குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
ஓம்நமசிவய!
தேவர் தொழுங் கருணைச் செல்வனே சிறந்தொளிரும்
மங்கள சொரூபனே ஓவறு சித்திகளனைத்தும்
உதவுவோய் ஒலிகெழுகிண்கிணி பாத சாலநூபுரங்கள்
மேவியொளிர் சரணே மததாரை விரவியதிண் கபோலனே
நினதருளால் பாவமொடு பலபிணியும் பம்பு வறுமைகளும்
பலவான இடர்களையும் பாற்றுக இன்புறவே!
#####
பத்தியுடைமை!
2623. இறைவன் உயிர்களுக்கு வீடுபேற்றை அளிக்கும் ஞான வடிவாகவும் மந்திர வடிவாகவும் உள்ள தலைவன். அழியாத தேவர்களை நடத்துபவன். தூய்மையானவன். தூய நெறியாக விளங்குபவன். இத்தகைய இறைவன் அடியார்களால் போற்றப்படும் உயிர்களின் தலைவனும் ஆவான்.
2624. சிவபெருமானின் சந்தான ப்ரம்பரையில் வ்ந்த அடியாரிடம் அடிமைக்கு அடியவனாகி அவரிடம் அடிமைப் பட்டேன். அப்படி அடியார் அருளால் சிவஞானம் பெற என்னையும் அவன் அடையார்களுள் ஒருவனாய் ஏற்றுக் கொண்டான்.
2625. இறைவன் தன்னைச் சார்ந்தவ்ர்க்கு நீரை விடக் குளிர்ச்சியுடையவன். உலகத்தைச் சார்ந்தர்க்குத் தீயை விட வெம்மையைத் தருபவன். அவனது இப்படிச் செய்யும் இச்செய்கையை அறிபவர் யார். ஆனால் உலகத்தின் பயன் அளிப்பவரைக் காட்டிலும் நேர்மையானவன். அத்தகையவன் நினைப்பவர் உள்ள்ச்த்தில் உமையம்மையுடன் எழுந்தருளியிருப்பவன் ஆவான்.
2626. ஏழு உலகங்களில் உள்ளவர் ஒன்றாய்க் கூடி ஆராய்ந்தாலும் ஆராய முடியாத ஒப்பற்றவன் ஆன என் தலைவன் எழுந்தருளியிருக்கும் இடத்தை யார் அறிய வல்லார். சிவத்திடம் பத்தி கொண்டூ ஊர்த்துவ சகசிரதளம் விழிப்படைந்த குருவை அடைந்து அவரது உதவியைப் பெற்றவர்க்கே அல்லாமல் முத்தைப் போன்ற வெண்மையான ஒளியில் விளங்கும் அவளைக் (குண்டலினியை) காணலாம் எனக் கூறுவர் யவருமிலர்.
2327. கன்று தாயை நாடிக் கதறி அழைப்பதைப் போன்று நான் கன்றின் தன்மையில் இருந்து என் தாயான சிவத்தைப் பக்தியிப்னால் கதறி அழைத்தேன். வான் உலகு வாழ்பவர்களுக்கும் அப்பாற்பட்டு நிற்கும் மறைப் பொருள் ஊனில் கட்டப்பட்டிருக்கும் என்னை விரும்பி என் மனத்தில் எழுந்தருளியுள்ளான்.
2328. மலத்தால் கட்டப்பட்டிருக்கும் சீவர்கள் பிறக்கும் நியதியைக் கடவாதவர். ஆதலால் அவர்களாகச் செய்து கொள்ளும் பயிற்சி பலனை அளிக்காது. போகும் முதற் நிலையில் உள்ளவர் இவனைத் தவிர வேறு எதனையும் நினையாதவராதலால் அவர்களின் முயற்சியில்லாமலேயே வேண்டியவை எல்லாம் அவர்களுக்குப் பொருந்தும். தலைவனான சிவத்துக்கு மலக்கட்டு உடையவர்க்குப் பிறவிப் பிணிப்பும் மலம் அற்றவர்க்குக் காட்டும் அருட் பிணிப்பும் ஆகிய அருட் செயல்களால் இறைவனைப் ப்ற்றிக் கொண்டு விளங்குபவர்க்குச் செயல் ஏதும் இல்லை.
2329. உடல் கற்பமாகக் குண்டலினி சத்தி உடம்பில் விளங்கவும் நாத ஒலி கேட்கத் தலையின் உச்சியில் விளங்கும் ஒளி மண்டலத்தில் ஏறித் தேன் சிந்தும் சகசிரதள மலரைக் கொண்டு சிவபெருமானை வழி படுவதல்லாது பிற கடவுளைத் தெய்வம் என்று எண்ணி வழிபடுவதற்கு என் மனம் இடம் அளிக்காது.
2330. அடியார்க்கு எப்போதும் தக்க துணையான நந்தியும் தேவர்க்குத் தலைவனும் ஆகிய இறைவனைத் துணைவனாகப் பெற்றுக் கொண்டு பிறப்பை ஒழித்துக் கடைத்தேறுங்கள். அவனை நெருக்கமான துணைவனாய்க் கொண்டு அவனது திருவடியைச் சிந்தித்திருக்கத் துணைவனாய் ஒளி வடிவினனாய் நின்று அருளுவான்,.
2331. ஒளி மண்டலத்து வாழ்பவர்களான தேவர்களை அடக்கியிருகின்ற இருள் மண்டலத்தில் வாழ்பவர்களான அசுரர்களது முப்புரத்தை எரித்த தலைவனை நாதமயமானவன் என்றும் வீரிய கோசத்தில் விளங்குபவன் என்றும் ஊன் பொதிந்த உடலுள் விளங்குபவன் என்றும் அறிந்து ஞானியர் வழிபட்டனர்.
2332. குண்டலினி சத்தியை மூலாதாரத்தினின்று எழுப்பிச் சகசிர தளத்தில் சேர்க்கும் முறையை அறிந்து நிலைபெறுக. அல்லது அறியாது கேடு செய்க என்று கருவி கரணங்களைப் படைத்துக் கொடுத்தவன் சிவன். அப்பொருமானினை நாடி என் மனம் ஒளி பெற்று விளங்கும். சிரமான மலையிலும் நெற்றி நடுவான வானத்துள்ளும் விரிந்த சகசிரமான புறத்திலும் மூலாதாரமான உலையிலும் மன மண்டலம் என்ற உள்ளத்திலும் தியானித்து ஆழ்ந்து இருந்தேன்.
#####
ஓம்நமசிவய!
திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணியாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!
#####
ஞானி செயல்!
2610. தனமையை அளிக்காத ஐம்புலன்களின் தன்மையை ஆராய்ந்தால் தன்மையைத் தரும் தன் இயல்பை உணர்ந்த தத்துவ ஞானியர் முன் பிறப்பில் செய்த பழவினைகள் வந்து சேருமாயின் அவற்றை அனுபவித்துக் கழிப்பர். அதன் பின்பு இப்பிறவியில் செய்யும் வினைகளைக் கருதிச் செய்யாமல் அவற்றினின்ரும் நீங்க முயற்சி செய்பவர் ஆவார்.
2611. தன் உண்மையை உணர்ந்த ஞானியர் பழ வினையில் பந்தத்தைச் சிவ சிந்தனையால் விலக்கி விடுவார்கள். தலையின் மீது விளங்கும் சிவனின் திருவருளால் பின் வர இருக்கும் வினையயைத் தோற்றம் எடுக்காமலே அழித்து விடுவர்.
2611. சீவர்களின் மனம் மொழி செயல்களால் வலிய வினை வந்து சேரும். சீவர்களின் முக் கரணங்களும் உலகியலைப் பற்றாமல் சிவனைப் பற்றியதாகில் வலிய வினை வந்து பற்றும்படி இல்லை. சாதனையால் மனம் சொல் செயல் கெட்டு மௌனமாய் இருப்பவர் தன்னை வினை பற்றாமல் மாறி அமைத்துக் கொள்ளும் ஞானியாவர்.
#####
அவாவறுத்தல்!
2613. பிராணனையும் சுழுமுனையையும் பற்றிப் பேசியும் பேசுவதுடன் அவற்றை நெறிப்படுத்தும் முறையை அறிந்து மற்றவர்க்கு எடுத்துச் சொல்லும் ஒரு பயனையும் அடைய முடியாது. பொருளின் மீது செல்லும் ஆசையையும் மக்கள் மீது செல்லும் ஆசையையும் அகற்றுங்கள். அங்ஙனம் நீங்கியபின்பு இறைவன் இருக்கும் இடம் எளிதாய் உணரப்படும்.
2614. சிவபெருமான் வீட்டுச் சுவரின் மாடங்களில் இருப்பவன் அல்லன். தனியான் மண்டபத்தில் இருப்பவன் அல்லன். வீட்டுக் கூடங்களில் இருப்பவன் ஆவான். ஆலயங்களில் இருப்பவன் அல்லன். ஆனால் மனத்தில் ஆசையை விட்டவரின் மனத்தில் உள்ளிருந்தபடியே அவரை இயக்கி முத்தி அருளுபவன்.
2615. எவ்வகைப்பட்ட ஆசைகளையும் அறவே விட்டு விடுங்கள். இறைவனோடு கூட ஆசையை செலுத்தாமல் கைவிடுங்கள் ஆசை உண்டாக ஆசை உண்டாக அவற்றால் உயிர்க்குத் துன்பம் வரும். ஆசையை அறவே விட்டால் ஆனந்தம் உண்டாகும்.
2616. நுண்மையான பூதங்கள் சத்தம் பரிசம் ரூபம் இரசம் கந்தம் என்பன. அவை சீவர்களை உலகமுகமாய்த் தூண்டி துன்பப் படுத்துகின்றன. அவை உடனிருந்து தீய வழியில் செலுத்துவன ஆதலால் உண்டாகும் பற்றுகளை விட்டு அழித்து ஆசையை விட்டு உண்மையான் ஞானத்தை எட்டுவது சீவர்கள் தமது உண்மை நிலையை அறிமுகப் படுத்துவதாகும்.
