ஓம்நமசிவய!
யானை முகத்தான் பொருவிடையான்சேய் அழகார்
மான மணிவண்ணன் மாமருகன் மேனிமுகம்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்
உள்ளக் கருத்தின் உளன்!
#####
அண்டலிங்கம்!
1712. உலகத்திற்கு காரணமான இலிங்கம் என்னும் பெயரை உடைய சிவத்தை யாரும் அறியார். எட்டுத்திக்கிலும் பரவியிருப்பது உலக லிங்கமே ஆகும். அறுபத்து நான்கு கலைகளையுடைய பிரண்வமும் இலிங்கமாகும். உலகம் முழுவதும் காரண நிலையில் சிவத்திடம் உள்ளதால் அதுவே சிவஇலிங்கம் என்ற வடிவம் ஆகும்.
1713. உலகத்தை படைக்க எண்ணிய சதாசிவம் தன்னை விட்டு நீங்காத சத்தியின் துணைக் கொண்டு இவ்வுலகத்தை தோற்றுவித்தான். குண்டலினி சத்தியின் ஆற்றலால் உலகு வடிவாய்க் காட்சி தருகின்றது. சிவசக்தியால் அவை உலகில் வேறு வேறு அறிவு பொருந்தியவாய் விளங்கும்.
1714. போகத்தையும் வீடு பேற்றையும் அதற்உரிய ஞானத்தையும் அதன் பயனான இன்பத்தையும் உடலையும் நிலம் முதலிய முப்பதாறு தத்துவங்களையும் கடந்து ஒன்றாக நிற்கும் நிலையையும் அருள்பவன் சதாசிவன். ஆகமங்க?ளால் உணர்த்தப் பெற்ற ஆறு அத்துவா மூர்த்தி சிவமே ஆகும்.
1715. எண்ணில்லாத தேவர்கள் என் இறைவனை வழிபட்டனர். நறுமணத்தை தாங்கி வரும் தென்றலைப் போன்ற வள்ளல் என்று வாழ்த்தினர். மகிழ்வுடன் ஆரவாரம் செய்தனர். ஆயினும் அவன் அண்டங்களைக் கடந்து நின்று காக்கின்/றான் என்ற உண்மையை அவர் அறியார்.
1716. ஒளிமிக்க சுடரான தீயும் நான்முகனும் திருமாலும் தேவகுருவும் ஒளிவடிவான கதிரவனுடன் இந்திரனும் ஆகிய இவர்களிடம் கண்ணின் ஒளிபோல் கலந்து நின்றும் மற்றத் தேவர்களிடம் உணர்வைப் பெருக்கும் சந்திர ஒளிபோலும் எல்லா இடங்களிலும் சிவம் நீக்கம் இல்லாது நிறைந்து விளங்கும்.
1717. சிவபெருமான் ஸ்தாபித்த இலிங்கத்துள் நின்றும் அருள் வல்லவன். அப்பெருமான் மேன்மையுடைய ஞானாகாயத்துடன் உள்ளவன் என்று எண்ணி வழிபடுபவர் இலர். ஞானாகாயத்துள் இருக்கின்றான் என்பதை அறிந்து வழிபடுபவர்க்கு ஆறு ஆதாரத்திலும் விளங்கும் குண்டலினியாய் அவன் விளங்குவான்.
1718. மிகவும் சிறந்த சிவாலாயத்தைப் பற்றி அறிந்து கொள்பவர்க்கு கருவறையின் மேல் விளங்கும் விமானமே பருலிங்கம். அதனுள் உள்ள சிவலிங்கம் நுண்மையுடைய லிங்கமாகும். இலிங்கத்திற்கு முன் உள்ள பலிபீடமே பத்திரலிங்கம்.
1719. முத்துடன், மாணிக்கமும், பவளமும் செதுக்கப்பட்ட மரக்கொம்பு கல் திருநீறு, மரகதம், சிவாகமம், சாதம், அரிசி என்பன்வையும், மலர், மணல் என்பவையும் சிவலிங்கம் அமைத்தற்குரியவையாகும்.
1720. இறுகிய தயிர், தூய நெய், பால், பசுஞ்சாணம், விளக்கிய செம்பு, அக்கினி, பாதரசம், சலம், நன்கு வெந்த செங்கல், அழகிய இலவம், பொன் என்பனவற்றால் அழகு விளங்கும் சிவலிங்கமாகக் கொள்க.
