குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
ஓம்நமசிவய!
விநாயகனே வல்வினையை வேர் அறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணில் பணிமின் கணிந்து!
#####
பசுவிலக்கணம்- பிராணன்.!
2005. துதித்த அளவிலே உணரப்படும் ஒருவனைப் பன்னிப் பன்னிப் பேசும் வேதங்கள் இடைவிடாமல் சொல்லிக்கொண்டிருக்கும் பரம் பொருளை என் மனத்தில் தூண்டா விளக்காய் உள்ளவனை அம்ச வடிவினன் என்பதை நான் அறிந்து கொண்டேன்.
2006. சீவனின் வாழ்வில் இரண்டு அன்னங்கள் உள்ளன. இரண்டும் ஒன்றைவிட்டு ஒன்று பிரியாதவை. அவ்விரண்டுள் தன்னிலையில் நிற்கும் சிவமான அன்னம் தனக்கு வேறானது என்று எண்னினால் வேறுபட்ட அறியாமையுடன் கூடிய சீவனான அன்னத்துக்கு எப்பொதும் சிவப்பேறு கிட்டாதாகும்.
#####
புருடன்!
2007. வைகரி மத்திமை, பைசந்தி, சூக்குமை என்னும் வாக்குகளும் மாயை முதலிய மலங்களும் பொய்யான இன்பங்களை அனுபவிக்கச் செய்யும் புருடன் முதலான வித்தியா தத்துவமும் பிறப்பை ஒழிக்கும் ஞானமும் என்னும் இவற்றைச் சான்றாய் உள்ள ஈசன் உயிர்கள் உய்வு பெறும் பொருட்டு முன்பே அமைத்து வைத்தவையாகும்.
2008. அணுவுக்கும் அனுவாய் உள்ளதை ஆயிரம் கூறிட்டு அந்த ஆயிரத்தில் ஒரு கூற்றை நெருங்க வல்லர்க்கும் அணுவுக்கு அணுவானவனும் பழமை உடையவனும் மிகச் சூட்சமம் ஆனவனும் ஆகிய பரம் பொருளை அடையவும் கூடும்.
2009. எங்கும் பரவிப் படர்ந்து வளரும் தன்மையைத் தன்னிடம் கொண்ட ஆலம் விதையைப் போன்ற ஆன்மாவைத் திருவருள் கொண்டு தன்னெறிப்படுத்த அறியாமையை உண்டாக்கித் துன்பத்தைப் பெருக்கி நிற்கும் இருளை முற்றும் கெடுத்துச் சிவன் அமைத்து தந்த சிவகதியை விரும்பவும் கூடும்.
2010. ஆன்மாவுள் சிவனும் சிவத்துள் ஆன்மாவும் பிரிவு இல்லாது கலந்துள்ளதை உணரார். ஒப்பில்லாத இறைவன் எங்கும் நிறைந்து இடையில் பொருந்தி இயங்குபவை நிற்பவை ஆகிய அனைத்துப் பொருள்களிலும் வியாபித்திருக்கின்றனன்.
####
ஓம்நமசிவய!
பிடி அதன்உரு உமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர்
கடிகணபதி வர அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில் வலி வலமுறை இறையே!
#####
ஞானாதித்தன்!
1993. விந்து ஒன்றே தூலமான அபரம் என்றும் நுண்மையான பரம் என்றும் இரண்டாக விரியும். விரிந்து அந்தத் தூல விந்துவே மேல் நோக்கும் போது பரநாதமாய் மேலான நிவிருத்தி முதலிய பஞ்ச கலைகள் வந்து ஞானக் கதிரவனின் தோற்றம் என்று சொல்லும்படி மனத்தில் மேல் எழுந்து தோன்றும்.
1994. ம்ன மண்டலத்தில் கதிரவன் தோற்றம் போல் எழும் ஒலியே தெளிந்த பரநாதத்தின் செயல். ஆதலால் வள்ளலான சிவபெருமான் அருளால் வைகரி முதலிய வாக்குகள் பரவிந்துவுடன் கூடி ஐந்து கலைகளிலிருந்து தோன்றும்.
1995. சிவம் சுற்றியுள்ள எட்டுத் திசைகளிலும் மேல் கீழ் என்ற இரண்டு பக்கங்களிலும் பத்துத் திக்குகளிலும் வெளிப்படுவான். பழங்காலத்தில் வந்தவர் நானமுகன் திருமால் உருத்திரன் மகேசுவரன் என்ற நால்வருக்கும் நடுநாயகமாய் உள்ளவன் எனவும் கூறினர். ஆனால் தேவர் இவனையே தங்கள் தலைவன் என உரைப்பர்.
1996. உலகங்கள் எல்லாவற்றுக்கும் தலைவனும் எந்தையுமான சிவன் கற்பனைப் பொருள் அல்லன். உண்மையில் உல்லவனே. மை போன்ற இருளை நீக்கும் திங்கள் அக்கினி கதிரவன் ஆகியவை அண்டகோசத்தில் கீழ் முகமாய்ச் செயல் பட்டபோது ஏற்பட்ட இருளை நீக்கும் ஞானச் செம்மலான சதாசிவன் என் வீணத் தண்டின் இருளைப் போக்கக் கீழிருந்து மேல்வரை கலந்திருந்தான்.
1997. நிகர் அற்ற சிவ ஒளியனது நிறைந்த அண்ட கோச இருளைச் நீங்கச் செய்து பெறுவதற்கு அரிய கனியினின்றும் ஊறும் தேன் போல் இனிமையான அமுதம் சுரக்கச் செய்யும் கனிந்த சுடர் போன்று விளங்கிய சிவபெருமான் நிறைந்த சுடர் போல் என் தலையின் மீது விளங்கும் தன்மையும் உடையவன் ஆவான்.
1998. அனுபவ ஞான் வடிவாக ஆன்மாவிடம் நிர்மபியிருக்கும் பேரொளியான பிழம்பு தடை இல்லாமல் எல்லா உலகங்களிலும் பரவிக் கலந்து நிற்கும். கதிரவன் ஒளி படாத இடத்திலும் இவ்வொளி படர்ந்து நிற்கும். இதுவே தன்மையானது என்பதை எவர் அறிவார்.
1999. சுவாதிட்டான சக்கரத்தினின்று மலர்ந்து எழுகின்ற கதிரவன் மன மண்டலத்துள் ஞானக் கதிரவனாய் ஒளியாய் விளங்குபவன். இருந்த இடத்திலினின்று இதனை அறியவல்ல ஞானியர்க்கு இந்த நிலையிலிருந்தே எங்கும் போய் உணர்ந்துவரும் ஆற்றல் வாய்க்கும்.
2000. உந்தி, கண், மூக்கு, புருவமத்தி, உச்சித்துளை ஆகிய இந்த ஐந்து இடங்களிலும் ஒளிரும் பேரொளியைத் தேவ இனத்தவரான உருத்திரன், திருமால், நான்முகன் ஆகிய மூவரும் உணர்ந்திருந்தனர்.
#####
சிவாதித்தன்!
2001. சிவ ஒளிக்கு மாறுபட்ட பாச இருளும் அதனால் உண்டாகும் அஞ்ஞானமும் சிவக்கதிரவன் ஒளி வீசும்போது அதனுள் ஒடுங்கும். பெரிய கதிரவன் எழுச்சிக்கு முன்பு உள்ள அருணோதயத்தால் நெருக்கமான இருள் விலகுவதைப் போல் தொலைந்து விடும்.
2002. நீர் உள்ள குடங்கள் தோறும் கதிரவன் தோன்றுவான். அவன் அதனுள் அடங்கும்படி மூடி வைத்தாலும் அக்குடங்களில் அடங்கி விடமாட்டான். அது போன்று நீல கண்டப் பெருமான் விருப்புட்ன் எழுந்தருளும் உயிரில் அடங்கி யிருக்கும் தன்மையும் அத்தன்மை போன்றதே ஆகும்.
2003. சிவமான தானே பரந்த கதிர்களை உடைய கதிரவன், திங்கள், தீ மூன்றும் பொருந்திய ஓர் ஒளியாக விளங்கும் தானே நான்முகன், திருமால் என நின்று தான் முதல்வன் என்ற தன்மையை மெய்பிக்கும். தானே அறிவற்ற உடம்பிலும் அறிவுடைய் உட்மபிலும் உயிரிலும் பிரிவின்றிக் கலந்திருக்கின்றான். அவனே வானமாகவும் அதன் ஒளியாகவும் இருப்பதுடன் இருளாகவும் இருக்கின்றான்.
2004. கடவுள் தன்மை பொருந்திய ஒளியுடன் கூடிய சிவத் தீயும் கதிரவனும் சந்திரனும் நிலமும் நீரும் நெருப்பும் காற்றும் வானமும் என்னும் எட்டும் சிவபெருமான் உறையும் திருமேனிகள் ஆகும். இத்திருமேனிகளைத் தாங்கியிருக்கின்ற பல் உயிர்களும் சத்தியோசாதர் முதலிய ஐவர்க்கும் பொருந்திய இருதயம் முதலிய ஆறு அங்கங்களுக்கும் இடம் ஆகும்.
#####
ஓம்நமசிவய!
திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணியாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!
#####
பிண்டாதித்தன்!
1985. நிற்றல் இருத்தல் கிடத்தல் நடத்தல் என்னும் செயலைச் செய்யும் போதும் இளைய யானை வடிவுடைய பிரணவக் கடவுள் என் மனத்தில் இருந்தனன். அதனால் மலங்களை நெருக்கி வீணாத் தண்டில் உணர்வு கீழ் நோக்காமல் மேல் நோக்கி எழ வெல்லுதலைச் செய்கின்ற பரந்த கதிர்களையுடைய கதிரவன் வெளிப்படுவான்.
1986. கதிரவன் மேல் எழுந்து அடங்கும் இடமான ஈசான திக்கைக் கண்டு அங்கே இருந்து மேலே போய் மேல் முகமான சகசிரதளத்தை அடைந்து அங்கே உள்ள ஒளியில் நிற்க வல்லவரே தம்மை உணர்ந்தவர். ஆவார். இந்த உண்மையை உணராது பிதற்றும் உலகத்தவர் அனைவரும் கீழ் உள்ள கதிரவனை மேல் எழச் செய்ய வகை அறியாமல் அழிவர்.
1987. கதிரவன் மூலாதாரத்திலிருந்து புறப்பட்டு உலகமாகிய உடலை வலம் வந்து சொருகிக் கிடக்கும் ஈசான திக்கை யாரும் அறிய மாட்டார். அங்ஙனம் அறிகின்ற அறிவுடையவர்க்கு என் உள்ளதில் உள்ள அன்பு அவரிடம் போய் உருகி நிற்கும்.
#####
மனவாதித்தன்!
1988. எரிக்கும் கதிர்களையுடைய கதிரவனும் ஒளியுடன் பனியையும் பெய்யும் ஒளிவிடும் கதிர்களையுடைய திங்களும் மாறி மாறி நின்று விளங்க அந்த இரு கதிர்களும் விரிந்து விளங்குவதில் இயங்கிக் கொண்டிருக்கும் என் உயிரும் கூடி ஒரு கதிராகப் பூரணமானால் அதற்கு முழுமதி என்று பெயர்.
1989. கதிரவனிடம் சந்திரகலை வந்து பொருந்தும் வகையிலே பொருந்தி பின்பு சந்திரகலையில் சூரிய கலை வந்து பொருந்துவது பூசனை முறையாகும். அந்த இருகலைகளும் ஒத்து இயக்கம் இல்லாமல் மேல் முகமான சசிகரதளத்தில் பொருந்தி நிற்க சிந்தை தெளிந்தவர் சிவமே ஆயினர்.