2617. நிறைமதியில் பொங்கும் கடல்போல் அளவு இல்லாது அளவின்றிப் பொங்கி உலகை அழிக்கின்ற பல ஊழிகள் சென்றன. இன்ப துன்பமான கடலில் ஆழ்ந்து தேவர் முதலியவர் இறந்தனர். உலகத்தவர் ஆசைக கடலுள் பட்டுப் பிறவியை விடாதவர் ஆயினர். ஆனால் ஈசன் ஆனந்தக் கடலில் நிலையாய் நின்று அருளுகின்றான்.
2618. நெடுங்காலம் நீங்கமல் நின்று இருவினைகளையும் மூன்று மலங்களையும் அகற்றாமல் ஆன செயலும் பொருந்தும் இயக்கம் அற்றுத் தூயமை பெறுதலும் பின்பு படைப்பு முதலிய ஐந்து தொழில்களையும் நீக்கி அருள் மயமாக்கி ஆழ்ந்து நிற்கச் செய்தலே ஞானியரின் தூய்மையான நிலைகளாகும்.
2619. சீவன் தன் உண்மை வடிவம் ஒளி மயம் என்று உணர்ந்து நிற்கில் அறிவுடன் கூடிய சித்தியும் முத்தியும் உண்டாகும். பெண்மீது கொள்ளும் ஆசையை விட்டு நின்றால் எண்பெருஞ்சித்திகள் கிட்டும். உறுதியான சிவப் பற்றுடைய ஞானி தன் தேகத்தை நழுவ விடடால் சிவத்தின் அருள் நின்று பின் சிவத்தைச் சார்ந்துவிடுவர்.
2620. சீவன் சிவமாக ஆக வேண்டும் என்று இறைவனை அன்புடன் நாடி சிவனாகவே இவன் மாறிப் பதி நிலையை அடைகின்றான். என்ற உண்மையை உலகத்தவர் உணரமாட்டார். ஆயின் இச்சீவன் பலவகையான பிறவிகளை எடுத்துப் பல உலகங்களுக்குச் செல்வது உண்மையை உணராமல் பொய்ப் பொருளில் பற்றுக் கொண்டிருப்பதே ஆகும்.
2621. இவ்வுலகம் முழுவதும் துன்பம் தரும் பருவுடலில் விழுவதும் அது நீங்குமாறு செய்வதும் மீண்டும் பிற்வியில் சேர்ப்பதும் ஆகியவற்றைச் செய்யும் நான்முகன் முதலிய ஐவரை அறிவுடையோர் விரும்ப மாட்டார். வெறுப்பைச் செய்கின்ற பருவுடலில் நுண்ணுடலுக்குச் செல்லும் சுழுமுனை நாடியை அவர்கள் பொருந்தியிருப்பதால்.
2622. மேல் வரும் பிறவியை மாற்றி அமைக்கும் ஞானத்தை பெற்றுள்ளோம் என்பீர். அத்தகைய ஞானத்துகு அடிப்படை எது என்பதை அறிய மாட்டீர். மூலாதாரத்தில் வீரிய சத்தியாகக் கலந்துள்ள உருத்திர மூர்த்தியைச் சிந்தனையால் கீழ் உள்ள அக்கினியை மேலே எழும்படி செய்து ஒளிமயமாய்க் கண்டால் முன் நோக்கியுள்ள பிறவியைப் போக்குதற்கு மூலகாரணமாய்ப் பொருந்தும்.
#####
ஓம்நமசிவய!
முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!
#####
வாய்மை!
2595. அருள் உபதேசங்களால் மலம் நீங்கிய இயல்பைக் கூறின் அது தீயிலிட்டுக் குற்றத்தைப் போக்கிய பொன்னைப் போன்றது. மலம் நீங்குமாறு இறைவனை மாறுபாடின்றி உள்ளத்தில் வைத்துத் தியானித்தால் இருளை நீக்கிய செழுமையான சுடராகத் திகழும்.
2596. யாவற்றையும் அறியும் சிவமான பேர் அறிவுப் பொருளை விட்டுப் பிற உலகியல் பொருள் எல்லாவற்றையும் அறிவதால் பயன் ஒன்றும் இல்லை. அங்ஙனம் எல்லாவற்றையும் அறியும் பேரறிவுப் பொருளை நான் என்று பாவனைப் பயனால் உலகில் உணரில் எல்லாவற்றையும் அறியும் சிவமாக சீவன் விளங்குவான்.
2597. தலையில் பொருந்தியுள்ள மேருவின் மீது நின்று இடைவிடாது தியானம் செய்து அருள் சுரக்கும் பார்வதியம்மையை ஒரு பாகத்துக் கொண்ட இறைவனை யானும் ஊன் பொருந்திய உடல் இயல்பைக் கடந்து சந்திர கலையில் மறைத்து விளங்கும் பெருமானை கண்டு கொண்டேன்.
2598. நிராதாரத்தில் விளங்கும் சிவத்தை அறிந்து ஒன்றுபட்டவர் உலகினை நடத்திச் செல்லும் தன்மையுடையவர் ஆவர். அத்தகையோர் சிவதத்துவத்தை அருளும் மூர்த்தியும் ஆவர். அவர்களால் உலகில் மழைவளம் உள்ளதாகும் என்/று வேதங்கள் அறுதியிட்டுக் கூறுகின்றன. அவர் ஊனும் உருகும் உள்ளம் உடையவரிடம் நிலைபெற்று விளங்குவர்.
2599. சிவத்தின் திருவருள் உயிர்கட்குக் கிட்டிய காரணத்தை வினவில் பிரபஞ்ச போரில் மயக்கம் தெளிந்து சிவ ஞானத்தில் திளைக்கும் சிந்தை இறைவனை நாடி உலகியல் மயக்கத்தில் ஈடுபட்ட அச்சிந்தையை மாற்றி அரிய மெய்ப்பொருளான சிவத்தின் திருவடிகளைப் போற்றி வழிபடுவதாகும்.
2600. இறைவன் மெய்ப் பொருளுடன் கலந்திருப்பவரின் உடம்பிலும் உயிரிலும் பிரிவு இல்லாமல் நிற்பவன். உலகப் பற்று உள்ளவரிடம் போய் அடையாதவன். உய்யும் வகையறிந்து நாடுபவரிடன் பற்றுகளை அழிப்பவனாய் நின்று அவ்ர்தம் உடலிலும் உயிரிலும் பொருந்தி இன்பத்தை விளைவிப்பவனாகவும் உள்ளான்.
2601. இறைவன் மெய்ப் பொருளாம் சிவத்துடன் பிரிவின்றி நிற்பவரிடம் கலந்திருப்பவன். உலகப்பற்று உள்ளவரிடம் போய்ச் சேராதவன். இத்தகையவனைச் சுழுமுனை நாடியில் பொருந்தி மேல் எழும்போது சிவபெருமானை சுழுமுனையில் எண்ணியிருப்பவர்க்கே மனத்தில் பெற முடியும்.
2602. தலையில் பிராணன் மோதுதலை அடைந்து பகலிலும் இரவிலும் சிவத்தை உடம்பில் பொருந்தும்படி எண்ணியிருப்பின் அப்பெருமான் தலையின் மேல் சிறந்து விளங்குவான், பொய்யான உலக நோக்கில் செல்வதையும் புலன்வழிச் செல்வதையும் விட்டு நிற்கில் தலைவனும் முன் சொன்ன கபால வழியில் எதிர்ப்பட்டுத் தோன்றுவான்.
2603. பிராண வெற்றி பெருவதும் இறைவன் திருவருளைப் பொறுத்ததே ஆகும். ஆனால் இந்நெறி உத்தமமான நந்தியெம்பெருமான் சீவன் உய்யும் பொருட்டு அருளிச் செய்ததாகும். பொய்யானவற்றுக்கு விளை நிலமான ஒன்பது துவாரங்களையும் அடைத்து நின்றால் மெய்யான வான் புரவியைக் கொண்டு சிவப்பயணம் செய்யலாம்.
2604. சிவன் சுழுமுனை நாடியில் கலந்திருப்பவன். நினைப்பவர் உள்ளத்துள் விளங்குபவன். மனத்தோடு உடம்பிலும் பொருந்தியிருப்பவன். மூலாதாரத்தில் நிலைபெற்றவன். உலகப் பற்றை விடாதவரிடம் வெளிப்பட்டு அருளாதவன். மலம் அற்றவன். இவ்வியல்பு வாய்ந்த இறைவன் உடல் பற்றையும் உலகப் பற்றையும் விட்டவர்க்குத் தஞ்சம் அளிப்பவனாய் உள்ளான்.
2605. உண்மையான திருவடிகள் மனத்தில் பொருந்தும்படி வைக்கின்ற நந்தியைச் சுழுமுனையான தாழ்பாளை திறந்து கொண்டு அறிபவர் எவரும் இலர். பொய்யின் மூலம் வைக்கப்பட்ட உலகப் பற்றை நீ விட்டு அங்குச் சுழுமுனையைத் திறந்து கொண்டால் அதுவே கிடைத்தற்கரிய பேறாகும்.
2606. உய்வு பெற வேண்டுமானால் சீவர்களாகிய நீங்கள் உணர்வால் போற்றி வழிபடுங்கள். அப்போது மெய்யான அமைத்துக் கொடுத்த சன்மார்க்க நெறி விளையும். உறுதியுடன் பொய்யான உடலைக் கடந்து விளங்குபவரின் சகசிர தளத்தில் எம் தலைவன் அங்குச் சீவனுடன் வேறுபாடும் இல்லாது விளங்குவான்.
2607. நறுமணம் விளங்கும் சகசிரதளமான மலரில் சிவமான கனி ஒன்று உண்டு. அந்தக் கனி விஷய வாசனையான பறவைகள் கொத்தி தின்பதற்கு எட்டாததாகும். அந்த விஷய வாசனைகளான பறவைகளச் சீவசத்தியை மேல் நோக்கச் செய்கின்ற அம்பினால் எய்து அகலத் துரத்தினால் செம்பொன் ஒளியுடைய சிவகதியைப் போய் அடையலாகும்.
2608. மயக்கத்தை தருகின்ற ஐம்புல ஆசைகளை அறுத்துக் கலக்கத்தைப் போக்கிய சிவத்தை தொடருங்கள். வேறு இறைவன் உண்டு என்று மயங்காமல் சிவனே என் இறைவன் என்று எண்ணித் தொடரின் உய்ந்து போவாயாக என்று என் மலத்தை அவனுடன் சேர்த்துக் கொண்டான்.
