gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

1-9.கர்ம-பயணம்!

Written by

கர்ம-பயணம்!  


எல்லாவகையிலும் உறுதியான ஓரு வீடு ஒர் காலத்திற்குப் பின் ஓர்நாள் இடிந்து விடும். கடந்த இரவு மீண்டும் திரும்புவதில்லை. வேறு இரவு வரும், ஆனால் அது கடந்த இரவாக இருக்காது, அமையாது. ஓடும் நதிகள் உற்பத்தியான இடத்தை சேர்வதேயில்லை. எங்கு புறப்பட்டாலும், எப்படிச் சென்றாலும் அது சேருமிடம் கடல்! நதியின்பயணம் வாழ்க்கை பயணத்திற்கு உதாரணமாகும்.

சூரியனின் வெப்பக் கதிர்கள் ஒருபுறம் பூமியின் ஜீவராசிகளின் இயக்கத்திற்கு உதவி புரிந்தாலும், இன்னொருபுறம் பூமியில் நீரை வற்றச் செய்வது போல, காலச்சக்கரம் புது ஆன்மாக்களை உருவாக்கினாலும், மனிதனின் ஆயுள் நாட்களை குறைத்துக் கொண்டிருக்கின்றது.
கடந்த காலத்தை பற்றியும், இறந்தவர்களைப் பற்றியும், இருப்பவர்கள் நினைத்தும், சிந்தித்தும் என்ன பயன்? எதிர் காலம் பற்றி நினை. உன் வாழ்வின் காலச்சக்கரம் பற்றி நினை. கடந்த இரவு, கடலில் சேர்ந்த நீர் இவை பற்றி சிந்தியாதே! எங்கு எதை நோக்கி பயணம் செய்கின்றாய்! அதன் பலனை அடைய முயற்சி செய். நீ முயற்சிக்காவிடினும் காலத்தின் முடிவு பதில் ஒன்றுதான்.
அதை அடைய உன் பயணம் சிறப்பாக இருக்க, பயணத்தில் உன் செயல் பாடுகளால் உன் கர்ம வினைகளின் கடினதன்மை குறைய என்ன வழி என்பதைப் பற்றி நினை. அந்த வழிகளைத் தெரிந்து கொண்டு அதன் படி நடக்க முயற்சி செய். முடிவு ஒன்றாகவே இருந்தாலும், தெரிந்திருந்தாலும் பயணம் சிரமமின்றி சிறப்பான பயணமாக வெற்றியடைய செயல்படு.!
சூரிய உதயம் கண்டால் இன்னொருநாள் குதூகலமாக இருக்கலாம் என்றும், சூரிய அஸ்தமனத்தில் இன்று ஒருநாள் போய்விட்டது, நாளைப் பார்க்கலாம் என்றும் கணக்குப் போட்டு நாட்களைத் தள்ளாதே! இருக்கும் நாட்கள் உனக்குடையது. காலம் பொன் போன்றது. உன் எதிர்கால செயல்களுக்கு உபயோகமாக மாற்ற நினைத்து செயல்படு. நீ இழந்த நாட்களும் நேரமும் திரும்பக் கிடைக்காது. இழந்தது இழந்ததுதான்.
ஒருவனின் கர்மம் முடிந்தபின் அவனைப்பற்றி நினைத்து வருத்தப்படாமல், நிகழ்காலத்தில் உன் கர்மவினையின் பாதிப்புகள் உன்னை அதிகமாக தாக்காமலிருக்க உன் எண்ணங்களைத் தீட்டு. அதற்காக செயல்படு. நீ இப்போது நின்று கொண்டிருக்கும் இடத்தை, சூழ்நிலைகளைத் தாண்டி உன் முன்னோர்கள், பாட்டனார், முப்பாட்டனார் என அனைவரும் சென்றவர்கள்தாம்.
28வது சதுர்யுக சுழற்சியில் கலியுகம்வரை அவர்கள் காட்டிய வழியில் எத்தனையோ உனக்கு பிடித்தமானது, உன் எதிர்காலத்திற்கு வழிகாட்டியாய் உள்ளது, அதைத் தேடு! கண்டுபிடி! வழிநட! அது உனக்கு நல்லது. உன் கர்ம வினைகளின் செயல் வேகத்தை தடுத்து ஓரளவாவது உனக்கு நன்மை கிடைக்க வழிவகுக்கும். வல்லவனாக ஆவாய்! சுதந்திர எண்ணங்களும், தேடுதல்களும் இல்லா மனிதனை அவன் வினைப்பயன் வழிநடத்தி அலைக்கழிக்கும்!
அதிலிருந்து தப்பிக்க உனக்கு ஓர் வழித்துணை, முன்னுதாரணம், வெளிச்சம், ஒளிவட்டம் வேண்டும். அதைக் கண்டுபிடி! தேடு! தேடிக்கொண்டேயிரு அதைக் கண்டுபிடிக்கும் வரை.. முயற்சியுடையார் இகழ்ச்சியடையார், வெற்றிபெறுவர். இது என் செயல். இது என் கர்மம். எவ்வளவு துயரங்கள் நேரிடினும் பின்வாங்கமாட்டேன். வெற்றியை அடையப்போகிறேனா! தோல்வி காணப்போகிறேனா! எனக்குத் தெரியாது. எதைப் பற்றியும் கவலையில்லை. இதுதான் சரி, இதுதான் என் கர்மம், இது என் கடமை, இது என் செயல்பாடு, என்று நியதிகள் வகுத்துக் கொள்ளுங்கள்.
அந்தப் பாதையில், சீரிய வழி என நீங்கள் நினைத்த வழியில் செல்லுங்கள். செயல் உங்களுடையது. முடிவை கர்மத்திடம் விட்டுவிடுங்கள். இது தான் கீதையில் சொல்லப் படுகின்றது. செயலை செய், பலனை கர்மத்திடம் விட்டுவிடு. எல்லாவற்றிற்கும் முடிவு உண்டு. செய்வது என தீர்மானித்து விட்டால், அதை செய்துவிடு. யாருக்கு, எதற்கு, ஏன் என்றெல்லாம் சிந்திக்காதே! அதேசமயம் எப்படிப் பட்டவனுக்கு செய்கிறாய் என்று கவனிக்கவும். அதாவது உன் உதவி உண்மையாக வேண்டுபவனுக்கு, தேவைப் படுகிறவனுக்கு செய்யப்பட வேண்டும்.
அவன் நன்றியுள்ளவனா? இல்லையா! என்பது பற்றி எல்லாம் நீ கவலைபட வேண்டாம். உன் கர்மத்தின் பலனால் ஒருவனுக்கு நல்லது செய்யவேண்டிய நிலை ஏற்பட்டால் அதை யாருக்கு வேண்டுமானாலும் செய். அவன் நல்லவனா! கெட்டவனா! என யோசனை செய்யாதே!
நீ செய்யும் நன்மை ஓர் நிலையில் ஒரு காலத்தில் உனக்கு மிகுந்த பலனோடு உன்னை வந்தடையும். அல்லது அது உன் சந்ததிக்கு பயனாகும். அதேபோல் அவர்கள் செய்யும் தீமைகள் அவர்களுக்கு கர்மபலனாக சேர்ந்துவிடும். எப்போது எப்படி என்பதுதான் உனக்குப் புரியாது. தெரியாது. தெரியவேண்டிய அவசியமும் இல்லை.
அடுத்தவர் துன்பப்பட்டு, துயரப்படுவதால் உன் கர்மம் தீர்ந்து விடுமா? இல்லை குறைந்து விடுமா? உன் கர்மபலனால் நீ செய்த நன்மைகளின் கர்மம் உன்னை வந்து சேர்ந்தால் அதனால் ஏற்படும் நன்மைகள் போதும்.
உன் கர்ம யோகங்கள் உன்னோடு முடிந்தால் பரவாயில்லை. உன்னால் அனுபவிக்க முடியாத கர்ம பலன்கள் உன் சந்ததிகளை அடையும். குறைந்த பட்சமாக ஏழு தலைமுறை சந்ததிகள் இந்த சாதக பாதக பலன்களை அவரவர் கர்ம வினைளோடு சேர்ந்து அனுபவிப்பர். இதை உணர்ந்து உன் கர்மபலனின் செயல்பாடுகளை நீ வகுத்துக்கொள். உன் பாதக கர்மபலன்கள் உன் சந்ததிக்கு சென்று சேராமல் பார்த்து செயல்படு.
செய்ய முடிந்த ஒன்றை செய்ய விரும்பாதவன் சமூகத்துரோகி. செய்ய விரும்பியும் செய்ய முடியாதவர்கள் பரிதாபத்திற்கு உறியவர்கள். இப்படி முடியாதவனாகவும், விரும்பாதவனாகவும் இருந்து உனது கர்மத்தை மேலும் மேலும் அதிகப்படுத்திக் கொள்ளாதே! இவ்வாறு விரும்பாததாலும், முடியாததாலும் நடக்கும் நிகழ்வுகளின் கர்மங்கள் பலருக்கு பலவகையான பலன்களை ஏற்படுத்தும்.
எனவேதான் முன்னோர்கள் நீ எவ்வளவு பெரிய செயலை செய்ய நினைத்தேன் முடியவில்லை என வருத்தப்பட வேண்டாம். எவ்வளவு செய்ய முடியுமோ, அவ்வளவு செய். அதுவே உன் கர்மம் என்றனர். வள்ளுவர் “அறஞ்செய விரும்பு” என்றுதான் கூறியுள்ளார். விருப்பத்துடன் ஓர் செயலைச் செய்ய வேண்டும். அப்போதுதான் அந்த கர்மத்தின் நல்ல பலன்களை நீ அடைய முடியும்.
விரும்புவது என்றால் நல்ல செயலை என்று அர்த்தம் கொள்ள வேண்டும். அடைவது என்றால் தான் அதில் ஆசை, மோகம் எல்லாம் நிரம்பிய கர்மமாகிவிடும். ஆகவே கர்மம் செய்ய விரும்பு! அதை அடைய நினைக்காதே! செயலின் விளைவு நன்மை மட்டும்தான் பயக்கும் என எதிர்பார்த்து செயல் படாதே! இல்லாத ஒன்றை செய்யவில்லை, முடியவில்லை என்றால் பரவாயில்லை. உங்கள் பயணத்தில் உங்களால் முடியக் கூடிய ஒன்றை செய்யாமல் விட்டு விடாதீர்கள். அது துயரமான மிகமிக துயரமான ஒன்று!
அடுக்கு மாடி வீட்டின் கீழ்த் தளத்தில் நீச்சல் குளம். மொட்டை மாடியிலிருந்து அந்த பகுதியின் வனப்பை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, கீழே இருந்து ஒருவர், அப்புசாமி உன் மகன் நீச்சல் குளத்தில் விழுந்து விட்டான் என்ற அலறும் சப்தம் கேட்ட உடன் ஏதும் சிந்தியாமல் கீழே குளத்தை நோக்கி குதித்தான்.
சில மாடிகள் கடந்தபின் கீழே விழுபவன், திடிரென்று சிந்தனை வயப்பட்டான். நமக்குத்தான் மகனே கிடையாதே, நாம் ஏன் கீழே குதித்தோம் என நினைத்தவனுக்கு, உதயமானது திருமணமே தனக்கு ஆகவில்லை என்ற நினைவு. அதன்பின் சப்தம் போட்டவன் அப்புசாமி என்றுதானே சப்தம் போட்டான். நம் பெயர் அப்புசாமி இல்லையே, பின் ஏன் நான் குதித்தேன் என நினைக்கும்போது திடிரென்று கண்விழித்துப் பார்த்தான்.
அது கனவானதால் அவன் நீச்சல் குளத்தில் இல்லை. தன் படுக்கையில் இருப்பதை உணர்ந்தான். இன்னும் சிறிது நேரம் கழித்து விழித்திருந்தால் குளத்தில் விழுந்திருப்பான். அதற்கு முன் அவனுக்கு விழிப்பு ஏற்பட்டது. தான் அப்புசாமி இல்லை என்பதும் தான் யார் என்பதும் புரிந்தது.
விடியல் காலையில் பலருக்கு விழிப்பு வருகின்றது. விழிப்பு இன்றி பலர் வாழ்வு பயணங்களை முடித்துக் கொள்கின்றனர். உலகில் விடியும் நேரமே விழிப்பு மிக்கதாகும். உண்மையைப் பொறுத்தவரையில் நீங்கள் விழித்துக் கொண்டு நீங்கள் யார் என புரிந்து கொள்ளும் நேரமே விடியல்.
சூரியன் பிரகாசித்தால் அது பகல். சந்திரன் குளிர்ந்தால் அது இரவு. சூரியன் கோலோச்சும் பகல் காலத்தில் சந்திரன் அமைதியாய் இருந்தும், சந்திரன் கோலோச்சும் காலத்தில் சூரியன் அமைதி காத்தும், ஒன்றுக்கொன்று விட்டுக் கொடுத்தும், உலகின் இயக்கத்திற்கு இரண்டும் தமது கடமைகளைச் சரிவர செய்கின்றது.
வாழ்க்கைப் பயணம் இதைப்போன்றதே. ஆண்கள் சூரியனாக ஒளிர்ந்து, பெண்கள் சந்திரன் போல குளிர்ந்து மனம் ஒன்றி பயணித்தால் இரவு, பகல் கழிவது போன்று வாழ்க்கையின் நாட்கள் இனிதாக கழியும். ஒரு கண் பார்வைவிட இருகண்களால் நோக்கின் அகன்ற பார்வை படலம் தோன்றும். அது இயற்கையின் நிறைந்த பார்வை. எல்லாம் அங்கு தெரியும், புரியும். கர்ம காரணமாய் இனைந்த ஆணும், பெண்ணும் இரு கண்களாக செயல்பட்டு ஒருவர்மீது ஒருவர் அன்பின் மேலீட்டால் ஆத்ம நண்பர்களாய் செயல் பட்டு வாழ்வில் வெற்றியுடன் முன்மாதிரியாய் திகழமுடியும்.
ஜீவாதாராம்: உலகில் படைக்கப்படும் உணவுப் பொருட்கள் பன்னோக்கில் படைக்கப்படுகின்றது. நீ விரும்பினால் அதை சுவைத்து உண்ணலாம். யாரும் விரும்பாவிடில்கூட அந்த பொருள் பல ஜீவராசிகளின் பசியைத் தீர்க்கும் உணவாகிறது.
உற்பத்தியாகி காய்க்கும்போது ஓர் சுவை, கனியாயிருக்கும் போது ஓர் சுவை. சுவை கண்டவர் சுவைக்காவிட்டாலும் காலத்தின் கனிவால் கனி கனிந்து பருவம் கடந்து அழுகியநிலை ஏற்பட்டாலும் அதுவும் பல உயிர்களுக்கு உணவாகி தான் தேன்றிய காரண கர்மத்தை பூர்த்தி செய்கின்றது. ஒரு உயிருக்கு அழுகிய ஒன்று மற்றொன்றுக்கு ஜீவாதாரம். இதுவும் இயற்கையின் நியதி.
இயற்கையின் சத்தையும் சாரத்தையும் நாம் இருக்கும்வரை உறிஞ்சியுள்ளோம். அதனால் நம் ஆன்மா உடலைவிட்டு அகன்றபின் அந்த உடல் இயற்கைக்கு இறையாகி கரைகின்ற நியதியும் சரியே.
கடமை: மனித ஆன்மாவே! உலகம் ஓர் சக்கரம். விருப்பு வெறுப்பு இல்லாதது. ஆனால் எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. சமம் என்ற நிலையை எல்லோருக்கும் எப்போதும் வழங்கிக் கொண்டிருப்பது. வெய்யிலின் வெப்பமும், நிலவின் குளிர்ச்சியும் மழையின் ஈரத்தையும், தென்றலையும் எல்லோருக்கும் பொதுவாக வழங்க சுற்றிச் சுற்றி சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டிருக்கின்றது. அது அதன் கடமை.
என்ன நடந்தாலும், இறந்தாலும், பிறந்தாலும், அழிந்தாலும் ஒரு மாற்றமும் இன்றி இயங்கிக் கொண்டிருக்கின்றது. இவைகளை கண்ட மனித மனம்தான் பேதலித்து தவிக்கின்றது. இகழ்ந்தாலும், புகழ்ந்தாலும் ஒன்றே! மனம்தான் ஏற்றதாழ்வுகளை சந்தித்து சஞ்சலம், சந்தோஷம் என மாறுபாட்டை காண்கின்றது.
வெள்ளநீரில் எப்படி எல்லாம் அடித்து செல்லப் படுகின்றதோ, அக்னியில் எரிந்து சாம்பலாகின்றதோ அதுபோல எல்லாமும் கால ஓட்டத்தில் முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பவையே. இடையில் அவரவர் கர்மவினைக்கேட்ப நல்லது கெட்டது நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
நமது பந்தம்- நமது குழந்தை, நம் செல்வம், நம் புகழ் இன்னபிற எல்லாம் இருந்து ஓர் நாள் என்ன ஆயிற்று! என்ன ஆகும்! என என்னிப்பார் மனமே! எதுவும் நிலையில்லாதது என்பது புரியும். இயற்கையின் சுழற்சியில் வேறு இடம் தேடும், நாடும். நம் புலன்களுக்கு எட்டாத நிலையில் இருக்கும், இதில் நாம் ஒன்றின் மீது பாசம், பந்தம் வைத்து, நமது நினைவுகளை அதிகமாக அதனுடன் சேர்த்து இருத்திக் கொண்டால் நமது உடல், மனம் அதனுடன் ஒன்றிவிடுகின்றது.
ஏதாவது ஓர் நிலையில் பந்தபாசம் குறையும்போதும், மாறுபடும்போதும் நம் மனம் நாம் செலுத்திய பந்தபாசத்தின் விளைவாக மாறுதலை ஏற்றுக்கொள்ள மறுத்து மயங்குகின்றது. அதன் காரணமாக தன்னையே வருத்திக் கொள்கின்றது. மாறுதல்களை புரிந்து கொள்ளல் வேண்டும்.
ஒருவர் கைபிடித்து நடந்த நீ, ஓர்நாள் தனியாய் நடக்கின்றாய்! தனியாய் நடக்கும் நீ வேறொருவர் கைபிடித்து அழைத்து செல்கின்றாய்! ஆனல் மீண்டும் உன்னை ஒருவர் கைத்தாங்கலாக அழைத்து செல்லும் நிலை உருவாகின்றது. இது காலத்தின் சூழ்ச்சி! கட்டாய மற்றங்கள்! இது இயற்கையின் நியதி! புரிந்து கொள்வீர்! அந்தந்த காலத்திற்கேற்ப உங்கள் கடமைதனை செய்யுங்கள்! பலனை எதிர்பாராதீர்கள்!
செடிகள், மரங்கள் நடுகின்றோம். இதில் எத்தனை நட்டவர்களுக்கு பயன் தருகின்றது. வாரிசுகளுக்கு, உறவினர்களுக்கு என்ன பயன் தருகின்றது. நாம் நட்டு வளர்த்த மரங்களைவிட தாமாக வளர்ந்த மரங்கள், வனங்கள் எண்ணிக்கையும் வனப்பும் அதிகம். இயற்கையே அமுதசுரபி. அள்ள அள்ள அருள்கின்றது. தோண்டதோண்ட துலங்குகின்றது. வாரவார வழங்குகின்றது. ஓர் சூழலில் முற்றிலும் சம்பந்தப்படாத வேறு நபர்கள் அதை ருசித்து பலன்களை அனுபவிக்கின்றனர். இது நியதி. சிந்தனை கொள்ளுங்கள்.
பறவைகளைப் பார். அவை தமக்கு வேண்டும் என விதைப்பதில்லை, அறுப்பதுமில்லை, சேர்த்துவைப்பதுமில்லை. நீ எதுவும் கொண்டுவரவில்லை. கொண்டு செல்வதும் இல்லை. இடைப்பட்ட காலத்தில் நீ செயல்படுவது உன் கர்மத்தின் பலன்படி. உனக்கோ, உன்னைச் சார்ந்தவர்களுக்கோ பயன் படலாம். வேறு ஒருவருக்கும் பயன் படலாம். இது உன் முடிவில் செயலில் இல்லை. உனக்கு விதிக்கப்பட்டிருக்கும் நியதியின் முடிவில் இருக்கின்றது.
ஆகவே இந்த நிகழ்காலத்தில் நீங்கள் சந்தோஷமாக இருக்க, உங்கள் செயல்களால், உங்கள் உறவினர், சொந்தங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற எண்ணங்கள் மட்டுமின்றி, இது எனது கடமை, இதை நான் செய்தாக வேண்டும், பலன் யாருக்கு என்பது என் கவலையில்லை, ஆகவே இதை கட்டாயம் செய்ய வேண்டும் என்ற உறுதியுடன் செயல்படுங்கள்.
உங்கள் கர்மவினைகள் உங்கள் செயல்பாட்டை நிர்ணயத்தாலும் உங்கள் அன்பும், நல்ல எண்ணங்களுடைய செயல்களும், உங்கள் வினைகளின் போக்கை, தீவிரத்தை சிறிதளவாவது குறைத்து மாற்றி செயல் படவைக்கும் தன்மை உடையவை. அது ஓர் சக்தியலை.
உங்களுக்குத் தோன்றும் நல்ல செயல் எண்ணங்களை பிரதியுபகாரம் கருதாமல், யாருக்கு என எண்ணாமல், கடமை உணர்வுடன் செயல்படுத்துங்கள். இவ்வுலகில் உள்ள எல்லாம், உனக்குத் தரப்பட்ட எல்லாம் உன்னுடையது அல்ல! வாழ்க்கைப் பயணத்தில் நீ சந்தோஷத்தைக்காண உன் உபயோகத்திற்கு கொடுக்கப்பட்ட ஒன்று. வாழ்வின் முடிவில் அதை உன்னுடன் சேர்த்து எடுத்து செல்ல முடியாது.
இத்தனை நாட்கள் பயன் படுத்திருந்தாலும், இனைபிரியாமல் இருந்திருந்தாலும் உயிர் உள்ள, உயிர் இல்லா எல்லாவற்றையும் விட்டுத்தான் சென்றாக வேண்டும். உன் பயணத்தின் இடையில் கிடைத்த அதை நீ முழுமையாக அன்பு காட்டி ஆனந்தப்பட்டு, சந்தோஷிக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று.
ஆனும், பெண்ணும் இந்த நியதிக்கு உட்பட்டவர்கள். உலகில் மரம், செடி, கொடி, ஊர்வன, பறப்பன, விலங்குகள் என பல உயிரினங்கள் இருந்தாலும் அவற்றிலும் எல்லாவற்றையும் நீ பயன் படுத்த முடியாது. விலக்கிவைக்க வேண்டியதும் உண்டு. நாற்றமும், நறுமணமும், கலந்தது. விஷத்தன்மை கொண்டதும் உண்டு. படைப்பில் எல்லாம் உண்டு என்பதை நீ புரிந்துணர்தல் வேண்டும்.
மலர்கள் மலர்ந்து மணம் வீசும்போது ஆனந்திக்கும் நாம், துர்நாற்றத்தை சுவாசித்து முகம் சுழித்தல் இயல்பு. அதைப்போல் வாழ்வில் நல்லவைகளைப் பற்றிக்கொண்டு முட்கள், விஷம் போன்றவற்றை விலக்கிப் பழகிக் கொள்ளவேண்டும்.
உலகில் எல்லாம் நீக்கமற நிறைந்திருந்தாலும் அன்பே ஜீவன். ஜீவதாரம்! என்பதை புரிந்து கொள். மனிதன் தவிர்த்த புண்ணாக்கு, புல், கழுநீர் ஆகியன உண்டு பசு அவர்கள் உபயோகத்திற்கு பால் தருவதை போற்றுகிறோம். மாதா என வணங்குகின்றோம். யார் என்ன செய்தாலும், எந்த குற்றங்கள் புரிந்தாலும் சூழ்நிலையின் கைதி அவர்கள் என்ற பரிவுடன், பாசத்துடன் அனுகி அன்பு செலுத்த கற்றுக் கொள்ளுங்கள்.
முடிவுகளை நீங்கள் மன எண்ணங்களில் நிறுத்தி கைகளில் எடுக்க வேண்டாம். மனம் ஒரு நிலைப்பட்டு அமைதியை அடையட்டும். வாழ்க்கையை சுவைத்து மகிழுங்கள். வாழ்க்கைப் பயணத்தில் நம்மீது குற்றங்கள், நம்மை அவமானப்படுத்த கடுஞ்சொற்கள் சேரலாம். அவை உங்கள்மேல் விழுந்து, உங்களைத் தாக்கி, உங்கள் மனத்தில் இருக்கும் வரை ஒர் சுமை.
அது உங்கள் பயணத்திற்கு இடையூறு விளைவிக்கும். அந்த சுமையை மனதில் இருந்து நீக்கி உங்கள் உடம்பில் அதன் பாதிப்புக்களை நீக்க கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் கற்றுக் கொள்ளும் இந்த செயல், உங்கள் மேல் வீசப்படும் குற்றக்கனைகள், கடுஞ்சொற்கள் உங்களை அவமானப்படுத்தாமல், ஏற்றப்படியாய் உந்தி, ஊக்கமளித்து உயர்வுக்கு வித்திடும்.
நாம் மனிதர்கள். அன்பை பொழிய கடமைப் பட்டவர்கள். கழுநீர் ஊற்றி வளர்த்தாலும் செடியின் பூக்கள் நிறம் மாறுவதில்லை. நாம் எப்படி வளர்ந்திருந்தாலும் எந்த சூழலிலும் அன்பின் நிலையிலிருந்து மாறாமல் இருக்க நாமே பழகிக் கொள்ளவேண்டும்.
எவ்வளவு கொடியவனாக இருந்தேன், என்ன என்ன பாதகங்கள் புரிந்தேன் என எவரும் வருத்தப்பட வேண்டியது இல்லை. உன் செயல்களை உணர்ந்து நீ நிலைமாறினால், அன்பின் வயப்பட்டால், உன்னை உலகம் அங்கீகரிக்கும். உலகம் அன்பு சங்கிலி கொண்டு இயங்குகின்றது. புராணங்களில் அசுரர்களையும், கொடியவர்களையும் (மகிஷன்-, சூரபத்மன்-) அழித்த அவதாரங்கள், பின் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கி ஏற்றுக் கொண்டதாகத்தான் எழுதப்பட்டுள்ளது.
தன் கடமைகளை சரிவர செய்யாமல், நல்லபொழுதை எல்லாம் துங்கிக் கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன், தானும் கெட்டார் எனச் சொல்வர். தூக்கம் ஓர் லயம், சுகம், போகமானது. ஒவ்வொருவருக்கும் நல்ல தூக்கம் வேண்டும்.
கடமைகளை மறந்த தூக்கம் சேம்பேறிகளுக்குரியது. விழிப்புணர்வின் வழி வளர்ச்சி. அதன் மூலம் வளர்ந்து காக்க வேண்டியவைகளைக் காத்து, சேர்க்க வேண்டியவைகளைச் சேர்த்து பின் போகத்தில் இருக்கலாம். அதுவும் அளவுடன் இருத்தல் நலம். கடமைகள் தவறிய போகம் ஆனந்தத்தை தராது-குருஸ்ரீ பகோரா.

