எங்கு சென்றாலும் எது செய்தாலும் அதைக் கவனித்துக் கொண்டுதான் இருப்பேன். அதுவே இறைவன் எனக்கு இட்ட கட்டளை.
ஆண்டவன் என்கிற ஒளியுடன் அது கலக்கும்போது அதுவும் நானும் ஒன்றாகி விடுவோம். சம்சார சாகரங்களைக் கடந்த நித்ய நிலையும் அதுவே! அந்த ஒளியிடமிருந்து அது விலகி ஓடினால் அதன் கோரச்சாவு எனக்கு புரிகின்றது. அதை எச்சரிக்கும் முறயை நான் அறிந்ததில்லை. இருந்தாலும் உண்மையை ஒர் நாள் அது உணர்ந்து திருந்தும் என்ற நம்பிக்கையில் அதனுடன் பயணிக்கின்றேன் அது அந்த இறை ஒளியை நாடி முன்னேறும்போது அதுகலக்கும்போது நானும் கலந்துவிடலாம் என்ற நப்பாசையில் அதனுடன் இனைந்து வர அதன் அடியொற்றி நடக்கின்றேன். இதுவே நான் அதைச் சுற்றி சுற்றி அதனுடன் அலைவதன் உள்ள சிறிய தத்துவம். -குருஸ்ரீ பகோரா
#####