2609. உள்ளத்தால் உலகத்தைப் பற்றாமல் சிவத்தைப் பற்றி எண்ணவல்லார்க்குச் சிவம் பதியும் மேலான நுண்ணுடல் இன்பமாய்ப் பொருந்தும் என்பர். உலகத்தைப் பற்றிய எண்ணம் இல்லாமல் தகுந்தபடி தியானம் செய்தால் ஞான பூமியில் தூய சிவாத்தின் அருள் உண்டாகும்.
#####
ஓம்நமசிவய!
அல்லல்போம், வல்வினைபோம், அன்னை வயிற்றில்
பிறந்த தொல்லை போம், போகாத் துயரம் போம்,
நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்!
#####
விசுவக் கிராசம்!
2587. வானில் தோன்றும் நிழல் வடிவம் வானிலேயே மறைவது போன்றும் ஓடும் நீரில் உண்டாகும் நீர்க்குமிழி அதிலேயே சிறிது நேரம் இருப்பது போல் இருந்து மறைந்து விடுவது போன்றும் உள்ள தன்மையைக் கண்டால் சுடர்விட்டு எழுகின்ற அக்கினியின் முன்னம் கர்ப்பூரத்தைப் போல் பருமையாகக் காணப்படும் இவ்வுடம்பு காணப்படாதாய் புறத்தில் கரைந்து ஒடுங்குவது புலனகும்..
2588. பருவுடன் ஒளிமயமான உயிரோடு பிரிவின்றி ஒன்று பட்டால் அப்போது அது பர நிலையை எய்திச் சிவசத்தியுடன் ஒன்று படும். உடலாகிய சிறை நீக்கப்பட்ட பின்பு உடலில் இருந்த உயிர் சிவம் எங்கும் விளங்குவது போன்று விளங்கிப் பரு பூதத்திலும் நுண்பூதத்திலும் கலந்து சிவப் பரப்பில் விளங்கும்.
2589. செவி, மெய், வாய், கண் மூக்கு ஆகிய அறிவு கருவிகளும் பக்குவப்படாத மனம் முதலிய உட்கருவிகள் புருடன் ஆகிய ஐந்தும் பொருந்தி நிலை பெறாமல் உலக முகமாக விரிந்தும் குவிந்தும் உள்ளமையால் உலகமான அசைவனவும் அசையாதனவும் தவிர்க்க முடியாதவை ஆகும்.
2590. முப்பத்தாறு தத்துவங்களையும் விட்டு விட்ட ஆன்மா பரனின் நிலையை அடைந்து எங்கும் பொருந்தும்படி பரந்ததாய் விளங்கும். சிவச் சார்பினால் எங்கும் நிறைந்த பொருளாய் விலங்கும் எங்கெங்கும் எது எதையும் செய்யும் குற்றம் கொண்டதாய் உலகத்தை அழிக்கவும் ஆக்கவும் வல்லதாகும். இத்தகைய சிவன்ருள் பெற்று யான் வாழ்பவன் ஆனேன்.
2591. தத்துவ ஆராய்ச்சியில் அளந்தறிந்து சிவப்பரப்பான அகண்ட அறிவு பொருந்தும் துரிய நிலையைப் பற்றி உள்ளம் நிலை பெறுவதனால் பரம் சகமுகமாய்ப்போய் உண்ட போகங்களை ஒழித்துத் தெளிந்த பரம் சிவத்தை பொருந்துகின்ற வகையினால் அணையின் நிலைபெற்று விளங்கும் சிதாகாய வடிவினன் ஆவான்.
2592. தீயிடை காய்ந்த இரும்பு தன் மீது படும் நீரை உள்ளே இழுத்துக் கொள்வதைப் போன்று என்னை உள்ளே கொண்டு மிக மேன்மையான பரமானது கீழ்முகமாக நோக்குவதை விட்டு வன்மையுடைய் மூன்று பாழ் வெளியையும் விழுங்கி விளங்கிய என் நந்தியெம்பெருமன் என் இதயத்தில் இருக்கின்றான்.
2593. யானை நோய உண்ட விளாம்பழம் போல் சீவனும் அதன்மேல் நிலையான பரமும் சிவன் முன் ஆகும். சீவன் துரிய நிலையில் அடையுமானால் சீவனின் இயல்பான தன்மை எல்லாம் சிவபெருமான் மாறும் வண்ணம் செய்து தன்வயப்படுத்திக் கொள்வான்.
2594. எல்லாத் தத்துவங்களுக்கும் முதலாகவும் முடிவாகவும் உள்ள பரனான சிவபெருமான் அவரவரின் மேலான பரம் என்ற நிலையில் பொருந்தியுள்ளான். அப்பொருமானிடம் நெருங்கியவ்ர்குப் பரத்தின் கீழான தத்துவங்களை உண்டு காண்பான். காட்சி பொருள் என்பனவற்றின் முடிவில் சிவபெருமான் வீற்றிருக்கும் உண்மையை நம்மால் அறிய முடியாது.
#####
ஓம்நமசிவய!
முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!
#####
தத்துவமசி வாக்கியம்!
2568. உயிர் சீவ துரியத்தில் பொருந்தித் தத்துவங்களை விட்ட நிலை தொம்பதம். அதன் மேலான பரதுரியத்தில் பரத்தொடு பொருந்திய நிலை தத்பதமாகும். இது சிவதுரியத்தில் பொருந்தியிருப்பது அசிபதமான உண்மை நிலையாகும். உயிர் இதில் எல்லாத் தத்துவங்களும் நீங்கித் தத்துவமசியால் பெறும் உண்மையான பேற்றை அடையும்.
2569. முப்பத்தாறு தத்துவங்களையும் நீங்கிய ஆன்மா பொருந்தும் தொம்பதம் தூய நிலையாகும். அஃது உபாசாந்த நிலையில் மேலுள்ள தற்பத நிலையை அடையும். பேற்றுக்குரிய சீவன் இந்த நிலையைக் கடந்து அசிபதமான சிவகதி இறுதியான தொந்தத்தசி தத்துவமசிப் பொருளாகும்.
2570. அவனே இவன் என்று தேவதத்தனிடத்துச் சொல்லப்பெறுவதான விட்டு விடாத இலக்கணை தொந்தத்தசி என்ற மூன்று பதங்களிலும் உண்மையான சாந்தம் பெற்ற சீவனுக்கும் ஆகும். அங்ஙனமாகிய சீவன் பரனாய்ச் சிவனாக ஆகும்.
2571. துவம் தத் அசி என்பதே தொந்தத்தசி ஆகும் அவை இரண்டும் இயைல்பு காரணமாகப் பொருந்தி ஒன்றேயாம். தவப்பயனான தத்துவமசி வேதாந்த மரபாகும். வேத முடிவாம் சித்தாந்தம் நீ சிவம் ஆகிறாய் என்பதே ஆகும்.
2572. சிவ துரியத்தில் அடங்கிய சொல்வதற்கு இயலாத சீவப்பாழை மேலான பரம் எனப் புகல்வர். அதன் உண்மை இய்ல்பை அறியாதவர் இது பர நிலை அன்று என்பததை உணர மாட்டாதார். பரத்துக்கு மேலான பரமாகிய சிவம் உதிக்கின்றது அஃது அரிய இடம் என்பதை யாரோ அறியவல்லார்.
2573. தொம்பதம் தற்பதம் அசிபதம் ஆகிய மூன்றும் பொருந்திய முத்துரியத்திற்கு மேல் சீவன் சிவத்தை விரும்பிவதில் உம்முடைய பதமான தொம்பதம் பக்குவம் ஆகும். அப்போது சீவன் பரனாக விளங்கிச் சிவம் ஆகும்.
2574. உயிருக்கு அமைந்த துரியத்தில் பொருந்தும் ஆனந்தத்தில் நாதத்தை தோன்றச் செய்த பிரணவ உப்தேசத்தை உண்மையான இதயத்தில் எண்ணியிருங்கள். இருந்தால் அந்த மெய்யுணர்வு பொருந்தியிருக்கும் போது சிவன் தோன்றுவான்.
2575. நனவு, கனவு, உறக்கம், பேர் உறக்கம், உயிர்படக்கம் என்ற ஐந்தையும் முன் வைத்து அதனின் பின்னமான மலத்தை வைத்து உயர்ந்து சென்றால்பின் தூய தான் சொல்லும் சிவகதியில் சத்தை ஆதியாகவுடைய உபசாந்தம் உண்டாகும். அங்கு மனத்தையும் சொல்லையும் கடந்து விளங்கும் மன்னனான சிவத்தை நாடுவாய்.
2576. இறைவனின் எல்லையைக் கடந்து வேறு ஒரு பொருள் இல்லை. ஆதலால் அஃது அகண்டமாய் என்றும் ஒரு தன்மையாய் உள்ளது. அது வாக்கு கடந்து குணம் குறி ஒன்றும் இல்லையாதலால் பெயர் இல்லாதது. அதற்கு ஒரு செயலும் இல்லை. ஆதலால் கருத்தாலும் நெருங்க முடியாதது. உலகத்துக் காட்சிக்கு வேண்டப்படும் காரணம் இல்லாமலே தன்னை விளக்கும் இயல்பு வாய்ந்தது.
2577. நீ அது ஆவாய் என்று குரு உபதேசப்படி அமைந்த பெருவாக்கியம் நாடிய அது நான் ஆனேன் என்று மாணவன் பாவிக்கின், பாசம் முதலியவை நீங்கும். நீங்கிச் சிறப்புடைய நந்தியின் அருளால் சேய்மையாய் எண்ணப்பட்ட சிவமாக ஆக்கும். அப்படியாகி அதுவாய் அழிவை அடையாத ஆனந்த வடிவாகும்.
2578. உயிர் பரமாகவும் உயர்வுடைய பர நிலையை அடைந்து சீவன் அறிவதற்கு அரிய சிவமான அந்தச் சிவன் மூன்று வேதங்களிலும் புகழ்ந்து பேசப்பட்ட பராபரனாகச் சீவர்களுக்கு உரியவாய் வரத்தினால் உணர்த்த முடியாத பிரணவ வடிவம் ஆகும்.