1-8.பயம்!

Written by

பயம்!

பழம் பயந்தது என்றால் அது முற்றிலும் பழுத்தபின் கீழே விழுந்துவிடுவோமோ என்பதைத்தவிர வேறொன்றுமில்லை. முற்றிலும் பழுத்தால் கீழே விழவேண்டும் என்பது நியதி. இடையில் பிற உயிரினங்களுக்கு அது பழுத்தது தெரிந்தால் அவைகள் கீழே விழுமுன் உபயோகிக்கலாம். இது அடுத்த நியதி. இரண்டில் ஒன்று நடந்தாக வேண்டும். இதில் பயப்பட என்ன வேண்டியிருக்கின்றது.
குதிரையை நீர்குடிக்க நீர்நிலைக்கு அழைத்து சென்றால், அது நீரில்தன் நிழலைப் பார்த்து நமக்குப் போட்டியாக இன்னொரு குதிரை வந்துவிட்டது, நமக்கு நீர் இல்லாமல் போய்விடுமோ என அஞ்சி அதை முதலில் உதைக்கும். இதுபோன்ற பயம் தேவையற்றது. இந்த பிரபஞ்சத்தில் உங்களுக்கான உணவையும், காற்றையும் யாரும் களவாட முடியாது. உங்கள் கர்மத்தின் பலன்படி, நடக்கும் நிகழ்வுகளுக்கேற்ப உங்களுக்கு வரவேண்டியது வந்து சேரும். நீங்கள் அடைவது என நிர்ணயக்கப்பட்டதை அடைந்தே தீருவீர்கள்.
மனம் உற்சாகமாக இருந்தால் எந்தவிதத் தடங்கல்களும் நமக்கு தடைக்கல் இல்லை. தோல்விகளுக்கு பயம் ஒரு காரணம். எல்லாம் இருப்பவனுக்கு ஒருவித பயம்! ஒன்றும் இல்லாதவனுக்கும் ஒருவித பயம்! அளவாக இருப்பவனுக்கும், போதும் என்ற மனம் இருப்பவனுக்கும் பயமென்பது துளியுமில்லை. பயம் விசித்திரமானது. பயம் தோன்ற ஆரம்பித்தால் அதற்கு கை கால்கள் முளைத்து பெரிதாகி நம்மைப் பற்றி ஆட்டிப்படைக்கும். கவலைகூட முடிவில் பயத்தில் முடியும்.  
எதில் விருப்பம் இருக்கின்றதோ அதில் பற்றும் இருக்கும். பயமும் இருக்கும். குற்றமுள்ளவர்கள் அடையவேண்டியது பயம். உண்மையானவன் எப்போதும் பயப்படுவதில்லை. அளவில்லா செல்வமோ, உயர் பதவியோ, அளவில்லா அதிகாரங்களையோ அடைந்தவர் கடந்து வந்த பாதையில் தந்திரங்களும் சூழ்ச்சிகளும் நிறைந்ததாக இருக்கும். குற்றம் புரிபவன் தன் செயல் வெற்றிகரமாக நடக்க பயத்துடன் வேண்டுகிறான். குற்றம் புரிந்தபின் தான் செய்த குற்றத்திற்கு பயந்து வேண்டுகின்றான். ஆனால் குற்றங்கள் பற்றி நினையாதவன் யாதொன்றிற்கும் எப்போதும் பயப்படுவதில்லை.
வாழ்வுப் பயணத்தில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானவர்கள் தாங்கள் ஏதோ பெரிய பாவம் புரிந்துவிட்டதாக நினைத்து அவதிப்படுகிறார்கள். ஒருபக்கம் அழுகின்றார்கள். இன்னொரு பக்கம் அழுகிவிடுகிறார்கள். அறியாத வயதில் புரியாத நிலையில் தவறு செய்தவர்களை பயமுறுத்துகிறது இந்தசமூகம். இந்த பயமும், குற்ற உணர்வும் தேவையில்லை.
மனிதர்கள் விலங்குகளைப் பார்த்து பயந்தகாலம்போய், மனிதர்கள் மனிதர்களைப் பார்த்து பயப்படும் காலமாகி வருகிறது. உள்ளத்தில் உள்ள காமம், மயக்கம், வெகுளித்தன்மை, கவலைகள் மற்றும் இயலாமை தான் பயத்தை உருவாக்குகின்றன. பொறாமையும், வெறுப்புணர்ச்சியும் பயத்தினை வளர்க்கின்றன. அது நமக்குள் பலவீனத்தை தோற்றுவிக்கின்றது. நம்மீது நாம் வைத்திருக்கும் பற்றே பயத்திற்கு காரணம்.   மனிதனின் தீராத, நிறைவேறாத ஆசைகள் மரணபயத்தை ஏற்படுத்துகின்றது. மரணத்திற்குபின் நமக்கு என்னவாகிறது என்பது புரியாததால் பயம் தோன்றுகிறது. நான், என்உலகம் எனப் பார்க்கும் மனிதனுக்குத்தான் பயம் புரிகின்றது. அதே மனிதனுக்கு தன் இளம்வயதில் அவ்வாறு பிரித்துப் பார்க்கத் தெரிவதில்லை. அதனால்தான் இளங்கன்று பயமறியாது என்கிறோம்.
மாடிப்பகுதியை வாடகைக்கு விடுபவர் எனக்கு சப்தம்னா பயம்! அலர்ஜி! மாடியிலே தொம் தொம் என சப்தம் விழாமல் குடியிருக்க வேண்டும் என்று கூறியதை ஏற்று மாடிக்கு குடிபுகுந்தான் இளைஞன் ஒருவன். காலையில் சென்று இரவு வந்தான். திடுதிடுவென்று மாடிஏறினான். காலனிகளை கழற்றி வீசினான். அவை மூலையில் சென்று தொம் தொம் என விழுந்தது. வீட்டுக்காரர் படப்படப்புடன் மேலே வந்தார். என்னப்ப ஒரு நாள் கூட ஆகவில்லை சென்னதை மறந்துவிட்டயே? என்றார். ஒ! மன்னிச்சிருங்கள்! பழக்கதோஷம்! இனிமே ஜாக்கிரதையாக இருக்கின்றேன் எனக் கூற பெரியவர் கீழே சென்றார்.
மறுநாள். இரவு பத்து மணிக்கு வந்தவன் கிடுகிடுவென மாடிக்கு சென்றான். பழக்க தோஷத்தில் ஒரு காலனியை கழற்றி தூக்கி எறிந்தான். அது தொம்மென்று விழுந்தது. அப்போது அவனுக்கு வீட்டுக்காரர் சொன்னது ஞாபகம் வந்தது. ஆகா! தப்பு செய்துவிட்டோமே! இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என நினைத்து இன்னொரு காலணியை மெள்ளக் கழற்றினான். அதைக் கையில் எடுத்துக் கொண்டு அடிமேல் அடி வைத்து மூலைக்குச் சென்று சத்தமில்லாமல் கீழே வைத்தான். படுக்கையில் படுத்துக் கொண்டான்.
விடியற் காலம் 4மணிக்கு கதவு தட்டும் ஓசை கேட்டு கதவைத் திறக்க வீட்டுக்காரர் காதை பொத்திக் கொண்டு நடுக்கத்துடன் நிற்பதை பார்த்தான். ''என்னப்பா! ஒரு தடவை தொப் என்ற சப்தம் கேட்டது. அந்த இன்னொரு காலனியையும் சீக்கிரம் போட்டு விடேன். அந்த சத்தம் வரலையேனு ராத்திரி பூர காதை பொத்திக்கிட்டு முழிச்சிக்கிட்டே இருக்கேன்'' என்றார். இதைப் போலத்தான் நம்மில் பலர் எதையோ ஒன்றிற்காக பயந்து அது மீண்டும் நடந்து விடுமோ என்ற நினைவில், பயத்தில் மனதை அலைய விட்டுக் கொண்டிருக்கின்றோம்.
பயம், கவலை போன்றவைகளை நீக்கத் தெரிந்து கொள்ளவேண்டும். இல்லையெனில் அவைகள் உள்ளத்தில் குடிகொண்டு நாளடைவில் உடல் உறுப்புகளை சீராக செயல்படாமல் கெடுத்து நம் செயல்களுக்கு பங்கம் விளைவிக்கும். அதனால் மூளை, வயிறு போன்றவைகள் அதிகம் பாதிப்படைகின்றன. நமது திறமைகள் குறைந்துவிடும். அதைப் புரிந்து உணர்ந்து செயல் படுங்கள். அறியாமை, அச்சம் நீங்கினால் பயத்திலிருந்து தெளிந்து நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.
அவதாரம்: மின்சாரம் இருக்கும் (+) பாசிட்டிவ் ஒயரும், மின்சாரம் இல்லா (-) நெகட்டிவ் ஒயரும் மின் இழைக் கம்பியில் இணைந்தால் தான் ஒளி. நாராயனர் உள்ளார் என நம்பிக்கை கொண்ட பிரகலாதனும், இல்லை என்ற இரண்யனும் மோதும் நிலையில் நரசிம்ம அவதாரம் நிகழ்வுற்றதாக புராணம் கூறுகிறது. அதைப் போலவே தர்மச் செயல்கள் முழுவதுமாய் குன்றி, அதர்மம் தொடர்ந்து தலை தூக்கும் போது மீண்டும் அவதாரங்கள் தோன்றும் என்ற நம்பிக்கை பிறக்கின்றது.
தேவர்களில் தவறு செய்து சாபம் அடைந்தவர்கள், பிரமஹத்தி தோஷம் அடைந்தவர்கள், தெய்வங்களாக கருதப்பட்டவர்கள் அனைவரும் மண்ணில் பிறந்து இறை வழிபாட்டில் ஈடுபாடு கொண்டு, இறையின் அருள் பெற்றதாக புராணங்கள் மூலம் தெரிகின்றது. இதிலிருந்து இப்புவியில் தேவர்களும், தெய்வங்களும் தோன்றி ஏதாவது ஒரு காரணத்திற்காக மண்ணில் மலர்ந்து வாசம் புரிந்துள்ளார்கள். அந்த முறையில் அவர்கள் பிறவி எடுத்த இப்பூமி சிறப்பை அடைகின்றது. உண்மை என்னவென்றால் தவறு செய்தவர்களுக்கு பாவ விமோசனம் கிடைக்கும் இடம் இந்த புவிதான் என உணர்த்துகின்றார்கள். அதுவே இந்த புவிக்கு இம்மண்ணுக்கு பெருமை - மண்ணின் மகிமையது.
யோக தியானத்தில் இருந்த மாண்டவ்யமுனியை  திருடர்கள் கூட்டத்தின் தலைவன் என நம்பி அவரையும் கைது செய்து மன்னரிடம் தகவல் அளிக்க மன்னர் உடனே முனிவரை கழுவில் ஏற்றச் சொன்னன். மாண்டவ்யர் கழுவில் ஏற்றப்பட்டாலும் தன் யோகத்தால் உயிருடன் தன் தியானத்தை தொடர்ந்தார். மற்ற முனிவர்கள் இதை அறிந்து மன்னனுக்குத் தெரிவித்தனர். மன்னன் தவறை உணர்ந்து மாண்டவ்யரை விடுதலை செய்து மன்னிப்புக் கோரினார். முனிவர் மன்னரை அனுப்பிவிட்டு தான் செய்யாத குற்றத்திற்கு ஏன் இந்த தண்டனை என தர்மதேவதையைக் கேட்க நீங்கள் குழந்தையாயிருந்தபோது பட்சிகளையும், வண்டுகளையும் இம்சை செய்ததின் கர்மபலன் இது என்று கூறியதைக்கேட்ட மாண்டவ்யருக்கு கோபம் உச்சத்தை அடைந்தது. இது அநியாயம். அறியா பருவத்தில் செய்த தவறுக்கு இந்த கடுமையான தண்டனை அளித்த தர்மதேவதை பூமியில் மனிதப் பிறவி எடுக்க சாபம் கொடுத்தார், அதன்படி பூமியில் பிறந்தவரே விதுரர். அவரின் உபதேசங்கள்தான் விதுரநீதி என்பதாகும். அதைபோலவே பூமியில் பல தேவர்கள் பிறந்து தங்களின் சாபங்களை கர்மபலன்களைப் போக்கிக் கொண்டுள்ளனர் எனப் புராணங்கள் வாயிலாக உணரலாம்.
ஆன்மாக்களே “அரிது, அரிது மானிடராய் பிறத்தல் அரிது” என்பதன் முழுமையும் புரிந்து கொள்ளுங்கள். இந்த மண்ணில் பிறந்ததால் நீங்கள் உங்கள் கர்ம பலன்களை நீங்கள் செய்யும் செயல் வழிமூலமாகக் குறைத்து கொள்ள சந்தர்ப்பங்கள் உண்டு. இனி பிறவி வேண்டாம் என்பதற்கும், இம்மண்ணில் நீ தோன்றிய இப்பிறவிமூலமே வழி உண்டு.
புண்ணியம்: புண்ணியம் என்பது ஓர் ஆன்மா தன் ஸ்தூல சரீரத்தின் மனத்தால் நினைத்து செய்யும் நல்ல செயல்களால் ஏற்படுவது. தீயவழியில் எல்லோரையும் ஏமாற்றி துன்புறுத்தி, அதன் மூலம் நிறைய பொருள் சம்பாதித்து பின் அதில் ஒர் பகுதியை தான தர்மங்கள், உதவிகள் செய்கிறேன் என்று செலவிடுவதால் வராதது புண்ணியம். தங்களுடைய தேவைகளுக்கு மீறீய பொருள் வைத்திருப்பவர்கள் கொஞ்சம் பொருள் கொடுப்பது தாங்கள் புகழடைய வேண்டும் என்பதற்காகத்தான். அவர்களின் ஆசைமனம் பொருள் குறைந்து விட்டதை கணக்குடன் நினைத்தால், அவ்வாறு தானம் கொடுப்பதில் புண்ணியமில்லை.
தன்னிடம் இருப்பதைக் கொடுப்பவன் வாழ்வில் நம்பிக்கையுடன் இருப்பான். எதையும் இழப்பதில்லை அவன், புகழோ வேதனையோ அடையாமல் தன்னிடம் இருக்கிறது எனக் கொடுப்பவர்கள் நிறைவுடன் வாழ்வர். மரங்களும், செடிகளும் யார் கேட்டும் கொடுப்பதில்லை. அவைகள் நிறைவுடன் மற்ற உயிர்களுக்கு அளிப்பதுபோல் நீங்களும் உங்கள் குலம் தழைத்துவாழ, மனித ஆன்மாக்கள் வாழ இருப்பதை மனமுவந்து கொடுத்து உதவுங்கள்.
நிறைய நன் முறையில் செயல் பட்டு தன் தேவைகளுக்கு ஏற்ப உழைத்து, மற்ற உயிர்களைத் துன்புறுத்தாமல் சம்பாதித்து பின் அதில் மற்றவருக்கு என ஓர் பகுதியை செலவழிப்பதே புண்ணியத்தை தரும். எனவே நல்வழி செயல்களால் கிடைக்கும் இன்பமும், புண்ணியமும் சிறப்பு.
நம்மிடம் இருக்கும் செல்வம் இன்று அல்லது நாளை அல்லது பிரிதொருநாள் நம்மை விட்டு போகலாம், என்று அது நடக்கும் என யாராலும் கூறமுடியாது. எனவே செல்வம் இருக்கும்போது அதைப் பயன்படுத்தி நல்ல காரியங்கள் செய்ய பழகுங்கள். அது உங்களுக்கு என்றும் நிம்மதியைத் தரும். இருக்கும் செல்வம் சென்றபின் அடடா! அதை செய்யலாம் என நினைத்தேன், இதைச்செய்யலாம் எனநினைத்தேன் என்று அங்கலாய்த்தலால் பயனில்லை. துன்பம்தான் மிச்சம். உங்களால் முடிந்த அளவிற்கு செல்வத்தை பயன் படுத்தி நற்செயல்கள் செய்தோமே என்ற மனத்திருப்தியாவது இருக்கும்.
நம்மீது கொண்ட பொறாமையின் காரணமாக நம்மை வசைபாடி நிந்திப்பவர்கள், நாம் செய்த பாவங்களிருந்து ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு, நம் கர்ம பலனின் வேகத்தைக் குறைக்கும் பணியை செய்வதுமட்டுமல்லாமல், அவர்கள் எப்போதோ செய்த புண்ணியத்தின் ஒரு பகுதியை நமக்கு அளிக்கின்றார்கள். எனவே நம்மை நிந்திப்பவர்கள், அதன் காரணமாக நம் கர்மபலனின் பாவத்தின் பகுதியை தங்களை அறியாமலே எடுத்துக்கொள்ளும் அவர்கள் மீது கோபம் கொள்ளாதீர்கள். அவர்களை மன்னித்துவிட பழகிக் கொள்ளுங்கள்.
மேலும் அவர்கள் செயலால் உங்களுக்கு, “யார் செய்த புண்ணியமோ, எனக்கு இந்த பலன்” என நாம் சில சமயம் கூறுகிறோமோ அந்த புண்ணியம் உங்களை தூற்றி, நிந்தித்தவர்களால், உங்களை எதிர்ப்பவர்களால், விரோதியால், அல்லது நீங்கள், உங்கள் ரத்த சொந்தங்கள் செய்த நல்ல கர்ம பலனால் கூட இருக்கலாம்.
எதுவாயிருந்தாலும் உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும். உங்களிடம் உண்மையன்பு நிறையும். கனிவு பிறந்து அன்பு தோன்றும். நீங்களும் பிறரை நிந்தித்து பாவம் செய்து உங்கள் புண்ணிய பலன்களின் பகுதியை இழந்து விடாதீர்கள். உங்கள் மூலமாகவோ உங்கள் முன்னோர் மூலமாகவோ உங்களை அடைந்திருக்கும் கர்மபலனின் புண்ணியங்கள் உங்களுக்கோ, அல்லது உங்கள் சந்ததிக்கோ மிகவும் உதவி புரியும்,
சுலபான வாழ்க்கையை சூழ்ச்சி, சுயநலமிகுந்ததாக ஆக்கிவிடாதிருக்கப் பழகுங்கள். “மனதின் வினைகளான பிறர்பொருளை அபகரித்தல், பிறருக்கு தீங்கு செய்ய நினைத்தல், பிறர் உயர்வு கண்டு பொறாமை கொள்ளுதல் ஆகியவைகளின்றி புண்ணியமான பிறர் பொருள் வேண்டாம் என எண்ணுதல், அனைவரும் நலமாக வாழ நினைத்தல், அவர்தம் நல் வாழ்வு கண்டு மகிழ்வு அடைதல்” ஆகியவை உங்களின் மேலான வாழ்வுக்கு சிறப்பானதாகும்.
நீதி நேர்மை தவறாத அரசன் ஒருவன், மிகுந்த இரக்க குணம் கொண்டவன். மக்களின் நன்மைக்காக வாரி வழங்கினான். பிறர் மகிழ்ச்சியைக் கண்டு தான் மகிழ்ந்தான். அவன் ஆயுட்காலம் முடிந்ததும் எமதூதர்கள் வந்து அழைத்துப் போயினர். அந்த அரசன் தன்னை அறியாமல் ஒரு தவறு செய்திருந்ததால் அந்த ஜீவனை நரகத்தின் செயல்பாடுகளை கண்டு பின் சொர்க்கம் அழைத்துச் செல்ல ஆணையிட்டான் எமதர்மன்.
அவ்வாறே அவன் செர்க்கம் செல்லும் வழியில் நரகத்தின் செயல்பாடுகளை பார்க்க அனுமதித்தனர். நரகத்தில் ஜீவன்கள் படும் துயரத்தைக் கண்டு மிகவும் வருந்தினான். அரசன் செய்திருந்த தவறுக்கு அதுவே தண்டனை என்பதால் அவனை அங்கிருந்து சொர்க்கம் கொண்டு செல்ல முனைப்பட்டனர்.
அப்போது அங்கிருந்த ஜீவன்கள் மன்னா, உங்கள் மேனியை தழுவிய காற்று, துன்பத்தில் இருக்கும் எங்களை அடையும்போது இதமாக இருக்கின்றது, எனவே இன்னும் சிறிது நேரம் இங்கிருங்கள் என வேண்டினர். மன்னர் அப்படி இதமான காற்று என்னால் உங்களுக்கு கிடைக்கிறது என்றால் நான் இங்கேயே தங்கி விடுகிறேன் என்றார். தூதர்களின் நிலை தர்ம சங்கடமானது.
எமதர்மனுக்கும், இந்திரனுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் வந்து மன்னா அவர்கள் செய்த பாவம் அவர்கள் அனுபவிக்க வேண்டியது என்றனர். நான் இங்கு தங்கினால் அவர்களுக்கு மகிழ்ச்சி என்றால் அதைவிட எனக்கு மகிழ்வு வேறில்லை. அப்படியில்லையெனில் நான் செய்த புண்ணியங்கள் அனைத்தையும் அவர்களுக்கு தந்து விடுகிறேன் என்றான் மன்னன்.
அந்த புண்ணியத்தால் அனைவரும் சொர்க்கம் சென்றுவிடவே அங்கு இருந்த மன்னனிடம், அரசனே, கொடை அளிப்பதால் புண்ணியம் பெருகுமே அன்றி குறையாது. நீங்கள் உங்கள் புண்ணியங்களை தானம் செய்ததால் வந்த புண்ணியமும் உங்கள் கணக்கில் சேர்ந்திருப்பதால் நீங்களும் சொர்க்கம் சொல்லாம், வாருங்கள் என அழைத்துச் சென்றனர்.
தர்மம்: தர்மத்தினை உடலாலும், வாயாலும், மணத்தாலும், பணத்தாலும் செய்யலாம். ஆனால் ஆன்மாவிற்காக செய்யும் தர்மமே உனக்கு வரவு. மற்ற தர்மங்களெல்லாம் செலவுதான். நான் நிறைய பாவம் செய்திருக்கின்றேன், அதனால் தானதர்மங்கள் செய்கிறேன் என நினைக்கக்கூடாது. எவ்வளவு பாவம் செய்திருந்தாலும் ஓர் நிலையில் அவைகளை உணர்ந்து தன்னை தன் செயலை மாற்றிக் கொண்டுள்ளவர்கள் ஏராளம்.
அந்த பாவங்களுக்கு பிராயசித்தமாக தர்மங்களை செய்ய ஆரம்பிக்கின்றார்கள். இதை இறையருள் ஏற்றுக்கொள்கின்றது. தவறு செய்தவன் உணர்ந்து திருந்தினால் அவனுக்கு மன்னிப்பு உண்டு. மீண்டும் அந்த தவறு செய்யாமலிருக்க வேண்டும். தவறு செய்தவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்வதால் தான் ஒருவனுக்கு பெருமை கிடைக்கிறது. அந்த பெருமை முற்றிலும் இறைவனுக்கே!
அளவில்லா பெருமை கொண்ட அந்த இறைவன், பாவம் செய்தவர்களை மன்னித்து அடைக்கலம் தந்ததாக புராண நிகழ்வுகள் நிறைய உள்ளது. செய்யக்கூடாது என மனதிற்கு தோன்றுவது பாவம். செய்வது நல்லது எனத் தோன்றுவது புண்ணியம்.
புண்ணியம் செய்வதனால் மனம் கஷ்டமின்றி சுகமாக இருக்க விரும்புகின்றது. மனம் சாந்தமடைகிறது. புண்ணியத்தினால் ஆனந்தமாக இருக்க விழையும் மனம், சிந்திப்பது செயல்படுவது பாவமான நிகழ்வுகளை. பாவம் பண்ணுவது தவறு என நினைத்தாலும் அவனின் கர்மபலன் அதை செய்யதூண்டுகிறது. மனதை ஓர்முகப்படுத்தி ஆசைகளை விட்டு ஒதுக்கி செயல்பட்டால் பாவம் செய்ய வாய்ப்பில்லை. பாவங்கள் ஆசையின் பிறப்பிடம்.
எந்த காரியங்களாயிருந்தாலும் ஆசையின்றி செய்ய விழையவேண்டும். நம் சுய சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை ஆசையைவிட்டு தர்மத்திற்காக செய்தால் அதுவே புண்ணியம் தரும்.
மனதினால் உடம்பினால் நல்லகாரியங்களைச் செய்யவேண்டும். உன்னைப்பற்றிய கணக்கெடுப்பில் நீ எவ்வளவு சொத்து சேர்த்து வைத்துள்ளாய் என்று பார்ப்பதில்லை! என்னென்ன நல்ல காரியங்களும், தர்மங்களும் செய்திருக்கின்றாய் என்பதே உதவிக்கு வரும். செல்வமிருந்தும் தானம் செய்ய மனமில்லை என்றால் அடுத்த பிறவியில் பிச்சை எடுத்து வாழ்வான் என்கிறது பவிஷ்யபுராணம்.
இறை ஆன்மாக்களை சோதனை செய்வதற்காகவே எல்லாவற்றையும் அளிக்கின்றான். ஏதும் செய்ய முடியாமல் இருப்பவர்களுக்கு நல்ல இதயங்களையும், செய்ய விரும்பாதவனுக்கு மற்றவைகளையும் வாரி வழங்குகின்றான்.
பெரியவர் ஒருவர் மேடையில் பேச தயாராகிக் கொண்டிருந்தார். அங்குவந்த பணக்காரர் அவரிடம், ஐயா, நீங்கள் கூட்டத்தில் பேசும்போது என்னைப் பற்றி ஏதாவது குறிப்பிட்டு ஒரு முறை சொல்லுங்கள் என்றார்.
பேச்சாளரும் இவர் பெரிய சமுத்திரம், அள்ள அள்ளக் குறையாத கடல் மாதிரி. பெரிய செல்வந்தர், சமுத்திரம்னா சமுத்திரம்தான், ஏரி, குளம் மாதிரி சின்ன ஆளு இல்லை. என்ற பாராட்டை கேட்டு மகிழ்ந்த பணக்காரர் அங்கிருந்து சென்றபின் பேச்சாளரின் சீடர் தயக்கத்துடன் "இந்த ஆள் பெரிய கஞ்சன். எந்த ஒரு நல்ல காரியத்திற்கும் உதவியது இல்லை, அவரை உங்களைப் போன்ற பெரியவர்கள் இப்படி பொய்யாக பாராட்டலாமா?” எனக் கேட்டார்.
அதற்கு பேச்சாளர், அதைத்தான் நானும் சொன்னேன். புரியலையா? சமுத்திரம் ரெம்பவும் பெரிசு, ஏகப்பட்ட தண்ணீர் வெச்சிருக்கு, ஒருவாய் தண்ணீர் ஒருவருக்கும் குடிக்க பயன் படாது. எவருடைய தாகத்தையும் தணிக்காது. இந்த நபர் சமுத்திரம் மாதிரி எவ்வளவு பணம், பெருள் வைத்திருந்தாளும் ஒருவருக்கும் பயன் பட உதவமாட்டார். என்றுதான் கூறினேன் என்றார். எங்கும் நீர் பஞ்சம். கடலில் நீர். என்ன பலன்! செய்ய முடிந்தும் யாருக்கும் எதுவும் செய்யாமலிருப்பவனின் உடைமைகள் எதாவது ஓர் முறையில் அழிவை தேடும். தானதர்மங்களைச் செய்யாதவனின் அடுத்த தலைமுறையினர் அந்த சொத்துக்களை சரியான முறையில் அனுபவிப்பதுமில்லை.
தர்மங்களை இரண்டு வகையாக கொள்ளலாம். ஒன்று ஆன்மாவின் உயிர் தன்னுடைய தாய், தந்தை, குரு ஆகியவரின் ஆலோசனைகளை ஏற்று செய்வது என்பது சாதாரணவகை தர்மமாகும். அவர்கள் தமக்கு நல்லது சொல்வார்கள் என்றும், அவர்களின் கருத்துக்களை ஏற்க வேண்டும் என்றும் செயல்படுவது நமது கடமையாகும்.
ஆனால் இதை மீறி மாதா, பிதா, குரு ஆகியோர் விருப்பங்களை தெரிவித்தாலும், ஆலோசனை கூறினாலும், அதை ஏற்காமல் தாங்கள் மதிக்கும் தர்மத்தை நிலைநாட்ட செயல்படுவது மற்றொருவகை சிறப்பு தர்மமாகும்.
மகாபாரதத்தில் பரதன், தன் தந்தையின் உயிர் பிரிவதற்கு தாயே காரணம் என்றும், அவரின் மறைவுக்குப்பின் குலதர்மத்தின்படி அண்ணன் ஸ்ரீராமனே ஆட்சிபீடம் ஏறவேண்டும் என்று நினைத்து, தன்னை பட்டம் சூட்டிக்கொள்ள அனைவரும் கூறியும் கேளாது, மரபும், சாஸ்திர தர்மமும் காக்க, தன் தமையனின் பாதுகையை அரியாசனத்தில் வைத்தது சிறப்பான தர்மமாகும்.
கர்ணனிடமிருந்து கவச குண்டலங்களைப்பறிக்க முயற்சி நடப்பதை அவனின் தந்தையாகிய சூரிய பகவான் கூறியும் கேளாமல், யாசித்ததை தருவதே தர்மம் என கர்ணன் நினைத்து செயல் பட்டது சிறப்பாகும்.
தன் குரு எச்சரித்தும் கேளாமல் மகாபலி, வாமனருக்கு தானம் தந்ததும் சிறப்பு ஆகும். தர்மம் என நீங்கள் நினைத்தால், உள்மனது சொன்னால், அதன் பொருட்டு எதையும் மீறி தர்மம் செய்யலாம்.
பிச்சை ஒருவன் யாசித்தபின் அளிப்பது. சமூகத்தின் தேவையறிந்து யாரும் கேளாமல் தருவது பகிர்ந்தளித்தல் ஆகும். தன்னிடமிருப்பதை தேவைபடுபவர்களின் தேவைக்கேற்ப பகிர்ந்தளிதல் சிறப்பான தர்மம். தானம் செய்ததை சொல்லிப் புகழ்வதும், தானம் கொடுத்துவிட்டு நொந்து கொள்வதும், தானம் செய்வதைத் தவிர்ப்பதும் தர்மமாகாது. புகழ், புண்ணியத்திற்காக அன்றி இல்லாதவனுக்கு உதவுவதே இருப்பவனது கடமை என நினைத்தலே உண்மையான தர்மமாகும்.  
தர்மம் சொல்லிவிட்டோம். தர்மசங்கடம் என்றால்... இரண்டு அறமான நியாயங்கள் சமநிலையில் மோதும்போது தர்மத்திற்கு ஏற்படுவதே சங்கடம், தர்மசங்கடம். புறா தன்னை காப்பாற்ற சிபு மன்னனிடம் வேண்டுகோள் விடுத்தது. துரத்தி வந்த பருந்து, விலங்குகளும், பறவைகளும் ஒன்றை மற்ற ஒன்று உணவாக கொள்வது என்பது இயற்கையின் தர்மம். இன்று இயற்கை எனக்கு அளித்த உணவு இந்த புறா. அது எனது பிறப்புரிமை. எனக்கு கொடுத்துவிடுங்கள் என அறத்தைக் கூறியது.
என்னை பருந்துக்கு இரையாக்கிவிடாதீர். உங்களை அடைக்கலம் தேடி வந்தேன், என்னைக் காப்பதே சிறந்த அறம் என புறாவும் தர்மம் கூறியது. இந்த இரண்டு அறத்திற்கிடையே சிபியின் தர்மம் சங்கடமான நிலையை அடைந்தது. யாருக்கு சாதகமாக கூறினாலும் ஒருவருக்கு அறம் தவறாகிவிடும்.
உயிர்வாழ வேண்டும் என்பது அனைவரின் அவா. ஆசை. தன்னை காத்துக் கொள்ள வேண்டும் என புறா நினைப்பதும் சரியே. புறா காப்பற்றப்பட்டு, அதே சமயம் பருந்தும் பசியாறுதல் சிறப்பு. உலகின் உயர்ந்த அறமானது உண்மையும், கருணையும் ஆகும். எனவே புறாவிற்கு பதிலாக தன் தொடையின் பகுதியை தரமுன்வந்து தர்மங்களை நிலைநாட்ட முனைப்பட்டவர் சிபி சக்ரவர்த்தி என வரலாறு பகர்கின்றது.
சிபி போன்று நீங்கள் செயல்பட வேண்டாம். அதற்காக தர்ம சிந்தனைகள் இன்றி செயல்பட வேண்டாம். பிற உயிர்கள் படும் துன்பங்களை உணர்ந்தால், நேயம் கொண்டு செயல்படுங்கள் என்பதே தர்மத்தின் நோக்கம்.
கர்ணணைப் போல் தான தர்மங்கள் செய்து தானும் கொடையாளி என்றபெயரை, புகழை அடைய நினைத்த துரியோதனன், தன் அரண்மனை வாயிலில் “இங்கு யார் வந்து என்ன கேட்டாலும், ‘இல்லை’ எனச் சொல்லாமல் கொடுக்கப்படும்” என்ற அறிவிப்பு பலகையை வைத்தான். அவன் உளமார தர்மம் செய்ய முன்வராமல் வெறும் பெயரை அடையவே இவ்வாறு செய்கிறான், என்பதை அவனுக்கு உணர்த்த கிருஷ்ணர் எண்ணங் கொண்டார்.
நல்ல மழைக்காலம் அது. அப்போது அந்தணர் வேடமேற்று சென்ற அவரை வரவேற்ற துரியோதனனிடம், தான் ஒரு யாகம் செய்யப் போவதாகவும், அப்போது உணவு தயாரிப்பதற்காக காய்ந்த விறகுகள் 100 வண்டிகள் தந்து உதவ வேண்டும் எனக் கேட்டார். கேட்ட துரியோதனன் பேய்மழையில் எப்படி காய்ந்த விறகுகள் அதுவும் 100 வண்டிகள் எனச் சலித்துக் கொண்டான்.
அவ்வளவு கிடைக்குமா என விசாரித்து விறகு இல்லை என்று கூற அந்தனர் வாயிலில் உள்ள தகவல் பலகையை சுட்டிக் காண்பித்து அதை அகற்றிவிட வேண்டினார். இருப்பதைத்தானே கொடுக்கமுடியும், இல்லாததைக் கேட்டால் எப்படி கொடுக்க முடியும், இந்த சூழலில் காய்ந்த விறகை யாரேனும் கொடுத்தால் பலகையை அகற்றி விடுகிறேன் என்றான் துரியோதனன்.
அடுத்து கர்ணனின் அரண்மனைக்கு சென்ற அந்தணருக்கு அங்கும் விறகு இல்லை எனதெரியவந்தது. அப்போது கர்ணன் அந்தனரை பக்கத்தில் உள்ள ஓர் வீட்டிற்கு சென்று பேச அழைத்தான். சிறிது வேளையில் அந்தணர் கேட்ட 100 வண்டிகள் நிறைய காய்ந்த விறகுகள் தயாராக இருந்தன.
எங்குமே காய்ந்த விறகு இல்லா நிலையில் கர்ணா உன்னால் எப்படி முடிந்தது இது என அந்தணர் கேட்க, நீங்களே தெரிந்து கொள்ளுங்கள் என அந்த வீட்டிலிருந்து வெளியே அழைத்து வந்தான். அங்கிருந்த கர்ணனின் அரண்மனை சிதைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்த தேக்கு, சந்தனம் போன்ற பல்வேறு மரங்கள் விறகாகி இருந்தன.
அந்த 100 விறகு வண்டிகளுடன் துரியோதனின் அரண்மனைக்குச் சென்று சந்தித்தார் அந்தணர், வெட்கத்தால் தலைகுணிந்த துரியோதனன் உடன் தகவல் பலகையை நீக்கினான். போட்டி, பொறாமையின்றி உள்ளார்ந்த நினைவுகளுடன் தர்மம் செய்தல் சிறப்பாகும். புகழ் வேண்டி செய்த தர்மங்கள் பலன் தராது-குருஸ்ரீ பகோரா. 

1-7.எவர் தவறு !

Written by

எவர் தவறு !  


எத்தனையோ எதிர் பார்ப்புக்களிடையே இனையும் ஆணும் பெண்ணும் சிறுது காலத்திலேயே, தங்களுக்குள்ளே அபிப்ராயப் பேதங்கள் ஏற்பட்டு உணர்வுகளும் தேவைகளும் விருப்பங்களும் நிறைவேறா நிராசையால்  மனம் குமுறி மணமுறிவு பெறுகின்றனர். அல்லது பிரிந்து வாழ்கின்றனர்.

