உயிரே ஆற்றலை உணர்வாய்!
அந்தப் பெண்னுக்கு பறவைகள் என்றால் மிகவும் பிரியம். பாதுகாப்பான வலைபோட்டு அமைக்கப்பட்ட வீட்டின் பின்புறத்தில் நிறைய வண்ணப் பறவைகள், குருவிகள், கிளிகள் வளர்த்தனர், தினமும் அந்த பறவைகளின் குதுகலத்தையும் பறந்து திரிவதையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாலே நேரம் போவது தெரியாது. அவள் தந்தை அவளுக்கு இரண்டு வெளிநாட்டுக் கிளிகள் வளர்ப்பதற்கு வாங்கித் தந்தார். அவற்றையும் வலை அமைக்கப்பட்ட தோட்டத்தில் விட்டார்கள் ஒரு கிளி ஒர் மரக்கிளையில் ஏறி அமர்ந்து கொண்டது. மற்றது அங்கும் இங்கும் பறந்து திரிந்தது. நாட்கள் கழிந்தன. மரக்கிளையில் அமர்ந்த கிளி உணவு அருந்த மட்டும் கீழிறங்கி வந்துவிட்டு மீண்டும் அதே இடத்தில் போய் அமர்ந்து கொள்ளும். மற்றப் பறவைகள் போல் விளையாடுவதில்லை. அங்கும் இங்கும் பறந்து திரிவதுமில்லை. பறவைகளை வளர்ப்பவர், பயிற்சியாளர் என எல்லோரும் முயற்சித்தும் அந்தக் கிளியைப் பறக்கவைக்க முடியவில்லை. கீழே இறக்கி விட்டால் மீண்டும் மரக்கிளையில் போய் அமர்ந்து கொள்ளும். தந்தைக்கும் மகளுக்கும் ஒரே கவலை. என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தனர். அவர் வீட்டிற்கு வந்த ஞானி ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது இதைப் பற்றிச் சொல்ல அவர் அந்தக் கிளி இருக்குமிடத்திற்கு சென்று பார்த்தார். வீட்டுக்குச் சொந்தக்காரரிடம் கிளியை கீழே விட்டு விட்டு அது அமர்ந்திருந்த மரத்தின் சிறு கிளையை ஒடித்துவிடச் சொன்னார். கீழே இறக்கப்பட்ட கிளி சிறிது தானியத்தை உண்டுவிட்டு தன் இருப்பிடமான மரக்கிளையை நோக்கிச் சென்றது. அந்தக் கிளை அங்கே இல்லாது கண்டு அங்கும் இங்கும் அந்த மரத்தை சுற்றி சுற்றி வந்தது. சிறிது நேரம் அந்த மரத்தின் கீழ் இருந்துவிட்டு அடுத்த மரத்திற்கு பறந்தது. அதன்பின் அது மற்ற பறவைகள் போல் பறந்து திரிந்தது.
இதுபற்றி ஞானியிடம் கேட்டதற்கு ஒருவித பய உணர்ச்சியினால் அது பறக்க முயலவில்லை. தனக்கு என்றிருந்த இடம் இல்லை என்கிறபோது வேறு ஒரு இடத்தை நாடிப் பறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட பறந்தது. அதன் பயம் போனது. இயற்கையான அதன் வாழ்வு முறைக்கு சென்றுவிட்டது என்றார்.
இதைப் போலவே உயிர்களும் ஒரு கட்டாயம் என வந்தால்தான் செயலாக்கம் கொள்கின்றனர். அது தவறு. எந்த நிலையிலும் பயமென்பதை உதறித் தள்ளிவிட்டு சுதந்திரமாய் வாழ்வில் உயர்வடைய பிறந்தவர்கள் நாம்! அந்த ஆற்றல் தம்மிடமுள்ளது என்பதை உணர்தல் வேண்டும்!-குருஸ்ரீ
&&&&&