1990. திங்களும் கதிரவனும் மூலக்கனலும் பொருந்தி மதிமண்டலம் உண்டாகும், அவ்வாறான மதி மண்டல்த்தில் தாரகை என்ற ஆன்ம ஒளியிலும் கலந்து நான்கு கலைகள் உள்ளன என்பர். கதிரவன் குண்டலினித்தீ சந்திரன் என்னும் இம்மூன்றும் பொருந்த அதுவே பௌர்ண்மியாகும் என்று அறிவீர்.
1991. தீ மண்டலத்தையும் கதிரவ மண்டலத்தையும் கடந்து விளங்கிய சந்திரமண்டல ஒளி ஓர் அண்டம் என்கின்ற தீ மண்டலத்தில் காம உணர்வோடு வழ்கின்ற தனமையுடைய மக்களுக்குப் புலப்படாததாயும் தலைக்குமேல் விளங்கும் பிரமாண்டத்தில் உய்ர்ந்து போகும் ஒளியாய் நின்றது யார். அந்த நிலையை அடைந்த அவரே அந்த ஒளியை அறியக் கூடியவர் ஆவார்.
1992. மன மண்டலத்தில் உள்ள கதிரவன் பிருதிவி முதலிய ஒன்பது நிலைகளிலும் பொருந்தி உடலால் உலகத்தை வலம் வரும். இத்தகைய ஒன்பது தத்துவங்களும் ஈசனது சத்தி நிலையாகும் என்பதை அறிவார் இலர். இவ்வகையான ஒன்பதிலும் ஆன்மா பொருந்தியுள்ளதாயினும் சிவபெருமானின் அருள் இல்லாதவர் இன்பம் பெறாதவராய் இருள் சூழ்ந்த அண்டாகாயத்தை அடைந்திருப்பர்.
#####
ஓம்நமசிவய!
மண்ணுல கத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக்
கண்ணுதல் உடையதோர் களிற்றுமா முகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்!
#####
ஆதித்த நிலை –அண்டாதித்தன்!
1975. கதிரவன் முதலான ஒளி பொருந்திய தேவர்கள் வெண்ணிற மேகம் சூழ்ந்த மேருமலையை வலமாக வருவதற்குக் காரணம் ஒளியுருவான எம் ஈசனின் இருதிருவடிகளின் ஒளி தம் ஒளியாக வேண்டும் என்பதே ஆகும். மலை வலம் வந்து வணங்குவதே அவர் செய்யும் தவம் ஆகும்.
1976. கதிரவனே திருமால் ஆவான். எல்லா உயிர்களுக்கும் ஆதார்மாக விளங்கும் புண்ணிய நாதனாகிய சிவனும் ஆவான். பகமை நீங்கி ஏழ் உலகங்களும் தழைக்கச் செய்யும் கதிரவனே எல்லா உயிர்களுக்கும் முதற் பொருள ஆவான்.
1977. கதிரவனிடம் அன்பு கொண்டு அவனது ஆயிரம் பெயர்களையும் சொல்லி வணங்கின் சிவனின் அண்டகோசத்தில் விளங்கும் பேரொளியாய் நிற்பன். கதிரவனைக் குறித்து அந்தணர் துதிப்பதும் தேவர் தோத்திரம் கூறுவதும் சிவபெருமானின் அன்பைப் பெற்று ஒளிபெறுவதற்கே ஆகும்.
1978. ஆன்மாவின் அண்ட கோசத்தில் விளங்கும் கதிரவனே தத்துவத் தோற்றத்துக்குக் காரணம் ஆனவன். அந்தக் கதிரவனே ஆன்மாவின் சத்தியாகும் அதுவே சிவம் ஆகும் அதுவே குளிர்ச்சி பொருந்திய சந்திரனாகும்.
1979. மூலாதரச் சக்கரம் சுவாதிட்டானச் சக்கரம் ஆகியவற்றுடன் ஒற்றுமைப்பட்ட தூய்மையான அகரக்கலை விளங்கும் மணிபூரகச் சக்கரத்துக்கு மேல் பதினாறு இதழ்களையுடைய துன்பம் அளிக்கும் விசுத்திச் சக்கரத்தின் சந்தேகம் இல்லாது விளங்குபவன் கதிரவன்.
1980. கதிரவன் தன்னுள் விளங்கும் முக்கோண சக்கரமான மூலாதரத்தில் நின்று நல்ல கதிரவனாய் ஒளிசெய்து கொண்டிருப்பான். அவன் நான்கு ஆதாரங்களையும் கடந்து துன்பத்தை அளிக்கும் கிணற்றைப் போன்ற விசுத்திச் சக்கரத்தை எட்டினால் மூலாதாரத்தில் ஒளி செய்யும் பேரொளி மேல் எழப் பதினாறு கலைகளையுடைய திங்கள் மண்டலம் அமையும்.
1981. கதிரவனுடன் உலக அறிவு கெட்டது. உலக அறிவைப் பற்றிய சூக்குமை பைசந்தி மத்திமை வைகரி என்னும் வாக்குகள் பிதற்றி ஓய்ந்தன். இப்படி அண்ட கோசத்தில் சத்தி நிலைபெற்று உணர்த்தும் வேதம் கூறும் அனுபவப் பொருளான திங்கள் விளங்கிக் கொள்வீர்.
1982. சுவாதிட்டானதினின்று மேலே வருவது கதிரவன் வருகின்ற வழியாகும். அது யோகியர் அல்லாத மற்றவரால் அறிய இயலாத அரிய பொருளாகும். அங்ஙனம் எவராலும் காணப்படாத கதிரவன் நீருக்குரிய மணிப்பூரகத்துக்கும் தீயினுக்குரிய அநாகத்துக்கும் இடையில் உதிப்பவன் ஆவான்.
1983. கதிரவன் மண்ணீரலீருந்து சுவாதிட்டானம் வந்து அங்கு அதைப் பிளந்து மூலாதாரம் போல் அவ்விடத்தினின்று வானக் கூறான ஆஞ்ஞையையும் பிளந்து உடலுக்கு வெளியே பேரொளியாய் விளங்கி நிற்பான். ஆனந்தத்தால் துதிக்கும் உரிமைக்குரியவனாய் நின்றான்.
1984. நிலத்தை ப்பிளந்து கொண்டு கதிரவன் வரும் வழியை மிகவும் கீழ்பட்ட நூலைக் கற்ற உலகியல் அறிவுடையவர் யரும் அறியார். ஆனால் மேரு மலையைக் கதிரவன் சுற்றி வருவதாய்க் கூறுவர். ஆனால் மேரு மலையைத் தலையே என்று அறிந்தவர் உடலில் உள்ள கதிரவன் சுற்றி வரும் முறையை அறிவர்.
#####
ஓம்நமசிவய!
அல்லல்போம், வல்வினைபோம், அன்னை வயிற்றில்
பிறந்த தொல்லை போம், போகாத் துயரம் போம்,
நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்!
#####
விந்து சயம்-போக சரவோட்டம்!
1937. நம்மை விருப்புடன் பார்க்கும் பெண்களை நாம் பாராமல் அகன்று போய் ஆராய்கின்ற மனமுருக மூலக்கனலை எழுப்பிக் கண்ணின் வழியாய்ப் போய்ப் பார்க்கும் விருப்பம் பாழாக மூலமான புருவ நடுவில் கண்ணைச் சேர்க்கும் யோகியே சிவம் ஆகும்.
1938. காம மிகுதியில் பொருந்தினால் திருவருளால் வரத்தக்க சிவயோகம் பொருந்தாது. அந்தக் காமம் முதலிய வற்றுள் பொருந்துவோனும் மனவனமை இழந்து அஞ்சுவான். உடம்பும் தன் இயல்பு கெடும். உலகில் உள்ள் தாதுக்கள் உயிரை பாதுகாக்காமல் அழிந்து விடும்.
1939. பெண்களின் வாய்ப்பட்டுச் சென்ற இவர் கூட விரும்பினால் தொடர்ந்து மாறி மாறி வரும் பூர்வம் அபரம் என்ற இரண்டு பக்கத்தில் பூர்வம் என்ற வளர்பக்கத்தில் பொருந்தாத முதல் எட்டு நாட்கள் கூடிய இன்பமானது துன்பம் ஆகும். வளர்பிறையில் பின் ஆறு நாட்களும் சிறுமை இல்லாத தேய்பிறையில் முன் ஆறு நாள்களும் புனர்வதற்கு ஆகும்.
1940. யோக நெறியில் நிற்பவர் வளர்பிறைப் பக்கத்தில் முன் ஆறு நாட்களும் தேய்பிறை பக்கத்தில் பின் ஐந்து நாட்களும் ஆகப் பதினொரு நாட்களையும் விலக்கி மற்ற நாட்களில் கூடலாம். இவரின் வேறான சரியை கிரியை நெறிகளில் நிற்பவர் மாதர் பூப்பு அடைந்த பின்பு கருப்பாயத்தில் உள்ள இதழ் வளர்ந்து கொண்டே வரும். இடைப்பட்ட இருபத்தொரு நாள்களில் பூப்புத் தொடங்கிய ஆறு நாட்களுக்குப்பின் உள்ள காலத்தில் கூடலாம்.
1941. பொருந்தும் அளவில் பொழுது விடிவதற்கு முன் உள்ள நான்கு முகூர்த்தமே விந்துவை பதிப்பதற்குரிய காலம். சந்திரகலை சூரியகலையில் அடங்கியபோது கலந்து கூடிக் காமநூலில் சொல்லியபடி புனர்க. விந்துவைப் பதிப்பதாயின் வலமாகவும் இடமாகவும் இல்லாமல் சுழுமுனையில் பொருந்தி விடுக.
1942. மிக்க காதலையுடைய பெண்களிடம் ஆசையை விட்டு மூலவாயுவையும் அந்தக் கரணங்களையும் அகமுமாக்கி எழுச்சி கொண்ட இந்திரியங்களைப் போன்று சலனம் இன்றி இருப்பானும் பொறி புலன் ஒருமைப் பட்டு நிற்க விந்துவினை விடுக.
1943. மங்கையர் குணமும் நலமும் நல்ல இளமையும் பழைய வடிவமும் பகர்கின்ற பவழம் போன்ற வாயும் மிண்டும் தனமும் புனரும்போது மனம் முதலிய அந்தக் கரணம் இவற்றுடன் பதியாது அகமார்க்கமாகச் செல்லக் கண்டு விந்துவை விடுவாயாக.
1944. விந்துமை மங்கையின் கருப்பையில் விட்ட பின்பு கர்ப்ப உற்பத்தி விதியின்படி தீண்டிய காலம் முதலியவற்றை நன்கு விளக்கமாக ஆராய்ந்து உடலுடன் பொருந்திய சிசுவின் வாழ் நாள் சாகும் நாளைப் பற்றியும் குணம் இழிவைப் பற்றியும் மேன்மையான நெறியைப் பற்றியும் இது இது என்று நினைத்துப் பார்த்து அறிவாயாக.
1945. உலகத் தொடர்பின்றி கருப்பையில் வளர்ந்து உறுப் பெற்றுப் பெண்ணினின்று நீங்கியே உலகில் சேர்க்கப் பெற்று அக்குழந்தை இரண்டு மாதங்கள்கூட வாழாமல் நீங்கி மூப்படைந்து பின்நாளில் நீங்கினும் எல்லாம் எண்ணுவதற்கு ஆகும்.