அவ்வாறு உள்ள ஆணோ, பெண்ணோ மீதி இருக்கும் நாளில் அவர்கள் விருப்பங்கள் உணர்வின் தேவைகள் பூர்த்தியாக ஓர் சந்தர்ப்பம் கிடைத்து அதை நாடினால் அது தவறு அன்று! எல்லா உயிர் ஆன்மாக்களும் சந்தோஷத்தின் வாயிலில் இருக்க வேண்டும்! சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டும். இது இயற்கை நியதி.
அந்த உணர்வு நம் அனைவரிடமும் உள்ளது. எனவேதான் பெண் விடுதலை, சம உரிமை பேசும் இந்த காலகட்டத்தில் கணவன் இறந்ததும் மறுமணம் நடப்பதை நாம் ஆதரிக்கின்றோம். காலம் குறுகியது. வாழ்வில் அந்த உயிர்களும் சந்தோஷம் காணவேண்டும் என்ற அடிப்படையில் நாம் இருக்கின்றோம்.
ஆன்மாக்களை இறைவன் எப்போதும் தண்டித்துக் கொண்டிருப்பது இல்லை. இயற்கை நியதியில் ஆண் பெண் உறவுகள் மேலானவை. வாழ்வுபயணத்தில் சந்தோஷத்தின் சாரங்கள் அவைகள்.
இயற்கைக்கு மாறாக, ஆண் பெண் உறவுக்கு எதிராக ஈடுபடும் ஓரினச்சேர்க்கையை சிலர் ஏற்றுக்கொள்வது எவ்வளவு வக்ரமானது! அது இயற்கையை அவமதிப்பதாகும். முற்றிலும் இயற்கையின் தன்மைக்கு எதிரானது. அவர்களின் பிறப்பை கேவலப் படுத்துகின்றனர். எப்படியிருந்தாலும் அவர்களின் ஆன்மாவின் முடிவுகள் கர்ம பலன்களுக்குட்பட்ட இயற்கையை நோக்கியே!
பெண்பாலினம் உலகின் உயிர்களுக்கு உருவம் கொடுக்கும், வளர்க்கும் சிருஷ்டிக்கு ஆதரமானது. எனவே தாய்மை போற்றப் படுகிறது. தன்னலமற்ற, எதையும் எதிர்பாராத, வரைமுறையற்ற பாசம் கொண்டுள்ள தாய்மை சிறப்பிக்கப் படுகின்றது. குடும்பங்களின் ஒற்றுமைக்கு, உறவுகளின் நேசப்பின்னனிக்குப் பெரிதும் உதவுவது. போற்றிப் புகழப்படுவது அது.
இப்படி சிறப்புக்களையுடைய பெண்ணினத்திற்கு ஆண் உறவு தேவையாகிறது. அந்த தாம்பாத்திய உறவில் விருப்பு, வெறுப்பு இரண்டும் கலந்த வாழ்க்கைக்கு நாள் நட்சத்திரம் பெருத்தம் எல்லாம் பார்த்து இனைவதும் உண்டு. மனங்கள் விரும்பி இனைவதும் உண்டு.
காலத்தின் கட்டாய சூழலில் நிச்சயித்த மணவாழ்க்கையும் சரி, விரும்பிய காதல் மணவாழ்க்கையும் சரி பல சிக்கல்களை சந்திக்கின்றன. சிக்கல்களை தீர்க்க முடியா நிலையில் வாழ்க்கை கசக்கின்றது. ஒருவர்மீது ஒருவர் குறைகாண்கின்றனர். மனங்கள் சலிப்படைகின்றன. வெறுப்புகள் வளர்கின்றது. சந்தோஷம் விலகுகின்றது. மன அமைதி கிட்டுவதில்லை. உறக்கமில்லா இரவுகள், தொடர் மன உலைச்சல்கள். உடல்நிலை பாதிப்பு. இருபாலருக்கும் விரக்தி. ஆர்வமில்லா செயல்பாடுகள். முடிவில் பற்றற்ற வாழ்வாகிறது.
அப்போது உலகவழ்வியலில் கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் துறக்கின்றனர். ஆன்மிகத்திலும் இது நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்வுகள் இறை மேல்கொண்ட பக்தி காரணமாக நடைபெற்றுள்ளது. ஆர்யாம்பிகை தன் மகன் ஆதிசங்கரரை துறக்கின்றாள். வள்ளாரின் மனைவி அக்கா உண்ணமுலையின் மகள் தனக்கோடி, ‘உங்கள் பக்திவழி செல்லுங்கள், நான் உங்களைத் தொடருவேன்’ என்று அவரைத் துறந்தாள். உயர்ஜாதி செருக்கை விடாத தன் மனைவி தஞ்சமாளைவிட்டு, ‘ஒட்டும் இல்லை, உறவும் இல்லை’ எனப் பிரிந்து சென்றார் ராமானுஜர். ஸ்ரீராகவேந்தர் என்ற வேங்கடநாதர் தனது மனைவி சரஸ்வதி, மகன் லட்சுமி நாராயணனைத் துறந்தார்.
ஏ மானிடமே! உன் விருப்பத்திற்கு ஆண் அல்லது பெண் ஆக பிறக்க வில்லை. நீ இறப்பதும் உன் எண்ணத்திற்கு இல்லை. எதுவும் உன் முடிவில் இல்லை. இடைப்பட்ட காலத்தில் வாழ இயற்கை தோற்றுவித்தது இன்ப துன்பங்களுடன் கூடிய பாலின வாழ்க்கை. அதில் கவர்ச்சியுண்டு. துன்பமிருந்தாலும் தொடர்ந்து நாடும் தன்மையுடையது. தொடர்ச்சியான அன்பு, அரவணைப்பு, பொருப்பு மற்றும் கடமைகளை கொண்டது வாழ்க்கை.
குறைகள் சிறியனவாகவும் வேட்கை பெரியதாகவும் தெரியும். உடல் வேட்கைதீர ஒருவர்மீது ஒருவர் மட்டற்ற அன்பு கொள்வர். அங்கு சச்சரவுகளில்லை. இன்பம் அதிகமாக இருந்து, துன்பம்வரின் பாதிப்பு குறைவாக உணரப்படும். நிறைந்த இன்பத்தின் நினைவில் துன்பத்தின் தோற்றம், துயரம் அதிகமாக தெரியாது. துன்பங்களை சந்திக்க துணிவு அடைவர். துன்பம் மிகுதியாக இருந்தால் மன உறுதியுடன் செயல்பட்டால் அடுத்து இன்பம் என்ற நிலை ஆறுதல் அளிக்கும். துன்பத்தின் தீவிரம் மன அளவில் கட்டுப் படுத்தப்பட்டு குறைத்து உணரப்படும்.
ஆரம்ப நிலையில் அந்தி மயக்கம் அனைவருக்கும் பொது. நிலைகள் மாறுபடும்போது குறைகளும், வேறுபாடுகளும் அதிகரிக்கின்றன. குறைகளிலிருந்தும், வேறுபாடுகளிலிருந்தும் மனநிலையை மாற்ற இயற்கை செய்த வினோதம்தான் ‘தாய்மை’, ‘கரு’.
கரு உற்பத்தியில் தங்களது ஜீவன், வாரிசு, ஓர்மனித ஆன்மா ஜனனம் என்ற எண்ணங்கள், இருபாலரிடையே தோன்றிய  அபிப்ராய பேதங்களை மாற்றிவிடுகிறது. மறந்து மன்னித்து விடுகின்றது. அன்பு அதிகமாகி மீண்டும் செழிப்புடன் தழைக்கின்றது. ஒருவர்மேலிருந்த வெறுப்புகளை மாற்றி அக்கறை கொள்ளச் செய்கின்றது. எல்லா ஆன்மாவிற்கும் ஜனனத்தில் ஓர் அபரிதமான சந்தோஷம் தோன்றும்.
இருவரின் எண்ணங்கள் பொதுவாகின்றது. இணைப்பில் உறுவான ஜனனத்தின் வளர்ச்சியில் நாட்டம் கொண்டு அதற்காக முனைப்புடன் தங்கள் உழைப்பை வெளிப்படுத்துகின்றனர். சிலருக்கு பொருளாதாரம் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. தேவைகளை சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர்.
உடலின் உஷ்ண சோம்பல் நீங்கி புத்துணர்ச்சி பெற அவசியமானது தாம்பத்திய உறவு. அது அடுத்தடுத்து ஜனனத்திற்கு படிகள் இட பொருளாதார சுமைகூடி பல இன்னல்களைத்தர குடும்பம் சிக்கல் சூழ்ந்ததாகிறது. எவ்வளவு சிக்கல்களிருந்தாலும், இன்னல்கள் நிறைந்திருந்தாலும், வாழ்வில் உறவுமுறையில் ஆறுதலுக்கு இலவசமாக கிடைப்பது தாம்பத்திய உறவு ஒன்றே! மனக்கவலைகளால், சூழலால் ஏற்பட்ட சலிப்புகளால் உள்ளம் நைந்து போனசமயம் உடலுறவு மறுக்க வாய்ப்புள்ள நிலையில் குழப்பங்கள் தோன்றும்.
போதிய பொருளாதாரம் கிட்டாதநிலையில் உடல் உழைப்பை அதிகம் செலவிட்டு தன் பொருளாதாரம் சிறப்படைய உழைக்கும் ஓர் உழைப்பாளிக்கு ஆண் பெண் இருபாலருக்கும் அந்த உழைப்பின் அசதி, களைப்பு, நீங்க நல்ல நிம்மதியான உறக்கத்திற்கு தேவையான மருந்து உறவுமட்டுமே.
அது புத்துணர்ச்சியுடன் காலை தனது பணிகளை சிறப்பாக செயல்பட உறுதுணையாக இருக்கும். கஷ்டங்கள் இருந்தாலும் வாழ்வில் போராட, முன்னேற்றம் அடைய உறவுதான் உறுதுணையாக இருக்கும்.
அந்த உறவு ஒற்றுமையுடன் செயல்படவில்லை எனில் வாழ்வில் போராட்டம் அதிகம். உறவுதான் உணர்ச்சிகளின் கழிப்பிடம். அஃதில்லை எனில் சொல்லவொன ஓர் வெறுப்பு தோன்றும். செயல்களில் கவனமின்மை, செயல் வேகமின்மை தோன்றும். அது ஒரு மன அழுத்தத்தை கொடுக்கக் கூடியது.
நீண்ட நாள் திருமணமின்றியும், உறவுகள் கொள்ளா ஓர் ஆன்மாவின் பார்வையில் ஓர் ஏக்கம் உணர்ச்சிகளின் பிரதிபலிப்பை பார்க்கலாம். பார்வையில் ஓர் கலக்கம் இருக்கும். தெளிவு இருக்காது. செயல்களில் சுறுசுறுப்பின்மை தொய்வு நிறைந்து இருக்கும், எதிலும் கவனங்கள் நிலைபெறாத நாட்களைக் கொண்ட வாழ்க்கையாகிவிடும். அந்த ஆன்மாக்களை ‘கேந்தி’ பிடித்து அலைகின்றது என்பர்.
இந்தசூழலுக்கு ஓர் ஆன்மா தள்ளப்படும் நிலை வேதனையானது. வாழ்வியலில் இருபாலரும் ஒருவரிடமிருந்து மற்றவர் கட்டுப்பாடின்றி விரும்பும்போது தன் உணர்ச்சிகளை தெரிவித்து புரிந்து செயல்படவேண்டிதான் மணவாழ்வியல் நடைமுறை தோன்றியது. அதில் குளறுபடி நடந்தால் அச்சாணி கழன்ற வண்டி போலாகிவிடும் வாழ்க்கை.
மனித மனம் ஓர் குரங்கு. என்பது ஆன்றோர் வாக்கு. அந்தமனம் மண வாழ்க்கையில் தன் உணர்ச்சிகளுக்கு கிடைக்காத சாந்தியை கிடைக்குமிடம் தேடிப் போகின்றது. நாடிவருவதை ஏற்றுக் கொண்டு அமைதியடைகிறது. இதில் ஏது தவறு. இது எவர் தவறு! மனங்கள் குரங்கின் தாவும் நிலையை அடையாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது, ஆண் என்றால் பெண்ணும், பெண் என்றால் ஆணும் ஆகும்.
அதைவிடுத்து அடுத்தவர் மேல் குறைப்பட்டு நன்மையில்லை. ஒருவருக்கொருவர் துரோகம் எனச் சொல்லலாம். ஆனால் ஒருவர் உணர்ச்சிகளை மற்றவர் தீர்த்து வைக்காமல், தனது மணவாழ் கடைமைகளை ஏதோ காரணங்களுக்காக சரிவர செய்யாமல் விட்டுவிட்டு பின்னர் தன்மேல் தவறில்லை, மற்றவர் செய்ததுதான் தவறு, கொடுமை, துரோகம் என சொற்களால் சொல்லி என்ன பயன்.
பூனைக்கு பால் பிடித்தமான ஒன்று. அதை வளர்க்கும் நீங்கள் கடமையுடன் பசியடங்க பால் கொடுத்தால் சரி. இல்லையெனில் பூனை பால் இருக்குமிடம் தேடத்தான் செய்யும். அப்படித் தேடி அதன் பசியைப் போக்கிக்கொண்டால் அது திருட்டுப்பூணை என்ற பட்டம் பெற்றுவிடுகிறது. பூனைக்கு பசி எடுப்பது தவறா! இது யார் தவறு!.
திருத்தப்படக் கூடியவைகள் தவறுகள்- அவை மன்னிக்கப்படலாம், தவறுகளை திருத்த சந்தர்ப்பங்கள் உண்டு, மீண்டும் தவறு செய்யாதிருக்க!
திருத்தப்பட முடியாதவைகள் பாவங்கள்- மன்னிப்பு இல்லை. அதற்கான தண்டனைகளை அனுபவித்துதான் ஆகவேண்டும்.குருஸ்ரீ பகோரா.

1-6.செயல்!

Written by

செயல்!                                                                                                                          