2579. பிரணவம் வாய் நாசி புருவ நடு உச்சி என்பனவற்றில் ஆகி நாசி முதல் உச்சி வரை விளங்கும். தாய் நாடியான சுழுமுனையில் விளங்கும் நாதம் முதலாகச் சகல நிலையில் விளங்கும் தத்துவங்களும் சீவன் நாடும் ஒளியாய் முன் சொன்ன ஐந்து இடங்களிலும் பாய்ந்து சிவகதி அடையும்.
2580. சுட்டி அறியும் அறிவும் அறியாமை ஆகிய இரண்டையும் அகற்றி அறிவு வடிவாய் எங்கும் நிறைந்து விளங்கும் சிவனை அவனை விட்டு நீங்காது எம் தலைவன் என்று விரும்பிப் போற்றும் குறியை அறியாதார் சிவனைத் தம்மிடம் பொருத்திக் கொள்ள அறியாதவர் ஆவர்.
2581. உலகியல் அறிவு வாய்க்கப் பெற்றவர் காண்பன சுக நிலையைத் தரும் அப்புத் தத்துவம் அக்கினித் தத்துவம் என்னும் இரண்டையுமாகும். ஆனால் தத்துவ ஞானியர் சுகத்தை தரும் அப்புத் தத்துவம் எங்ஙனம் உடலில் உள்ளது என்பதை அறிவர். எல்லாவற்றையும் அறியும் சிவன் அங்குக் கலந்திருந்து புலப்படுத்தினால் அல்லது சீவரின் சிற்றறிவால் பேர் அறிவுப் பொருளை அறிய இயலாது.
2582. நந்திய்ம் பெருமான் யாவற்றையும் சுட்டி அறியும் அறிவைக் கடந்து எல்லாவற்றையும் ஒரு சேர அறியும் ஆற்றல் உடையவன். சுட்டியறியும் கருவிகளை இழந்தபோது ஒன்றையும் அறிய மாட்டாத அஞ்ஞான நிலையில் உள்ளவன் ஆன்மா. நிராதாரத்தில் உள்ள சந்திர மண்டலம் விளங்கப் பெற்று அ?ஞ்ஞான இருளை விட்ட பெருமை பெற்ற உயிர் இறைவனுடன் ஒன்றாம் சிவநிலையில் அமையும். அவ்வளவில் அந்த உயிர் பரம் என்று பெயரை பெற்று விளங்கும்.
2583. சிவபெருமானின் திருவடியைத் தொழ வேண்டி அவனது திரு முன்பு நின்று தலையால் வணங்க அப்பெருமானும் என் முன்பு வெளிப்பட்டருளினான். என் அடியை முறையாய்த் தொழ வேண்டி நீ பழமையில் நான் அது ஆனேன் என்று நீ எண்ணியது எல்லாம் சிறப்பாக இப்போது அமைவதை நீ பார்ப்பாயாக என்று அருளினான். நெற்றிக் கண்ணையுடையவன். அவன் கருணை இருந்தவாறு என்னே.
2584. இறைவன் ஒளியே மேனியாக உடையவ்ன். இய்ல்பாகவே பாசங்களின்று நீங்கியவன். பிறப்பில்லாதவன். இத்தகையவனான அவன் என் மனத்தகத்தே வீற்றிருந்து என்னைத் தன் அடியவனாக்கிக் கொண்டான். பொன் ஒளி வண்ணமுடைய புகழ் உடைய பெருமான் என்னை நோக்கி நீ மலமற்று விளங்குவாய் என்று கூ”றி என் மலங்களை நீக்கியருள் செய்தான்.
2585. இறைவன் எனக்கு அருளிய பின்பு நான் எனது பாசக் கூட்டமான தத்துவங்களை விட்டேன். ஒண்மையான சோதியைக் கண்டேன். என் உள்ளமானது உடலை விட்டு வேறாக எங்கும் செல்லும் ஆற்றல் பெற்றதாய் ஆயிற்று. எனினும் பணிவுடன் அவனை மறவாதிருந்த என்னை அவன் நிலவுலகத்திலேயே மரணம் இல்லாமல் நீண்ட காலம் வாழ வைத்தான்.
2586. மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் உடலில் பொருந்திய ஞானேந்திரியங்க்ள ஐந்தும் அவற்றின் வழியாக அந்தக் கராணம் நான்கும் மற்றத் தத்துவங்களும் எல்லாவகைப்பட்ட உயிர் இனமும் இறைவனின் அருளால் இயங்குவன். ஆதலால் அவன் இவற்றை இயகுவதற்குரிய கையும் சொல்வதற்குரிய வாயும் இன்றி எங்கும் உடலாகவும் அறிவாகவும் நிறைந்த பூரணப் பொருள் என்பதுபட விள்க்குகிறான்.
#####
ஓம்நமசிவய!
யானை முகத்தான் பொருவிடையான்சேய் அழகார்
மான மணிவண்ணன் மாமருகன் மேனிமுகம்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்
உள்ளக் கருத்தின் உளன்!
#####
மோட்ச நிந்தை!
2558. வீடுபேறு உண்டு என்பதை இல்லை என்று மறுப்பவர்கள் நரகத்தை அடைவதை உலகவர் அறிவர். மேலும் அவர் வீடுதோறும் போய் இரப்பர். நாள்தோறும் உணவுக்காக அவர் குதிரைபோல் தாவிப் போய் அலையத் தொடங்குவர்.
2559. குருவானவர் காட்டிய நெறியில் நின்று இறைவனுடன் கூடமட்டார். இறைவனிடம் விருப்பம் இல்லாதவராய் நூல்களில் உள்ள நயத்தை அலங்காரமாகப் பேசிக் கொண்டிருப்பர் இறைவன் உயிர்களுக்குச் செய்யும் உதவியை எண்ணிப் பாடவும் மாட்டார். அவ்வாறு பாடிஆடுபவர் எய்தும் பேறு இப்படி ஆகாது.
2560. என் உள்ளத்திலிருந்து எண்ணமானது வெளியே செல்லும் உள்ளே தோன்றுவதுமாய் உள்ளது. அங்ஙனம் செல்லாது தடுத்து நிறுத்திச் செம்மையுற்ற சித்தத்தையே இறைவன் என எண்ணி மனம் அற்ற இடத்தில் உள்ளவனை என் தலைவன் என்று அழைத்தேன். எனது உயிர் அறிவு கெட்டு ஒழியும்படி இறைவனைப் பற்றி நின்றபோது இஃது என்ன என்று கேட்கின்றனன்.
2561. மேடான இடத்தில் தங்கியிராத நீரைப் போல உடம்புள் பொருந்தி நிற்காமல் ஓடும் உள்ளத்தில் அருளைச் சேர்த்து வைத்துக் கடலில் நில்லாமல் கடந்து செல்லும் மரக்கலம் கரை சேர்வதைப் போன்று பிறவிக் கடலில் நில்லாமல் உயிர்களைக் கரை சேர்ப்பதற்குத் தீ வண்ணனான சிவன் வெளிப்பட்டு நிற்பான்.
2562. தாமரைக் கொடியானது அந்நீர் நிலையைக் கடப்பவரைத் தடுப்பது போல் பரகதி இல்லை என்பவர் தடுப்பர். அன்னார் சிவத்தை அடைய வேண்டிய வழி வெளியே உள்ளது என்று திரிவர். அடைவதற்கான வழியைக் காட்டினாலும் அதைக்காணாத மூடர் ஆவார். அவர்கள் நன்னெறியை நாடாமல் தீய நெறியை நாடித் தேடுகின்றனர் என்னே அறியாமை.
2563. அஞ்ஞானத்தால் மூடப்படாத ஞானியர் சிவபெருமானைத் தம் சிந்தையுள் நாடிச் சிந்தித்திருப்பர். ஆனால் அஞ்ஞானியர் காட்டிலும் மலையிலும் மருத நிலத்திலும் ஊடுருவி நிற்கும் ஒப்பில்லாதவனை நினையாமல் கெடுகின்றனர்.
2564. செத்தபின்பு உயிர் பயணம் தொடங்குவது தெற்கு நோக்கி நரகத்துக்கும் வடக்கு நோக்கிச் சொர்க்கத்துக்கும் ஆம் ஆயின் அழியாத அமரத் தன்மை பெற்றவர் இலட்சியத்தை அடையாக் கிழக்கு நோக்கி நெற்றிக் கண்ணுக்கும் மேற்கு நோக்கிப் பிடரி கண்ணுக்கும் போவார். இந்த இரண்டுக்கும் இடையே நாவினுக்கு மேல் மந்திரப் பொருள் இருக்கின்?றது என்று நடுவில் உள்ள அக்கினிக் கலையை ஒளிபெறச் செய்து பொருந்தி விளங்குவர்.
2565. காம மயக்கம் ஏற்பட மங்கையர் பார்த்தாலும் அரிய தவம் செய்கின்ற ஞானியர் தம்மைப் பொருந்துமாறு சொன்ன வற்றை மனத்தில் வைத்துக் கொள்ளார். இஞ்ஞானியரைச் சினம் உண்டாகப் பேசிய தீவினையுடையவர் தமக்கு வல்வினைகள் பொருந்துமாறு தாங்கிக் கொண்டிருப்பர்.
#####
இலக்கணாத் திரயம்!
2566. விட்ட இலக்கணை ஆன்மா வானத்தில் செல்லும் என்பதாம். விடாத இலக்கணை ஆன்மா உபாசாந்தத்தில் அமைகிறது என்பதாம். விட்டும் விடாத இலக்கணை ஆன்மா சாந்தம் முதலியவற்றைக் கேட்டல் முதலியன செய்யும் என்பதாம். இவை மூன்றும் ஆன்மாவில் பொருந்தும் இலக்கணம். அவற்றில் உண்மை இலக்கணம் இம்மூன்று இலக்கணைக்கும் அப்பாற்பட்ட இலக்கணமாய்ச் பொருந்தும்.