1946. விதை விதைப்பவர்க்கே அல்லாமல் விதைக்காதவர்களுக்குப் பயன் ஏதும் ஏற்படுவதில்லை. அங்ஙனமே வித்தின் பயனை அறிந்து ஒளி செய்பவர்க்கு அல்லாது அறிவும் இல்லை. விந்துவே ஒளியாய் மாறுகின்றது என்று சலனம் இல்லாது உணர்பவர்க்குத் தயிரில் இருக்கும் வெண்ணெய் போல் உயிரில் உள்ள சிவக்கனியாகும்.
1947 .தலையெழுத்து எனப்படும் பிரமன் எழுத்து ஆயுள் முதலிய யாவும் ஈசன் கருவில் பதியும் உயிருடன் கருத்தில் அமைத்துத் தானும் இருக்கின்றான். அவ்வாறு கருத்தில் உள்ளதே விந்தாய்ப் புறத்தில் உள்ளதைக் காரண காரியமாய்க் கருத்தில் எண்ணுவது கற்பனையாகும்.
1948. நீங்காத மனத்தின் ஒளி மண்டலம் உடலுடனே கூடி நிற்க நிற்கின்ற அழியா உயிரும் அவையற்ற ஆற்றலும் குறைவில்லாத அறிவின் அகலமும் தவம் செபம் பிரணவ சித்தியும் அழியாத எட்டுவகைச் சித்திகளும் பருவிந்து இவற்றினால் அடையத்தக்கனவாம்.
1949. பருவிந்துவற்றிப் போகும்படி மூலாதாரத்தில் உள்ள குண்டலியான தீயைப் பெருக்கி விந்து கீழ் நோக்காதவாறு தடுத்து மேல் ஏற்றுவதால் அமையும் விந்து ஞானத் தீயில் பொருந்தி அங்குள்ள ஒளியை அடைந்து பூரண சந்திரமண்டல அமுதைப் பல தடவை பெருக்கி உன்பவரே சிவயோகி ஆவர்.
1950. யோகியும் ஞானியும் உத்தமனான சித்தனும் போகியும் ஞானத்தில் உயர்ந்த பதவி வகிப்பவனும் காமம் வந்தபோதும் கூறப்பட்ட முறை அறிந்து அமுதம் உண்பவனும் என்னும் இவர் விந்துவை வென்ற வீரர் ஆவார்.
1951. சிவயோகியர்க்குச் சிவத்தின் உடலே தம் உடலாகும் சிவாக்கினியான ஒளியும் மண்ணுலகத்தின் அழிவைச் செய்யும் சத்தியான வீரியமும் மூலக் கனலுடன் சேர்ந்து உண்டால் அதுவே அமுதம் ஆகி அறிவாகும்.
1952. மக்கள் விந்துவின் அருமையும் பெருமையும் அறியாமலே கெடுகின்றனர். அதனால் நாள்தோறும் பொறிகள் வயப்பட்டு மனம் அழிந்து உடல் அழிந்து வருந்துகின்றார்கள். ஞானமே வடிவாய் நனவில் துரியாதீதத்தில் சிவத்துடன் செறிவாகப் பொருந்தியிருக்கக் கீழ் உள்ள வீரியம் மேல் முகமாகி ஒளியாகித் தூல விந்து அழிந்துவிடும்.
1953. பெண்களைக் கொல்லும் இயமன் என்று நினைக்க காதலால் விளைவதான காமமானது விலகும்.. காமக் கழிவில்லாததால் இறப்பு இல்லை. நூறு கோடி ஆண்டுகள் சிவச் சோதியில் கலந்து ஆணவக் குற்றம் நீங்கும் காலம் ஆகும்.
1954. விந்துவை வெற்றி கண்டவன் காலத்தை வென்றவன். விந்துவை அழித்தவன் காலத்தால் வெல்லப்பட்டு அழிந்தவன். விந்துவை வென்று விளங்கும் காலங்களில் குண்டலினி சத்தி மூலவாயுவில் பொருந்தி மேலே எழும் இன்பத்தை அடையமாட்டார்.
1955. மங்கை ஒருத்தியுடன் புணரும் நாளுக்கு முன் நாளில் கணவன் தன்னிடம் காதலால் விளையும் இன்பத்தை அடைய வேண்டின் அந்த மங்கையின் வயிறான பாண்டத்தில் மலத்தையும் வாத பித்த சிலேத்துமத்தையும் விலக்க வேண்டிய அளவுக்கு விலக்கிப் பொருந்துவர்.
1956. ஆஞ்ஞையில் உதிக்கின்ற விந்துவும் நாதமும் கீழ்முகம் ஆகும்படி சுழுமுனைத் தியானம் செய்து பிரமரந்திரத்தின் வழியே போய்ப் பால் போன்ற வெண்மையான மதிமண்டல ஒளியில் பொருந்திக் கீழ் உள்ள பற்றை விட்டால் கீழ் முகமான மயக்கம் கெட வீரியமும் வற்றிப் போகும்.
1957. பரு விந்து விளையும் முறையும் அந்த வீரியம் முதிர்ந்து நிற்பதால் அடையும் பயன் முழுவதையும் அறியாதவர் அடையும் அழிவும் அறிந்தவர் விந்துவை அடக்கி ஆள்வதால் அடையும் சிறப்பும் அதனால் பெருகிய நாதமும் அதன் வகையும் என்பவனவற்றை ஆராய்ந்து அறிவார்க்கு விந்து வெற்றி உண்டாகும்.
1958. விந்து என்ற பெயரையுடைய் வித்தை அது உள்ள மூலாதரத்திலே ஓங்கி எரியும் குண்டலினித் தீயால் விரும்பி எரித்து அந்தச் சத்தியை முடிவில்லாத கதிரவ மண்டலத்தில் ஏற்றி மதி மண்டலத்தைச் சாரச் செய்தால் குலிர்ந்த அமுதாகும்.
1959 அமுதமான சந்திர மண்டலத்தில் உள்ள விந்துவில் உடலில் தோன்றிய வீரியம் கலந்து கெட உடல் முழுவதும் புனல் பரவிச் சிவத்தீயில் இலயிக்க அமுதமயமான சிவபோகம் விளையும். ஆதலால் சிவயோகிக்கு அமுதமான சித்தி பொருந்தும்.
1960. யோக நெறி கொண்டு விந்து அழியாமல் புணர்ந்து ஆணும் பெண்ணும் ஆன இரு உடல்கள் கலந்தாலும் விந்து நழுவிப் பெண்ணிடம் சிந்தாமல் அமையும் புணர்ச்சியே சிவயோகம் ஆகும். இங்ஙனம் நல்ல முறையில் யோகத்தில் மாதர் ஆசையைப் போக்கமாட்டாதவர் மூடர் என்னே அவர்தம் அறியாமை.
1961. யோக நெறியில் நிற்பவர் மங்கையுருடன் புணர்ந்தாலும் அந்த விந்துவைக் காதலினால் விடமாட்டார். மங்கையரோ யோகியரை உயிர் போன்று எண்ணி ஆசை கொண்டு வருத்துவர். கூறப்போமால் நீண்ட காலம் பழகிய காதலைப் போன்று அப்பொழுதே உயிர்க்காதல் செய்வர்
1962. சத்தியால் விந்து வெற்றி உண்டாகும். தூண்டிய மூலாதாரத்தில் உள்ள அனலை மேல் செல்லும்படியாகச் செய்து நான்கு பக்கமும் சிதறிப் போகாதபடி வீணாத்தண்டினூடே அசைவு உணர்ச்சியில் பொருந்தச் செய்து அமுதம் உண்ண ஒளிமண்டலம் ஆகும்.
1963. தலைமீது விந்துவும் நாதமும் உயர்ந்து பொருந்தி வந்த மூலாதாரத் தீயின் வெப்பம் மயிர்க்கால் தோறும் நிறைய நம் சிந்தனை ஆன்ம போதத்தை விட்டுச் சிவோகமப் பாவனையில் நிலைபெற உண்மையான உடலில் விந்து வற்றிப் போகும்.
1964. விதையினைக் குத்தி உண்பவ்ன் விதையால் ஆன பயனை அடைய மாட்டான். விதையைக் குத்தி உண்ணாமல் விதையை வறுத்து உண்பவன் விதையைக் குத்தி உண்பவனைப் போன்றவனே தவிர வேறல்லன். இவ்விரண்டும் அல்லாத மூன்றாமவன் விதையைக் குத்தி உண்ணாமல் விதையை விதைத்து விதையின் பயனைப் பெருக்கிக் கொண்டவன் ஆவான்.
1965. இந்த உடம்பு அன்னமய கோசம். இதில் விந்து வற்றும் முறையை அறிந்து பிராண சத்தியான வீரியம் கீழ் நோக்காதபடி தடுத்து மேலே பொருந்தும் வகையில் மின்னல் ஒளியுடன் கூடிய விந்து நாதாந்தத்தில் நிலை பெற்றால் பிரணவ ஒளி தோன்றும் காரணமான தூல வீரியம் வெளிப்படாமல் உடம்பில் வற்றி விடும்.
1966. மக்கள் எல்லோருக்கும் அன்ன சாரமான வீரியம் எனவும் பிராணசாரமான ஒளி மண்டலம் எனவும் இரண்டு வகையுண்டு. பிராண சார்மான ஒளி மண்டலத்தை அறிந்து அதிலே நிலைபெற்றுச் சாதிக்க வல்லார்க்குப் பொன்னொளிமயமான உடல் சித்தியும் எண்பெருஞ் சித்தியும் உடல் சித்தியும் வாய்க்கும். அத்தகைய சிவ யோகிகள் அழியாமல் நீடு வாழ்வார்கள்.
1967. திருவைந்தெழுத்தில் முதலாவதாய் உள்ள சி கரம் இருகண்களில் அக்னி தன்மையுடன் ஒளிரும் கலையாக, பிரணவத்தில் உள்ள ம கரம் தொண்டையைக் கடந்து வெளியான் போது அ, உ, ம மூன்றும் ஒன்றாக அவை பராசத்தி நிலையமான புருவத்தின் நடுவில் போய்ப் பொருந்துவதால் உண்டாகும் விந்து வெற்றியைப் பொருந்த உரைப்பதே உபதேசம் ஆகும்.
1968. ஆன்மாவான தான் அடையும் உபதேசம் என்பதும் தானே அனைத்துப் பொருள்களிலும் கலந்துள்ளவன், தன்னை அல்லாது வேறு ஒரு பொருள் இல்லை என்பதுமாம். அத்தகைய ஆன்மா விளங்கும் ஒளி மண்டலத்தில் உயர்ந்து செல்கின்ற ஒளியாய் அதனால் காரியப்படும் ஞானேந்திரியங்கள் கன்மேந்திரியங்கள் அந்தக் காரணங்கள் ஆகிய பதினான்கும் வெளியே செல்வதை விட்டு உள்ளே அடங்க அதன் ஆன்ம அறிவும் அகன்ற அறிவும் ஒன்றாதல் அமையும்.
1969. நுண்மையான விந்து நாதங்கள் விளைதலால் இந்த உலகத்தில் உயிர்களுக்கெல்லாம் உடலுடன் கூடிய தோற்றம் உண்டாகியது. உயிர்களுக்கு முடிவும் தோற்றமும் மந்திரங்களின் ஆற்றலும், விந்து நாதம் ஆகியவற்றில் உள்ளன். விந்து அமைய அகண்ட சிவம் முடிவும் தோற்றமும் மந்திரங்களின் ஆற்றலும் விந்து நாதம் ஆகியவற்றில் உள்ளன. விந்து அமைய அகண்ட சிவம் அகம் ஆகும்.