எங்கே! எது! எப்படி! எப்போது! யார், யாருக்குக் கிடைக்க வேண்டுமோ! அங்கே! அது! அப்படி! அவரவருக்கு கிடைக்கும்! அது மட்டுமே கிடைக்கும்! ஆனால் கண்டிப்பாகக் கிடைக்கும்! இது கர்ம செயல் பலன்! வாழ்வும் தாழ்வும் அவரவர் செயலால் கிடைப்பது.
செயலின் விளைவு நன்மையாய் இருக்க நாம் விரும்புகிறோம், நல்ல முடிவாய் நமக்கு பயனுள்ளதாய் மட்டுமே இருக்க ஆசைப்படுகிறோம். செயலின் நேரம், சூழ்நிலை, நாம் செயல்படுத்தும் விதம், செயல்பாட்டிற்கான துணைகள் அமையும் விதம் இதையெல்லாம் பொருத்து செயலின் முடிவுகள் தோன்றும். அது நாம் நினைத்ததற்கு முற்றிலும் வேறாகக்கூட முடியும். நம் நினைவிற்கு சாதகமாக அமையவேண்டும் என நாம் உளமாற நினைத்து செயல்பட்டால் கூட மற்ற காரிய காரணத்தால் மாறும் நிலை ஏற்படும், அது நமது கர்மத்தின் தொடர்பாகக்கூட இருக்கலாம்.
எந்த முடிவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய பக்குவம் நம்மிடையே வேண்டும். அது இருந்தால் முடிவுகளால் பாதிப்புகள் அதிகம் தோன்றாது. பின் விளைவுகள் ஏற்படாது. அப்போதுதான் மாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது எதனால் என்ற ஆராய்ச்சிக்கு நாம் செல்ல முடியும். ஆராய்ந்து மீண்டும் அந்த முடிவை மாற்ற முயற்சிக்கலாம்.
ஒர் முடிவிலிருந்து இன்னொன்று தோன்றும். இதுவேகூட நல்ல முடிவு, நல்ல தோன்றல், நல்ல செயலாக இருக்கலாம். ஆகவே என்ன முடிவு என்பதை பற்றி ஆராயாமல் செயலை செய்யுங்கள். அப்போது தோன்றும் முடிவும் தற்காலிகமானதுதான். ஏனெனில் அதிலிருந்து நாம் மீண்டும் ஓர் முடிவுக்கு வெற்றிக்கு செல்ல விழைகின்றோம்.
காற்று மூங்கிலில் மோதும்போது இசை தோன்றுவதில்லை. அதே மூங்கிலில் துவாரம் ஏற்படுத்தி புல்லாங்குழல் ஆனபிறகு அதனூடே செல்லும் காற்று இனிமையான ஓசையை தருகின்றது. இதுபோல் மனதில் எண்ணங்கள் தோன்றினால் மட்டும் போதாது. நினைத்ததை திட்டம் தீட்டி செயல் வடிவம் கொடுத்தால்தான் அந்த எண்ணம் வெற்றியாக பரிமளிக்கும்.
பாம்பின் பல்லில், தேளின் கொடுக்கில் விஷம் இயற்கையாகவே இருக்கின்றது அதன் பாதுகாப்பிற்காக. அதைப் புரிந்தவர்கள் அதை நெருங்கும்போது கவனமுடன் இருக்கின்றோம். மனிதனிடம் விஷமில்லை. அவன் செயல்களில் பிறரைத் துன்புறுத்தும் விஷயங்கள் இருக்கின்றன.
ஒரு செயல் செய்ய விழையும்போது அந்தச்செயல் மற்ற உயிர்களுக்கு தீங்கு நேராவண்ணம் இருக்க வேண்டும் என்பதைப்பற்றி சிந்தித்து செயலாக்கம் இருக்க வேண்டும் என்பதற்காகவே ஆறாவது அறிவு. அதனால் என்ன பயன்! எவரும் அதை சரியாகப் பயன்படுத்துவது கிடையாது. நம் செயல் எந்த உயிருக்கும் தீமை ஏற்படாமல் இருக்கும்படி எண்ணுவது, திட்டமிடுவது சிறப்பு.
ஓர் வழிப் பயணிக்குத் தாகம் எடுத்தது. அருகில் எங்கும் நீர் இருப்பதாகத் தெரியவில்லை. அவ்வழிவந்த ஒருவரைக்கேட்க அவர் இங்கு தோண்டினால் கிடைக்கும் எனக்கூறினார். உடனே குழிதோண்டினான். நீரில்லை. அருகில் தோண்டினால் அங்கும் இல்லை. பின்அருகில் வேறு இடத்தில் தோண்டினான் அங்குமில்லை. நீர் கானல் நீராகிவிட்டது. சோர்வில் துவண்டு போனான்.
சென்ற பெரியவர் திரும்பிவர நீங்கள் கூறிய இடத்தில் இத்தனை குழிதோண்டியும் நீர் கிடைக்கவில்லை எனக்கோபமாக கூறினான். அவர் சென்னார். அன்பனே! ஒரே குழியில் இன்னும் சிறிது ஆழம் தோண்டியிருந்தால் உனக்கு நீர் கிடைத்திருக்கும். பல குழிகளைத் தோண்டி என்ன பயன். ஒரே குழியில் கவனத்தை நிலைத்திருக்கவிடாமல், இங்கேயா! அங்கேயா! என மனத்தைச் சிதறவிட்டதால் தான் நீர் நிராசையானது என்றார்.
ஓர் பிரச்சனைக்கு யோசித்து தீர்வுகண்டு முடிவு எடுத்தபின் அதிலே கவனம் செலுத்தினால்தான் செயல் வெற்றியைக் காணமுடியும். முன்பே யோசி. யோசித்து முடிவு எடுத்தபின் அதன் மேல் சந்தேகமற்ற நம்பிக்கை வை.
செய்யும் வேலையில் மட்டுமே கவனம் வைத்தால் மனதை ஒருமைப்படுத்த முடியும். எனவே சாப்பிடும்போது சாப்பிடுங்கள், வேலை செய்யும்போது வேலை செய்யுங்கள், பிராத்திக்கும்போது பிரார்த்தனை செய்யுங்கள். ஒரே நேரத்தில் ஒன்றை மட்டும் செய்ய வேண்டும். மன அழுத்தத்திலிருந்து விடுதலை பெறுவீர். அது மகிழ்ச்சியின் ஆணிவேர் ரகசியம்.
நீங்கள் அவசரமாக ஓரிடம் சென்று கொண்டிருக்கையில் பார்வையற்ற வழியில் ஒருவர் பாதை கடக்க உதவி கேட்கிறார்! அல்லது ஒருவர் அவர் செல்லுமிடம் பற்றிய வழிதெரியாமல் தடுமாறுகின்றார்! அவருக்கு உதவுவதா அல்லது வழியில் கிடக்கும் குப்பையை அகற்ற முயலுவதா! இரண்டுமே நல்லச் செயல்கள்தான். எதைச் செய்வது. எது நல்லது! எது சரியில்லாதது! எதையும் அணுகும் முறையில் ஆன்மாக்கள் வித்தியாசப்படுவதால்தான் வாழ்க்கையின் நிகழ்வுகள் மாறுபடுகின்றன்.
ஒரு விஷயத்தை இரண்டு ஆத்மாக்கள் ஒரேமாதிரி பார்ப்பதுமில்லை, செயல் படுவதுமில்லை. அதுபோன்றே இரண்டு ஆத்மாக்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வை ஒரேமாதிரி பார்க்காமல் அந்தந்த ஆன்மாக்களைச் சார்ந்து பார்கின்றோம்.
எந்தச் செயல் செய்வதன் மூலம் நீங்கள் யார் என்பதை வெளிப்படுத்திக் கொள்ளமுடியும். அதற்கு உங்கள் உள்ளே உள்ள நீங்கள் என்னவாக இருக்கின்றீகள், என்ற எண்ணங்கள்தான் உங்கள் செயல்களைத் தீர்மானிக்கும். உங்கள் உள்நிலை மனம் உறுதியான எண்ணங்களைக் கொண்டால் அதன்பின் உங்கள் செயல் எல்லாம் சரியானதாகவே இருக்கும். நாம் செய்தது நம் முன்னோர்கள் செய்தது என ஏழு தலைமுறைக்கு தொடரும் செயல்.
பொழுது வீணே கழிய இடம் கொடுக்கலாகாது. எண்ணங்கள் முடிவாகி செயலுக்கு வரும்போது, அந்த செயலை ஊக்கத்துடனும், மகிழ்வுடனும் அந்த எண்ணங்கள் தோன்றிய போதே பிழைகளின்றி செய்து முடிக்க பழகவேண்டும்.
கர்மம்: ஒருவரது கர்மம் தனது ஏழாவது வாரிசுக்கு செல்லும்போது தான் முற்றிலும் தீர்க்கப்படுகின்றது. ஒரு மனிதனின் கர்மத்தினை 84 பகுதிகளாய் பகுந்திருக்கின்றனர் முன்னோர்கள். ஒரு கரு உருவாக அதில் அதனின் தந்தையின் 28 கூறுகளும், மீதி 56 கூறுகளில், பாட்டனாரின் 21 கூறுகளும், முப்பாட்டனாரின் 15 கூறுகளும், 4ம்வழி தந்தையின் 10 கூறுகளும், 5ம் வழி தந்தையின் 6 கூறுகளும், 6ம் வழி தந்தையின் 3 கூறுகளும், 7ம் வழி தந்தையின் 1 கூறும் இருப்பதாக கொள்கின்றனர்.
இந்த கூறுகளே ஓர் ஆன்மாவின் உடலுக்கும், அமைகின்றது. அவர்களின் செயல்கள், எண்ணங்கள், குணங்கள், நடவடிக்கைகளின் சாயல்கள் சில, பல அதற்குள்ளே இருக்கின்றது. எனவேதான் நாம் இவர், இன்னார் சாயல், இன்னார் குணம், இன்னார் செயல் கொண்டிருக்கின்றது எனக் குறிப்பிட்டு சொல்கின்றோம்.
நம் முன்னோர்களின் நடை, பாவணைகள், செயல்கள், நம் உடம்பில் உள்ளத்தில் தோன்றி நம்மை அவ்வாறே இயங்க வைக்கும்போது, அவர்கள் செய்த கர்மவினைகள் நம்மை ஏன் தொடராது என்பதை நாம் புரிந்து கொள்ளல் வேண்டும். நம்மை மீறிய செயல்கள் நடக்கும் போது, கர்மவினை! என் விதி! என நம்மில் பலர் புலம்புவதை காண்கின்றோம்.
முன்னோர்களிடமிருந்து அவர்களின் மகன், மகனின் மகன் என வழி வழியாய் பழக்கங்கள் நம் தாய் தந்தைவழி நம்மிடம் வருகின்றது. நாம் அந்த பழக்க வழக்கங்களூக்கு அப்படியே வெறுமனே அடிமையாவதை விடுத்து, அது ஏன், எப்படி, எதற்காக நடந்தது என யோசித்து பின் அச்செயலைச் செய்தோமானால் அந்த பழக்க வழக்கங்களும் நம்மிடையே மாறுபட ஆரம்பிக்கும். சிந்தனையின்று அப்படியே தொடர்வதால் செயல்முறை ஓர் எல்லைக் கோட்டை வகுத்து மூளையின் பகுதியில் பதிந்துவிடும். அது ஸ்டீரியோ எனச்சொல்கிறோமே அதைப்போன்று ஓர்முனைப் பட்டதாகவே இருக்கும். சிந்தித்தால் அதைவிட சிறப்பாக விரைவாக செயலிருக்கும்.
உங்கள் குழந்தை வளரும் சூழ்நிலையைப் பொறுத்து பழக்கங்கள் தொடர்ந்து எதிர்காலம் அதைச் சுற்றியே இருக்கும். உப்பு சப்பு இல்லா சாரமில்லா வாழ்க்கை எனும் ஓடத்தில் பயணம் போலாகிவிடும். வேறு சூழலுக்கு சென்றால் அவர்களால் வெற்றி கொள்ளவே முடியாது. பாதி வெற்றி என்பது வெற்றியே அல்ல. அவர்கள் நட்பு, வாழ்க்கை, உலகம் எல்லாம் ஓர் குட்டையில்தான் குழம்பும். அதிலிருந்து மீள மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும்.
தேவையில்லா பழக்க வழக்கங்களை கைவிடல் வேண்டும். சிந்தனை வேண்டும். மனதில் மாற்றம் வேண்டும். உடல் ஒத்துழைக்க வேண்டும். இந்த போராட்டத்தில் அவர்கள் தோற்றால் மீண்டும் அதே பழக்கத்திற்குள் மூழ்கி விடுவர். அதன் பிறகு பெரிய மாறுதல் அரிது.
சுயசிந்தனைகள் வளரும் விதமாக அவர்களை செயல்பட விடுங்கள். மனதில் இருக்கமின்றி இருக்கட்டும். வாழும் உலகை உற்றுப்பார்த்து, வளமுடன் சிந்தித்து அதன் பரிமாணங்களைப் புரிந்து செயல்படட்டும். அந்த அனுபவத்தின் வாயிலாக சிந்தித்த செயல்பாடுகளின் ஆழம் சிறப்பாகும். இதை உடல், மனம் உணர்ந்தால் ஓர் சந்தோஷம் பிறக்கும். அது பரவசநிலையைக் கொடுத்து மீண்டும் மீண்டும் உலக நடப்புகளை கவனிக்க புத்துணர்ச்சியையும் ஊக்கத்தையும் கொடுத்து வாழ்வில் வளம் சேர்க்கும்.
எல்ல கெட்டபழக்க வழக்கங்களும் நிறைந்த ஒருவன் எந்தவித நோய்களும் கஷ்டமும் இல்லாமல் இறந்துவிட்டான். அவன் செய்த கொடுஞ் செயல்களுக்கு எப்படி கர்மபலனின் பாதிப்பு இன்றி இறந்தான் என அனைவருக்கும் சந்தேகம் வந்தது. தேவமுனி நாரதருக்கும் இந்த சந்தேகம் வந்தது. அருளார், அவனின் மனைவி மக்கள் நல்லவர்கள். பாவ புண்ணியத்திற்கு அஞ்சுபவர்கள். அவனுக்கு இப்பிறவில் கஷ்டங்களைக் கொடுத்திருந்தால், அதனால் அவர்கள்தான் துயரமடைவார்கள் என்பதால் அவனுக்கு துயரங்கள் இப்பிறவியில் இல்லை என்றார். நற்காரியங்கள் செய்யும் நல்லவர்களை கர்மபலன் பாதிக்காது. அவர்களை சார்ந்தவர்களுக்கும் அந்த பாதிப்பின் தாக்கம் குறைந்து காணப்படும். அவன் செய்த கர்மத்தின் பலன்கள் அவனை அடுத்த பிறவியில் வந்துசேரும் என்றார்.
எனவே நம் முன்னோர்கள் செய்த கர்மங்களிலிருந்து நாம் விடுபட, நம் வருங்கால சந்ததியினர் விடுபட, நம்செயல் நன்மை பயப்பதாக இருக்க வேண்டும். கர்மம் தீர புண்ணிய நதிகளில் நீராடினால் மட்டும் போதாது. நம் குணநலன்களும் செயல்களும் பிறருக்கு இனிமை தருவதாகவும், துக்கம், துயரம் தராதனவையாகவும் இருக்க வேண்டும்.
அப்போதுதான் தொடரும் கர்மத்தின் ஆதிக்க வேகத்தை, நம் ஆன்மாவோடு முடித்துக் கொள்ள அல்லது முடிந்த அளவு குறைத்துக் கொள்ளமுடியும். நம் சந்ததியினரை அதிகம் பாதிக்காமல் இருக்க நாம் இதை செய்ய வேண்டும். மனம் ஒருநிலைப்படுத்துதல், வழிபாடுகள் கர்மத்தின் ஆதிக்கங்களை நம்மால் முடிந்தளவு குறைத்துக் கொள்ள வழிவகுக்கும்.
தனிமனிதன், குடும்பம், குலம், நாடு, இனம், பூமி என எல்லாவகையிலும் ஏற்பட்ட கர்மாவை நம் செயலால் நல்ல/கெட்ட கர்மாகவாக மாற்ற இயலும். சொல், எண்ணம், செயல் அதனால் வாழ்வில் கர்மா, அதை உடல் உணரும் திறன், இந்த சக்திகளால் பாதிப்பு இவைகளிலிருந்து வாழ்வின் கட்டத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை உனக்கு உண்டு. அதன் அடிப்படையில்தான் வாழ்க்கை. நல்ல செயல்கள், நல்ல கர்மா, நல்ல காரியங்கள் வாழ்வில் சந்தோஷம்! தீயசெயல்கள், கெட்ட கர்மா, கஷ்டங்கள் வாழ்வில்!
கர்மபலன்கள் எல்லோருக்கும் எல்லா பிறவிக்கும் உண்டு. ஒரு மரம் பூ பூத்து, காய்த்து, கனியாகுமுன்பே அந்த தன்மைகள் மரத்தில், செடியில் ஒளிந்திருப்பது போலவே, மனிதன் பிறக்கும்போதே அவன் அனுபவிப்பதற்கு, முன்பு செய்த முற்பிறப்பு வினைகள் மறைந்து கிடக்கின்றன. அதை வாழ்நாளில் அனுபவித்தே ஆகவேண்டும் என்பது நியதி.
கர்ம பலன்களின் இன்னுமொரு பெயர் விதி. வலிமையானது விதி என்பதற்கு நிறைய சான்றுகள் உண்டு. அபிமன்யுவின் மகனான பரீஷித் பாண்டவர்களுக்குப்பின் அரியணையில் ஏறியவன். நல்லவன். மனிதநேயம் மிக்கவன். காட்டில் வேட்டையாடும் போது ஓர் மானைத் துரத்திச் சென்றான். அங்கே முனி ஒருவர் தவமிருந்தார். அவரைப் பார்த்து தான் துரத்திய மான் இப்பக்கம் வந்ததா என் வினவினான்.
அவர் மௌனமாக இருக்கவே எரிச்சலடைந்தவன் அருகில் இறந்து கிடந்த பாம்பை தூக்கி அவர்மேல் வீசிவிட்டு சென்றான். அது அவன் கர்மபலன். அந்த ரிஷியின் மகன் தன் தந்தையை அவமதித்தவன் பாம்பரசனால் தீண்டப்பட்டு 7இரவுக்குள் இறப்பான் எனச் சாபம் தந்தான்.
இதையறிந்த பரீஷித் ஒற்றைத் தூணின்மேல் மாளிகை எழுப்பி 7நாட்கள் தங்க முடிவு செய்தான். மூலிகை வைத்தியர்கள், காவலர்கள் சூழ 6நாள் கழிந்தது. மன்னன் பசியாற பழங்கள் வந்தன. அவைகளை மந்திரிகளுக்கும் கூட இருந்தோருக்கும் பகிர்ந்து அளித்து ஒரு பழத்தை எடுத்து உண்ண ஆரம்பித்தான். புழு வடிவில் உள்ளே இருந்த பாம்பரசன் தீண்ட பரீஷித் இறந்தான். எப்படி பாதுகாப்பாக இருந்தாலும் விதி எந்த வடிவத்திலும் தொடரும் என்பதே இதன் பொருள்.
மனிதன் சுதந்திரமின்றி இருப்பதற்குக் காரணம் அவனின் வினைப்பயன்கள் அவனை அங்குமிங்கும் அழைக்கழிப்பதே! எப்படியிருப்பினும் மனதை ஓர் நிலைப்படுத்தி தியானித்து நல்லகாரியங்களைச் செய்யும்போது அதனால் ஏற்படும் கர்மபலன்கள் நமக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும். எப்போதோ செய்த செயல்களினால் ஏற்பட்ட கர்மபலன்களின் தாக்கத்தை குறைக்கவும் உதவி செய்யும்.
ஒவ்வொரு மனிதனும் அவனுக்குரிய கர்மாக்களை செய்தே தீரவேண்டும். அவனின் முக்திக்கு உபயோகப்படும் வகையில் 48 கர்மாக்கள் ‘அக்னிபுராணத்தில்’ கூறப்பட்டுள்ளன. அவை எல்லாவற்றையும்விட உயிர்களிடத்தில் இரக்கம் காட்டுதல், ஆன்மாக்களின் பிழை பொறுத்தல், எளிமையாக வாழ்தல், பொய்பேசாமை, சுத்தமாகவும் சுறுசுறுப்புடனும் இருத்தல், பிறருக்கு உதவி நன்மை செய்தல், பற்றற்று இருத்தல் ஆகியவைகளை கடைபிடித்தலும் நல்ல கர்மபலன்கள் ஏற்பட வழிவகுக்கும் உத்தமமான கர்மங்களாகும்.
தண்டணை-ஜீவஒளி: வேட்டையாடுவதில் விருப்பம் உள்ள இருவர் வேட்டையாடச் சென்றனர். இவர்கள் வலையில் இரண்டு குட்டி யானைகள் கிடைத்தது. மகிழ்வுற்ற இருவரும் இரண்டு யானைகளையும் கூட்டி வந்தனர். காட்டிலிருந்து நகருக்குவர ஓர் விமானத்தை ஏற்பாடு செய்தனர். விமானி இரண்டு யானைக் குட்டிகளை கொண்டு செல்லமுடியாது. பாரம் அதிகம் ஒன்றை ஏற்றிச் செல்லலாம் என்றான். அவர்கள் சென்றமுறை இரண்டு யானைக்குட்டிகளை ஏற்றிக் கொண்டுச் செல்ல அப்போதிருந்த விமானி ஒத்துக் கொண்டார் என்றனர். மேலும் உங்களுக்கு அதைவிட கூடுதல் பணம் தருகின்றோம் என்றனர். விமானி சம்மதித்தான்
வண்டியில் பாரம் ஏற்றப்பட்டது. சிறிது தடுமாற்றத்துடன் புறப்பட்ட அந்த சிறிய விமானம் சிறிது தூரம் சென்றதும் மிகவும் தடுமாறி கீழே வயல் பகுதியில் விழுந்தது. அப்போது வேட்டைக்காரரில் ஒருவன் கேட்டான், நாம் இப்போது எங்கே விழுந்து இருக்கின்றோம் என்று. அடுத்தவன், போனவாரம் விழுந்தோமே அதற்குப் பக்கத்தில்தான் என்றான். என்ன புத்திசாலித்தனம் இது.
தண்டனை என்பது தவறுக்கு. ஒருமுறை தவறு செய்து அதிக பாரம் ஏற்றி அதனால் கீழே விழுந்தவர்கள் அதை அனுபவமாக வைத்துக் கொண்டு அதற்குத் தகுந்தபடி செயல்பட வேண்டும். அப்படி அனுபவங்களை பாடமாக ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் இப்படி ஒவ்வொரு முறையும் கீழே விழவேண்டியதுதான்.
தவறு செய்தவர்கள் யாராயிருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. தவறுக்கு அளவு கோல் உண்டா! சின்ன தவறா! பெரிய தவறா! என்றொல்லாம் கிடையாது. தவறு என்றால் தவறு. அந்தத் தவறு மற்றவர்களை பாதித்த அளவுவை வைத்து கர்மபலன்களின் அளவீடு  நிர்ணயிக்கப்படுகிறது.
இதைப் பொறுத்தே சிறிய, பெரிய தண்டனைகள். தண்டனைகள் என்பது மீண்டும் அவர்கள் அதேபோன்ற ஒன்றைச் செய்ய முயலும்போது அவர்களின் மன உணர்வை நினைவு படுத்துவதற்காகவும், அவர்கள் செய்த செயல்களின் கர்மங்களை அவர்களே அனுபவிக்கவும், அந்த கர்மங்களின் பலன்கள் அவர்களின் சந்ததிக்கு செல்லாமல் தடுப்பதற்காகவும் தரப்படுகின்றது.