2567. பிரணவ வில்லைக் கொண்டு புருவ நடுவையும் பிடரிக் கண்ணையும் சேர்க்கும் நாணின் விசையால் மேலே ந்ழும் அம்பு போன்ற சிவனைப் பிரமம் என்ற இலட்சியத்தில் செலுத்தத் தம்மைக் கொல்வதற்காக காத்திருக்கும் ஞானேந்திரியம் என்ற யானைகள் ஐந்தும் சீவன் கவிழ்ந்த சகசிரதளாத்தைக் கடந்தபோது விழுந்துவிட்டன. பிரணவமான வில்லில் இருந்து உயர்ந்து சென்றவர்க்குப் பிரகாசமான நவமணி ஒளி போன்று சிவம் வெளிப்பட்டு விளங்கும்.
#####
ஓம்நமசிவய!
ஏத்தி எனதுள்ளம் நிற்குமால் எப்பொழுதும்
மாத்தனி வெண்கோட்டு மதமுகத்துத் தூத்தழல் போல்
செக்கர் திருமேனிச் செம்பொற் கழலைங்கை
முக்கட் கடாயானை முன்!
#####
சுத்தா சுத்தம்!
2546. புருவ நடுவில் இருந்து பன்னிரண்டு விரற்கிடை உயரத்தில் உள்ள சகசிரதளத்தில் உயிரின் காரண சரீர விருப்பினனான இறைவன் உள்ளான் என்பதை யரும் அறியவில்லை. சிவத்தைப் பற்றிப் பேசி இருப்பது வேதம் எனினும் அவ்வியக்த வடிவத்தைப் பற்ரி அறுதியிட்டுச் சொல்ல முடியாததாய்ச் சுருக்கி கொண்டுள்ளது அதன் இயல்பாகும்.
2547. உயிர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் செய்பவனின் கருத்தையும் உரிமையையும் செய்வதையும் பொறுத்து அமைவதாய் விளங்குகின்றது. இவ்வாறு செய்வதால் பிறவிக்குக் காரணமான வினையாய் அமைவதை அறிந்து உரிமை கொண்டாடாமல் அகன்று அன்பால் செய்பவை உயிர்களுக்குரிய கன்மத்தை அழிப்பதாகும்.
2548. மயையான திரை சீவர்களை மறைக்க மறைந்துள்ள ஈசுவரன் அம்மாயையான திரை அகன்றபோது அப்பொருளான ஈசுவரன் வெளிப்படும். மாயை நீங்குமாறு அப்பொருளில் மறையவல்ல உத்தம அதிகாரிகளுக்கு உடம்பும் இல்லை மனமும் இல்லை.
2549. தியானத்தினால் புருவ நடுவை அடைந்து கபால வழியைத் திறந்து அதற்குள் புகுந்து கோழை வந்து அடைக்கும் இடத்தில் அண்ணல் ஒளி காட்டும் குறிப்பில் கீழே போகாமல் அடைத்து அங்கு உண்டாகும் அக்கினிக் கலையை ஒளிப்படுத்தும் முறையில் உள்ளம் தாழ்வான மாயை வழிச் செல்லாமல் நிறுத்துவதே தன் சாதனையால் உண்டாகும் பலமாகும்.
2550. உடம்பில் இருந்து கொண்டு நுண்ணிய உடலுடன் உறவு வைத்திருப்பவன் உடலில் அக்கினி கலை விளங்கும். சிவத்தை நாட்டில் போய்ப் புறத்தே வழிபாடு செய்யும் அவர் உடலில் சிவம் விளங்குவதை அறியாதவரே ஆவார்.
2551. அறிவற்றவர் மற்றவரைத் தீண்டுவதால் தீட்டு ஏற்படுகின்றது என்பர். தீட்டு எவ்விடத்தில் இருக்கின்றது என்பதை எவரும் அறியவில்லை. தீட்டு எங்கு உள்ளது என்பதை அறிந்தபின்பு மனித உடலே தீட்டாக உள்ளது என்பதை அறிவர்.
2552 தத்துவ ஞானத்தால் தம்மை உணர்ந்தவர்க்குத் தூய்மையின்மை என்பது இல்லை. எல்லாத் தத்துவங்களையும் அழிக்கும் அரனை வணங்குபவர்க்குத் தூய்மை இன்மை இல்லை. மூலாதாரத்தில் உள்ள கனலைத் தூண்டி ஒளிபெறச் செய்யும் அக்கினி காரியம் செய்பவர்க்கும் தூய்மை இன்மை இல்லை. மேலான் மறையை உணர்ந்த ஞானிக்குத் தூய்மை இன்மை என்பதே இல்லை.
2553. சிவத்தை வழிபட்டு வணங்குபவர்க்கு உச்சிக்குழிக்குமேல் இருக்கும் சகசிரதளம் சிறப்பாய் அமைந்து ஒளிபெருகி நிற்பதில் உள்ளத் தூய்மை தொடங்கும். குழுயில் விழுந்து விந்து நீக்கம் செய்பவர் ஆதார நிராதார யோகங்களால் உணர்த்தும் குறிகளைப் பொருந்தார். வீணாத்தண்டினைப் பொருந்தியுள்ள கீழ் நோக்கிய முகத்தை மேல் நோக்கிய முகமாக ஆக்கியவர்க்கு அன்றிச் சிவம் தோன்றாதாகும்.
2554. தூய பிடரியின் கண் உள்ள தூய அக்கினி தூய ஒளியுடன் விளங்கும். இத்தகைய இடத்தில் விளங்கும் அக்கினிக்கு ஆதாரம் எங்கே இருக்கின்றது என்பதை அறிபவர் இலர். இம்மணியில் விளங்கும் அக்கினியின் ஆதாரத்தை அறிபவர்க்குத் தூய்மையான பிடரிக் கண்ணில் விளங்கும் அக்கினி தூய்மையைச் செய்யும்.
2555. சொல்லப்பட்ட தூயமணியில் விளங்கும் சிவன் வைத்த தூய நெறி கரும் நிவாரணம் செய்யும் பொருட்டு அமைத்ததாகும். அத்தகைய மணியைச் செழிப்படையச் செய்ய இறைவன் திருநாமமான ஒளி தேவை. அம்மணி கருவிகளை ஓயச் செய்து எட்டுப் பெருஞ் சித்திகளை அளிக்கும் தூய மணி மேல் எழுத்தின் பீடமகும்..
2556. தலைவனான சிவபெருமான் விரும்பிப் பெறுகின்ற சிறந்த பொருளாகவும் புண்ணிய வடிவாகவும் இருப்பவன். அவனது அருளைப் பெறப் போற்றி நிற்கும் அடியவர் அல்லாதவர் சொர்க்கம் நரகம் புவி என்று சுழன்று வருகின்ற பிறவித் தளையில் மயங்கிய உள்ளம் உடையவராய்த் தூய்மையின்மை உடையவர் ஆவார்.
2557. மயக்கத்தில் உள்ள உயிர்கள் வினையான அசத்தான மாயை வலிவடைந்து அதன் பயனாக விளையும் துன்பச் சுழற்சியை அறியா. ஞானத்தை உணர்ந்து அதன் வழி நிற்பதில் கொடிய வினை நீங்குவதனையும் தெளிந்து அறியா. வினைகள் உயிர்களைப் பற்றாது நிற்பதில் முத்தி நிலை உள்ளது என்று வேதம் சொல்லும் உண்மையை அறியா. தீவினையில் பதிக்கப்பட்ட உயிர்கள் அதன் காரணத்தையும் அதனால் விளையும் பயனையும் அறியா.
#####
ஓம்நமசிவய!
களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன்
ஒளியானைப் பாரோர்க் குதவும் - அளியானைக்
கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்தாள்
நண்ணுவதும் நல்லார் கடன்!
#####
நவாவத்தை நவாபிமானி!
2537. சீவன் ஒன்பது நிலைகளில் உள்ளவனாகக் கூறப்பெறுவது உண்டு. சீவன் துவம்பத நிலையில் விசுவன், சைசதன், பிராஞ்ஞன், எனவும் நல்ல பதமாகிய தற்பத நிலையில் விராட்டன், இரணிய கருப்பன், அவ்யாகிர்தன் எனவும் பிற்பதமான அசிபத நிலையில் இதயன் பிரசாபத்தியன் சாந்தன் எனவும் அழைக்கப் பெறுவான்.
2538. சீவ பரத்துக்குரிய நனவு-சாக்கிரம் முதலிய நிலைகள் ஒன்பது வகைப்படுவதால் பிறவிக்குக் காரணமான் மலம் குணம் ஆகியவற்ரின் பற்றை அறுத்துப் பற்றுதற்கு அரிய தவத்தால் அடையும் மாறுதல் அற்ற அறிவு மயமான வானில் சீவ சிவ வேறுபாடு இல்லாமல் துரியம் பொருந்தினால் அதுவே சீவனின் நிலையாகும்.
2539. சீவன் சிவனையே நினைத்திருப்பதால் சீவனின் தனித்தன்மை கெட்டுப் பிறப்புக்குக் காரணமான ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்களும் போய் ஒழிய ஒன்பதாய்க் குறிப்பிட்ட வகையின் இறுதியில் நல்ல சிவஞானம் தவத்தினால் அடையும் பயன் கொண்டதாய்த் தான் என்பது இல்லாமல் சிவமாய் விளங்கும்..
2540. ஒன்பது நிலையில் பொருந்தும் தத்துவம் தன் சொல்லில் அமையாத வேறு ஒன்பது உள்ளன. இப்படி முன்னே சொன்னதும் பின்னால்(2545-ல்) கூறப்போவதுமான பதினெட்டு நிலைகளையும் ஒழித்துவிட்டு உயிர்களைத் தானாகச் செய்யும் சிவன் தனித்து சிறந்து விளங்கும்.
2541. விருப்பப்படுவனவான் பதினான்கு வித்தைகளும் உயர்ந்தவர் பொருட்டு உணர்த்தியவன் சிவபெருமான் என்றும் அவனது உண்மை நிலையை விரும்பி இரவும் பகலும் மனத்தில் எம்பெருமான் என்று உணர்ந்து நிற்பேன். இதனால் அவன் வலிய வினைகளுடன் மூலத்தையும் அழித்திட்டான்.
2542. நெடுங்காலமாக நன்மை அடையத் தொகுத்துச் சொன்னவை பல. அவற்றிற்குரிய தெய்வமும் பலவகை. அவ்வாறு கூடுதலால் பெறும் பயனும் பல. கூறப்படும் பகலிலும் இரவிலும் எண்ணி வழிபடுங்கள். அங்ஙனம் அங்கங்கு நின்று அருள் செய்யும் அருளாளன் சிவன்.