1970. விந்துவை மறுபடியும் தோன்றாதபடி வறுக்கும் முறையும். எவ்விடத்தும் உலவும் உள்ளத்தைத் தடுத்து நிறுத்துவதால் வெற்றியைத் தரும் முறையும் அதை உயர்ந்து போகும் சகசிர தளத்தில் செலுத்திப் பக்குவம் செய்யும் முறையையும் அந்தக் கொடிய வினைகளைப் போக்கும் நாளில் வரும் .அவ்வமய்த்தில் சிவாக்கினி பக்குவமான கனியாகும்.
1971. விந்துவும் நாதமும் பொருந்தி உயர்ந்து போய்ச் சந்திரம்ண்டலத்தில் அமையும்போது பராகாயத்தில் ஒளி மண்டலம்- அமுதம் சிறந்து விளங்கும் அங்கு ஏற்படும் பிரணவ ஒளியே ஆகுதிக்குரிய மந்திரம் ஆகும்.
1972. மனத்தின் சத்துப் பாகம் வேள்விப் புலன் வழியாய் நாதமயமாய்ப் பொருந்தியவற்றை நாடி அதன் இன்பமான விந்துவில் திகழ்வர். உள்ளத்தில் அசத்துப் பாகத்தில் தோன்றுகின்ற நுண்மை வாக்கும் பரு வைகரியான வாக்கும் காம நோக்காய் இருக்குமாயின் தூல விரியம் உண்டாகிக் கெடுவர்.
1973. நாதமும் அதனை உணர்கின்ற மனமும் மனக் கருத்து ஒருமித்துச் சிவம் உள்ள இடத்தையும் அறியார். அதை உள்ளபடி உணர்ந்தாரானால் சிவபெருமான் இருக்கும் இடம் அதுவே என்பதையும் அறிவர்.
1974 .வன்மையான பாதம் நிலம், கொப்பூழ் நீராகும் கொப்பூழ் முதல் மார்பு வரை நெருப்பாகும். மார்பு முதல் தோள்வரை காற்ராகும். கழுத்தும் அதன்மேலும் வான் ஆகும்.
#####
ஓம்நமசிவய!
முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!
#####
விந்து உற்பனம்!
1923. படைப்புக் காலத்தில் விந்துவில் உயர்வைச் செய்யும் குண்டலினியும் படைபுக்குக் காரணமான பரமாகாய மண்டலத்தில் விந்து காரியமான ஒன்பது பேதமான நான்முகன், முதலியவரும் அவர்களின் சத்திகளும் இவற்ரின் இயக்கத்தில் அந்தக் கரணங்கள் நிவிருத்தி முதலிய ஐந்து கலைகள் வைகரி முதலிய வாக்குஅளும் தோன்றின.
1924. விந்துவின் செயலால் நானமுகன் திருமால் உருத்திரன் மகேசுவரன், சதாசிவராகிய ஐவரும் ஐந்து உயிரில் பொருந்தித் தொழிற்படுவர்.. நாதபேத காரணத்தால் அது ஆறாகப் பிரியும். இவ்வாறு அமைவதால் உருவ விருத்திகளான நான்முகன் திருமால் உருத்திரர் மகேசுவரர் ஆகிய நால்வர் பால் மற்றத் தத்துவங்கள் பொருந்தும். இங்ஙனம் முப்பத்தாறு தத்துவங்களும் பொருந்தும்.
1925. வேறுபாடுகள் எல்லாம் பரவிந்துவால் உண்டாவன். தோற்றத்தைத் தரும் தூய மாயையும் வாக்கு சத்தியும் தற்பரையும் உயரச் செல்கின்ற பிரணவத்தில் மகிழ்வை உண்டாக்கும் குண்டலினியும் விந்துவிடம் இந்த நான்கும் பொருந்தி நிற்கும்.
1926. விளங்குகின்ற நிவிருத்தி முதலிய கலை அகராதி கலையில் பொருந்தும். வளமையுடைய உகாரம் மகரத்துள் அடங்கும். விந்து குற்றம் இல்லாத நாத முடிவை எய்தி அந்தக் கரணமாகிய மனம் முதலியவற்றுள் அந்தம் அடையும்.
1927. இறுதியும் முதலுமாகிய பராபரன் எல்லாவற்றையும் தன்னகத்தே கொண்டுள்ள அந்த நெறியில் கிழங்கினைப் போன்ற முதற்காரணமான மாயையிலிருந்து உலகமான பிரபஞ்சத்தை தந்து ஐந்தொழிலையும் தான் செய்கின்ற விதையாகும்.
1928. விதையான விந்துவின் ஆற்றலால் ஆகின்ற் கண்டமும் அகண்டமும் விளங்கி வான் முதலிய ஐம்பூதங்களும் காரிய மாயையில் தோன்ற விந்து அவற்றின் உள்ளும் புறமுமாய் விளங்கும்.
1929. உள்ளும் புறமும் புகுந்து விளங்குகின்ற விந்துவின் நிறமானது வெண்மையாகும். நாதத்தின் நிறம் செந்நிறமாகும். அவை பொருந்துவதால் சிவசத்தி பதிதலாகும். இச் செயலால் ஆயுளும் ஆற்றலும் வீடும் அமையும்.
1930. உடலுக்கு வெளியே உள்ள ஒலி நிலையிலேயே ஆடையும் குடமும் வடிவு கொண்டு நிற்பதைப் போன்று நிலைபெற்று ஐந்து கலைகள் முதலிய காரணத்தினின்று காரியமாகிய உலகம் அனைத்துமாக விரிந்து மாயை ஆகும்.
1931. அகண்டத்தில் விதையாய் விளங்கித் தோன்றும் சிவமே பிண்டத்தில் விந்துவாக உள்ள இயல்பை மக்கள் உணரார். இன்பம் பொருந்திய சுவாதிட்டான மலரின் அன்னப் பறவை வடிவாக உள்ளவனே பரமாகாயத்தில் விளங்கும் சிவம் ஆகும்.
1932. வித்தின்றி முளையானது இல்லை. அதனால் அம்முளை விதையினின்று தோன்றுவதே அல்லாது வேறிடத்தில் தோன்றுவதில்லை. வித்தும் முளையும் ஒன்றை விட்டு ஒன்று இல்லாமையால் இரண்டையும் ஒரு பொருளாகக் கருத வேண்டும். அதைப் பொலவே விந்துவும் சிவமுமாகும்.
1933. உண்ட உணவுகள் பொருந்தும் உடல் உயிர் பொருந்துவதற்குரிய உடல் மனம் கழியும் மலம் என மூன்று பகுதியாகும். திருந்தும் உடலும் மனமும் ஆகிய இரண்டு பகுதியும் கூடி முன்னாள் உண்ட உணவின் சாரத்தால் அமைத்து இருந்தன.
1934. ஏழுவகையான தாதுக்களின் உணவு சாரம் இரத்தம் சுக்கிலம் என்னும் மூன்றால் உரிய நாளில் சாரம் குருதியாகி குருதி சுக்கிலமாக மாறி ஒரு புல்லின் முனையில் உள்ள பனித்துளி போல் அரிய விந்துவாக அமையும் இவ்வாறாய விந்து இருபத்தொரு நாள்கள் உடலில் வளரும்.
1935. உடலில் விந்துவானது மூன்று நாட்கல் கலந்திருக்கும். உடம்புள் மன மண்டலமாகிய ஒளி மண்டலமாகும் திருவடியில் ஒன்றி நின்றவர்க்கு ஒளி மண்டலம் நீங்காமல் நிலையாய் அமையும். அவ்வாறின்றி மாயா காரியமான உலக இன்பத்தில் ஈடுபடுவர்க்கு மனத்துடனே ஒளி மண்டலம் அழியும்.
1936. அழியும் விந்துவின் அளவை அறியமாட்டார். இருந்து அழியும் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளவும் அறியமாட்டார். அழியும் உடலில் அழிந்து தளர்ந்தவர் அழியும் தன்மையை அறிந்தும் விந்து நீக்கத்தினின்றும் நீங்க மாட்டார்.
#####
ஓம்நமசிவய!
யானை முகத்தான் பொருவிடையான்சேய் அழகார்
மான மணிவண்ணன் மாமருகன் மேனிமுகம்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்
உள்ளக் கருத்தின் உளன்!
#####
சமாதிக் கிரியை!
1910. அழிவில்லாத சிவஞானிகள் உடல் தீயில் வெந்து கெடுமானால் நாட்டில் உள்ள மக்கள் எல்லாம் வெப்பு நோயினால் பீடிக்கப்பட்டு வருந்துவர். கவனிப்பார் இல்லாமல் அழுகி நரி அவ்வுடலைத் தின்னுமாயின் நுண்மையான பகை மூண்டு நாட்டில் உள்ளவர் அழிந்து நாய் நரிக்கு இரையாவர்.
1911. ஞானியின் உடல் தீயில் இடப்பட்டு வெந்தால் சிவன் வீற்றிருக்கும் சிவன் கோயிலைத் தீயிட்டுக் கொளுத்தியதைப் போன்றதாகும். அந்த நாட்டில் மழை பெய்யாது. உலகத்தில் பஞ்சம் உண்டாகும். நினைத்தற்கு அரிய மன்னர் பதவியை இழப்பார்.
1912. சிவஞானியின் உடலைப் புதைப்பது புண்ணியமாகும். அவர்தம் உடலை நெருப்பை இட்டுச் சுட்டு எரித்தால் நாட்டில் அழிவு ஏற்படும், அந்த உடலைப் புதைக்காமல் மண்ணில் கிடந்து அழியும்படி விட்டால் உலகத்திலே அழகு அழியும். உலகம் எங்கும் தீ பிடித்துக் கெடும்.
1913. அழிவில்லாத ஞானி அருளைப் பெற்றபின் உடலை விட்டால் அந்த உடம்பைக் குகை ஒன்றைக் கட்டி அதில் வைக்க வேண்டும். அங்ஙனம் செய்தால் அழகிய மன்னரும் பழைய குடிமக்களும் அள்வில்லாத இன்பத்தை விளைக்கும் இறைவனின் அருளைப் பெறுவர்.
1914. ஒன்பது சாணுக்குக் குறையாமல் ஆழமாய்க் குழியைத் தோண்டி அங்ஙனம் தோண்டிய மண்ணைக் குழியைச் சுற்றிலும் ஐந்து சாணுக்கு அப்பால் வளைத்துக் கொட்டித் தவம் மிக்க குகையை முக்கோண வடிவமாய் பக்கம் மூன்றுக்கு மூன்று சாண் அலவுள்ளதாய்ச் செய்து பிறவியை நீக்கும் நல்ல குகையில் ஞானியின் உடலைப் பதுமாசனம்போல் இருத்திடுக.
1915. சிவஞானியின் மேனியினை நல் அடக்கமான குகை அமைக்கின்ற இடங்கள்: சமாதி செய்யவிருப்பவன் வீட்டின் பக்கம், நடை பாதையின் பக்கம், குளக்கரை, ஆற்றிம் நடுப்படுகை, பூஞ்சோலை, நகரத்தில் நல்ல பூமி, நினைத்தற்கு அருமையான காடு உயர்ந்த மலைச் சாரல் என்ற இடங்கள் ஆகும்.
1916. நெருக்கமாக உள்ளவர் நல்ல குகை நாற்புறமும் காலடியால் ஐந்து அடி அகலமும் உயரம் ஒன்பது அடி நேராக அமைய அழகமைந்த குகையின் குறுக்களவு மூன்றுக்கு மூன்றாக செய்யும் முறையாகும்.