மாண்டவ்யமுனி யோக தியானத்தில் இருந்தார். திருடர்களைத் தேடிக்கொண்டு அவ்வழி வந்த காவலர் தலைவன், முனிவரைப்பார்த்து திருடர்கள் இந்தப்பக்கம் வந்தனரா எனக்கேட்டான். மாண்டவ்யர் ஆழ்ந்த யோகத்தில் இருந்ததால் எதையும் செவியுறவில்லை. திருடர்களைத் தேடிய காவலாளிகள் அருகில் ஓர் ஆசிரமம் இருக்கக்கண்டு அதனுள் சென்று தேடினர். திருடர்கள் கொள்ளையடித்த பொருள்கள் அங்கே இருக்க அதைக் கைப்பற்றினர். ஆசிரமத்தின் பின்னால் ஒளிந்திருந்த திருடர்களையும் கைது செய்தனர்.
காவல்கார தலைவனுக்கு ஒரு சிறிய சந்தேகம். அந்த முனிவர்தான் இந்த கூட்டத்தின் தலைவன் என நம்பி அவரையும் கைது செய்தான். மன்னரிடம் தகவல் அளித்தன். மன்னர் உடனே முனிவரை கழுவில் ஏற்றச் சொன்னன். மாண்டவ்யர் கழுவில் ஏற்றப்பட்டாலும் தன் யோகத்தால் உயிருடன் தன் தியானத்தை தொடர்ந்தார்.
மற்ற முனிவர்கள் இதை அறிந்து மன்னனுக்குத் தெரிவித்தனர். மன்னன் தவறை உணர்ந்து மாண்டவ்யரை விடுதலை செய்து மன்னிப்புக் கோரினார். முனிவர் மன்னரை அனுப்பிவிட்டு தான் செய்யாத குற்றத்திற்கு ஏன் இந்த தண்டனை என தர்மதேவதையைக் கேட்டார்.
தர்மதேவதை நீங்கள் குழந்தையாயிருந்தபோது பட்சிகளையும், வண்டுகளையும் இம்சை செய்ததின் கர்மபலன் இது என்று கூறினாள்.
அப்படித் தண்டணைகளிலிருந்து எதோ ஒரு காரணத்தால் தப்பியவனின் சந்ததி அந்த பலன்களை சந்தித்து பாதிப்புகளை அனுபவிக்கின்றது. ஒருவரின் தவறுக்கு மற்றொருவர் என்னவென்று அறியாமலே எப்படிப் பொறுப்பாகலாம் என நீங்கள் நினைக்கலாம். நீங்கள் உங்கள் தாய்-தந்தையிரின் உயிர்கூறுகளிலும் அவர்கள் அவர்களின் தாய்-தந்தையரின் உயிர் அனுக்களிலுமிருந்தும் வழி வழியாய் பிறப்புகள் இருக்கும்போது அவர்கள் செய்த நன்மை/ தீமைகள் ஏன் தொடரக்கூடாது. கண்டிப்பாய் தொடரும்.
நன்மைகள் தொடர்ந்தால் சந்தோஷப்படும் நாம் தீமைகளுக்கு காரணம் புரியாத நிலையில் ‘யார் செய்த பாவம்’ என வருந்துகிறோம். முன்னோர்கள் செய்த பாவத்திற்கு தண்டனைகளை அவர்களே அடைய முடியா நிலையில் அது வழிவழியாய் தொடர்கிறது.
எனவே தவறு செய்யும்போது தெரியாவிட்டாலும், பின்னர் அது புரிந்தால் அதை நினைத்து வருந்தினாலே குற்றத்தின் பாவங்கள் விலக வழித்தெரியும். அதற்கான தண்டனையை அவர்கள் ஏதோ ஒரு வடிவில் அடைந்துவிடுகின்றனர். மனதில் ஆன்மீகத்தின் உதவியோடு செய்த தவறுகளுக்கு பிராயசித்தம் தேடி சந்ததி நன்றாக இருக்க விரும்பி வேண்டி பிரார்த்தனை செய்கின்றனர். செய்த பாவச் செயலின் கடினம் பொறுத்து பாவங்களுக்கு தீர்வை அவர்கள் அனுபவித்த பின்னும் சந்ததிக்கு தொடரலாம்.
இந்த தொடர்ச்சியிலிருந்து இறைக்கும் விதிவிலக்கு இல்லை. உயிர்களுக்கு எத்தனையோ கொடுமைகள் செய்த மானிட, அசுர பிறவிகளை இறைசக்திகள் அழித்தாக நாம் புராணங்கள் வாயிலாக அறிகிறோம்.
மற்ற உயிர்களுக்கு துன்பம் கொடுத்து, செய்த பாவங்கள் அளவில்லாது போகும்போது எதற்கும் ஓர் எல்லையுண்டு என்ற பொது நியதிப்படி, கொடியவர்களுக்கு ஒரு படிப்பினை தண்டணை கொடுத்து அவர்களிடமிருந்து மற்றவர்களை காக்க ஓர் உயர் சக்தி என்ற முறையில் அந்த மானிட, அசுர பிறவிகளை அழித்த நிலையில், உயர் சக்தியாயிருந்தாலும், பொது நன்மைக்காக செய்திருந்தாலும், அழிவு இயற்கையாக நிகழாமல் நடைபெற்றதாலும் அவர்கள் செய்த செயலுக்கான தோஷங்கள் உண்டு.
அதுதான் பிரம்மஹத்தி தோஷம். அது இறையாக இருந்தாலும் அந்த தோஷத்தின் பாதிப்பு உண்டு என கூறுகிறது சாஸ்திரங்கள்.
அதிலிருந்து விடுபட அவர்கள் மனதை ஒருமைப்படுத்திய நிலையில் பொதுநன்மைக்காக தீமைசெய்த தங்கள் செயலின் பாதிப்பிலிருந்து விடுவித்து, தங்களை காப்பாற்ற அருள்புரிய வேண்டும் என இறையிடம் வேண்டுதல் பிரார்த்தணை செய்கின்றனர். இராமாவதாரத்தில் இராவணனை வதம் செய்து திரும்பும் வழியில் தோஷங்கள் தங்களை தொடர்வது கண்டு இராமர், சீதை, லட்சுமணன் ஆகியோர் சிவபூஜை செய்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
எனவே செய்யும் தீச்செயலுக்கு எந்த காரணத்தினால் எந்த சூழ்நிலையில் செய்திருந்தாலும் அதன் பாதகபலன்கள் உங்களையோ, உங்கள் வம்சத்தையோ கண்டிப்பாய் வந்து சேரும். ஆன்மாக்களே இதைப் புரிந்து செயல்படுங்கள். ஒரு செயல்காரியம் செய்யுமுன் அதனால் யார் யாருக்கு என்ன துன்பம், பாதிப்பு என யோசனை சிறிதளவு செய்து, செய்யப்போகும் செயல் சரிதானா என ஒருமுறைக்கு சிலமுறை சிந்தித்து தெளிவடைந்தால் செயலின் தாக்கம், பலன் உங்களுக்குப் புரிந்துவிடும். அதன் பலன் உங்களின் சொந்தங்களுக்கு என நினைத்தால் செயலின் வேகம் குறையும். செயல் இல்லாமல்கூடப் போகலாம்.
வேறொருவரால் பாதிக்கப்பட்ட நீங்கள் அவருக்கு எதிர்மறையாக செயல்பட நினைத்து, பின் அதன் கர்மபலன்களை நினைத்து விட்டுவிட்டால், உங்களுக்கும் உங்கள் வம்சத்திற்கும் நல்லது. உங்களை பாதிப்புக்கு உள்ளாக்கியவருக்குரிய தண்டணை சரியான காலத்தில் கொடுக்கப்பட்டுவிடும். நீங்கள் நிச்சயம் அப்போது உணர்வீர்கள். அதைத்தான் நாம், செய்த பாவங்களுக்கு இப்போது அனுபவிக்கிறான் என்று பலர் கூறுவதை கேட்டிருக்கின்றோம்.
ஆன்மாவிற்குரியவர்களே நீங்கள் எத்தனை எத்தனை சேர்த்து வைத்தாலும், சம்பாதித்திருந்தாலும் நீங்கள் அனுபவிப்பது தவிர மற்றவை என்னாகிறது. சற்று யோசியுங்கள். நல்வழியில் சேமிக்கப்படும் பொருள் நல்வழி செலவாகி நன்மைபயக்கும் நல்ல கர்மாக்களாகிறது. அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. பொருள் அதிகம் இருந்தால் நியாயம், தர்மம் கெட்டு விடுகின்றது. பணத்தின் ஆதிக்கம் உங்களிடையே தோன்றி அதனால் எதையும் செய்துவிடலாம் எனநினைத்து அவ்வழியில் பயணிக்கின்றீகள்.
உங்களின் அளவிற்கு அதிகமான பொருள் குவிப்பு, அந்த வேர்வை உழைப்பின் வெற்றியறியாமல் உங்கள் சந்ததியருக்கு சென்று, அவர்களுக்கு பலதவறான பாதைகளை காட்டி அவர்களை பாவங்களை செய்யத்தூண்டும். சேர்த்த பொருள்கள் மூன்றாவது தலைமுறையில் மாற்றங்கள் நிகழும் என ஆன்றோர்கள் கணக்கிட்டுள்ளார்கள்.
எவ்வளவு பொருள்கள் குவிந்திருந்தாலும் மூன்று/ நான்காவது தலைமுறையில் அவைகள் பிளவு கண்டு மாற்ற நியதிகளுக்கு உட்படுகின்றது. அந்த தலைமுறையினர் என்ன செய்வார்கள் என்பது உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. பின் ஏன் எல்லோருக்கும் சேர்ந்து பாவபலன்களை சேர்த்து வைக்க ஆசைப்படுகின்றீர்கள். நீங்கள் உங்கள் குடும்பம் என நிறைவு கொண்டு வாழுங்கள்.
மன்னர்கள், அரசர்கள், சிற்றசர்கள், திவாண்கள், நிலச்சுவான்தார்கள், பெரும் தனவந்தர்கள், முதலாளிகள், பணக்காரர்கள் எல்லாம் எங்கே போயினர். அவர்களின் வம்சாவளியினர் தற்போது எங்கே எப்படி சிதறி இருக்கின்றார்கள் போன இடம் எதுவும் தெரியாது. இப்படித் தெரியாதிருக்கும் ஓர் நிலைக்கு அவர்கள் செயலுக்கு நீங்கள் ஏன் பாவங்களை கொண்டு சேர்க்கின்றீர்கள். போதும் என்கிற மனமே பொன்  விளையும் மனம். நல்ல நினைவுகளை தோற்றிவித்து நல்ல செயல்களை செய்விக்க உதவும். தீய எண்ணங்கள் தோன்றாததால் தீய செயல்களில்லை.
உங்கள் குடும்பத்திற்கு, வம்சத்திற்கு, எந்த தீவினை கர்மபலன்களில்லை என்பது உங்கள் மனதில் ஓர் ஒளியைத் தோற்றுவிக்கும். அந்த ஜீவ ஒளியை நீங்கள் உணரலாம். உங்களின் நிறை குறைகளைக் கண்டு உங்களிடையே மாற்றங்கள் நிகழ்ந்து ஒரு சிறந்த மனிதராக மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக மாறுவீர். இந்த மாற்றம் நடந்தது நன்றாகவே நடந்தது, நடக்க இருப்பதும் நன்றாகவே நடக்கும் என்பதை உங்களுக்கு புரியவைக்கும்.
அந்த ஜீவஒளி உங்களிடையே ஓர் பிரகாசத்தை ஏற்படுத்தும். அதைக் கண்டு ரசியுங்கள். அதனுடன் ஒன்றி இன்பமடையுங்கள். வாழ்வின் வெற்றி ரகசியத்தை கண்ட நினைவு உங்களை வாழ்வின் வெற்றிப் பாதையில் வீரநடைபோட்டு செம்மையாக வழிநடத்தும்.
சாஸ்திரங்கள் என்ன சொல்கிறது என்றால் ஜீவஒளி காண நீ துன்புற்றாலும் அடுத்தவன் இன்பமுற வேண்டும் என நினைக்கும் உத்தமனாயிருக்க வேண்டும் என்பதில்லை! அதற்காக நீ இன்பமுற அடுத்தவன் துன்புற்றாலும் பரவாயில்லை என நினைக்கும் அதமனாயிருக்காதே! பின் எவ்வாறு இருக்கவேண்டும்!  நீ இன்புறுதல் போன்றே ஒவ்வொருவரும் இன்பமுற வேண்டும் என நினைக்கும் மத்திமன் போல் இருக்கவேண்டும். இதுவே மனிதநேயபண்பு.
நீ துன்புற்றபோது யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று சிலர் நினைப்பதுபோல நினையாமல், உண்மையாகவே நீ இன்புற்ற இன்பங்களை அனைவரும் அடையவேண்டும் எனக் கலப்படமில்லா தூயச் சிந்தனையோடு நீ நினைக்கும் போது  உன்னுள் ஓர் மகிழ்ச்சி, ஒளி உணர்வு தோன்றி உடலில் பரவும். அது ஆனந்தமயமானது.
செயல் கர்மம்: இப்படி செயல் தொடரும்போது அது கர்மத்தின் கையில், முயற்சி மட்டும் நம்முடையது. இதுதான் கீதா உபதேசமாக அர்சுனனுக்கு கிருஷ்ணரால் சொல்லப்பட்டுள்ளது.
என் எதிரே இருப்பவர்கள் என் உறவினர்கள், நண்பர்கள், சொந்தக்காரர்கள், இவர்களிடம் சண்டையிட்டு இரத்தம் கண்டு வெற்றி கொண்டு என்ன செய்யப் போகிறேன். இவர்களை எல்லாம் இழந்தபின் அடையும் வெற்றியில் என்ன சந்தோஷம், சுவராஸ்யம் இருக்கப் போகிறது என என்மனம் மயங்குதே! என்ற அர்ச்சுனனுக்கு இது உன் கர்மத்தின் விளைவு. இன்று இதை நீ செய்கிறாய். இதனால் ஏற்படும் முடிவுகளுக்கு, நன்மை தீமைகளுக்கு நீமட்டும் பொறுப்பாக மாட்டாய்! இந்தபிறவியில் உன் செயலுக்கு உறுதியாக்கப்பட்ட கர்மவினை.     
இதற்காக மனம் கலங்காதே! மேலும் இந்த உயிர்களும், இந்த கர்மங்களும், செயல்களும், முடிவுகளும் எங்கிருந்து வந்தனவோ, அங்கேயே, அப்படியே செல்கின்றது, அது மீண்டும் மீண்டும் வேறுவடிவத்தில் கர்மபயன் தீரும்வரை தொடரும். ஆகவே நீ தயங்காதே! கர்மத்தின் பாதையில் நீ ஒரு சிறு செயலை செய்து அதற்கு துணை போகின்றாய்! அது தவிர்க்க முடியாதது.
எனவே முடிவு என்னெவென்று உனக்குத் தெரிந்திருந்தாலும், உனக்கு என ஓர் செயல் இடப்பட்டுள்ளது, அதை நிறைவேற்றுவது உன் கடமை. எனவே மன உறுதியோடு உனக்கு இடப்பட்டுள்ள செயலை சரிவர, வெற்றிகரமாக செயல்பட சிந்தனையுடன் தீவிரமாக முயற்சித்து செயல்படு. செயலை மட்டும் செய். முடிவைப் பற்றி கவலைப்படாதே! எனக்கூறியது, என்றும் எல்லோருக்கும் பொதுவாகச் சொல்லியதுதான். அனைவரும் அவரவர் கடமையை சரிவர செய்வதற்குத்தான்.
செயல் குழப்பம்: இதை நண்பர்கள், உறவினர்கள், அறிந்தவர்கள் செயல்பாடு என்றால் குறை சொல்லி குழப்புவது அல்ல நமது வேலை. உற்சாகப் படுத்தி ஊக்கப் படுத்துவதுதான் சிறப்பு. அவரவர் செயல் அவரவர் கர்ம வினைக்கு ஏற்ப மாறும். அவர்தம் செயல்களை நாம் தடுத்து அதில் குளறுபடிகள் செய்து, அவர் செயல்பாடுகளில் கவனம் சிதைந்து அதிக துன்பமான முடிவுகள் ஏற்பட்டு, அதிலிருந்து வேறு திட்டங்கள், செயல்கள், முடிவுகள் என அல்லல் படுத்தவேண்டாம்.
ஓர் செயலை எவ்வாறு செயல்படுத்துவது என்று கவலை பட்டால் அதனால் உண்டாவது வீண்பயம். மேலும் அதனால் ஏற்படுவது பலவீனம். அந்த பலவீனம் நமது மனதில் குழப்பமான எண்ணங்களையும் புதுப் புது சந்தேகங்களையும் கிளப்பிவிடும். அது நிச்சயம் தோல்வியில்தான் முடியும். இதற்குப்பின் நாம் குழப்பத்திலிருந்து தெளிவடைந்து சகஜ நிலைக்கு வந்து மனம் அமைதி கொண்ட பிறகுதான் நம்மால் மீண்டும் சிறப்பாக சிந்தித்து நல்ல செயல் பாட்டுக்கான வழிமுறைகளை காணமுடியும். அதற்கு முன் ஓர் தோல்வி தேவையா?
வெற்றியிலிருந்து மாறுபட்டதால் எல்லாம் தோல்வியாகி விடாது. சிறு, சிறு மாற்றங்களும் நாம் நினைத்த செயல் வெற்றிக்கு அருகில் சென்றிருக்கும், அதை கண்டு பிடித்து நமது வெற்றியை முழுமையாக்கிக் கொள்ளவேண்டும். ஓர் செயலை செய்யும்போது அதனால் ஏற்படும் நிகழ்வுகளால் ஒருவன் கஷ்டப்படலாம். ஆனால் அந்த செயலை செய்ய ஆரம்பித்தபின் அதனால் அவமானம் என்று ஒருபோதும் நினைவு கொள்ளக்கூடாது. செயலில் தாக்கங்கள், குழப்பம் ஏற்பட்டு வெற்றி பாதிக்கும்.
எந்தசெயலையும் தள்ளிப்போடக்கூடாது. ஏனெனில் அது மனதில் ஓர் இடத்தில் இருந்து கொண்டே மன அழுத்தத்தை அதிகரித்துக் கொண்டிருக்கும். ஒரு கோடு வரைவதாக இருந்தாலும் அடுத்த புள்ளி நேராகவா, வளைவாகவா எனதீர்மானித்து மூளை தன் செயலைச் செய்தால்தான் நம்மால் அந்த கோடு நேர் கோடாகவோ, வளை கோடாகவோ போடமுடியும்.
வாழ்க்கையில் செய்ய வேண்டிய செயலை உடனுக்குடன் தீர்மானம் செய்தால்தான் வாழ்க்கை நகரும். அப்படி செய்யாமல் தள்ளிப் போடுவதால் நமக்கு மன அழுத்தம் ஏற்படும். அதைத் தவிர்க்க உடன் செயல்படுவது ஆரோக்கியமான சந்தோஷத்திற்கு அடிப்படை. எந்தச் செயலையும் பலனை முடிவை எதிர்பார்க்காமல் நல்ல குறிக்கோளுடன் செயல்பட்டால் ஏற்படும் பலன், முடிவு சாதகமாக இருக்கும்.
பலனை எதிர்பார்த்து செயல்படும்போது கவனம் சிறிதளவாவது திசை திரும்ப வழியிருப்பதால் நமது குறிக்கோளை நாம் அடைவதில் இடையூறுகள் ஏற்படும். எனவே தீவிர குறிக்கோளுடன், ஒரு வேடன் கவனம் திரும்பாமல் குறிவைப்பதைபோல முனைந்து செயல்பட்டால் பலன் நிச்சயம்.
தவறு செய்பவர்கள் அதை நினைத்து தவிப்பதால், அவர்கள் அதுபோன்ற தவறுகளை இனி செய்யக்கூடாது என முடிவு எடுத்து விரைவில் பக்குவமான நிலைக்கு வந்து விடுகின்றனர். தங்களை நல்லவர் என நினைத்துக் கொண்டிருப்பவர்கள், தாங்கள் தவறு செய்யமாட்டோம் என்ற நினைவில், செய்யும் தவறுகளை கவனியாமல் இருப்பதால் அவர்களால் பக்குவமான நிலைக்கு வரமுடிவதில்லை.
ஒவ்வொரு மனிதனிடமும் எல்லாவகை குணங்களும் செயல்களும் நிறைந்திருக்கும். அவைகளில் உனக்கு பிடித்தவற்றை எடுத்துக்கொள். பாராட்டு. பிடிக்காதவைகளை விட்டுவிடு. அப்போது எல்லோரும் உன்னை நேசிப்பார்கள். அன்புடன் இருப்பார்கள். சந்தோஷம் நிறையும் உன் வாழ்வில்.
தனக்கு என இல்லாமல், தன் குடும்பத்தினருக்கு என இல்லாமல், உற்றார் உறவினரென இல்லாமல் பிறர் நலம் கருதி செய்யும் செயல் எல்லாவற்றிலும் மேலானது. தன்னலமற்றது. கீதையின் சாரமே, “கடமையை ஒழுங்காகச் செய்வதும், எவ்வித பலனையும் எதிர்பாராமல் செய்வதும்” ஆகும்...  
மலர்கள் எல்லாம் அழகுள்ளது, அழகான நிறமுள்ளதாயிருந்தாலும் மணம் உள்ள மலர்தான், மணம் பரப்ப முடியும். தென்றலில் அதன் நறுமணத்தைக் கலக்க முடியும். அதைப்போல்தான் நம் மனமும் மகிழ்ச்சியுடன் இருந்தால் நம்மை சுற்றியிருப்போருக்கு பரவச் செய்து அவர்களையும் மகிழ்ச்சிக் கடலில் நீந்தச்செய்ய முடியும்.
ஓர் தாய் தன் குழந்தைதனை அன்புடன் நேசித்து அதற்கு தேவையானவைகளைப் பிறரைக் கேட்டாவது பக்குவத்துடன் செய்கின்றாள். பிள்ளை பிற்காலத்தில் தனக்கு உதவும் என நினைத்து செயல்படுவதில்லை. அப்படி பலன் கருதி அவள் செயல்பட்டால் சரியாக செயல்படமுடியாது. அவள் தாய் என்ற புனித ஸ்தானத்தை இழந்துவிடுவாள். ஏனெனில் அவளது கவனம் எதிர்கால பலனில் இருக்கும். செயலில் இருக்காது. ஏனோ தானோ என்றிருக்கும்! அது வியாபாரத்தன்மை கொண்டது ஆகிவிடும்.
உன்னைச் சுற்றியுள்ளவர்கள் சந்தோஷமாயிருக்கின்றார்கள் என்றால், அவர்கள் அவர்களைச் சுற்றியுள்ள எல்லாவற்றின் அழகையும், தன்மைகளையும் பார்ப்பதற்கும், நல்ல செயல்கள், செய்வதற்கும் கற்றுக்கொண்டார்கள் என்று அர்த்தம். உன் உள்ளே உள்ள திறமையை நீ உணராமல் உன்னிடம் உள்ள அழகு, நல்ல திறமைகளைபற்றி தெரியாதபோது, உணராத நிலையில் எப்போதும் உன்னால் உனக்கு வெளியே உள்ளவற்றைத்தேடி அறிந்து கொள்ள முடியாது.
தன்னைத்தானே அறியாதவன் சோம்பேறி. தன்னை அறிந்தவன் சும்மாயிருப்பதில்லை. கல்லைப்போல் உணர்வற்று கிடப்பதில்லை. இடையறாது உழைப்பவர் ஆவர். எப்போதும் சூழலை உணர்ந்து புரிந்து செயல்கண்டு சந்தோஷம் அடைவர்.
ஒரு பாத்திரத்தில் பாதியளவு பால் எடுத்து அதில் நீர் கலந்தால் பாலில் நீர் கலக்கும். அதே அளவு நீரில் பால் கலந்தால் நீரில்தான் பால் கலந்ததாகக் கொள்ளவேண்டும். பாலின் தன்மை அறியமுடியாது. அதுபோல தீயவர்கள் சேர்க்கையால் நல்லவன் கெட்டவனாவான். நல்லவன் சேர்க்கையால் கெட்டவன் நல்லவனாவான் என்பதை உணரலாம்.
தீயவர்கள், கயவர்களின் செயல்களை கண்டு ஒதுங்குங்கள். அவர்களைவிட்டு விலகிச் செல்லுங்கள். இல்லையேல் அவர்களோடு சேர்ந்து உங்களையும் எடை போடுவார்கள். “பூவோடு சேர்ந்த நாறும் மணம்பெறுவது இயற்கை.” சேற்றுடன் இருக்கும் கயவர்களுடன் இனையும்போது நீங்கள் சேறாகத்தான் மதிப்பிடப்படுவீர்கள்-குருஸ்ரீ பகோரா.