2543. ஆதியான சிவபெருமான், பராபரை, சோதியுடைய பரம், உயிர், நல்ல தத்துவங்கள், சொல்லப்படும் கலை, சுத்தமாயை, அசுத்தமாயை, என்ற இரண்டு நிகர் இல்லாத வீடு பேறு என்று எண்ணப்படும் ஒன்பது பேதமாக ஆதிசத்தி எனவும் நிற்பாள்.
2544. உயிர்கள் ஆராய்ச்சி அறிவால் அடையமுடியாத உண்மைப் பொருளை அனுபவத்தில் அடையுமாறு செய்து வேறாக நரகமும் சொர்க்கமும் உலகத்தில் பிறப்பும் உயிர்க்ளுக்கு அருள் காரண்மாக அமைந்து வைத்தான். இவ்வுண்மையை அறியாதவர் வினையால் பிறவியை அடையும் உயிராகவே விளங்குவர்.
2545. ஒன்பது வகையான் நிலைகளில் சீவன் விரும்பி அந்த ஒன்பது நிலைகளிலும் பொருந்தி நிற்கும். இந்த ஒன்பதைக் கடந்த சீவதுரியம் பரதுரியம் சிவதுரியங்களில் சிவத்தைப் பொருந்தச் செம்பொருளான சிவமாதல் சித்தாந்தத்தால் அடையும் பயன் ஆகும்
#####
ஓம்நமசிவய!
மொழியின் மறைமுதலே, முந்நயனத் தேறே
கழியவரும் பொருளே, கண்ணே - செழிய
கலாலயனே, எங்கள் கணபதியே, நின்னை
அலாலயனே, சூழாதென் அன்பு!
#####
அஷ்டதள கமல முக்குண அவத்தை!
2527. கவிழ்ந்த நிலையில் உள்ள சகசிர தளம் ஆன எட்டு இதழ் தாமரையில் கதிரவன், தோன்றும் கிழக்கு திசையில் இந்திரன் தென் கிழக்கு மூலையில் அக்கினி, தென் திசையில் இயமன், தென் மேற்குத் திசையில் துதிக்கின்ற நிருதி மேற்குத்திக்கில் வருணன் வடமேற்குத் திக்கில் வாயு, வடக்குத் திக்கில் குபேரன் வடகிழக்கு திக்கில் ஈசானன் ஆகியவர் எட்டுத் திக்கிலும் காவல் செய்யும்படி நியமிக்கப்பட்டுள்ளனர்.
2528. தலையைச் சூழ்ந்துள்ள சகசிரதளமான தாமரைஎட்டு இதழ்கஆளி உடையது பெருமை மிக்க இந்த மாய உடலினுள் உள்ளே சிறிய வீணாத் தண்டின் நடுவில் உள்ல சித்திரணி என்ற பெயர் உடைய சுழுமுனை நாடியில் சேர்ந்துள்ள பேரொளியை நில்னைத்து உய்யுமாறு மேல் எழுவீராக,
2529. கவிழ்ந்த நிலையில் உள்ள சகசிர தளமான தாமரையில் திங்கள் கதிரவன் அக்கினியாகிய கலைகள் மூன்று உள்ளன. அந்த மூன்றிலும் பேரொளியாய்ப் பாய்ந்து சகசிரதளத்தை விரியச் செய்து சுடர் ஒளியைப் பெருக்கி நின்றான். இறைவன். அங்ஙனம் எட்டு இதழ்களும் விரிவடைந்து வளர்ச்சி பெறத் திங்கள் கதிரவன் கலைகள் ஆகியவற்றில் பொருந்திக் காணும்போது சகசிரதளம் விரிவு அடைந்து மலர்வதில் உண்மைபோல் இருந்த உடல் கனவில் கண்டாற்போன்று இல்லையாகி விடும்.
2530. இந்த உடலில் ஆறு ஆதாரங்களின் வழியாகப் பாயும் உணர்வு என்னும் நீர் போய் அடையும் பிரமரந்திரம் என்ற குளம் ஒன்று உண்டு. இங்ஙனம் உள்ள ஆறு ஆதாரங்களையும் ஒருமுகப் படுத்துவதில் சிவகதி உள்ளது. இது மிகவும் நுண்மையான ஒளி நிலையாகும். இவற்றை ஒன்று படுத்துவதில் கூறப்பெற்ற குண்டலினியும் உள்ளத்தோடு அவற்றினும் வேறாகச் சிவமும் அங்கே உள்ளது.
2531. எட்டுத் திக்குகளும் எட்டுத் திக்குப் பாலகர்களும் அத்தேவதைகளின் ஊர்திகளும் எட்டு மூர்த்தமாய் நின்றவன் சிவன். அப்பொருமானைக் கன்மேந்திரியம் ஐந்து ஞானேந்திரியம் ஐந்து மனம் புத்தியுடன் பன்னிரண்டும் பொருந்தி நிற்கில் கவிழ்ந்துல்ள எட்டு இதழ்களையுடைய தாமரை உள்ளிருந்து வெளி முகமாய் மலர்ந்து திகழ்மும்.
2532. எட்டு இதழ்களையுடைய தாமரையில் கிழக்கு முதல் வடக்கு வரையுள்ள ஏழு திக்குகளும் சீவன் பொருந்தும் உருவ நிலைகள். பரம் என்ற நிலை எட்டாவதான ஈசான திக்கில் உள்ளது. நடுவாகிய ஒன்பதில் தத்துவங்களை முடிவு செய்யும் பரம் அபரமான சதாசிவம் இருக்கின்றது. மேல் நோக்கி நிமிர்வதில் பத்தாவதான நிலையில் ஆணவம் அற்ற ஆன்மா சிவத்துடன் பொருந்தியிருக்கும் சிறப்பான நிலையாகும்.
2533. உயிர்களின் நன்மைக்காகப் பல ஊழிகளைச் செய்யும் குனம் உடையவனே சிவக்கதிரவனும் இறைவனும் ஆவான். நன்மையைத்தரும் ஊழிகளான நிவிருத்தி முதலிய ஐந்து கலைகளில் செய்யும் சங்காரம் சீவனின் அண்டகோசத்தின் எல்லைக்குள் செய்யும் ஊழியாகும். அந்த உழியுள்ள உழியைக் கடந்த நிலையுள்ளும் இருப்பவன் சிவனே ஆவான்.
2534. பந்த பாசங்களால் சுற்றப்பட்ட உலகத்தில் எட்டுப் பெரிய வடிவாய்த் திகழும் சிவனை எட்டுத் திக்குகளிலும் திரியும் திக்கு யானைகளுடன் தேவர் கூட்டமும் தீயும் மழையும் இயங்குவதற்கு இடமான வெளியும் பரமாகாயத்தில் பற்றுக் கொண்டனவாகும்.
2535. ஒளி பெருகும் ஊற்றையுடைய தலையான மலையின் மீது ஆறு இல்லாது நிரம்பும். அரிய பிரம்மரந்திரம் என்ற குளம் ஒன்று இருக்கின்றது. அங்குச் சேறு இல்லாது அருள் வெளியில் ஆதாரங்கள் என்னும் கொடியில் மலர்ந்த சகசிரதளமான தாமரை இல்லாது ஒளிக்கற்றைகளை தலையில் சூடிய பெருமான் அணிந்து கொள்ள மாட்டான்.
2536. மனம் மொழி மெய்யாகிய முக்கரணங்களின் வயப்பட்டு நின்ற காலத்து நின்றாலும் இருந்தாலும் பலவிதமாய் உலக நிலையைப் பேசினாலும் ஐம்புலன்களை இருத்தி வேறுபாட்டைச் செய்யும் இறைவனை நாடுவர். நடக்கும் போதும் அமர்ந்திருக்கும் போதும் இறையுணர்வு உள்ளதால் சிவத்திருவை உடையவர் ஆவர்.
$$$$$
ஓம்நமசிவய!
பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்க உக்கியிட்டு
எள்ளளவும் சலியாத எம்மனத்தையும் உமக்காக்கித்
தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில் போற்றுகின்றேன்
உள்ளதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!
#####
புறங்கூறாமை!
2512. மதியில் உள்ள முயல் கறையை எய்ய மணி கட்டப்பட்ட வாளை எடுத்துச் செல்பவரைப்போல் திருநீலகண்டனை காண மாட்டாதவர் உபாசாந்த நிலையை அறிவோம் என்று சொல்லித் திரிவர். இவர் எல்லாம் வீண் ஆரவாரம் செய்பவரே அல்லாமல் உள்ளத்தில் அரியாதவரே ஆவார்.
2513. கரிய நிறமுடைய காலையுடைய பருந்து வான் வீதியில் செல்லக் கடுமையான தாள்கள் நிறைந்த குளத்தில் கரிய நிறம் உடைய பாம்பு அடங்கியிருத்தல் போல் மனமே நின் பெருமையை நினைக்காது அடங்கி இருப்பாயாக. மற்றும் நீர் அருந்த முடியாத அலை கடலில் ஆறு போய் ஒடுங்குவது போலவும் மனமே அடங்குவாயாக.
2514. ` பகைவர் இற்ந்து போகப் போர் முனையில் நிலைபெற்று போர் செய்வது அற்ப அறிவுடையவர் செய்யும் ஆண்மைத்திறம் ஆகும் உபாசாந்த நிலையில் பொருந்துதலை உடையவர் செய்யும் தவம் கை கூடினால் மக்கள் விரும்பிக் கேட்டவற்றை அளிக்கும் ஒப்பற்ற தேவர் ஆவார்.
2515. சிவத்தையன்றி மற்றத் தேவரிடம் பற்றுக் கொண்டு மாறுபட்ட கருத்தை அடையாதீர். எல்லா உலகங்களுக்கும் அவரே ஒப்பில்லாத தனிப் பெருங்கடவுள் என்று எண்ணி வழிபடில் பதினெண் கணத்தவரும் உம் அழகிய அடியைக்காண வணங்கி எழுவர். அங்ஙனம் இறைவனை நாடி இன்பம் அடையலாம்.
