வாழ்விற்கான அர்த்தம்! உயிர் இருப்பதில் அர்த்தமில்லை!
ஞானி ஒருவர் தன் வழி சென்று கொண்டிருக்கும்போது ஒரு அடாவடிக் கும்பல் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அதைக் கண்டும் காணாததுபோல் சென்றார் ஞானி. கண்டும் காணாததுபோல் செல்லும் அவரை நிறுத்தி கடுஞ்சொற்களால் வசைபாடியும் எதுவும் சொல்லாமல் ஞானி நிற்க ஒருவன் அவர் மண்டையில் தன்னிடமிருந்த தடியால் அடிக்க மண்டை உடைந்து இரத்தம் வந்தது. அதைத் துடைத்துவிட்டு அமைதியாக புன்முருவலுடன் அவ்விடத்தை விட்டு அகன்று வீடு வந்து சேர்ந்தார்.
அடுத்த நாள் காலை தன் சீடனிடம் ஒர் இனிப்புடன் ஒரு கடிதத்தைக் கொடுத்து அந்தக் வன்முறைக் கும்பலின் தலைவனிடம் கொடுத்து வரச் சொன்னார். அந்தக் கடிதத்தில் என் தலையில் அடித்து உடைந்துபோன கைத்தடிக்குப் பதிலாக வேறு ஒன்று புதிதாக இந்தப் பணத்தைக் கொண்டு வாங்கிக் கொள்ளுங்கள். மேலும் நீங்கள் என்னிடம் நேற்று கூறிய வார்த்தைகள் மிகுந்த கசப்புத் தன்மை உடையதாக இருந்தது. அந்தக் கசப்பைப் போக்க இந்த இனிப்பை சாப்பிடுங்கள் என்று எழுதி யிருந்தார்.
அதன் பிறகு அந்த வன்முறைக் கும்பலின் அடாவடி செயல்கள் அந்தப் பகுதியில் இல்லவே இல்லை. இதுவே துஷ்டர்களைப் பக்குவப்படுத்தும் வழி. இந்த நிகழ்வை அறிந்த ஒருவர் அந்த ஞானியிடம் மனிதனுக்கு அளிக்கப்பட்டதில் மிகச் சிறந்தது எது என்றார். அவர் கடவுள் கொடுத்த நல்ல குணம் என்றார். அதற்குமேல் நல்ல உடல் நலம்.. இதெல்லாம் இல்லையென்றாலும் மெய்ஞானத்தைக் கேட்கும் காதும் அதை உணர மனமும் காண கண்களும் இருந்தால் அவன் பாக்கியசாலி. அதுவே முழுமையான வாழ்விற்கான அமைப்பு. அப்படியில்லையென்றால் அந்த உடம்பில் உயிர் இருப்பதில் அர்த்தமில்லை என்றார்.
&&&&&