1917. ஐந்து வகை உலோலங்களையும் ஒன்பது வகை மணிகளையும் குகையினில் பரப்பி மிகுதியாய் இடவேண்டும். அதன்மீது இருக்கையை அமைத்துத் தருப்பையைப் பரப்பி திருவெண்ணீற்றை நிறைய இட வேண்டும். அதன் மீது பொற்கண்ணப் பொடியைப் போடவும் வேண்டும்.
1918. குகையின் நடுவில் நான்கு சதுரமாய் செய்து அதன் மீது தேன் ஒழுகும் மலர் சந்தனம் கத்தூரி அகியவற்றுடன் தெளிவான சாந்து, புனுகு, பன்னீர் என்பனவற்றை சேர்த்து தெளியுங்கள். ஒளி பொருந்திய தீபத்தை அக்குகையில் காட்டுங்கள்.
1919. வெண்ணீற்றுப் பூச்சாகிய சட்டையை மேலே இட்டு ஞானியின் உடலை இருக்கை மீது அமர்ந்தி பூ அறுகம்புல் நறுமணப் பொடி வெண்ணீறு ஆகியவற்றை அணிவித்துக் குகையின் மீது வைத்து நான்கு பக்கமும் மண்ணை விரித்து சமம் செய்யுங்கள்.
1920. வெண்ணீறு முதலியன விரித்தபின் நான்கு பக்கங்களிலும் பரப்பி பொரிக்கறி உணவு இளநீருடன் குருவின் திருவடியையும் இட்டு காதணி முகம் கண் முதலிய வற்றைச் சாத்தியபின் மேலே மேலாடை சாத்துங்கள்.
1921. திருநீற்றையும் நறுமணப் பொடியையும் மேலே சொரியும் தர்ப்பையையும் விலவ மலர் கொண்டு பாத்தியம் ஆசமனம் அர்க்கியம் தந்து நிலத்தின் மீது மூன்றுக்கு மூன்று அடி மேடை அமையுங்கள்.
1922. மேடை மீதில் அரசமரக்கன்று அல்லது சிவலிங்கம் எண்ணும் இவற்றுள் ஒன்றை நிறுவி சமாதியின் மேன்மையான சந்நிதிக்கு வடக்குத் திக்குப் பக்கம் அல்லது கிழக்குப் பக்கம் ஆகியவற்றுள் ஒன்ரு அமைய அன்புடன் பதினாறுவகை உபசாரம் செய்வீராக!
#####
ஓம்நமசிவய!
ஏத்தி எனதுள்ளம் நிற்குமால் எப்பொழுதும்
மாத்தனி வெண்கோட்டு மதமுகத்துத் தூத்தழல் போல்
செக்கர் திருமேனிச் செம்பொற் கழலைங்கை
முக்கட் கடாயானை முன்!
#####
பூரணக் குகைநெறிச் சமாதி!
1902. சிவயோகி வினைப் போகத்திற்காகத் தாங்கிய இவ்வுடலை விட்டானாயின் அவனது ஆன்மா வளர்பிறையானால் தேவர்களுடன் தங்கி ஓளியில் நின்று பழகினவன் ஆனால், கதிரவ மண்டலத்தில் சிலநாட்கள் தங்கி தளர்ச்சி இல்லாத பிதுர் உலகில் சில நாட்கள் தங்கியிருந்து சந்திர மண்டலத்தைப் போய்ச் சேரும்.
1903. சமாதி கை கூடாமல் உடலை விட்டவர் போக வேண்டிய இடத்துக்குப்போய் அங்கு நியதி முடிந்தபின்பு புவியில் பிறந்து பிரார்த்துவ வினைகளைத் தூய்த்து மீண்டும் பிறவாத பெரிய யோகத்தை திருவருள் துணையாக நிறைவு செய்வர்.
1904. புவியில் பிறந்த யோகி மற்ற் உலகத்தார் போல் உண்டு உடுத்து உறங்கி வாழ்ந்து எல்லாவற்றுக்கும் மேலான சிவயோகத்தில் தலைப்பட்டு முயலும் போது ஆகும் அந்த ஒளியில் ஒளிவடிவம் பெறுவதற்கு முன் உடல் சித்தி பெற்று மதிக்கத்தக்க உடலை அடைவர்.
1905. சிவயோகியான ஞானியர் யோகம் நிறைவுறாமல் உயிர் நீங்கி உடலை விட்டால் தவ உலகத்தை அடைந்து பின்பு பிறந்து சிவயோக வாயிலாகச் சிவஞானம் நிலை பெற்று விளங்குவார். அவர்கள் ஒளியுலகத்தவரால் போற்றப்படும் புண்ணியர் ஆவார்.
1906. குறைவில்லாத சிவ ஞானியான நல்ல யோகி உடலை விட்டுப் பிரிந்தால் தான் என்ற நினைவில்லாது மோன நிலையில் இருந்து சிவமான தன்மையை அடைவர். அன்னார் வேறொரு உடலில் புகாமல் நின்மல் முத்தராய் விளங்கி உலகத்தில் மீண்டும் பிறவிக்கு வரமாட்டார்.
1907. இறந்தவர் அடையும் பயன் எதுவென்றால் இறந்தபின் நீங்கள் அடைவது சித்தியாகும். அது கூடுமானால் இறந்தவர் உலகில் இருந்தவரே ஆவார். அந்தச் சித்தர் மும்மலங்களையும் அழித்தவர் ஆவார்.
1908. பிரணவ யோகத்திலிருந்து பிரணவத்துக்குரிய எல்லா வல்லமையுடைய சிவத்தின் அருளைப் பல முறையும் சிந்திக்கப் பரசிவமே அந்த ஞானியர்க்குச் சத்தியின் கூட்டத்தை அருள்வாள். அங்ங்னம் தாம் பெற்ற அருளை எத்தகைய பக்குவம் வாய்த்தவர்க்கும் வேண்டி அளிப்பவன் ஞானி. அவனவன் விருப்புக்கேற்ப மாணவனை ஈசன் வடிவாக அமைத்தருள்வான்.
1909. நீக்கம் இல்லாமல் எங்கும் விளங்கும் சிவத்தின் அருள் நடுவில் பொருந்தியிருக்கும் சிவஞானிக்கு எங்கும் சிவமே தோன்றும். அங்கங்கே உள்ள நிலம் முதலிய பூதங்களை விழுங்கி அவற்றுள் கலந்துள்ள வானம் போன்று ஈசன் வடிவு பெற்ற ஞான உடல் உணர்வு விட்டு எல்லாவற்றிலும் கலந்திருக்கும்.
#####
ஓம்நமசிவய!
களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன்
ஒளியானைப் பாரோர்க் குதவும் - அளியானைக்
கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்தாள்
நண்ணுவதும் நல்லார் கடன்!
#####
முத்திரை பேதம்!
1892. பதினொரு கருவிகளும் சிவபோத வழியினின்று சிவபோத வழியில் மாறவே வந்த முத்திரை, அமுதம் சுரக்கும் பிரணவத்தில் அழுந்தச் செய்யும் யாவற்றுக்கும் மேலான சிவன் திருவடியை அடையச் செய்யும் ஆரவாரம் அடங்கி மேலான வீடு கிட்டச் செய்யும்.
1893. சீவ துரியம், பர துரியம், சிவ துரியம் என்னும் மூன்று துரியங்களும் அடங்கும் இடமாகி அருமையாய்ப் பேசும் நாவின் செயலை அடக்கிப் பொருந்திய சாம்பவியும் கேசரியும் உண்மை நெறியைப் பெருக்கி ஞானம் விளங்கும் முத்திரையாம்.
1894. சாம்பவி முத்திரை குருநாதனின் அருட்பார்வையை உண்டாக்குவதால் அஃது ஒன்றன்பின் ஒன்றாய் தொடர்ந்து வரும் பிறவியை அகற்றி அருள் அமுதம் வழங்கும் முத்திரை. பிரணவத் தியானத்துடன் பொருந்தியிருக்கும் கேசரி சிவயோகமாகிய் நாம் பயிலக்கூடிய உண்மையான ஞான முத்திரை.
1895. ஓர் ஆதாரத்தில் விளங்குவது சதாசிவம். ஆதாரம் இல்லாமல் நிராதாரத்தில் அறிவு வடிவாய்த் திகழ்வது பரசிவம். ஆதலால் வடிவம் உடைய நான்முகன் திருமால் உருத்திரன் மகேசுவரன் உருவச் சதாசிவர் ஆகியவரின் நிலையைக் கடந்த மௌன நிலையே முடிவுடைய முத்தி நிலையாகும்.
1896. வாக்கு மனம் என்ற இரண்டும் தொழில் இல்லாது இருப்பது மோன நிலையாகும். வாய் பேசாமல் மட்டும் இருப்பது ஊமையாகும்.. வாக்கு மனம் ஆகியவை தொழிற்படாதவரே தூய்மை உடையவர் ஆவார். அங்ஙனம் ஆக்கும் அத்தூய்மையான நிலையை அறிபவர் யார்.
1897. யோகம் ஒருவர்க்கு வந்து அடைந்ததற்கு அடையாளம் எண் பெருஞ் சத்திகளைப் பெறுதலாம். இறைவனுடன் ஒன்றுபடும் ஞான முத்திரைகளை ஆராயும் போது வேதத்தில் கேசரியும் சாம்பவியும் சிறப்பாய் பேசப்படுவன்வாகும். யோக நிலையில் எண்ணிப் பார்க்கில் கேசரியே யோக முத்திரையாம்.
1898. ஒரு யோகியானவன் எட்டுப் பெருஞ் சித்திகளையும் பெற்று அருள் ஒலி வாசனையில் இருப்பவன். அவனே அறம் பொருள் இன்பம் வீடாகிய பொருள்களை அறிந்து அனுபவிப்பவன். அவனுக்கு ஆதார சோதனையும் நல்ல சத்தியும் அமையும். அவனே ஏகமாகிய சிவத்தைக் கண்டு அதனுடன் பொருந்தி ஒன்றாய் நிற்பவன் ஆவான்.
1899. யோக நெறியில் கூறப்படும் பன்னிரண்டு கலைப் பிரசாத நெறியே பதினாறு கலைப் பிரசாத நெறியாகும். இதனால் ஞானேந்திரியங்கள் கன்மேந்திரியங்கள் என்பவை காமம் முதலிய அறுபகை வழிச் செல்லாமல் அவற்றின் விருப்பத்தை விட்டு நிற்கும். இதுவே கேடில்லாத வேதாந்த சித்தாந்த இயல்பாகும். இறைவனைத் துணையாக மனத்துடன் சிந்தித்தல் நல்ல சுத்த சைவம் ஆகும்.
1900. முத்தார்க்கு உரிய அடையாளம் மோன முத்திரையாகும். குருவாக விளங்குபவர்களுக்குரிய அடையாளம் ஞான முத்திரையாகும். சித்தம் இனிக்கும் குண்டலினி யோகம் சித்தாந்த நெறியின் அடையாளமாகும். காற்று நிற்பதற்குரிய சமயம் கண்ட முத்திரையாகும்.
1901. தூய்மையான நெறியான கண்டத்தை இடமாகக் கொண்டு உயிர்வளி உச்சிக்குப் போகும். அது சகசிர நெறியைக் கண்டு பொன் போன்ற இதழ்களின் நடுவில் பொருந்தி நின்றது. அதன்மேல் வெண்மையான மதி மண்டலம் விளங்கியது, உயிர்வளி போகும் நெறியைக் கண்டு உள்ளம் தூயன் ஆகலாம்.
#####
ஓம்நமசிவய!
மொழியின் மறைமுதலே, முந்நயனத் தேறே
கழியவரும் பொருளே, கண்ணே - செழிய
கலாலயனே, எங்கள் கணபதியே, நின்னை
அலாலயனே, சூழாதென் அன்பு!