1721. வளமையுடைய படிகலிங்கம் அந்தணர் பூசை செய்யத் தக்கது. பொன்னால் ஆன் லிங்கம் மன்னர் பூசிக்கத் தக்கது. மரகதலிங்கம் குறைவற்ற வருவாயை உடைய வாணிகர் வழிபடுதற்குரியது. தொண்டு நெறியையுடைய வேளான் தொழில் உடையவர் வழிபடற்கு வாணலிங்கம் உரியது.
1722. சிவனை இலங்கத் திருமேனியில் உணர்ந்தவன் அப்பெருமானின் எங்கும் கலந்துள்ள தன்மையை ஆராய்ந்து எவ்வகையாலும் உணரமுடியாது நின்ற இறைவன், உண்மை அறிவால் மண், நீர், தீ, காற்று, வான், கதிரவன், சந்திரன், ஆன்மா ஆகிய எட்டிலும் கலந்திருப்பதை உணர்ந்தபோது என் உடலைக் கோயிலாக கொண்டு விளங்கினான்.
1723. முன்பு ஈட்டிய பாவங்களை நீக்குபவன் அனைத்தும் ஒடுங்குவதற்கு இடமாய் நின்ற புண்னியன். இத்தகைய சிவமே அகன்ற பிரபஞ்சமாய் அவற்றுள் மற்றவர் அறியாமல் கலந்திருக்கும் அவனை நாடியவர்க்கு அழியும் உடலுள் ஒளி செய்யும் பொருட்டு இடமாக கொண்டிருப்பவன் ஆவான்.
1724. ஆறு ஆதாரமாலையை அணிந்திருக்கும் திருவடி நிலம் ஆகும். ஒளியுடைய கங்கையாற்றை அணிந்த திருமுடி வானம் ஆகும், இவன் யாவற்றுள்ளும் கலந்திருக்கும் முறையில் அவனது உடம்பு வானமானது. இதுதான் ஆதிபகவானான சிவம். அண்டத்தை திருமேனியாகக் கொண்டு விளங்கும் தன்மையாகும்.
1725. நிலமாய் உள்ள சத்தி பீடத்தின் மீது விளங்கும் இலிங்கம் வானை அலாவி நிற்கும். அலை வீசும் கடலே திருமஞ்சன சாலையாகும். மலைமீது விளங்கும் மேகமே திருமஞ்சன நீராகும். வானத்தின் சிறு ஒளியாய் ஒளிரும் விண்மீன்களே அண்டலிங்கத்துக்குரிய மாலையாகும். அளவிடுதற்கு அரிய சிவத்துக்கு ஆடை எட்டுத் திசைகள் ஆகும்.
####
பிண்டலிங்கம்!
1726. மக்கள் உடலின் வடிவமே சிவலிங்க, ஆகும். மனித உடலும் உடலைச் சூழ்ந்துள்ள பகுதியும் அறிவாலயம். மக்கள் உடல் சதாசிவத்தின் வடிவத் திருமேனி. மக்கள் உடலில் உள்ள அசைவு எல்லாம் கூத்தப் பிரானின் கூத்தே ஆகும்.
1727. ஒன்று கூடும் முறையில் நிலம், நீரிலும், நீர் தீயிலும், தீ காற்றிலும், காற்று வானத்திலும் ஒடுங்கித் தூயமை பெற அப்படியே பூதங்களுக்கு காரணமான சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்து தன் மாத்திரைகளும் ஒடுங்கும்படி வன்மையை அருளும் ஐம்பூதத் தலைவன் சிவத்தை வணங்குங்கள். அவ்வாறு செய்யின் உடல் அழிந்தாலும் அழியாது மேலும் நுண்ணுடலில் நிலைபெற்று விளங்கும்.
1728. உடம்பு உண்டான போதே உடலுள் குடி புகுந்த ஐபூதத் தலைவர்களும் அவரவர் தொழிற்படும் நுழைவாயில் நின்று உயிருக்கு வேண்டிய அறிவை அளித்தருள்வர். அன்னை வீட்டில் புகுவது போல் விருப்பமுடன் தலைவன் என் உள்ளத்தில் புகவும் அந்த வாயில்களைத் தன்னுடையதாக்கிக் கொண்டு சிவம் ஆண்டருளினான்.
1729. பெருமையுடைய இறைவன் இவ்வுடலை அவன் விளங்குவதற்கு ஏற்ற கோயிலாகக் கொண்டான்,. நான்கு இதழ்களையுடைய மூலாதாரச் சக்கரத்தை இடமாய்க் கொண்டான். இவ்வுடலின் பத்து நாடிகளின் செயல்களையும் தான் ஏற்றுக் கொண்டான். புலன்கள் செயல் படாதவாறு வென்று வாயில் கொண்டான்.
#####