1-5.நிஜம்!

Written by

நிஜம்!                                                                                                                

வாழ்க்கையில் குறிக்கோள் எதுவும் இல்லாதவர்கள் எவ்வழி சென்றாலும் ஒன்றுதான். திரும்பத் திரும்ப ஒன்றை சொல்வதாலும், கேட்பதாலும், குறிப்பிட ஒன்றை நிஜம் என நம்புவதாக தொடர்ந்து நினைத்தாலும், அதை நம் மனம், நம் உடல், நம் மூளை ஏற்றுக் கொள்ளும். அது அப்படியே நம்முள் பதிந்துவிடும். அதன் பின் அதில் மாற்றங்கள் கொண்டுவர, உண்மைகளை ஆராய்ந்து அந்த மனதிற்கு தெளிவாக புரிய வைத்தால் மட்டும்தான் அது அதை தவறு என ஏற்றுக்கொள்ளும். ஆகவே ஒன்றை நம்புமுன் நிஜம் என முடிவு எடுக்குமுன் தீவிரமாக ஆலோசனை செய்து அதன் நம்பகத் தன்மையை புரிந்து அதை ஏற்றுக் கொள்ளுங்கள். இது உங்களுக்கும் இனி உங்கள் செயல்பாட்டிற்கும் சிறந்த செயல் வழிமுறை!
“வாழ்வின் முடிவிலிருந்து எந்த வைத்தியத்தினாலும், வைத்தியராலும் காப்பாற்றமுடியாது. நீ சேர்த்த எதிலிருந்தும் ஓர் குன்றின்மணி அளவுகூட எடுத்துச் செல்லமுடியாது. நீ இப்பூவுலகிற்கு வரும்போது எதையும் கொண்டுவரவில்லை, நீ பூவுலகைவிட்டு செல்லும்போது, ஏதும் கொண்டு செல்லப் போவதுமில்லை, இது சத்தியமான யதார்த்தமான நிஜம்.”
இறைவன் எங்கும் நிறைந்திருக்கின்றான் என்பது உண்மை. அத்துனைபேரும் நம்பினாலும் பார்த்தவரில்லை. ஆனால் உணர்ந்தவர்கள் உள்ளனர். பாலில் தயிர் இருப்பது கண்ணுக்குத் தெரியாத உண்மை. அதே தயிரில் வெண்ணெய்யும், வெண்ணெய்யில் நெய்யும் இருப்பதும் கண்ணுக்குப் புலப்படாத உண்மைகள். ஆனால் அவைகள் ஒன்றினுள் இருப்பது நமக்குத் தெரியும். தெரிந்த ஒன்றினுள் தெரியாத ஒன்று இருக்கிறது என்பதை நாம் புரிந்து வைத்துள்ளோம். அதுபோலவே இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளான். பாலில் ஒன்றிற்குள் ஒன்று இருப்பதைப்போலவே பாவத்திற்குள்ளும் பலன்கள் நிறைந்திருக்கின்றன. செயல் பாவத்திற்கேற்ப பலன் ஒருநாள் வந்துசேரும் என்பதும் நிஜம்.
ஓர் உடலின் அழகு அழியக்கூடியது, செல்வம் செல்லக்கூடியது, தங்கம் தங்காதது, தங்கக் கூடியது நல்ல வினைப் பயன்கள் மட்டுமே! இதுவும் நிஜம். வாழ்வில் இன்பமும், துன்பமும் இரண்டுற கலந்தது. எந்த ஓரு ஆன்மாவும் இறுதிவரை இன்பங்களிலேயே திளைத்தாகவே, துன்பத்திலேயே துடித்ததாகவோ இல்லை. துன்பத்தின் முடிவில் இன்பம் காத்திருக்கும். இன்பத்தின் முடிவில் துன்பம் நிச்சயம் நிலை கொண்டிருக்கும். இதுவும் நிஜம். உன்னதமான நிகழ்வுகள் ஒளி, இருள் என்ற இரண்டிலும் நடைபெறுகின்றது. மண்ணில் இருட்டில் மறைந்த விதை முளைத்து செடியாக, மரமாக ஒளியில் வளர்கிறது. இருளில் வேர்பரப்பி வெளியில் பூத்து, கனிந்து தன் கடமைதனை செய்கிறது தாவரங்கள். ஆன்மாவின் உயிர் கரு இருளில் உதித்துதான் வெளிச்சத்துக்கு வருகின்றது. ஒரு ஜீவ சக்தியான ஆன்மாவிற்கு இருளும் ஒளியும் நிஜதேவையான ஒன்று.
சீதம்-நீர், உஷ்ணம்-அக்னி இனைந்து உலகை இயக்குகின்றது. இந்த கலவையில்தான் உயிர்  இனங்கள் உருப்பெற்று வளர்கிறது. இந்த இரண்டின் மாறுபட்ட கலவையே நமக்கு ஏற்படும் பருவகால மாற்றங்கள். கர்பத்தின் நீரில் விந்துவின் சேர்க்கை என்பது இவற்றின் சங்கமம். ஆணும் பெண்ணும் இனைந்து தங்களை நிறைவு செய்து கொள்ள வேண்டும் என்பது சத்தியத்தின் கட்டாயம். இந்த உண்மை மகிழ்வுக்கு ஆதாரம். சீதமும் உஷ்ணமும் அனைத்து தாவரங்களிலும் கலந்திருக்கின்றது. பசுவின் பால்-நீர், பாலிலிருந்து உருவாகும் நெய்- உஷ்ணம். இரண்டும் சேர்ந்து நம்மில் தட்பவெட்பத்தை சீராக வைக்க உதவுகிறது. நல்லெண்ணங்கள் தோன்ற இவைகள் ஒத்துழைக்கின்றன என்பது மறுக்கமுடியாத நிஜம், உண்மை.
இந்த பெருமையை உணர்ந்து மாறுபட்ட சூழல், இயல்புகளில் பிறந்தவர்களான ஆணும்(தணல்-உஷ்ணம்) பெண்ணும்(நீர்-நெய்க்குடம்) இனைந்தால் அருமையான வாழ்வை சுவைத்து ஆனந்த சந்தோஷத்தை அனுபவிக்கலாம் என்கிறது சாஸ்திரங்கள்...குருஸ்ரீ பகோரா.