2516. என்னைவிட எனக்கு இனிமை தரும் இறைவன் பொன்னைவிட மிக்க ஒளியுடைய துயவனை விளங்கும் எல்லாவுயிர்க்கும் உயிராய் உள்ள விகிர்தனை பொருந்தும் வகையில் மனத்தைத் திருவடியில் பதித்து நினைப்பீராக.
2517. நிற்கும் போதும் அமர்ந்திருக்கும் போதும் படுத்துள்ள போதும் மலம் அற்ற சிவனைப் பொருந்தும் வகைகளை வாயால் கூறுவராகிலும் ஐம்புல ஆசைகளைக் கொடுத்து அவற்றை ஒவ்வொன்றாய் அறியும் குணத்தையும் போக்கி ஐம்புல அறிவையும் ஒரு சேரப் பெற்று விளங்கும் சிவத்துடன் உண்மையாகவே பொருந்தி ஐம்புல அறிவையும் ஒரு சேரப் பெறும் தன்மையை அறிவீராக.
2518. உயிர்களின் உணர்வுக்கு உணர்வாய் எல்லா உலகமாய் ஏழ் உலகத்தவரும் எண்ணத் தகுந்த அறிவாய் விளங்கும் என் பெருமானாய்த் தகுதியுடையவரை அறிபவனாய் உள்ள இறைவனைத் தியானத்தில் பொருந்தியிருக்கும் ஞானியரை விண்ணுலகத்தவர் உய்வு பெறுவதற்காக விரும்புகின்றனர்.
2519. விண்ணவராலும் அறியப்படாத பெருமானை காலை வேளையில் கண் மலரால் புறத்தே காணாமல் அகத்தே பார்வையைச் செலுத்தி கண்டு எண்ணத் தகுந்த தொடர்பாக மூன்று வேளைகளிலும் இச்சாதனையைச் செய்து வந்தால் மேலான பரனாம் தன்மையைப் பெறலாம்.
2520. சிவபெருமான் தன்னை ஒப்பவர் இல்லாமல் ஏழு உலகங்களிலும் பரந்து நிறைந்துள்ளவன் அப்பொருமானின் திருவடியை அடைக்கலமாய் அடைந்த பின்பு பேரருளை அளித்த பெருமைமிக்க வள்ளலும் ஆவான். மாறுபாடு இல்லாத மனத்தை உடையவரின் அறிவுக்குள் விளங்குபவன் வாடாத சகசிரதள மலரைப் பொருந்தி நிற்கும் புகழை உடையவன் ஆவான்.
2521. எம் தந்தையான சிவபெருமானின் திருவடியைப் போற்றி என்று வணங்கினேன். அவ்வழிபாட்டுக்கு வைத்தது எந்நாளும் வீசும் ஒளியே ஆகும். அது பிராணனால் அமையும் விளக்காகும். அதனால் உடலுக்கு இன்ப நிலை அருளும் நாதம் ஒலித்தது. அப்போது தேவன் விளங்கும் திருச்சபையைப் பார்த்தேன்.
2522. சகசிர தளத்தில் இறைவன் இருப்பதைக் கண்டேன். அவ்விதம் உடலில் விளங்கும் அவனை உட்புகுந்து காண்பவர் இலர். எலும்புக் கூண்டைத் தாங்கி நிற்கும் பிரமதண்டின் வழியாக உச்சித் தொளையை அடைந்தேன். அவனது கோலத்தைக் கண்ணை மூடிக் கண்டேன். அப்போதும் உலகப் பொருள்கள் யாவற்றையும் நான் கண்டேன்.
2523. சிவபெருமானைப் புகழ்வதால் அமையும் ஞானமும் சிவானந்த தேனும் இருக்கும் சகசிர தளத்தை அறிந்து உடலைக் கடந்து நினைவைப் பதித்தவர்க்கு வனத்தை உடலாக்கும் வீரனும் அங்கு விளங்குவான்.
2524. மாண்புமிக்க மதி மண்டலத்தில் நினைவு கொண்டு நின்ற பெருந்தவத்தினரின் அறிவுக்கும் அறிவு தருபவனாக விளங்கும் சிவன் பேரின்பத்தைத் தருபவனாய் உள்ளான். அத்தகைய சிவ அறிவில் தாம் அறிவு ஒன்றுபடுவதில் உபசாந்தம் அமைந்து ஆகின்ற மலம் நீங்கியவராய்த் திருவடியின் கீழ் அமைதி பெற்றவர்.
2525. பத மூர்த்திகளான சாலோகம் சாமீபம் சாரூபம் என்னும் மூன்றையும் குற்றம் உடையவை என்று நீக்கி இன்பத்தை அளிக்க வல்ல மாயா காரியமான இருளைவிட்டு ஆணவம் அற்று எனது யான் என்னும் புறப்பற்று அகப்பற்று என்பனவற்றை அறவே நீக்கி அங்குச் சிவத்துடன் ஒன்றாய் நிலைத்திருப்பவர் சிவ சித்தர் ஆவார்.
2526. சித்தர் அகண்ட பரந்த சிவத்தைக் கண்டவர். சிவ சிந்தனையில் நின்ற தூமாயை துவா மாயையில் தோய்ந்தாலும் தாமரை இலை நீர்மேல் பற்று இல்லாது விளங்குவர். இந்தச் சீவன்முத்தர் முன் கூறிய சாயுச்சிய நிலையை அடையும் தன்னம உடையவர். மூலாதாரத்தில் விளங்கும் குண்டலினி சத்தியை வசப்படுத்தியவர். இவர்கள் சதாசிவத் தன்மை வாய்ந்தவர் ஆவார்.
#####
More...
ஓம்நமசிவய!
உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி யுறுதியாகத்
தள்ளரிய அன்பென்னுந் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுக்ட்பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணையென்னும்
வெள்ள மதம்பொழிச் சித்தி வேழத்தை நினைந்து வருவினைகள் தீர்ப்பாம்.
#####
உபசாந்தம்!
2506. சிவஞானமே வீடுபேறு அடைவதற்கு வாயில். சிவனிடத்தில் தன் முனைப்பு இல்லாமல் அவனது திருவடியைப் பொருந்த்தியிருப்பதே பத்தி செய்வதற்கு வாயிலாகும். சிவத்தைப் பொருந்த்திச் சிவமாவதே எண்பெருஞ் சித்தி அடைவ்தற்கு வழியாகும். உயிர் வெறுப்பு இல்லாது அடங்கி இருப்பதே சத்தியை அடைவதற்கு உரிய வாயிலாகும்.
2507. காரிய உபாதி ஏழும் தூவா மயையில் இலய முறைப்படி ஒடுங்கும். காரண உபாதி ஏழும் பராகாயமான சிவத்தில் இலயம் அடையும். காரிய உபாதி காரண உபாதிகளின் வாசனை பற்று அற நீங்கினால் பெருமையுடைய உபசந்த நிலை பொருந்தும்.
2508. சிவ தத்துவத்தையும் கடந்து துரிய நிலையில் நிற்பது ஆன்மத் தூய்மையாகும். முற்படும் சாக்கிராதீத நிலையில் உடலில் பொருந்தும் பரம் வெளிப்பட்டு நிற்கும். அந்தப் பரம் தன்னில் உடனான சிவ வியாபகத்தில் நிற்பதே உபசாந்தம்.
2509. உயிர் முப்பத்தாறு தத்துவங்களின் சேர்க்கையால் ஆணவ மலத்தளையை நீக்கிக் கொள்ளுதல் கிடைத்தற்கரிய பேறான தன் இயல்பான வடிவத்தை அறிதல். தன் உண்மை அறிந்தபின் தத்துவங்களினின்று நீங்கித் தூய்மை அடைதல். அளவுபடுத்திச் சொல்ல முடியாத இன்ப நிலை பெறல். ஒளிக்கெல்லாம் ஒளியைத் தரும் சிவனிடம் அடங்கி இருத்தல் என்பவை தத்துவங்களின் மாறுபட்ட உபசாந்தம் ஆகும்…
2510. தனக்கு வாய்த்த உபசாந்தம் அமையப் போய்ப் பொருந்திய சிவமாய் ஆதலால் சிவானந்தத்தில் ஆழ்ந்து அந்த நினைவு நீங்குதலும் மௌன நிலையாகிய சுக அனுபவத்தோடு நின்று அதையும் நீங்குதல் என்பது உபசாந்தநிலை அமைவதற்கு வேண்டிய பத்துப் படிகள் ஆகும்.
2511. பரை ஒளியில் கலப்பைப் பெற்றுப் பரத்துடன் பிரிவு இல்லாமல் அலையற்ற ஆழமான கடல் நீரை ஒத்து நின்று குருவின் உபதேசத்தை உணர்ந்து சிவானந்தத்தை அனுபவிக்கும் ஆன்மா பேச்சு அற்ற பேரானந்தத்தை அடைந்து பிறவிக் கடல் நீங்கியவன் ஆவான்.
#####
ஓம்நமசிவய!
அகரமென அறிவாகி உலகம் எங்கும் அமர்ந்து அகர உகர மகரங்கள் தம்மால்
பகருமொரு முதலாகி வேறும் ஆகிப்பலவேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகாரில்பொருள் நான்கினையும் இடர்தீர்ந்தெய்தப் போற்றுநருக்கறக் கருணை புரிந்தல்லார்க்கு
நிகரில் மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும் நிருமலனைக் கணபதியை நினைத்து வாழ்வாம்!
#####
காரிய காரண உபாதி!
2501. துன்பத்தைத் தருவதற்கு இடமான மாயா காரிய வித்தியா தத்துவம் ஏழும் பொருந்தும் பர உபாதியான சுத்தவித்தை ஈசுவரன் சதாசிவன் விந்து நாதம் சத்தி சிவன் என்ற ஏழும் காரிய காரண நிலையினின்று நீங்கத் திருவைந்தெழுத்து அமையும். அங்ஙனம் நீங்க உயிரானது சிவமாகும்.
2502. இறை சிந்தனையால் ஆன்மாவைப் பற்றியுள்ள காரிய உபாதியான முப்பத்தாறு தத்துவங்களும் நீங்க தத்துவங்களுக்கு வேறான நின்மல நனவில் பொருந்தும் கனவிலும் நனவோடு முப்பத்தாறு தத்துவங்களும் நீங்கிய நிலையில்; உறக்கத்தை அடையாமல் அரிய இடமான துரியத்தே தங்கியிருக்கும் உயிரே தொம்பதம் ஆகும்.