#####
போசன விதி!
1884. இந்த உலகத்தில் எட்டுத் திசையிலும் இறைவன் அடியவர்க்கு அளித்த உணவை அவர்கள் அமுதம் என்று ஏற்பர். ஏனெனில் உடலான ஒரு நிலத்தைப் பொருந்தி அதைப் போற்றுபவர் அவ்வாறு அதனைப் பாதுகாக்காமல் பாழாய்க் கிடக்க விரும்பமாட்டார்.
1885. அடியார் அச்சிவன் உடலுள் உயிர்க்கு உயிராய் விளங்கும் அருளை உணர்ந்தவர், உச்சிப் போதில் மனத்தில் அயர்ந்திருக்கும் தலைவனுக்குப் பிச்சை ஏற்று உண்டு வேறுபாடில்லாத ஞானம் கைவரப் பெற்று ஆசையைவிட்டுத் தனியே சகசிரதளத்தில் இருப்பர்.
#####
பிட்சாவிதி!
1886. விந்துவான விதையைச் சேமிக்க உடம்பான பாத்திரம் உண்டு. விதையை விதைப்பதற்குப் பாதுகாப்பான சக்சிரதளம் என்ற நிலம் உண்டு. ஆஞ்ஞை சக்கரமான் உச்சிக்கு முன்பு தியான்மான வடிவு அமைந்தது. அச்சம் இல்லாமல் மேல் முகமாய் விளங்கும் சக்சிரதளமான அந்த நிலத்தில் பொருந்திச் சமாதியான் பயனை அடைய மாட்டாதவர் விருப்பம் காரணமாய் வெளியே போய்ப் பிச்சை ஏற்ருத் திரிந்கிறார்களே என்னே!
1887. சுவாதிட்டான சக்கரத்தில் உள்ள பிரம்ம படைப்பான வீரியத்தை இறைவன் ஏற்றான். காம உணர்ச்சியால் கழியாமல் நன்மை பெற இவ்வாறு பலி கொண்டான். நான்முகனின் தலையைக் கொண்டே காமக் கலையை மேலே எடுத்துக் கொண்டு போகப் பலி ஏற்றான். நான்முகன் பரமாகவேதான் இப்படிப் பலியைக் கொண்டான்.
1888. நீக்கம் இல்லாமல் நிறைந்து ஏழு உலகையும் படைத்த இறைவனை உலகத்தார் யாசித்து உண்பவன் என்று இகழ்ந்து நகையாடுவர். அப்பொருமான் ஏன் இரக்கின்றான். இடைவிடாமல் தன்னையே எண்னிக்கொண்டிருக்கும் அடியார்கள் வீரியத்தை ஏற்று ஒளியாய் மாற்றத் தன்திருவடியை அருளினான்.
1889. சிவபெருமானை தன்னை அடியவர் வந்து அடையும் நெறியில் நின்று உதவுவான். தன் நல்ல மெய்யடியார்க்குத் தன்னை இன்பவடிவில் தர இருந்தான். அடியார்க்கு அடக்கலமாக அடையும்படி இருந்தான். இங்ஙனம் அவன் தம் வரவை நோக்கியிருத்தலால் அவனை அறியாதவன் எனக் கூறலாமோ!
1890. சிவன் அடியார் தீயை ஒத்த பசி, ஆசை, சினம் என்ற குற்றங்களில் தங்கார். உடல் இன்பத்தை அவர்கள் நாட மாட்டார்கள். இந்த உலகத்திலும் பொன்னுலகத்திலும் தங்க விரும்ப மாட்டார்கள். சிவத்தையே கூடிட விரும்புவார்கள்.
1891. உண்மையான ஆன்ம ஞனத்தைப் பெற்று அறிவில் தெளிந்தவர்களும் கொடுக்கும் வள்ளன்மை உடையவர். வாயிலுக்கே செல்வர் பிச்சைக்குச் செல்லாமல் ஈசன் செயல் என்று இருந்த தவம் உடையவர். உலகவர் எல்லாம் தம்மிடத்தே வருவதற்கு இருந்தவர் ஆவர்.
#####
More...
ஓம்நமசிவய!
பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்க உக்கியிட்டு
எள்ளளவும் சலியாத எம்மனத்தையும் உமக்காக்கித்
தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில் போற்றுகின்றேன்
உள்ளதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!
#####
அடியார் பெருமை!
1868. திசைகளை உரிமையாகக் கொண்ட ஒரு பரம்பொருளை நாடும் தன்மையுடைய அடியார் நீங்காமல் இருப்பின் அந்நாட்டில் பகைப்பதற்கு ஒருவருமில்லையாகும். அந்நாட்டில் பருவ மழை முறையாய்ப் பெய்யும். அந்நாட்டில் விளையும் பொருளின் விலை தக்கதாய் விளங்கும்.
1869. முன்னைய புண்ணியப் பயனால் மண் உலகில் சிலலோக ஞானத்துடன் பிறந்து எடுத்த உடலிலேயே சிவவுலகத்தை அடையும் தவத்தைச் செய்வர். இவ்வுலகத்தில் சிவசத்தியின் ஆற்றலை அடைவர்.
1870. நாம் மேற்கொண்ட ஒளிமண்டலத்தில் எட்டுக் குலமலை உச்ச்சியும் கீழ் உள்ள நாகர்களும் அண்டங்களில் வாழும் தேவர்களும் ஆதிப் பரம் பொருளும் எட்டுத் திக்குகளில் உள்ள அனைவரும் வந்து என் கையில் உள்ளார் என்றாகி நாம் இனி உய்வு பெற்றோம்.
1871. ஏழு உலகங்களும் எல்லையில்லாத வானமும் உயிர்களும் உலகத்தில் உள்ள இயங்குபவை இயங்காதவையான எல்லாமும் அவற்றின் குண விசேடங்களும் பழைய வேதங்களும் படைத்தல் காத்தல் முதலிய தொழில்களும் அவை முறையாய் நிகழும்படி காண்கின்ற சிவனும் என் இடம் அல்லாமல் இல்லை.
1872. இறைவன் ஆண் பெண் பேடு எனப் பாகுபாடு உடையவன் அல்லன். அண்ட கோசத்தால் மூடியிருக்கும்போது உளே உள்ள அச்சோதியை எவராலும் அறிதற்கு இயலாது. கண்ணான கருவி இல்லாமலேயே காணும் செவி இல்லாமல் கேட்கும் சோதிக்குள் சோதியாய் விளங்குவான். அத்தகைய சிவத்தின் பெருமையை ஆராய்ந்து அறிந்ததே முதிர்ந்த ஞானம் ஆகும்.
1873. இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உலகத்தில் சிவனடியார்கள் அறியாமையின் வழிப்பட்டு மயங்காமல் அறிவு வழிபட்டுச் செல்வர். அதனால் அவ்வடியார் வான் உலகத்தையும் ஆள்வர். அன்னாரின் தோள்களும் எட்டுத் திசையாம். அன்னாரின் திருவடித் தாமரைகள் பாதலத்தில் இருப்பவை. மயக்கும் தன்மை இ;ல்லாத வெளி அண்டமே அவர் சிரமாகும்.
1874. மனத்தின் கண் விளங்கும் இறைவனை எண்ணி மனம் அடங்கப் பெற்ற அடியார் துன்பத்தினால் வருந்த மாட்டார். ஆகவே அகங்காரம் அடங்கப் பெற்று உள் புகுந்து இறைவனை அறியும் உள்ளம் தன்முனைப்பு அற்றுப் புரியட்டகம் ஆன நுண்னுடலை அழிக்கவும் அவரால் இயலும்.
1875. எனக்குச் செல்வாகவும் வரவாகவும் காதலுக்குரிய துணையாகவும் அழிவாகவும் உள்ளவன் இறைவன். இத்தகைய இறைவனை யான் எண்ணியபோது பழியும் புகழும் அவற்றால் ஏற்படும் பயனும் ஆகிய அனைத்தையும் நீங்கிய என் உயிராகிய நிலத்தை அவன் பக்குவம் செய்தான்.
1876. என் தாயுடன் என் தந்தை எழேழ் பிறப்பும் முன்னமே சிவனுக்கு அடிமை என்று எழுதிக் கொடுத்த அடிமை ஓலையை தான் ஒருவனாய் நின்று உலகம் அனைத்தையும் படைத்த முதல்வன் எழுதினான். மேகம் போன்ற கரிய நிறம் உடைய திருமால் சாட்சிக் கையெழுத்திட்டான்.
1877. ஐயம் கொள்ளாமல் தன்னையே தம் முதல்வன் என்று துணிந்து வழிபட்டால் நெஞ்சில் இறைவன் பொருந்திக் தங்குவான் தன்னை வணங்குபவர் மனத்தில் பொருந்திய விருப்பத்தை நிறைவேற்றி வைப்பான். தன்னை அணியாகக் கொண்டவர் மனத்தில் வீற்றிருக்கும் அந்த முதல்வனை நினைத்துக் கொண்டே இருப்பவர் கைவிட முடியுமோ முடியாது!
1878. தேவரின் முடிமீது விளங்கும் ஒளிக்கதிரையுடைய சிவம் தனக்கு அடிமை செய்யத் தன் திருவடியை அடியார்க்குச் சூட்டியருளினான். பின்பு ஊன் உடல் நீங்கிய உணர்வு கொண்டு ஒளி மண்டலத்தை ஆளும் அப்பெருமான் பயனை அடையச் செய்தான்.
1879. இளம் பருவம் உடைய அடியவரை அவர்கள் மேற் கொண்டிருக்கும் கோலத்தைக் கொண்டு அன்னாரை இறைவன் அடிமை கொள்கின்றான். அந்நிலையிலும் அவர்க்கு ஒர் பேரின்பத்தை அருள்கின்றான். சிவக்கோலம் உடைய அடியார் ஒளிக்கதிரையுடைய சடை ஒளி நீங்காதபடி கட்டிக் கொண்டிருப்பர். அவ்வடியார் திருவடி உணர்வில் பொருந்துவது பெரிய தவம் ஆகும்.
1880. சிவன் அடியார் தம்மை நெருங்கி அன்பு செய்பவ்ர்களைச் சிவனிடம் அணுகும்படி செய்யவும் வல்லமை உடையவர் ஆவர். சிவன் அடியாரை அணுகி அவரையே விரும்பும் அடியாரிடத்தில் சிவனடியாரின் பெருமை வந்து அடங்கி விளங்கும்.
1881. பதினெட்டுக் கணத்தேவர்கள் எல்லாம் எல்லையில்லாத அன்பினால் இப்பெரிய பூமியில் வருவார்கள். அவரது வரவினால் பூமியினது எட்டுத் திக்கும் வானத்தைப் போன்று விளங்கப் பன்னிரண்டு காத எல்லைவரை உள்ளவர்க்கு நனமை உண்டாகும்.
1882. சிவன் அடியார் தங்கியிருக்கும் அப்பகுதி தீயவர் சேர்க்கையானது இல்லாது அறிவுடையவர் தோன்றக் காரணமாகும். புதிய யோகப் பயன்கள் கிட்டி மக்களிடம் நல்ல பண்புகள் விளங்கும். பிற்விக்குக் காரணமான மலத்தின் சேர்க்கை இல்லாமல் மேல் உலகும் கிட்டும்.
1883. மேலான் அறிவு வடிவன சிவன் பல உலகங்களைப் படைத்தான். அப்பெருமான் தான் படைத்த அவற்றைக் கடந்தும் உள்ளான். பல அண்டங்களில் வாழும் தேவர்கள் அவனை அறிவர். சிவத்தின் மெய்யடியார் அவனை அறிவர்.