1-4.அதிர்வுஉணர்வுகள்!

Written by

அதிர்வுஉணர்வுகள்!                                                                                                  

ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் நம்மை சுற்றியுள்ள அண்டைவெளியில் ஏற்படும் அதிர்வலைகளே காரணம்! அவை உதவியும் புரிகின்றது. இந்த அலைகள்தான் ஒலி சப்தங்களை நம்மை கேட்க உதவி புரிகின்றது. ஒளியை, செயல்களைப் பார்க்க உதவுகின்றது.
இந்த அதிர்வலைகள் ஓர் ஊடகம். நம் சாதனைகள் கண்டுபிடிப்புகள் எல்லாம் இதன் ஒத்துழைப்பால்தான். ஆக எல்லா நிகழ்வுகளுக்கும் காரணமான இந்த அதிர்வலைகளை ஒருங்கினைத்து நாம் பல செயல்கள் புரியலாம்.
புவியில் பல நிகழ்வுகள் 108 என்ற அடிப்படையில் அமைந்துள்ளது.                          

ஆன்மா

பிராயாணம் 108 கட்டங்கள்

உணர்வுகள்

கால அளவு 108 (கடந்த-36, நிகழ்-36, எதிர்-36)

உடல்

மர்மஸ்தானங்கள் 108

உபநிஷத்துக்கள்

108 கட்டங்கள்

சூரியன் விட்டம்

புவியைப்போல் 108 மடங்கு

வேதங்கள்

உட்பிரிவுகள் 108 (ரிக்-10, யஜுர்-50, சாமம்-16, அதர்வண-32

ஸ்ரீ எந்திரம்

மனித உடலை வடிக்கும் புள்ளிகள் 108 (54x2-ஆண்,பெண்)


நம்மை சுற்றியுள்ள உணர்வுகளின் கால அளவு-108 உணர்வுகளில் கடந்தகாலம்-36, நிகழ்காலம்-36, எதிர்காலம்-36 என்ற விகிதத்தில் நிறைந்துள்ளது. இதிலிருந்துதான் நாம் கடந்த, நிகழ், எதிர் கால உணர்வுகளை அதிர்வு அலைகள் மூலம் புரிந்து கொள்கின்றோம்.
இறந்த, நிகழ், எதிர் கால அதிர்வுகள் நம்மை சுற்றியுள்ளன என்பதற்கு சான்றாக கோவில்களில் ஏற்படும் அதிர்வுகள் அங்கு செல்லும் அன்பர்களுக்கு கிடைக்கின்றது. அங்கு செல்பவர்களுக்கு எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் என்றவிகிதத்தில் ராஜகோபுரங்கள், மசூதி கோபுரங்கள், சர்ச் கோபுரங்கள் அமைக்கப் படுகின்றன. அடிப்பகுதி அகன்று அதிர்வுகளை உள்வாங்கிக் கொண்டு மேல்பகுதி குவிந்து இருப்பதாலும், கலசங்கள் உதவியோடும் அதிர்வுகளை பரப்பியும், பெற்றுக்கொண்டும் இருக்கின்றது.
ஒருவர் எல்லாவகை பிரச்சனைகளோடு போய், அந்த சூழலில் ஒன்றியிருந்து மனம் சலனமின்றி இருந்தால், அவர்தம் பிரச்சனைக்கு தீர்வாக தெளிவான ஓர் சிந்தனை, எண்ணங்கள் தோன்றும். அவர் பிரச்சனைகள் பற்றி அங்கே நினைவு கொள்ளும்போது எழுகின்ற அதிர்வுகள் அங்கே பரவி, எப்போதோ தோன்றி முன்பே பரவிக்கிடக்கும் தீர்வலைகளிலிருந்து தெரிவு செய்து நம் தேவைக்கு உரியன நம்மை வந்து அடைகின்றது. நம் மனம் அமைதி கொண்டு தீர்வுகண்ட நிலையில் நிம்மதியடைந்து வெளியில் வந்து செயல்பட்டு உண்மையான தீர்வுகளை அடைந்து சந்தோஷம் அடைகின்றோம்.
உடலின் ஆன்மா அந்தந்த சூழலில் லயித்துவிடுவதால் நம் பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வு கிடைத்து விடுகின்றது.
பொது உணர்வு அலை: கடந்த கால நிகழ்வுகளினால் நம்மை சுற்றியுள்ள கடந்த கால உணர்வுகளால் ஏற்படும் தாக்கம், அதன் சாதக பலன்களை புரிந்து கொண்டு நிகழ்கால, எதிர்கால, சிந்தனைகளில் நாம் மூழ்கினால் அதனால் நம் வெற்றி பாதிக்கும். இன்பம் மறையும், துன்பம் தோன்றும். நிம்மதி அழியும்.
மனிதனால் முடியாதது அவனது கடந்த இழந்த காலத்தை மீண்டும் பெறுவது. இன்றைய நிகழ் நாளைய கடந்த காலம்.  நிகழ் காலத்தை வீணடிக்காதீர்கள். அவர்களுக்கு உண்மையை உணர்த்துங்கள்.
எனவே இது போன்று கடந்த, நிகழ் கால உணர்வுகளால் பாதிக்கப்பட்ட உங்கள் சகோதர, சகோதரிகளுக்காக, நண்பர்களுக்காக, உற்றார் உறவினருக்காக, உங்களுக்கு தெரிந்தவர், தெரியாதவர், அறிந்தவர், அறியாதவர் யாராக இருந்தாலும் அவர்களுக்காக அவர்களால் உங்களுக்கு எந்த பலனுமில்லை என்ற நிலையிலும் கூட வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் அந்த ஆத்மா நலமடைய வேண்டும், அந்த துக்கத்திலிருந்து விடுபடவேண்டும், என்று எந்த சுயநலமும் இன்றி நீங்கள் நினைத்தால் அந்த நல்ல எண்ணம் கொண்ட அதிர்வலைகள் புவியில் கலந்து அவர்களைச் சேரும்,
ஆலயத்தின் மணி ஒலியின் நாதம் வெகுதூரத்திற்கு கேட்கும்போது அதன் இடைப்பகுதியில் உள்ள உள்ளங்களில் ஆன்மீக சிந்தனை எழுந்து, இது பூஜை நடக்கும் நேரம் என்ற உணர்வை ஏற்படுத்துகின்றது. ஒலியலைகளைப் போலவே நினைவலைகளும் ஒருமித்த மனதுடையோரை ஒன்று சேர ஈர்க்கும் வல்லமையுடையது.
இதே போன்று பலருடைய நல்ல எண்ணங்கள் ஒன்று சேர்ந்து மிகப் பெரிய அதிர்வலையாக மாறி யார் யார் நலமடைய வேண்டும் என நினைக்கின்றோமோ அவர்களைச் சென்றடையும். அந்த உணர்வலைகள் அவர்களுக்கு உணர்வு பூர்வமான ஆறுதலைத் தரும். நலத்தைத் தரும்.
இதன் காரணமாகத்தான் பல சாதனைப் புரிந்த, நாட்டின் நலனுக்கு தொண்டாற்றிய தலைவர்கள் உடல் நலமின்றி இருக்கும் போது அவர் சாதனைகளைப் புரிந்து கொண்டவர்கள் பலர் ஒரே நேரத்தில் ஆலயங்களில் கூட்டுப்பிரார்த்தனை செய்வதை பார்த்துள்ளோம், கேட்டுள்ளோம்.
ஒரு நல்ல எண்ணம், எண்ண அதிர்வுகளால், யாரோ ஒருவர் நலமடைகிறார், நலம் அடையமுடியும் என்றால், இந்த செயல் உங்களுக்கு, உங்களை போன்று சுயநலன் கருதாமல் செய்தோருக்கும் ஓர் நாள் உதவும். பலரின் பிரார்த்தனை அதிர்வுகளுக்குப்பின் நலமடைந்தார் என்ற செய்தி பிரார்த்தனை செய்த அனைவரின் உள்ளம் உவகையில் நிரம்ப வழிவகுக்கும்.
இந்த உவகை உடல் முழுவதும் பரவி உங்கள் உடலின் செல்களுக்கு ஓர் சந்தோஷத்தை அளித்து உற்சாகப் படுத்தும். இது உங்கள் உடல் தொய்வில்லாமல், உள்ளம் சோர்வில்லாமல் செயல்பட உதவும்.
ஒரு தீவிர பக்தரின் கனவில் ஆஞ்சநேயர் தரிசனம் தந்தார். பக்தன், அவருடன் தான் தாயம் விளையாட விருப்பம் தெரிவித்தார். நான் விளையாட்டில் விட்டு கொடுக்க மாட்டேன், நீ வருத்தமடையக் கூடாது என்று அனுமான் ஒரு நிபந்தனையைச் சொன்னார். சம்மதத்துடன் இருவரும் விளையாட ஆரம்பித்தனர். ஒவ்வொருமுறையும் ‘ஜெய் அனுமான்’, அல்லது ‘ஜெய் ஆஞ்சநேயா’ எனக்கூறி காய்களை உருட்டினார் பக்தர். ஆஞ்சநேயர் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று உருட்டினார். பலமுறை விளையாடியும் பக்தனே வெற்றி பெற்றான். தோல்வியுற்றால் வருத்தப்படக்கூடது எனக்கூறிய ஆஞ்சநேயர் வருத்தமுற்றார். ஸ்ரீ ராம நாமத்தை உச்சரித்தும் எனக்குத் தோல்வியா! என ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்தார். ஸ்ரீராமர் அவர்முன் தோன்றி, ஆஞ்சநேயா.. நீ என் பக்தன்.. எனவே என் சக்தி உன்னிடம் இனைந்துள்ளது. அவன் உன் பக்தன்.. உன் சக்தி அவனிடம் இனைந்துள்ளது. ஆனால் நான் உன்னுள் இருப்பதால் உன்சக்தி இனையுமிடத்தில் என்சக்தியும் சேர்ந்துவிடும். நம் இருவரது சக்தி சேர்ந்திருப்பதுவே அவனது தொடர் வெற்றிக்கு காரணம் என்றார். எண்ண அதிர்வுகளால் ஒருவரின் மனதை நீங்கள் கவர்ந்து விட்டால் அவரிடமுள்ள அனைத்து சக்திகளும் உங்களுக்கு உதவும்.
உங்கள் வெற்றிக்குரிய சீரிய சிந்தனை கிடைக்க இது ஒரு துளியாகும். பலதுளிகள் சேர்ந்தால்..... உங்களை, உங்களின் செல்களை தொடர்ந்து தூண்டிவிட்டால் நீங்கள் முற்றிலும் ஓர் சந்தோஷமான மனிதனாக இருக்கும்போது, எல்லா நிலைகளிலும் தீவிரமாக சிந்தித்து செயல்பட்டு, வெற்றியின் இரகசியத்தை அறிந்த வெற்றி மனிதராக எப்போதும் திகழ்வீர்கள்!
பிறவிகள்: நிகழ்காலம், இறந்தகாலம், எதிர்காலம், என்பதைப் போன்றே இப்பிறவி, முற்பிறவி, இனியும் பிறவி எனவுண்டு. இதில் நிகழ்காலத்தில் நம் உணர்வில் நம்மை சுற்றியுள்ள அதிர்வு அலைகளின் வாயிலாக நினைவில் உணர்கின்றோம்.
ஞானி ஒருவர் தனது உரையின் போது ஓர் நகைச்சுவை சொல்ல அனைவரும் சிரித்தனர். இடையிடையே அதே நகைச்சுவையைக்கூற சிரிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்தது. கடைசியாக சொன்னபோது யாரிடமிருந்தும் சிரிப்பு வரவில்லை. இதை உணர்ந்த ஞானி சொன்னார், அன்பர்களே! உங்களை மகிழ்வூட்டும் ஓர் சுவையான செய்தியை மீண்டும் மீண்டும் கேட்கும்போது உங்களால் சிரிக்க முடியவில்லை. ஆனால் என்றோ எங்கோ நடந்த துயர சம்பவங்களை அடிக்கடி நினைத்து நினைத்து வேதனைப் படுகின்றீர்கள்! அந்த ஒரே விஷயத்தை பல காலமாக நினைவில் கொண்டு வன்மம் பாரட்டுவது சரியா! அதனால் உங்கள் மனமும் எண்ணங்களும் நிலை மாறுவதைப் புரிந்துகொள்ளுங்கள். துன்பங்களை துயரங்களை விட்டுவிட பழகிக்கொள்ளுங்கள் என்றார்.
இப்பிறவியில், கடந்த காலவாழ்வு, அதைபற்றிய எண்ணங்கள், அதிர்வுகளைப் பற்றி நாம் அதிகம் சிந்தித்து நமது நிகழ்கால நேரங்களை வீணடித்துக் கொண்டிருந்தால் அதன் தாக்கம் நம் நிகழ்கால செயல்களுக்கு முட்டுக்கட்டை போலாகும். எனவே அந்த எண்ணங்களை நீக்கி இனி என்ன செய்யலாம், செய்ய வேண்டும் என்பது பற்றி சிந்தியுங்கள். கடந்தகாலத் துயரத்திலும், வருங்காலப் பயத்திலும் நிகழ்காலத்தை இழந்துவிடாதீர்கள்.
சென்ற பிறவியில் நீங்கள் என்னவாயிருந்தால் என்ன? என்ன செய்திருந்தால் என்ன? நன்மை செய்திருந்தோமா? தீமைகள் புரிந்திருந்தோமா? என ஆராய்வதும், தெரிந்து கொள்ள முயலுவதும் பொன்னான நிகழ்காலத்தை விரையம் செய்வது ஆகும். அதை தெரிந்து என்ன செய்யப் போகின்றீர்கள்? இன்று நாம் அதிக அன்பு வைத்திருப்பவர் அப்பிறவியில் நம்மை மிகவும் துன்பத்திற்கு ஆளாக்கியவராக இருந்திருக்ககூடும்.
இப்போது இந்த உண்மை தெரியவந்தால் அது சுடும். நாம் அவர்மீது வைத்துள்ள அன்பை, அந்த உண்மையால் மனதில் ஏற்படும் மாற்றங்கள், கசப்புகள், வாழ்வின் போக்கை திசை மாற்றக்கூடியதாக இருவருக்கும் இருக்கும்.  ஓர் நல்ல உறவு திசை மாறுவது தேவைதானா? தேவையற்றது.
துன்பத்தில் துவழும்போது முன்பு என்ன செய்தோமோ? என கடந்தகால முற்பிறவி உண்மைகளை ஆராயாமல் அந்த நிமிடத்தில் அந்த நிகழ்வில் நாம் எப்படி செயல்பட வேண்டும் என மன உறுதியுடன் நடந்து கொள்வது சிறப்பு. கடற்கரையில் உலாவும்போது அப்போது வீசும் சுத்தமான காற்றை அனுபவிக்காமல், என்றோ எங்கேயோ நடந்த நிகழ்வை நினைத்து வேதனையுறுவதால், அந்தக்கணம் நீங்கள் அடையவிருந்த காற்றின் சுகம் என்ற நிகழ்கால ஆனந்தத்தை இழந்து விடுகின்றீர்கள். புதிய சூழலில் இருந்தாலும் மனம் பழையதில் கிடந்து தவிக்கின்றது.
அந்த எண்ணங்களைத் தவிர்த்திடுங்கள். அந்த சூழலில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள். தேவையற்ற நினைவுகள் இயல்பாகவே அழிக்கப் படுகின்றது. கடந்தகால, முற்பிறவி நினைவு வேண்டியதில்லை அதில் நீங்கள் என்ன நல்லது செய்திருந்தாலும். இப்பிறவியில் சூழ்நிலைக்கேற்ப அது முற்பிறவியின் பாதிப்பாக இருந்தாலும் சிந்தித்து செயல்படுவது நன்மை பயக்கும்.
உனது வாழ்நாள் ஒவ்வொருநாளாக குறைந்து கொண்டிருக்கின்றது. இறந்தவனையும், நடந்தவைகளையும் பற்றி சிந்தித்து என்ன பயன்! இருக்கும் காலத்தில் நீ உன் ஆன்மாவின் மேன்மைக்காக சிந்தி.
ஒர் ஆன்மா அது இதுகாறும் பற்றியிருந்த உடலைவிட்டு செல்லும் மரணநேரத்தில், அந்த ஜீவன் பிராணனைப் பற்றி சரீரத்தை விட்டு செல்கின்றது. நமது உடம்பில் உள்ள 9 துவாரங்களில் ஒன்றின் வழியாகத்தான் அது வெளியேறுகிறது.
அது வெளியேறும் வழியைப் பொறுத்தே அந்த ஜீவ ஆத்மாவின் மறுபிறவி அமையும் என்கிறது சாஸ்திரம். யோகிகளுக்கு தலையில் 10வது ஓட்டை ஏற்பட்டு அதன் வழி பிராணன் செல்லும். ஆனால் ஞானிகளுக்கு இந்த 10ஓட்டைகளின் வழிசெல்லாது பிராணன் அந்த ஆத்மாவிலேயே ஒடுங்கிவிடும் என்பதால் அவர்களுக்கு மறுபிறவி இல்லை-குருஸ்ரீ பகோரா.

1-3.கர்மம்! காரணம்!

Written by

கர்மம்! காரணம்!                                                                                                          