2503. முப்பதமான் ஓம் என்னும் பிரணவத்தில் அகரம் உயிர் உகரம் அகந்தை இல்லாத பரம் மகரம் சிவமாய் விளங்கும். இனிச் சிவய என்பதில் உள்ள சிகாரம் சிவமாகும். வகரம் பரம் ஆகும். யகரத்தை உயிர் எனக் கூறலும் ஆகும்.
2504. உயிர்க்கு உயிராய் நீக்கம் இல்லாமல் நிறைந்து அழிவுற்றுச் சோர்வைத் தரும் காரண உபாதிகள் உயிர்களின் பக்குவ நிலையிலே உடனாய் நிற்கும். இறைவன் கருணையால் அன்றி நடுக்கத்தைச் செய்யும் ஆன்மாக்களின் ஆணவத்தை நீக்குவது இயலாது.
2505. காரிய உபாதி ஏழில் ஆணவ மலக் குற்றத்தினால் பசுத் தன்மை கொண்ட உயிர் மய்ங்கி நிற்கும். காரண உபாதியாகி ஏழில் உயிர் ஒளியை அறிவதில் மேலான சிவம் கலந்து நிற்கும். காரியமாகவும் காரணமாகவும் உள்ள இவை கற்பனையாகும். அசிபத பொருளை உணர்ந்து அனுபவிக்கும் போது அது நீங்கிய பாழில் மேலான பரன் உள்ளது.
#####
ஓம்நமசிவய!
வஞ்சகத்தில் ஒன்றானைத் துதிக்கை மிகத் திரண்டானை வணங்கார் உள்ளே
அஞ்சரண மூன்றானை மறை சொலுநால்வாயனை அத்தன் ஆகித்
துஞ்சவுணார்க் கஞ்சானைச் சென்னியனை யாறானைத் துகளெழானைச்
செஞ்சொல்மறைக் கெட்டானைப் பரங்கிரி வாழ் கற்பகத்தைச் சிந்தை செய்வோ
#####
முப்பாழ்!
2495. மாயையின் செயலால் வித்தியா தத்துவம் ஏழினையும் ஞான விசாரணையால் அவை பொய் என்று அறிய ஆன்ம சொரூபம் விளங்கும் உடல் பிரக்ஞையும் காரணமான சிவ நிலைகள் ஏழினையும் கண்டு நீங்க ஆன்ம அறிவும் காரிய காராணங்களாய் உள்ளவற்றைக் கண்டபோது உண்டான உபாசாந்தமும் அகலும் முப்பாழும் நீங்கப் பிறவி நீங்கும்.
2496. மாயாப்பாழும் சீவப்பாழும் உபாசாந்தப்பாழும் நிலைபெற்ற பர்னின் அறிவுக்கு அப்பாற்பட்ட முப்பாழ் என்னும்ப்டி சிவசத்தியான அருளில் சீவன் அடங்கி நிற்கும் மூன்று பாழ் நிலைகளாகும். அத்தகைய தூய்மையான சிவ சொரூபத்தில் அடங்கி நிற்பதே தத்துவமசி என்ற வாக்கியத்தின் முடிவாகும்.
2497. தனக்கு ஒப்பு இல்லாத பரவிந்து ம்ண்டலத்தில் விளங்கும் தலைவனான நந்தியின் திருவடியை அடைய அதுவே நெறி என்று மாயப்பாழ் போதப்பாழ் உபாசாந்தப்பாழ் என்னும் மூன்றையும் கடந்து அதற்கு மேல் அளவிட்டு அறிய முடியாத நிலையில் மயங்கி நின்றேன்.
2498. துரியம் கடந்து சொல்வதற்கு முடியாத பாழினை அடைவதற்கு முடியாத மேலாம் நிலை என்று அறிவற்றவர் உரைப்பர். ஆனால் அறிவுடையவர் அரிய மேலாம் பாழ் என்றே வணங்குவது அரிய முப்பாழும் கடந்த நிலை என்பதை யார் அறியவல்லார்.
2499. முப்பத்தாறு தத்துவங்களும் நீங்கத் திரோதானமான நகரமும் மலமாகிய மகாரமும் நீங்கி திருவருட் சத்தியான பரை என்னும் யகார்மாகிய ஆன்மாவை உண்மையான பரநிலையின் முடிவில் சிவவச்த்தியுடன் சேர்ப்பிக்கும். ஆராய்ந்தால் அது வல்லவர் உயிர்களால் அறிய இயலாத சிவயநம என்பதன் கருத்தாகும்.
2500. மன மண்டலமே உடல் என்றும் உடலே மன மண்டலம் என்றூ கூறும் தன்மை அறிந்து அவ்விரண்டுக்கும் உள்ள உண்மையான தொடர்பை உணரும் ஞானியர்க்குத் தம்மை கீழ்படுத்தும் பள்ளமும் இல்லை. மேலாகச் செய்யும் மேடும் இல்லை. காரியப்பாழ் காரணப்பாழ் உபாசாந்தப்பாழ் என்பவை இல்லை. உள்ளமும் இல்லை. அவரிடம் பிரகிருதி நாட்டமும் இல்லை. ஆதலால் அவர் உடல் அறம் கடந்து விளங்குவர்.
#####
ஓம்நமசிவய!
பண்ணியம், ஏந்தும் கரந்தனைக்காக்கிப் பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி அரதனக் கலச வியன்கரம் தந்தைதாய்காக்கி
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக் கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்ச் சகாயனை அகந்தழீஇக்களிப்பாம்.
#####
முக்கரணம்!
2485. தான் தங்குவதற்குரிய இடமான பருவுடல் நுண்ணுடல் காரணவுடல் என்ற மூன்றில் பொருந்திய ஆன்மா தனக்கு அந்த உடம்புகள் வேறானவை எனக் கூறும் தன்மையைப்போல சிவன் என்றும் பரம் என்றும் சீவன் என்றும் உள்ள வேறுபாட்டையும் ஒன்று என்று உணர முடியுமோ.
2486. ஒளியை உடைய கண் பார்வையைப் மேலும் ஒளியை பெறும்படி செய்து பிரணவத் தியானத்தால் மூலாதாரக் கனலை எழுப்பி சந்திரக்கலை, சூரியகலை ஒன்றாகுமாறு சுழுமுனையில் சேர்த்துத் தலைக்குமேல் உள்ள சகசிரதள வெளியில் பொருந்தித் தியானம் முதிரச் சிவபதம் பொருந்தும்.
2487. மனம் வாக்கு காயம் என்னும் முன்று கருவிகளின் சோர்வை நீங்கி அங்ஙனம் சோர்வு அடையாமல் எல்லாவற்றையும் ஒரு சேர அறியும் திறத்தைச் சிவபெருமான் தந்தான். உடம்பைப் பற்றிய சதாசத்தியான மனோன்மனி கவிழ்ந்த சகசிரதளத்தில் நின்றுவிட அதன்மேல் விரிந்த சகசிரதளத்தில் உன்மனி கலையில் சமாதி பொருந்தும்.
#####
முச்சூன்ய தொந்தத் தசி!
2488. அது என்ற தத்பதம் நீ என்ற தொம்பதம் அதுவாக ஆகிறாய் என்ற அசிபதம் என்ற மூன்றும் பழைய மூன்று பதங்களும் நின்மல் துரியத்தில் விளங்க அத்தோற்றத்தில் உயிர் பரன் சிவம் நிற்கும். இம்மூன்றில் சொல்லப்படும் பதமே தொந்தத் தசி யாகும்.
2489. தொந்தத்தசி என்னும் மூன்றில் பழைய கன்மமும் மாயையும் ஆணவமும், தொந்தத்தசி மூன்றில் பழைமையான தாமதம் இராசதம் சாத்துவிகம் என்பனவையும் ஆகிய மலமும் குணமும் கெடச் சிவன் தோன்றினால் முழுமதியின் முன்பு இருள் கெட்டு ஒளி உண்டாவதைப் போல் ஆன்மப் பேரொளி அமையும்.
2490. தொந்தத் தசி என்ற வாக்கியப் பொருளை வாசியில் பொருந்த்திக் காண அம்முறையில் யகரம் விளங்கும் படியாகச் செய்து முடிவற்ற நிலையை அவ்வாக்கியத்தில் மேலே?றும் முறையில் சிவன் முன் வைத்துத் தத்துவமசி என உச்சரிப்பாயாக.
2491. சிவத்தை முன்வைத்துத் திங்கள் மண்டலம் விளங்குமாறு செய்து பிரணவமான உபதேசத்தை உண்மையான இதயத் தானமான சகசிரதளத்தில் பொருந்தி நிற்பாயாக. அவ்வாறு நின்றால் உண்மையுணர்ந்து சிவனுக்கு அடிமை என்று ஆன்மா இன்ப மயமாய் விளங்கும்.
2492. மாயையில் தோன்றும் சீவனான தொம்பதமும் மேலான பரையிடத்து விளங்கும் பரமான பசுவும், விரும்பப்படும் சாந்தியில் பொருந்தும் ஆகிறாய் என்ற அசிபதமும் ஆன அந்த வாக்கியம் மேலான தொடராகும். அந்த உரையான நீ அதுவாகிறாய் என்பதில் வாசியான உணர்வு பொருந்தும்.
2493 .தேவதத்தனிடத்து ஆகிய காலம் இடம் முதலியவை விட்டால் அவனே இவன் என்பது போல் உடல் மாயை நீங்கிய நிலையில் நீ அது ஆகிறாய் என்பர். அப்போது உண்மை அறிவான உயிர் பரமாய்ச் சிவனாகும்.
2494. தாமதம் இராசதம் சாத்துவ்கம் என்னும் மூன்று குணங்களும் ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்று மலங்களும் அகர உகர மகர ஆகிய பிரணவத்தால் நீங்கும். சீவன் அகாரமாய்ப் பருவுடல் நுண்ணுடல் காரண உடல்களைக் கடந்து விளங்கும் துரியமும் தொந்தத் தசியால் ஆகும்.
#####
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.