#####
ஓம்நமசிவய!
உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி யுறுதியாகத்
தள்ளரிய அன்பென்னுந் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுக்ட்பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணையென்னும்
வெள்ள மதம்பொழிச் சித்தி வேழத்தை நினைந்து வருவினைகள் தீர்ப்பா
#####
மகேசுவர பூசை!
1857. ஓவியம் போன்று அமைந்த மாடங்களையுடைய கோவில்களில் உள்ள இறைவனுக்கு ஏதேனும் படையல் செய்தால் நடமாடும் மாடக் கோயிலாக விளங்கும். சிவன் அடியவர்க்கு வந்து சேரா. ஆனால் நடமாடும் கோயிலாக விளங்கும் சிவனடியார்க்கு யாதேனும் ஒன்றைத் தந்தால் அது மாடக் கோவிலில் உள்ள இறைவனுக்கு மன நிறைவை அளிக்கும்.
1858. தீமையில்லாத சிந்தைபொருந்திய தவத்தையுடைய செல்வர்கள் தாம் மகிழ்வுடன் உண்டது மூன்று உலகங்களும் உண்டதாகும் அவர்கள் ஏற்றுக் கொண்டது மூன்று உலகங்களும் ஏற்றுக் கொண்டதாம். இவ்வாறு எட்டுத் திக்குகளுக்கும் தலைவனான நந்தி எடுத்துரைத்தான்.
1859. ஒரு மாத்திரையாகிய அகரத்தில் பொருந்தி உறையும் யோகிக்குத் தந்த அரிய பொருள் மூன்று மூர்த்திகளுக்கும் மூவேழு தலைமுறையினருக்கும் அர்ப்பணித்ததாகும் அதைத் தெளிவீராக.
1860. ஆயிரம் நகரம் அந்தணர்க்கு தந்தால் உண்டாகும் பயன் யாது! ஆயிரம் கோயில்கள் கட்டி முடித்தலால் யாது பயன்! சொல்லப்பெறும் ஞானி ஒரு பகல் உண்ணும் உணவால் உண்டாகும் பயனுக்கு நிகராகாது என்பது உண்மை.
1861. ஆற்றுப் படுத்தும் வேள்வியைச் செய்யும் அரிய நூல் வல்லவர் எனக் கூறப்படும் அந்தணர் கோடிபேர் உண்பதில் திருநீற்றைப் பூசும் தொண்டர் ஒருவர்க்கு உணவு அளிக்க வேண்டும் என எண்ணுவதில் உள்ள பயன் இல்லை. அங்ஙனம் பார்ப்பனர்க்கு அளிப்பது பேறு என்றால் அஃது ஒரு சிறிய அளவு பேறாகும்.
1862. வெண்நிற ஒளியில் விளங்குபவனே இறைவனே எம்பிரானே என்று திருநீற்றை அணிபவர்களாகிய அடியவர் இவ்வுலகில் தேவர் ஆவர். கங்கை ஆற்றைக் கொண்ட சிவந்த சடையையுடைய சிவம் இவரே என்று எண்ணி வழிபடுவர்க்கு வினை இல்லை.
1863. சிற்ந்த ஒளிமண்டல நினைவைக் கொண்டு தன் சந்நிதியில் இட்டுச் சென்ற பெரிய நந்தி என்று பேசப்படும் ஒளீக்கதிர்கள் விளங்கும் சடையை=யுடையவனை நான் மிகவும் நெகிழ்ந்துருகித் தோன்றும் அளவு கூறுவதற்காக நந்தியான சிவனது திருப்பெயரைத் திரும்பத் திருமப எண்ணிக் கொண்டிருப்பேன்.
1864. அழியும் தன்மை அற்ற சிவனின் அடியவர்க்கு அறியாமையான இருள் நீங்கும். அந்நிலை கெடாதபடி அறியாமை நீங்கிய பண்பு கொண்ட சிவத்தை நாடி வணங்கி மேல் ஏழ் உலகத்தில் துன்பம் நீங்கியதுடன் இனபமும் ஏற்படும்.
1865. இறைவனை அறிவதற்குரிய பண்பு சிறிதும் இல்லாதவர் ஆனாலும் உள்ளே மகிழ்வு உடையவராய் நின்று வழிபடும் உபசாரங்களுடன் பலகாலம் பொருந்தி நிற்பின் உள்ளத்தில் களிப்புடையவராய் நிலை பெற்று நின்று ஆராய்ந்து தெளிந்து பாசம் நீக்குவர் ஆவர்.
1866. திருத்தமான கோலத்தை உடைய மகேசுவரர் உண்ட உணவு உருத்திரன் திருமால் நான்முகன் என்னும் மூவரும் உண்ட பெருமை உடையதாகும். சித்தம் தெளிவு கொண்டவர் மிச்சத்தை உண்டால் முத்தி உண்டாகும் என்று நம் மூலன் உரைத்த மொழி உண்மையாகும்.
1867. மகேசுவரர் தம் முயற்சியில் குன்றாமல் அருந்தவத்தைச் செய்து கொண்டே இருப்பர். உம்மைத் துன்பத்தில் ஆழ்த்தும் பிராரத்துவ வினை நீங்க அவருக்கே அறத்தைச் செய்யுங்கள். அங்ஙனம் செய்தால் அது பிராரத்துவ வினையை நீக்கி மேல் ஏறும் ஆகாமிய வினையுடன் மிஞ்சி நிற்கும். சஞ்சித வினையையும் ஒருசேர அழித்து விடும். பின்பு ஞான மண்டலம் விளங்கும்.
#####
ஓம்நமசிவய!
அகரமென அறிவாகி உலகம் எங்கும் அமர்ந்து அகர உகர மகரங்கள் தம்மால்
பகருமொரு முதலாகி வேறும் ஆகிப்பலவேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகாரில்பொருள் நான்கினையும் இடர்தீர்ந்தெய்தப் போற்றுநருக்கறக் கருணை புரிந்தல்லார்க்கு
நிகரில் மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும் நிருமலனைக் கணபதியை
#####
குருபூசை!
1847. மூலாதாரத்திலிருந்து நந்தியின் திருவடியைப் பற்றிச் சுழுமுனை நாடி வழியாகய் மேல் எழுந்து போகும் போதனையும் அங்குப் பூசை செய்யும் முறையையும் ஆதாராமாய் உள்ள முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து ஆன்மா விளங்கும் அடியையும் கண்டு மனத்தால் போற்றுவேன்.
1848. காட்டில் வளர்கின்ற உறுதி பொருந்திய மணம் உடைய சந்தனக் கட்டையால் ஆன சாந்தினையும் சிறந்த மலர்களையும் வான் அளாவத் தூவி வழிபட்டாலும் உடலின் பற்றை விட்டு ஞானத்தால் உணர்பவர்க்கு அன்றித் தேன்போல் இனிய சக்சிரதளத்தை அடைய இயலாது.
1849 .ஞானத்தில் சிறந்திருந்த மெய்ப் பொருள் காட்சி அவ்வழி ஞானத்திலே பொருந்தி நிற்றலே அர்ச்சனை. இடைவிடாமல் உள்ளத்தில் வழிபாடு செய்தால் அதுவே சிறந்த வழிபாடு. அங்ஙனம் திருவடி அடைதலே தன் செயல் இன்றி இருப்பதாகும்.
1850. காலை நண்பகம் மாலை என்று மூன்று வேளைகளிலும் இறைவனை விரும்புங்கள். விருப்பம் கொண்டு நமசிவய என்று அவனது திருநாமமான விதையினைத் தெளியுங்கள். இந்த விதை அக்கினி கதிரவன் சந்திரன் ஆகிய மும்மண்டலங்களிலும் விளைந்து பயிராவதை விரும்பி நில்லுங்கள். இவ்வாறு வளர்வதே நந்தி என்னும் பெயரையுடைய தலைவனாகும்.
1851. சிவத் தாலங்களில் சிவபூசை செய்தல் நூறு மடங்கு சிறந்ததாகும். தவம் செய்பவர் சந்நிதியில் சிவபூசை செய்தல் ஆயிரம் மடங்கு உயர்ந்தது. இனிமேல் எவற்றிலும் எண்ணமில்லாத சிவயோகிக்குப் பிச்சையிடில் கோடி மடங்கு உயர்ந்ததாகும். ஆனால் சிவ ஞானிக்கு உணவை அளித்து அவர்கள் உண்பதைப் பார்த்தால் அது மிகவும் சிறந்தத்து ஆகும்.
1852. திங்கள் கலை கதிரவன் கலை ஆகிய இரண்டிலும் மூச்சு இயங்கும்போது வழிபாட்டைச் செய்தால் அசுரர்க்கு விருப்பத்தைத் தரும் செயல் ஆகும். திங்கள் கலை கதிரவக்கலை என்னும் இரண்டு நாடி வழி பிராணன் இயங்காமல் பொருந்தியிருக்கும் நிலையில் வழிபாடு செய்வது சிவனுக்கு பெரும் பூசையாகும்.
1853. சந்திரகலை சூரியகலை என்று எழும் இவை விந்துவும் நாதமுமாய் விளங்கும் மேலிடத்தில் நிலையான சிந்தனையானது மேலும் சாக்கிராதீதத்தைப் பொருந்தி நந்தியை பூசிக்க அதுவே சிறந்த பூசையாகும்.
1854. மனம் மூச்சு ஆகியவற்றை மூல வாய்வு மேல் செல்வதால் மாற்றி நிலையில்லாத உடலை அவற்றின் காரண பூதமான பூதங்களிலும் பூதங்களை அவற்றின் கார்ணமான தன் மாத்திரையிலும் ஒடுக்கி சிவன்ருளில் தோய்ந்திருந்து இன்ப அனுபவத்துடன் செய்யப்படும் தனிப் பூசையே சதாசிவமூர்த்திக்கு உரியதாகும்.
1855. கதிரவன் கலை திங்கள் கலை இயங்கும்போது செய்யும் பூசையானது இயல்பாய் உள்ள சிவத்திற்கு இணைந்த மலராக மட்டும் அமையும். கதிரவன் திங்கள் கலைகள் இயங்காமல் அக்கினிக் கலையில் இயங்கும்போது செய்யும் பூசையைத் தாழ்ந்த ஒளிக்கதிரையுடைய இறைவன் விருப்புடனே ஏற்றுக் கொளவான்.
1856. இரவு பகல் என்பது அற்ருச் சாக்கிராதீதத்து நின்று வேறு எண்ணம் அற்றுச் சிவானந்தம் என்ற தேனைப் பருகி இரவும் பகலும் இல்லாத திருவடி இன்பத்தில் திளைத்து இரவு பகல் அற்று அசுத்தமாயை சுத்தமாயை இரண்டையும் விலக்கி நின்றேன்.
#####
ஓம்நமசிவய!
வஞ்சகத்தில் ஒன்றானைத் துதிக்கை மிகத் திரண்டானை வணங்கார் உள்ளே
அஞ்சரண மூன்றானை மறை சொலுநால்வாயனை அத்தன் ஆகித்
துஞ்சவுணார்க் கஞ்சானைச் சென்னியனை யாறானைத் துகளெழானைச்
செஞ்சொல்மறைக் கெட்டானைப் பரங்கிரி வாழ் கற்பகத்தைச் சிந்தை செய்வோம்.
#####
சிவபூசை!
1823. அரிய உயிரின் உள்ளம் எனும் மனமண்டலமே சிவபெருமான் வீற்றிருக்கும் கருவறையாகும். ஊனால் ஆகிய உடம்பு ஆன்மாவின் ஆற்றலைக் குறைத்து வைத்திருக்கும் இடம் ஆகும். வள்ளலான தலைவனைச் சென்று வழிபடுவதற்கு வாய் கோபுர வாயிலாகும். ந்ன்கு அறிந்து தெளிவு பெற்றார்க்குச் சிவனே சிவலிங்கம் ஆகும். இவ்வகையாய் உணர்ந்து வழிபடுபவர்க்கு வஞ்சனையைச் செய்யும் ஞானேந்திரியங்கள் ஐந்தும் மிக்க ஒளியுடைய விளக்காகும்.
1824. வேள்வித் தீயுனுள் இடப்படும் அவியை ஏற்கும் விரிந்த கதிரையுடைய சிவபெருமானுக்குப் படைக்கக்கூடிய பொருள் நம்மிடம் இல்லை. காலையிலும் மாலையிலும் படைக்கப்படுபவை மனத்தை மகிழச் செய்யும் பாடல்களான உணவாம். அதை நாம் படைப்போம். அதுவே அப்பொருமானுக்கு பால் நிவேதன்யம் ஆகும்.
1825. பால் போல் இன்சொல்லையுடைய பராசத்தியின் பாகனான பராபரனை சதாசிவ மூர்த்தியைத் தலையில் நிலைப் பெறச் செய்து உச்சி முகத்தை ஈசான முகமாகச் சுழுமுனையில் துதித்துச் சீலமான முகத்தைச் செய்யச் சிவம் ஆவர்.
1826. சிவத்தை நினைத்துக் கொண்டிருப்பதும் சிவத்தைப் பற்ரி மற்றவர்க்கு எடுத்துக் கூறுவதும் ஆன இரண்டு வழிகள் அல்லாமல் நாதவடிவினனான சிவத்தைக் காண்பது அரிதாகும். நாத வடிவினனான சிவத்தைக் கண்டு மகிழ வல்லவர் நீரை முகமாக உடைய சுவதிட்டானத்தில் விளங்கும் மூலவாயுவை எழுப்பிச் சிவத்தை தொடுயோகத்தில் அடையத்தக்கவர்.
1827. திருமுழுக்காட்டிலும் அலங்காரத்திலும் விளக்கிலும் தேவர்களின் மனத்திலும் இறைவன் வீற்றிருக்கின்றான். இதற்குக் காரணம் பஞ்சக்கவ்விய உபசாரத்துடன் வழிபாட்டு முத்திரையுடன் பக்தர்களுடன் கலந்து வழிபட்டதே ஆகும்.
1828. சிவபூசையான புண்ணியச் செயலைச் செய்பவர்க்குப் பொருந்தும் நீரும் பூவும் உண்டு. அண்ணலான சிவம் அவ்வாறு பூசை செய்பவர்க்கு அருள் வழங்கி நிற்பான். எண்ணில்லாத பாவிகள் எம் தலைவனான சிவத்தைப் பொருத்தமுற அறியாமல் வீணே அழிகின்றனர்.
1829. சிவனின் ஒன்பது நீர்களிலும் ஆடித் திளைக்கும் தன்மையைக் கேட்பாய். அவ்வாறு பொருந்தி உண்மை ஞானம் பெற்று உயர்ந்தவர் திருவடியைத் தூய்மையாய்க் கழுவித் தெளித்துக் கொள்ள முத்தி கிட்டப் பெறுமென்பது நம் மூலன் கூறியதாகும்.
1830. தேவர் பெருமானே அறிவு பூர்வமற்று ஞானியர் உறவு கிட்டப் பெற்றாலும் சிறப்பான பூவையும் நீரையும் நான் திருந்தும்படி வெளிப்படுத்தி மறவாமல் உன்னை வழிபடும் ந்ன்மையை மிகவும் பெறுவதற்கு அருள் செய்வாயாக.
1831. ஆயிரம் திருப்பெயர்களையும் சிவனின் திருப்பெயரான சிவசிவ என்பனவற்ரையும் துதிக்கும் வகையால் என் இறைவன் விளங்குவான். அவ்வமயத்தே வழிபாடுகளும் தேவர்கள் கூட்டமும் அலை ஓயாத கடலும் நீங்கள் வாழும் உலகத்தில் உம் ஆணைவழி நிற்கும்.
1832. உயிர்களிடம் ஐந்து ஐந்தாகப் பொருந்தியுள்ளவற்றைப் பக்குவம் செய்து தேவர் கூட்டம் வணங்க எனக்கு ஓர் இறுதியும் இல்லாத தலைவன் சிவத்தின் அருளுடன் சுவாதிட்டான சக்கரத்தில் பொருந்தி தெளிந்த உலகத்தின் ஐந்து இயல்புகளை அமைத்தருள் செய்தான்.
1833. சுவதிட்டான சக்கரத்தினின்றும் ஊர்த்துவ முகமாய் பாயும் வான் கங்கையின் நீரைக்கொண்டு கருக் கொண்ட மேகம் மேல் செல்வதைப் போல் மேலே சென்று தேவர்கள் தளிர்த்துள்ள பாசத்தில் கிடந்து தயங்கி நின்று வழிபடத் தவறாமல் எம் பெருமானின் அருள் வழிபடுவார்க்கு வாய்க்கப் பெறும்.
1834. நீர்ப் பெருக்கினை உடைய சுவதிட்டான சக்கரத்தினின்று விரிந்து மேல் ஒளி மண்டலத்தில் விளங்கும் சதாசிவருக்கு மனம் என்ற வான் மண்டலத்தில் புகுந்து நீண்டு உயர்ந்துள்ள ஆயிரம் இதழ்த் தாமரைப் பூவையேந்தி வஞ்சத்தனமையுடைய பிறவிக் கடலைக் விட்டு உண்மையுடன் வணக்கம் செலுத்தமாட்டார். சேற்றுடன் கூடிய துன்பக் கடலுள் விழுந்து கெடுகின்றனர்.
1835. உப்பங்கழிகள் பொருந்திய குலிர்ச்சியுடைய சுவாதிட்டான கடல் கள்ளான இன்பப் பெருக்கைக் கொண்டது. அதனை வழிபடுபவர்கள் விரிதலும் குவிதலும் உடைய மலர் மொட்டுகளின் இயல்பை அறிய மாட்டார்கள். அதனால் அவர்கள் பழியிலே விழுவர் ஆனால் பலரின் பழிச் சொல்லும் கெட உடலைக் கடந்து மேலே செல்பவரின் மேல் முகமாக உள்ள சகசிரதளத்தில் சிவன் பொருந்தி நிற்கின்றான.
1836. பயன் அளிககக் கூடிய பொருள் ஒன்று உண்டு. பயனை எண்ணிப் பலகாலும் மலரைத் தூவி வழிபட்டவர்க்குச் சிவன் தானே தன் வரவினைக் கூறும். கண்கள் மூன்றுடைய சிவனது திருவடியைச் சார்தலும் அதுவே வழியாய் எப்போதும் வெளிப்பட்டு விளங்கினான்.
1837. பெருமை கொண்ட மலர்களைத் தூவிப் பூசனை செய்து நின்று ஆரவாரம் செய்து எம் ஈசனின் அருளான திருவடியை வழிபடுபவர் முதன்மையான திருவுருவத்தைத் தாங்கி நின்ற தூய்மையானவனும் ஆன சிவனை யாரும் வழிபட்டு மனதில் உணரவில்லை.
1838. தேவர்களுடன் கூடிப் பிருதிவி தத்துவத்தில் பொருந்திய சுவாதிட்டான மலரின்று வான் கங்கையின் மேல் எழும் உணர்வில் வெளிப்படும் தூய இறைவனை நான்முகன் திருமால் உருத்திரன், ஆகிய மூவருடன் கலந்தும் வேறாகவும் விளங்கும் முதல்வனான சிவன் அருளும் முறையை எவர் அறிந்து எண்ண வல்லவர்கள்!
1839. சிவனை நினைக்க வல்லவர் சுவாதிட்டான மலரினின்று சுழுமுனை வழியாய் மேல் நோக்கிப் பாயுமுணர்வு என்னும் நீரை ஏந்தித் தவறு இல்லாது இறைவனின் பெருந்தவத்தை விரும்பி இரண்டு கண் எனும் மலர்களைச் சேர்த்தலால் தோன்றும் திருவடியைப் பற்றி மழைபோல் பொழியும் மேகம் போன்ற ஒளியில் நிலைத்து நில்லுங்கள்.
1840. காமத்தை வென்று காலம் தாழ்த்தாமல் விந்துவைத் தர்ப்பணம் செய்யுங்கள் என்று முன்னோர் உரைத்தனர். அங்ஙனம் செய்து சிவம் விளங்குகின்ற முறையில் அமைய விந்து நாதம் கலக்கும் சுவதிட்டான மலர் கொண்டு நாள்தோறும் வழிபட்டால் சிவன் உம்மை ஏற்றுக் கொள்வான். இது முன்பே சொல்லப்பட்டது அன்றோ!
1841. சுவதிட்டான மலர் கதிரவ சந்திரர்களாகிய கண்கள் என்பனவற்றை இறைவனுக்குச் சாத்தியும் எவராலும் தோற்றுவிக்கப்படாதவன் எனத் துதித்தும் வணங்கியும், நாள்தோறும் உலகினர் வழிபட அறிய மாட்டார். துன்பத்தைப் போக்கி மனதில் குற்றத்தை நீக்கினால் அதுவே பெருந்திக்கான வீட்டுலகம் போவதற்குரிய வாயில் ஆகும்.
1842 .உயிரின் தாமரையான சகசிரதளத்துக்கு மேல் இன்பம் உண்டாகுமாறு பொருந்தி எங்கும் விளங்கும் பரந்த சடையான ஒளிக்கிரணத்தையுடைய சிவத்தை மந்திர சாதனை செய்து சிவம் விளங்கும் நாதாந்தத்தில் பொருந்தும் படியான மந்திரத்தை உலகத்தார் அறியார்.
1843. சாண் அளவுடைய உடலுள் மறைந்து கிடந்த மாணிக்கத்தைக் காணும்படி அதன் உண்மை இயல்பை அறிபவர் இல்லை. அதைப்போற்றி வளர்த்து எண்ண வல்லவர்க்கு மாணிக்கப் பேரொளியாய் மனத்தில் புகுந்து விளங்குவான்.
1844. சிவன் பெருந்தன்மையுடைய நந்தியும் மாறு பாட்டைச் செய்யும் இருளினைப் போக்கும் சக்கரப் படையை உடையவனும் என்மனத்தை தன் பேரருளால் இடம் கொண்டவனும் வேண்டியவர்க்கு வேண்டியது அருள்பவனும் ஆவான். அச்சிவனை வான் மண்டலத்து வாழ்பவர்களான தேவர்கள் தாங்கி நின்றனர்.
1845. சமய தீடசிக்கு உடல் தூயமை அடைந்து தன் செயல் நீங்கிடும் சிறப்பான தீட்சையால் மந்திரத் தூய்மை உண்டாகும். சமயத்தில் சிறந்ததான நிர்வாண தீட்சையால் கலை தூய்மை ஏற்படும். சிவஞானம் உடையார்க்குச் செய்வது ஆசாரிய திருமுழுக்காட்டாம்.
1846. ஊழிதோறும் உணர்ந்து வழிபட்டவர்க்கே அல்லாது அழியாத ஆன்மாவை உணர இயலாது. பாற்கடலில் வீற்றிருக்கும் திருமாலும் நான்முகனும் ஓர் யுகம் சென்றாலும் அவர்களால் அறியப்படாமல் ஞானியர் உச்சியில் விளங்குவான்.
#####
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.