உலகின் எந்த ஒரு விஷயமும் காரணமின்றி நடைபெறுவதில்லை! என்ன காரணம் எனத் தெரியாமலும், புரியாமலும் நாம் இருப்பதுண்டு! பின்னாலில் அது சம்பந்தமாக நிகழ்வுகள் நடைபெரும் போது நாம் இதற்காகத்தான் அன்று அப்படி நடந்ததோ என ஆச்சரியப் படுகின்றோம். இந்த காரண காரியங்கள் அந்த நிகழ்வுகள் சம்பந்தப் பட்டிருப்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும். புரிந்து கொள்ள முடியும். எல்லோரும் புரிந்து கொள்ளும் விதமாக நமது புராணங்களில் நிகழ்வுகள் நிறைய உண்டு.
இராவணன் மகன் இந்திரஜித் கடுமையான தவங்கள் பல செய்து பெற்ற வரங்களில் முக்கியமானது,  “தன்னை வெல்பவன் உணவு, இரவு உறக்கமின்றி 14 வருடங்கள் இருக்க வேண்டும் என்பதாகும்.” ஒருவன் 14 வருடங்கள் உணவு, உறக்கமின்மை என்பது சாத்தியமில்லை என்பதால் இந்திரஜித்திற்கு மரணம் என்பது இல்லை என நம்பப்பட்டது. ஆனால் நம்பமுடியாத அளவில் இலட்சுமணன் வீரசாகசங்கள் புரிந்து இந்திரஜித்தை கொன்றான். இதன் காரண காரியங்களை தெரிந்து கொள்வீர்கள்.
இந்திரஜித்தின் தவவலிமைதனை உணர்ந்த வீபீடணன் இதைப்பற்றி இராமரிடம் கூற அவர் தன் தம்பியிடம் கேட்டபோது, ‘இராம அண்ணலையும், அண்ணியையும் காக்க இரவில் உறங்குவதில்லை ! மேலும் காட்டிற்கு அண்ணலுடன் புறப்படும்போது தாய் சுபத்திரை கூறியபடி அண்ணலும், அண்ணியும் உணவு அருந்தியபின் உண்ண இருந்தேன், ஆனால் அவர்கள் மீதி ஏதுமில்லாமல் இலையை தூக்கி எறிந்து விடுவதால் உலர்ந்த பழங்களையே உண்டு வந்தேன் என்றான்’.
எதற்கும் ஓர் முடிவு என்பார்களே அது இதுதான். இந்திரஜித் பெற்ற அளவில்லா வரங்களுக்கும், இலட்சுமணன் உணவு, உறக்கமின்றி இருந்ததற்கும் கர்ம, காரணங்கள் புரிகின்றது. இதைக்கேட்ட இராமன் இப்படிப்பட்ட ஆதிசேஷனின் மறுபிறப்பாகிய இலட்சுமணணுக்கு தான் தம்பியாகப் பிறந்து சேவை புரிய வேண்டும் என மனதார நினைத்தார். அதன் விளைவாக 14 வருடங்கள் உணவும், இரவு உறக்கமும் இல்லா ஆதிசேஷன் ஆகிய இலட்சுமணன் அடுத்த பிறப்பில், பலராமராகவும், இராமர் சேவை செய்ய விரும்பியதன் பலனாக அவரது தம்பி கிருஷ்ணராகவும் பிறந்து தன் முற்பிறப்பின் அபிலாஷைகளைப் கர்ம காரணப்படி பூர்த்தி செய்து கொண்டார்.
இராவணன் தாயின் வேண்டுகோளின்படி மகேசனை மகிழ்வித்து ஆத்மலிங்கம் பெற்றான். ஆத்மலிங்கம் இராவணனுடன் சென்றுவிடக் கூடாது என தேவர்கள் முயற்சித்து விஷ்ணுவின் ஆலோசனைப்படி வெற்றி பெற்றனர்.  மீண்டும் கடுமையான தவமிருந்து ஈசனிடமிருந்து  1. தன் மாமனாரால் தான் இறக்கவேண்டும், 2. உமையவள் வேண்டும். 3. மூன்றரைக்கோடி ஆண்டுகள் ஆயுள் வேண்டும் என மூன்று வரங்கள் பெற்றான். 
விஷ்ணு உமையைக் காப்பாற்ற முடிவு செய்து இராவணனிடம் உண்மையான உமை, மயனின் பாதாள அறையில் இருக்கிறாள் எனக் கூறி திசைதிருப்பி உமையை மீட்டார். பின் சந்தனக் குழம்பால் அழகிய பெண் உருவாக்கினார். அவளை (மண்டோதரி) மயனிடம் கொடுத்து என் மகள், இனி உன் வளர்ப்பு மகள். இராவணன் வந்து மணக்க விரும்பி கேட்பான். அவன் விருப்பப்படி செய் என்றார்.
இராவணன் மண்டோதரியைக் கண்டு விரும்பி மணம் கொண்டான். விஷ்ணுவின் ராமா அவதாரத்தில், மாமனாரால் மரணம் என ஈசனிடம் பெற்ற வரத்திற்கேற்ப, விதி வசம் மதியிழந்து சீதையைக் கவர்ந்து இராமனால் கொல்லப்பட்டான். ஆக எந்த ஒரு விஷயங்களும் காரண, காரியமின்றி நடப்பதில்லை என்பது புரிகின்றது.
இன்னொறு காரண நிகழ்வு: கடவுளே ஆனாலும் மனித வடிவெடுத்தால் உறவுகள் தோன்றுவதும், அதே உறவுகள் தானாகப் பிரிவதும் தவிர்க்க இயலாதவை என்பதைச் சொல்லும் நிகழ்வு இது.
பட்டாபிஷேகம் நடந்து ராமரின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. சீதை பிரிந்து தாய் பூமாதேவியுடன் ஐக்கியமானார். லவ, குசர் வளர்ந்து பெரியவராகினர். லட்சுமனுடன் இராமர் உரையாடிக்கொண்டிருந்த போது, ஒரு முனிவர் வந்திருப்பதாக தகவல் வர இருவரும் அவரை சந்திக்க தயாராகின்றனர்.
வந்தமுனிவர் இராமனுடன் தனித்து பேச விரும்புகின்றார். இடையே யாரேனும் குறுக்கிட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றார். அவ்வளவு முக்கிய விஷயமா? என்ற ராமர், தங்களின் விருப்பப்படியே ஆகட்டும் என்றார். லட்சுமணன் வெளியே சென்று கதவருகில் யாரும் உள்ளே வராமல் பாதுகாப்பாக நின்று கொண்டார்.
வந்த முனிவரின் சுய உருவான எமதர்மனைக் கண்ட ராமர் இன்று நான் பெரும் பாக்கியசாலி என சந்தோஷப்பட்டார். அப்போது எமன் சொன்னார், என்னைக் கண்டவர்கள் நீண்ட காலம் அந்த பாக்யத்தை அனுபவிக்க முடியாது! ராமா! நீ திருமாலின் அவதாரம் என்பதை மறந்தாயா! வைகுண்டம் உன் வருகைக்கு காத்திருக்கின்றது! காலதேவன் கணக்குப்படி ராமாவதாரம் முடிவடையும் காலமிது என்றார்.
அப்போது அறைக்கு வெளியே துர்வாசரைக்கண்ட லட்சுமணன் அவரை உள்ளே விட மறுக்க அவர் கோபத்தில் சாபமிடதுணிய, தன் உயிரைவிட நாட்டுமக்கள் நலமே பெரியது என்றெண்ணி லட்சுமணன் உள்ளே சென்றான். இராமர் தழதழப்புடன்  உள்ளே வந்தால் மரணதண்டனை என்று தெரிந்துமா வந்தாய் ஏனக் கேட்டார். துர்வாசர் வருகையைத் தங்களுக்குத் தெரிவிக்காவிட்டால் அயோத்தி அழிய சாபமிடுவதாகச் சொன்னதால் வந்தேன். தங்களிடமிருந்தும், உலகத்திடமிருந்தும் நிரந்தரமாக விடைபெறுகிறேன் என்றார் லட்சுமணன். காலதேவனின் திட்டம் தாமதமின்றி நடந்தது. தன்னை வழிகாட்டி கூட்டிச்செல்வது யமன் என்பதறியாமலே சரயூவில் இறங்கிக் கலந்தான். காரணம்- லட்சுமணன் மீண்டும் ஆதிசேஷனாகி படுக்கையாக வைகுந்தத்தில்  திருமால் வருமுன் காத்திருக்க!

1-2.ஆனந்தம்!

Written by

ஆனந்தம்!                                                                                                              

மனம் நொந்து தளர்ந்துபோன நிலையில் இதுகாறும் நடந்த நல்ல சந்தோஷமான நினைவுகள்தான் நொந்த மனதிற்கு ஆறுதல் தந்து தளர்ந்த நிலையிலிருந்து மீட்டு மீண்டும் செயல்படவைக்க உதவுகிறது. மனம் மகிழக் கூடிய நிகழ்ச்சிகள் ஒன்றுகூட இல்லையெனில் கடந்த வாழ்க்கையும் பலனின்றி தொய்வுற்ற நிலையில், ஆறுதல்தர ஒரு துளி விஷயம்கூட இல்லாத நிலையில் இனி வரும் எதிர்காலமும் சோலையில்லா பாலைவனமாக மாற வாய்ப்பு அதிகம் உள்ளது. 

எனவே வாழ்வில் நடக்கும் சின்ன சின்ன சந்தோஷங்களை ஏற்று மகிழ கற்றுக்கொள்ள வேண்டும். எந்த சின்ன சந்தோஷமாயிருந்தாலும் அதை மனதில் இறுத்திக் கொள்ளுங்கள். சின்ன விஷயம் என விட்டு விடாதீர்கள். அதனால் ஒரு துளி சந்தோஷம் என்றாலும் ஏற்று சந்தோஷப் படமுயலுங்கள். 
சந்தோஷங்களை தேடிச் செல்லுங்கள். எந்த செயலையும் உங்களுக்கு சந்தோஷம் ஏற்படும் நிகழ்ச்சியாக மாற்றிக் கொள்ளப் பழகுங்கள். அந்த சின்ன சின்ன விஷயங்கள் மீண்டும் மீண்டும் ஏற்பட, வாழ்வில் தோன்ற வழி வகுங்கள். சின்ன விஷயங்களால் ஏற்பட்ட சின்ன சந்தோஷங்களை பெரிய செயல்களுடன் இனைத்து அதையும் சந்தோஷமாக்க முயலுங்கள்.
அந்த மகிழ்வு தந்த செயல் உங்களுக்கு வெற்றி ஏற்பட வைக்காவிட்டாலும் அந்த செயலால் தோன்றிய மகிழ்வு உங்களை அடுத்த செயலுக்கு எந்தவித குழப்பமின்றி திறமையுடன் முழுமையாக சிந்திக்க வைக்கும். உங்களின் குழப்பமில்லா முழுமையான சிந்தனை உங்களுக்கு மீண்டும் வெற்றியோ அல்லது சந்தோஷத்தையோ கொடுக்க வாய்ப்பு அதிகம். அடுத்து வரும் உங்களின் செயல்பாடுகள் நல்ல முறையில் அமையும். உங்கள் முகத்தில் தன்னம்பிக்கையும், புன்னகையும் குடி கொள்ளும்.
இந்த புன்னகை பூத்த முகம் உங்களை சந்திப்போர்க்கு உங்களின் மேல் ஓர் நம்பிக்கையைத் தோற்றுவிக்கும். நல்லெண்ணம் பிறக்கும். நீங்கள் வேண்டும்போது அவர்களின் உதவி, உறுதுணை உங்களுக்கு கிடைக்கும். இது போன்ற உதவிகள் உங்கள் செயல் பாடுகளை எளிமையான முறையில் இலகுவாக வெற்றியடைய உதவும். அதனால் ஏற்படும் சந்தோஷம், சிறிய வெற்றி, மீண்டும் மீண்டும் வெற்றி என மாறி உங்கள் வாழ்க்கையை அனைவருக்கும் ஓர் எடுத்துக்காட்டாக திகழ வைக்கும்.
வாழ்வின் பல நிகழ்வுகளை நீங்கள் ஒவ்வொருவரும் கடந்து வந்திருப்பீர்கள். கடந்து வந்த பாதையில் ஏற்பட்ட நடந்த சின்ன சின்ன மகிழ்வூட்டிய, சந்தோஷம் ஏற்படுத்திய செய்திகளை நிகழ்வுகளை நினைத்துப் பார்த்து நினைவில் இறுத்திக் கொள்ளுங்கள். 
மனித இயல்பு நமக்கு துன்பமும் துயரமும் சார்ந்த நிகழ்வுகளைத்தான் நினைத்துக் கொண்டிருக்கும். அப்போது இப்படி நடந்தது என அடிக்கடி அசைபோடும். அது போன்ற நிகழ்வுகளை அதிகம் நினைவில் கொள்ளாமல் தவிர்த்து விடுங்கள். நம் நினைவின் ஆற்றல் சேகரிக்கும் பகுதியில் அதிகமாக வேண்டாத நினைவுகளும், துயர நிகழ்வுகளும் குடிகொண்டால், நல்ல நிகழ்வுகள் நமது மனதிற்கு, நினைக்கும்போது சந்தோஷம் தரும் நினைவுகளுக்கு இடம் குறைந்து, பல நிகழ்வுகள் நம் நினைவை விட்டு அகன்றிருக்கும்.
இதை ஒவ்வொருவரும் தவிர்த்து, சந்தோஷம் தரும் சின்ன சின்ன விஷயங்களைக்கூட மனதில் இருத்திக் கொண்டால் உங்கள் உள்ளமும், உள்ளத்தினால் எண்ணங்களும், எண்ணங்களால் செயலும், செயலால் செயல்படும் திறனும், செயல் திறனால் ஊக்கமும், ஊக்கத்தினால் ஆக்கமும், ஆக்கத்தினால் வெற்றியும், வெற்றியினால் மகிழ்வும் ஏற்பட்டு நீங்கள் வளமாக வாழ அந்த மகிழ்வு உதவி புரியும்.
நமது நினைவு திரையில் சந்தோஷ நினைவுகள் நிறம்பினால், சோகத்தை தரும் துன்ப நிகழ்வுகளுக்கு திரையில் பதிய இடமே இருக்காது. ஓர் விஷயத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

சோகத்தை ஏற்படுத்தும் துன்பங்களின் நினைவுகள் உங்கள் நினைவு திரைகளில் இருந்தால் அது உங்களுக்கு அடிக்கடி தோன்றி, பழைய நிகழ்வுகளுக்கு உங்கள் மனதை இழுத்துச் செல்லும். ஒவ்வொருமுறை நினைக்கும் போதும் அந்த நிகழ்வுகளின் தாக்கம் சிறிது அளவாவது இருக்கும். ஏனெனில் அந்த நிகழ்வின் பாதிப்பு அப்படி! அதனால் உங்கள் உணர்வுகள், உணர்ச்சிகள் அந்த அளவிற்கு பாதிக்கப் பட்டிருக்கக் கூடும். இந்த பாதிப்புகளை ஒழிக்க முயலுங்கள். 
சந்தோஷ நிகழ்வுகளின் நினைவுகள் உங்கள் நினைவிலிருந்து அகன்றிருக்கக் கூடும். ஏனெனில் சந்தோஷ நிகழ்வுகளை, துயர நினைவுகள் மனதில் பதிகின்ற அளவிற்கு நீங்கள் முழுமையாக மனதில் வாங்கிக் கொள்வதில்லை. 
நம் உறவில் ஒருவர் அதை நினைவுபடுத்தும் போது அதை உணர்வீர்கள். இது போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும். நமது வாழ்வின் பயணத்தின் சந்தோஷங்களை ஒருவர் சொல்லி நினைவு கூறா நிலையில் நாமே நினைவில் கொள்ள வேண்டும்.
சோக நினைவுகள் மனதில் அதிகம் தாக்கம் ஏற்படுத்தாமலும், சந்தோஷ நினைவுகள் மனதை விட்டு அகலாமலும் இருக்க எப்போதும் உங்களை, உங்கள் மன நிலையை தயாரக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மனதில் உறுதியுடன் செயல் படுங்கள். 
 ‘நடந்தது நன்றாகவே நடந்தது, நடந்து கொண்டிருப்பதும் நன்றாகவே இருக்கின்றது, நடக்க இருப்பதும் நன்றாகவே நடக்கும்’ என்ற கீதையின் சாரத்திற்கு ஏற்ப உங்களை தயார் படுத்திக் கொள்ளுங்கள்.
அப்போதுதான் நடந்த சோக நிகழ்வுகளின் தாக்கம் உங்களை, உங்கள் மனத்தில் பதியாமல் சந்தோஷ நிகழ்வுகளின் தாக்கங்களை உங்கள் மனது பிரித்தெடுத்து உங்கள் நினைவு திரையில் அதிமாக பதிய வைக்கும். 
சோதனை நிகழ்வுகள் வாழ்க்கையில் பாடம், படிப்பினை என உணர்ந்தால், ஒவ்வொன்றும் ஓர் எண்ணத்தை, உண்ணத தத்துவத்தை உங்களுக்குள் ஏற்படுத்தும். அது ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்தி உங்கள் செயல்களுக்கு வழிகாட்டும். சந்தோஷ பாதையில் சென்று வெற்றி காணலாம்.
கஷ்டங்களை மனதில் பதித்து, காலம் கடத்தி, அழுது, மருகி, உணர்வுகளை வெளிப்படுத்துதலை விட, அதைத் தவிர்த்து, சந்தோஷங்களை மனதில் வாங்கி, மனதார ரசித்து அதனுள் மூழ்கி அனுபவித்தால் அந்த நினைவுகள் மனதில் பதிந்து எப்போதும் உங்களின் சந்தோஷ வாழ்க்கை பயணத்திற்கு பயனுள்ளதாகும்-குருஸ்ரீ பகோரா.

1-1.எதை நோக்கி!

Written by

எதை நோக்கி!                                                                                                                           

தன் விருப்பிற்கு பிறவா கரு-உடல்-ஆன்மா தன்னைச் சுற்றியுள்ள ஆன்மாக்களுக்கு ஆனந்தம் அளிக்கின்றது. அதன் அடுத்தடுத்த வளர்ச்சி குழந்தை பருவம் முழுவதும் அதன் செயல்கள் அனைவரையும் கவர்ந்து மயக்கி மோனநிலை ஆனந்தத்தை வாரி வழங்குகின்றது, தன் நிலை உணரும் பருவம் வரை அது ஒருவரைச் சார்ந்து இயங்குகின்றது.

தன்நிலை உணர்ந்த பருவம் எய்திய உடன் தான், எனக்கு என்ற எண்ணங்கள் வளர வளர அது தன் சந்தோஷம், தனக்கு சந்தோஷம் தரும் செயல்களைத் தெரிவு செய்து, ஈடுபாட்டுடன் நாட்டம் கொண்டு செயல்பட ஆரம்பிக்கின்றது.
எல்லா உயிர்க்கும் சந்தோஷத்தை அடைய, அதைத் தேட உரிமை உண்டு. வாழ்வின் இரகசியம் அல்லவா! அது அற்புத இலக்கணம். சந்தோஷத்தை அடைய இடற்பாடுகள் ஏற்படலாம். ஆனால் அவையெல்லாம் கடந்து சந்தோஷம் காணும்போது, கடந்து வந்த இடற்பாடுகள் மறைந்து ஆனந்தம் ஏற்படுகின்றது. வாழ்வின் முடிவுவரை இந்த தேடல் தொடர்கிறது. இடற்பாடுகள், இன்னல்கள் கடந்து அடைந்த ஆனந்த சந்தோஷம் அளவில்லாதது.
நல்ல உணவு உண்டு, நல்ல நீர் அருந்தி, தீயப் பழக்கங்களைவிட்டு, நல்ல பழக்கங்களுடன் இருந்தால் எப்போதும் உயிருடன் இருக்கமுடியுமா! எப்போதும் யாரும் உயிருடன் இருக்க முடியாது. பிறகு உன் வாழ்நாளையாவது நீட்டிக்க முடியுமா! அதுவும் சாத்தியமில்லை! நீடித்து என்னபயன்! எதிர்கால சுகங்களும், இறந்தகால மகிழ்ச்சியும் உனது அனுபவமே! அப்படியானால் நான் என்னை அழித்துக் கொள்ளலாமா! தேவையில்லை! 
வாழும் ஆசையில் தொடங்கி பேராசையில் வளர்த்து சிக்கலில் சிக்கித் தவிக்கும்போது உடலிலிருந்து உயிரை பிரிக்கும் எண்ணங்கள் தோன்றி வாழ்வு வட்டமாகி ஆரம்பித்த இடத்திற்கு வந்து முடிவாகின்றது. எனவே உயிரை பிரிக்கும் எண்ணங்களை விடுத்து வரும்போது வரட்டும் என வாழ்க்கைப் பாதையில் இணைந்து செல்! ஒவ்வொரு உயிருக்கும் உலக வாழ்க்கையில் வாழும் ஆசைவேண்டும். வாழ்தலின் மீது ஓர் மரியாதை உணர்வு வேண்டும். தன்மீது சுயமதிப்பு கொள்ள வேண்டும்.
நமக்கு ரோஜா மலர் வேண்டும். அதன் மனம் வேண்டும். அழகுவேண்டும். ஆனால் அதை பறிக்கும்போது அதன் முட்கள் நம்மை தீண்டும். வேதனைப்படுத்தும். அதைப்புரிந்து அதிலிருந்து விடுபட்டு நாம் மலரை நம் உணர்வுகளுக்காக, நமக்குள் ஏற்படும் சந்தோஷத்திற்காக பறிக்கின்றோம். அதுபோன்றே வாழ்வில் நமக்கு வேண்டியது வசந்தம். துன்பங்களையும், துயரங்களையும் நீக்கி வசந்தம் தரும் சந்தோஷங்களை தேடித்தேடிக் கண்டுபிடித்து, அடையவேண்டும். 
பல பருக்கைகள் கொண்ட உணவை நாம் எடுத்து உண்கின்றோம். ஒரு கல் இருந்தால் உணவில் கல் என்கின்றோம். 1000 இன்பங்களிடையே ஒரு துன்பம் வந்தாலும் அது நமக்கு சலிப்பை ஏற்படுத்துகின்றது. வாழ்வே சலிப்பு என்கின்றோம். அது சரியில்லை. கல் நீக்கி உணவு உண்பதுபோல், சலிப்பை நீக்கி வாழ்வில் சந்தோஷம் காணவேண்டும்.
சந்தோஷம் போதும் இனி எந்த சந்தோஷமும் வேண்டாம் எனக்கூறக்கூடிய நிலையில் எந்த ஒரு உயிரும் இயங்குவதாக இல்லை. எல்லா உயிர்களும் அந்த அளவில்லா சந்தோஷத்தை நோக்கியே செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. கஷ்டங்களைத் தாண்டியும் அந்த சந்தோஷத்தை அடையத்தான் நினைக்கின்றன. இது எல்லா உயிருக்கும் பொதுவான உலக நியதி.
அந்த சந்தோஷங்களை நாம் எவ்வாறு இழக்கின்றோம். ஏன் இழக்கின்றோம்! எப்படி அதை அடைய முயலுவது என்பதன் சிந்தனையே இந்த “சந்தோஷப்பூக்கள்”. ‘உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகில் சந்தோஷம் காணலாம்’ என்ற கவிஞரின் கூற்றின் உண்மையை விளக்கி, உங்களிடையே மறைந்துள்ள திறன்களை வெளிக்கொணர்ந்து, செயலாக்க, வாழ்வில் சந்தோஷம் அடைதல் என்பதை உணர்த்துவதே இதன் குறிக்கோள்.
ஒவ்வொரு உயிரின் ஆன்மாவும் வாழ்வின் ரகசியமான சந்தோஷத்தை நோக்கியே பயனிக்கின்றது. இன்னல்களிடையே தோன்றும் அந்த சந்தோஷம் அந்த ஆத்மாவின் பயணத்திற்கு வேண்டும் என்ற அடிப்படையில், ஒவ்வொரு உயிரும் அதை அடைய மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டியாக அமையட்டும் “சந்தோஷப்பூக்கள்” என்ற இந்த தொகுப்பு என்பதே இந்நூலின் ஆசிரியனின் நோக்கம்! எந்த நிலையிலும் ஆனந்தமாக இருப்பது என்பது எல்லாவற்றிலும் முக்கியமானது.
உலகில் உலவும் எந்த ஆன்மாவிற்கும் புத்தியோ அறிவுரையோ கூறி அவர்களை சங்கடப்படுத்த எண்ணமில்லாமல், அவர்கள் தம் வாழ்வின் சூழ்நிலையை, நிலையாமையை புரிந்துணர்வு கொண்டு, மனு தர்மத்தின் வெற்றி ரகசியங்களையும் தெரிந்து, அவர்களுக்குள் இருக்கும் ஆற்றலை உணர்ந்து, வாழ்வில் வெற்றி கொள்ள வேண்டும், வாழும் வலிமை அடையவேண்டும். சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டும் என்பதுதான்-- “சந்தோஷப்பூக்கள்”-குருஸ்ரீ பகோராயின் நோக்கம்.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27099047
All
27099047
Your IP: 3.17.162.247
2024-04-27 22:50

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg